Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, March 24, 2026

புதுவையில் அடி வாங்கும் காங்கிரஸார்.

 


புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமிக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் அவரது ஆதரவாளர்கள், புதுவையின் தற்போதைய மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுவை காங்கிரஸ் தலைவருமான வி.வைத்தியலிங்கம் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தி காவல்துறையால் கலைக்கப்பட்டுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  அப்போது எழுதிய பதிவு கீழே நீல நிறத்தில் . . .

அடி வாங்கிய ஆளும் கட்சியினர்



ஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.

இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி  பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.

இந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன். 

ஆரம்பம் அமோகமாக இருக்கிறது. 

பின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார். 

இதில் என்ன வேடிக்கை என்றால் நாராயணசாமியை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று காங்கிரஸார் போலீஸிடம் அடி வாங்கினார்கள் (அப்போது அடி வாங்கிய நமச்சிவாயம் வகையறாக்கள் பின்னாளில் பாஜகவிற்கு தாவி விட்டார்கள் என்பது வேறு விஷயம்.) இப்போது நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அடி வாங்கினார்கள்.


Friday, March 6, 2026

போகாதே போகாதே ஆரென் ரெவி

 


சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அமித்ஷா இப்படி ஒரு வேலையை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. 

தன் ஒவ்வொரு சொல், ஒவ்வொரு செயல் மூலம் மோடி அரசுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்த ஆரெஸெஸ் ரெவியை இப்படி மேற்கு வங்கத்திற்கு மாற்றுவார் என்று எதிர்பார்க்கவேயில்லை. பாஜக-அதிமுக கூட்டணியில் கூட யாரோ ஒரு புத்திசாலி இருக்கின்றார். ரெவி இருந்தால் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் பெருகும் என்று எச்சரித்ததால்தான் இந்த மாற்றம்.

தேர்தல் முடிந்து திரு மு.க.ஸ்டாலினுக்கு பதவியேற்பை நடத்தி விட்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலிருது ஓடி வந்த பிறகு அவர் மாற்றப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

அமித்ஷாவிற்கு ரெவி மேல் ஏதோ கடுப்பு இருக்கிறது.

ரௌடிகள் ராஜ்ஜியம் நடத்தும் மம்தாவின் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இங்காவது கலாய்த்து விட்டு துரத்துவார்கள். அங்கே அடித்துத்தான் துரத்துவார்கள். 

நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து ரெவி, அடி தாங்கனும்ல . . .

Thursday, March 5, 2026

மாட்டிக் கொண்ட மகாராஜா

 





 

10,11,ஆகஸ்ட், 2024 ஆகிய தேதிகளில் எங்கள் கோட்டச்சங்கத்தின் 37 வது பொது மாநாடு திண்டிவனம் நகரில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் நடைபெற்ற “மக்கள் ஒற்றுமை கலை விழா”வில் நான் எழுதிய “மாட்டிக் கொண்ட மகாராஜா” நாடகத்தை எங்கள் தோழர்கள் அற்புதமாக நடித்து மக்களின் கரவொலியை அள்ளினார்கள்.

ராஜா, மகாராஜா, மீண்டும் மகாராஜா, சந்திரனில் மகாராஜா ஆகிய நாடகங்களின் தொடர்ச்சி இந்த "மாட்டிக் கொண்ட மகாராஜா" 

மாநாடு முடிந்த பின்பு அதனை இங்கே பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இந்திய அரசில் என்ன நிகழும் என்று நாடகம் வாயிலாக எதிர்பார்த்தோமோ  அது நடக்காத காரணத்தால் இந்த நாடகத்தை இங்கே பகிர்வது பொருத்தமில்லை என்று அதை ஒரு ஓரத்தில் வைத்து விட்டேன்.

பீகார் முதல்வர் பொறுப்பிலிருந்து நிதீஷ்குமார் இப்போது துரத்தப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராகப் போகிறார். மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம்.  முதல்வர் பதவியிலிருந்து துரத்தப்பட்டதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆள் அல்ல நிதீஷ்.

அதனால் நாடகக் காட்சிகள் நிஜமாகும், விரைவிலேயே . . .

