Thursday, April 16, 2020

ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான குரல்களை முடக்குவது . . .




தலித் அறிஞரும் இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளில் ஒருவருமான ஆனந்த டெல்டும்டே, மும்பையில் தேசிய புலனாய்வு முகமையின் முன்பு சரணடைய அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 129 வது பிறந்த நாளை நாடு கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அவரது கொள்ளுப் பேரன் கைது செய்யப்பட்டது என்பது மிகப் பெரிய முரண் நகை. அதே போல இன்னொரு சமூக ஆர்வலரான கௌதம் நாவல்கே, டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ வில் சரணடைய அவரும் கைது  செய்யப்பட்டுள்ளார். அவர்களது முன்பிணை விண்ணப்பங்களை உச்ச நீதி மன்றம் ஏற்க மறுத்து சரணடையுமாறு அறிவுறுத்தியதால் அவர்கள் சரணடைந்தார்கள்.

தலித், ஆதிவாசி மற்றுமுள்ள விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுக்கும் இந்த இரண்டு சமூக செயற்பாட்டாளர்களும்  “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” என்ற கொடும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 01,ஜனவரி,2018 அன்று மகாராஷ்டிராவில் உள்ள பீமா கொரேகானில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீண்டினார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது. முன்னதாக இன்னும் ஒரு ஒன்பது சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு வருடத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டு எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் வாடுகிறார்கள்.  ஆனால் நிஜமாகவே யார் வன்முறையை தூண்டினார்களோ, இந்த ஆட்சியின் ஆதரவாளர்களாக இருக்கிற அவர்கள்  சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என்பதையும் நாம் பார்ப்பது முக்கியம்.

இந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நம்பகத்தன்மையுடனான எந்த ஒரு சாட்சியத்தையும் அளிக்க பூனா காவல்துறை தவறி விட்டது. இதனை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாறுபட்ட தீர்ப்பை அளிக்கையில் நீதியரசர் சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை மறு ஆய்வு செய்ய புதிய மஹாராஷ்டிர அரசு முடிவு செய்த போது மத்தியரசு தந்திரகரமாக இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்து விட்டது.  அரசு இயந்திரத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகப்படுத்துவதாகும். ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளை கையிலெடுப்பவர்கள்,  குரல் கொடுப்பவர்கள் ஆகியோரை அரசு பழி வாங்கும் நடவடிக்கையாகும்.

பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற தீவிரமான குற்றச்சாட்டை புலனாய்வு அமைப்புக்களால் எப்படி இவ்வளவு சாதாரணமாக கையாள முடியும் என்பது மிகவும் வினோதமாகவே உள்ளது. சதித்திட்டம் குறித்த தகவல்கள் ஏன் தேசத்திடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை? வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? அரசு அவர்களின் குரல்களை ஒடுக்கி, பிணை கூட கிடைக்க வாய்ப்பில்லா கொடுஞ்சட்டங்களில் வழக்கு பதிவு செய்து அவர்களின் உறுதியை தகர்க்க வேண்டும் என்று விரும்புவதாகவே தெரிகிறது. நகர்ப்புற நக்ஸல்கள், துக்டே, துக்டே கும்பல் ஆகிய சொற்றொடர்களை ஆட்சியின் உயர் பீடத்தில் உள்ளவர்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர்.  ஆனால் தகவலறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் விசித்திரமானது. நகர்ப்புற நக்ஸல்கள் யார் என்றோ துக்டே துக்டே கும்பல்கள் எப்படி அமையும் என்பது பற்றியோ தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று பதிலளித்துள்ளார்கள்.

கடந்த சில வருடங்களாகவே ஜனநாயகமும் ஜனநாயக உரிமைகளும் திட்டமிட்டு  தாக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடு என்பது தேசத்துரோகமாக சித்தரிக்கப்படுகிறது. பிரதமருக்கு எதிராகவோ அல்லது வேறு சில முதல்வருக்கு எதிராக பேசுபவர்கள் மீது தேசத் துரோக வழக்கு புனையப்படுகிறது. அரசை ஏற்றுக் கொள்ளாதவர்கள்  தேச விரோதிகள் என்று மிக சுலபமாக முத்திரை குத்தப்படுகிறார்கள். அதனால்தான் உலக அளவிலான ஜனநாயகக் குறியீட்டில் (Global Democracy Index) ல் இந்தியா பத்து புள்ளிகள் சரிந்து ஐம்பத்தி ஒன்றாவது இடத்திற்கு வந்ததில் எந்த வியப்பும் இல்லை.

ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் இதர சமூக செயற்பாட்டாளர்கள் அற்பத்தனமான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து பொய்க்குற்றச்சாட்டு புனையப்பட்டவர்களுக்கு துணை நிற்பது அவசியமாகும். நியாயமான வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு அந்த சமூக செயற்பாட்டாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்றால் அவர்கள் சீக்கிரமாகவே விடுவிக்கப்பட வேண்டும் என்று நாம் கோர வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்காவிட்டால், நாடு எதேச்சாதிகாரத்தின் வசம் செல்வதை தடுக்காவிட்டால் அது மக்களின் அரசியல் சாசன உரிமைகளுக்கு மட்டுமல்ல, தேச நலன்களுக்கே ஆபத்தானது என்பதையும் நாம் அழுத்தமாக சொல்வது அவசியமா என்ன!

-         இன்சூரன்ஸ் வொர்க்கர் மே 2020
தலையங்கத்தின் தமிழாக்கம்

பிகு : மேலே உள்ள ஓவியம் தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது


No comments:

Post a Comment