 

மாட்டிக் கொண்ட மகாராஜா . . .

 

காட்சி 1


 

இடம் : அரசவை

தலையில் உலகம் சுற்றும் வாலிபன் தொப்பியோடு “ராஜாவுக்கு ராஜா நாந்தான், எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை” என்ற பாடல் ஒலிக்க, அப்போ நாம எல்லாம் யாரு? என்ற கேள்வியோடு மந்திரிகள் இருவரும் பார்த்துக் கொள்ள, மகாராஜா அரசவைக்கு வருகிறார். அவரது கேமராமேன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

 மந்திரி 1 : போதும்யா போதும். விட்டா நாள் ஃபுல்லா போட்டோ எடுத்துக்கிட்டே இருப்ப போல!

 மகாராஜா : என்னய்யா இந்த தொப்பில நான் எப்படி இருக்கேன்?

 மந்திரி 2 : அப்படியே எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னறீங்க .

 மந்திரி 1 : ஏன்யா நீ எம்.ஜி.ஆர் போட்டோவாவது பாத்திருக்கியா? இப்படி  உசுப்பேத்தி உசுப்பேத்தி நீ நல்ல பேரு வாங்கிக்கறே!

 மகாராஜா :  சரி விடுங்கய்யா!  மக்கள் என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?

 மந்திரி 1     : நல்லபடியா எதுவும் பேசலை

 மந்திரி 2 : இந்தாளு சொல்றதை நம்பாதீங்க. ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் உங்க புகழ்தான்.

 மந்திரி 1 : அதுலயே எவ்வளவு பேர் கழுவி கழுவி ஊத்தறாங்க தெரியுமா?

 அப்போது வெளியில் ஏதோ சப்தம் கேட்கிறது.

 மகாராஜா : அங்க என்ன சத்தம்?

 புகைப்படக்காரர் : பழைய மகாராஜாவோட பையன் ஒரு கூட்டமா வந்திருக்காரு!

 மகாராஜா : அந்த சின்னப்பையனுக்கு என்ன வேணுமாம்?

 மந்திரிகள் இருவரும் வெளியே போய் சின்ன ராஜாவுடன் பேசி விட்டு உள்ளே வருகிறார்கள்.

 மந்திரி 1 : போன தடவை யானை மாலை போட்டு நீங்க மகாராஜாவானீங்க இல்லை! அப்போ . . .

 மகாராஜா : அதுக்கு இப்போ என்னய்யா?

 மந்திரி 1 : அஞ்சு வருஷம் கழிச்சி மறுபடியும் யானையை வச்சி மகாராஜவை தேர்ந்தெடுக்கலாம்னு சொன்னீங்களாம். அதை ஞாபகப்படுத்த வந்திருக்காரு

 மந்திரி 2 : நாமெல்லாம் என்னிக்குய்யா சொன்ன வார்த்தையை காப்பாத்தியிருக்கோம். அஞ்சு வருஷம் முன்னாடி சொன்னதை எல்லாம் இப்போ செய்யனுமா என்ன?

 மகாராஜா : விடுய்யா பாத்துக்கலாம். நாம பழக்கின யானைதானே!  

மந்திரி 1 : போன தடவை உங்க கழுத்தில மாலை போட்டதும் சுத்தி சுத்தி போட்டோ எடுத்தீங்க இல்ல!

 மந்திரி 2 : அதனால என்னய்யா?

 மந்திரி 1 : ஓவர் ஃப்ளாஷ் ஒத்துக்காம அதோட பார்வையே போயிடுச்சு.

 மந்திரி 2 : அப்போ அது ரிஸ்க்! அந்த யானை சின்னப்பையன் கழுத்தில மாலையை போட்டா நம்ம கதை அம்பேல்.

 மகாராஜா : வேற என்னய்யா செய்யறது?

 மந்திரிகள் இருவரும் யோசித்த படியே அங்கும் இங்கும் நடக்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, ஒரு சூப்பர் ஐடியா!

 மகாராஜா : என்னய்யா அது?

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் பலப்பரிட்சை செய்யுங்க. அதில நீங்க ஜெயிச்சிடலாம்.

 மந்திரி 1 : யோவ, அவரு சின்னப்பையன், நம்ம மகாராஜாவுக்கோ வயசாயிடுச்சு.

 மந்திரி 2 : நாமெல்லாம் சுத்தி நின்னு அவனை கலாய்ச்சுக்கிட்டே இருப்போம். அதுல அவன் கவனம் மாறும். அப்போ மகாராஜாவை ஜெயிக்க வச்சிடுவோம். நமக்கு ஏத்த ஒரு ஆளை அம்பயர் ஆக்கிடலாம்.

 மந்திரி 1 : யானைக்கு பதிலா பலப்பரிட்சைன்னா அவன் ஒத்துக்குவானா?

 மந்திரி 2 : நான் என்ன பேசறேன்னு பாரு! அவனை கூட்டிட்டு வா

 சின்ன ராஜா வருகிறார்.

 மந்திரி 2 : இங்கே பாரு தம்பி! இந்த ப்ளூ கிராஸ், பீட்டா எல்லாம் ரொம்ப தகறாரு செய்யறாங்க! யானையை சித்திரவதை செய்யறோமாம். நீயும் மகாராஜாவும் யாருக்கு வலிமை அதிகம்னு பலப்பரிட்சை செய்யுங்க. ஜெயிக்கறவங்க மகாராஜாவாயிடுங்க!

 சின்ன ராஜா யோசிக்கிறார்.

 மந்திரி 2 : நீ சின்னப்பையன்தானே!  உனக்கே உன் பலத்து மேல நம்பிக்கை இல்லையா?

 சின்ன ராஜா :  எனக்கா பயமா? உங்காளு எவ்வளவு நேரம் தாங்குவார்னு யோசிச்சேன். சரி மோதிப் பார்க்கலாம். எப்போ?

 மகாராஜா : நாளைக்கே


 காட்சி  2



ஒரு டேபிள் போடப்பட்டு இரண்டு நாற்காலிகளில் மகாராஜாவும் சின்ன ராஜாவும் உட்கார்ந்து இருக்கிறார்கள். நடுவில் ஒரு  சேர் போடப்பட்டு அதில் அம்பயர் உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 சின்ன ராஜா : ஆரம்பிக்கலாமா?

 அம்பயர் பதில் சொல்லாமல் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : சார்! ஸ்டார்ட் சொல்லுங்க

 அம்பயர் வாயில் மிக்ஸரை மென்று கொண்டிருக்க கையால் ஜாடை காட்டுகிறார்.

 மகாராஜாவும் சின்ன ராஜாவும் கைகளை கோர்த்து மோதுகிறார்கள்.

 மந்திரி 2 : தம்மாத்தூண்டு பையன் நீ, மகாராஜாவோட மோத வந்துட்டியா?

 மந்திரி 2 : உங்க தாத்தாவாலத்தான்     நாடே நாசமா போச்சு!

 மந்திரி 1 : உங்க அப்பாவும் சரியில்லை.

 மந்திரி 2 : நீயெல்லாம் மகாராஜாவானா எல்லா பொண்ணுங்களோட தாலியையும் பறிச்சி பக்கத்து நாட்டுக்கு கொடுத்துடுவே

 சின்ன ராஜா  அம்பயரைப் பார்த்து : இதையெல்லாம் அடக்க மாட்டீங்களா?

 அம்பயர் அப்போதும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 மகாராஜாவின் நண்பர்கள் நிதீஷும் சந்திரபாபுவும் வருகிறார்கள்.

 நிதீஷ் : என்ன மந்திரி? மகாராஜா தோத்துடுவார் போல இருக்கே!

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் மகாராஜாவை ஜெயிக்க வைக்க மாட்டீங்களா?

 நீதீஷும் சந்திரபாபுவும் சேர்ந்து மகாராஜா கையோடு தங்கள் கைகளை சேர்த்துக் கொண்டு அழுத்தம் தர மகாராஜா ஜெயித்து விடுகிறார்கள்.

 வெற்றி! வெற்றி ! என எல்லோரும் குதிக்கிறார்கள்.

 சின்ன ராஜா : இது அநியாயம்! அராஜகம்! ஒத்தனோட மூணு பேர் மோதுவாங்களா? என்ன அம்பயர் இதை கேட்க மாட்டீங்களா?

 அம்பயர் காதில் வாங்காதது போல மீண்டும் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : நாளைக்கு மகாராஜா மீண்டும் பதவியேற்கப் போகிறார். எல்லாரும் வந்துடுங்க.

 

காட்சி 3



மகாராஜா அவரே கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறார். மந்திரிகளும் நண்பர்களும் கை தட்டுகிறார்கள்.

 சின்ன ராஜா : பிராடு செஞ்சு பதவிக்கு வந்தீங்களே! மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க?

 மகாராஜா : போன பத்து வருஷமா என்ன செஞ்சேன்?

சின்ன ராஜா : ஒன்னும் செய்யல

 மகாராஜா : இப்பவும் அப்படித்தான்.

 மகாராஜா அரசவையை விட்டு புறப்படுகிறார்.

 நிதீஷும் சந்திரபாபுவும் : எங்கே கிளம்பிட்டீங்க?

 மகாராஜா : என்னோட ரூமுக்குத்தான்.

 நீதீஷ் : இங்க இருக்க வேண்டாமா?

 மகாராஜா : இந்த உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரே இடம் அரசவைதான்.

 சந்திரபாபு : அப்படில்லாம் எஸ்கேப் ஆயிட முடியாது. அஞ்சரை மணி வரைக்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

 நிதீஷ் : அந்த கிரீடத்தை கொடு. எனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கறேன்.

 மகாராஜா : அது மகாராஜா கிரீடம்தான்.

 சந்திரபாபு : நாங்க இல்லைன்னா நீ எப்படி மகாராஜாவாயிருப்ப?

 நிதீஷ் : இப்போ கொடுக்கலைன்னா அது சின்ன ராஜா தலைக்கு நிரந்தரமா போயிடும்.

 இரண்டு பேரும் கிரீடத்தை மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறார்கள். போட்டோ எடுக்கச் சொல்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, இந்தாங்க, உங்க முதலாளிகளுக்கு தர நீங்க கேட்ட லாலிபாப்

 சந்திரபாபு : அந்த லாலிபாப்பை எங்களுக்கு கொடுங்க.

 மகாராஜா : அது என் முதலாளிகளுக்கு

 நிதீஷ் : கண்ணா, இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நாங்கதான் உன் முதலாளி.

 அவர்கள் இருவரும் லாலிபாப்பை சுவைக்க

 மகாராஜா : என்னய்யா இது.

 மந்திரிகள் இருவரும் : இனிமே இப்படித்தான் . . .

 மகாராஜா அதிர்ச்சியில் நாற்காலியில் சாய்ந்து கொள்ள …

 “உள்ள அழுகிறேன், வெளிய சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான், வெளுத்து வாங்கறேன்” என்ற பாடல் ஒலிக்கிறது.

 குரல் : இது கதையல்ல, கற்பனையல்ல. இன்னும் ஐந்து ஆண்டுகள், இந்த தேசம் பார்க்கப் போகும் கொடுமைகள்.

 


 

 

மகாராஜா : தோழர் சி.சோமசுந்தரம், கோட்ட அலுவலகம்

மந்திரி  1  : தோழர் ஜி.ரவி, ஆரணி

மந்திரி   2 : தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான், கோட்ட அலுவலகம்

சின்ன ராஜா : தோழர் பி.எஸ்.பாலாஜி, வேலூர் கிளை

புகைப்படக் காரர் : தோழர் சி.கணேசன், கோட்ட அலுவலகம்

அம்பயர்  : தோழர் கே.வி.பாலகுமார், கோட்ட அலுவலகம்

நிதீஷ்        :  தோழர் கே.ரபீக் அகமது, வேலூர் கிளை

சந்திரபாபு : தோழர் ஆர்.குமரேசன், கோட்ட அலுவலகம்.

 பிகு : மேலே உள்ள கார்ட்டூன்கள்  திண்டிவனம் மாநாட்டு கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டவை. 

 

 

Saturday, February 28, 2026

கட்சியின் பெயரை மாத்திடுங்க எடப்பாடி

 


நாளை மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதற்காக அமைக்கப்பட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்தை பாஜகவினரின் கட்டளைப்படி அதிமுக அகற்றியுள்ளது. 


இன்றைய எடப்பாடி திமுகவிற்கு தந்தை பெரியாரெல்லாம் தேவை இல்லை என்பதினால் கட்டளையை நிறைவேற்றி விட்டார். அவர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெ கூட முக்கியமில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடிய போது சேலத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோரின் கட்டவுட்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த போது எம்.ஜி.ஆர், ஜெ வின் கட்டவுட்டுகள் தம்மாத்தூண்டாக இருந்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். 

சங்கிகளுக்கு தந்தை பெரியாரை மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவையும் பிடிக்காது. அறிஞர் அண்ணாவை இழிவு படுத்தியவர்களோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சொல்லித்தான் கடந்த மக்களவைத் தேர்தலின் போது என்.டி.ஏ விலிருந்து வெளியே வந்தார்கள். மக்கள் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைத்துத்தான் இப்போது மீண்டும் கூட்டணிக்குள் நுழைந்துள்ளார் எடப்பாடி.

இன்று தந்தை பெரியார் படத்தை நீக்கச் சொன்ன பாஜக உங்கள் கட்சியிலின் பெயரிலிருந்தும் கட்சியின் கொடியிலிருந்தும் அண்ணாவை நீக்கச் சொல்வார்கள். நீங்களும் வெட்கமில்லாமல் அதை செய்வீர்கள். பாஜக சொல்லி செய்வதற்குப் பதிலாக நீங்களே உங்கள் கட்சியின் பெயரை எ.தி.மு.க என மாற்றி விடுங்கள்.

எதிமுக என்றால் எடப்பாடி திமுக என்றும் சொல்லலாம். எட்டப்பன் திமுக என்றும் சொல்லலாம். 

Friday, February 27, 2026

மோடிஷா அரசியல் செய்ய முடியாதே ஜட்ஜய்யா?

 


ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி உயர் நீதிமன்றம் ஊழல் வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுவித்துள்ளது. 

மோடி, அமித்ஷாவின் ஏவல் நாய்களாக செயல்பட்டு வரும் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவைகளுக்கு கிடைத்த சவுக்கடி இத்தீர்ப்பு.

தென் பகுதி மக்களை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு வேறு குட்டு வைத்துள்ளது. 


சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு போன்றவை இனியாவது தங்களது சுயேட்சைத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களின் அடிமைகளாய் இருப்பதை நிறுத்த வேண்டும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே மோடி-அமித்ஷா வகையறாக்களின் வாஷிங் மிஷின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


Sunday, February 22, 2026

88 வயதில் தனிக்கட்சி தொடங்கிய தைரியத்தை . . .

 


கலைஞர் காலத்திலும் பின்பு எம்.ஜி.ஆர் காலத்திலும் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சில நாட்களுக்கு முன்பாக "எம்.ஜி.ஆர் அதிமுக" என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார்.



எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

நெய்வேலியில் நான் பணியாற்றி வந்த போது ஒரு வளர்ச்சி அதிகாரியின் திருமணம் அவரது தலைமையில் நடந்தது. பெரும்பாலும் அது பண்ருட்டி ராமச்சந்திரன் புகழ் பாடும் கூட்டமாகவே அமைந்திருந்தது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெ-ஜா அணிகள் பிரிந்த பின்னர் நடந்ததால் அந்த அரசியல் தொடர்பான பேச்சுக்கள் திருமணத்திலும் ஒலித்தது. "நம்மவரின் பெருமை, அருமை பற்றி இந்தம்மாவிற்கும்  தெரியலை, அந்தம்மாவிற்கும் தெரியலை. அந்த அம்மாவிற்கு மட்டும்தான் புரியும்" என்று ஒருவர் பேசினார். அந்த அம்மா யார் தெரியுமா? இந்திரா காந்தி. . . 

அப்படியெல்லாம் இருந்த பண்ருட்டியார் பின்பு பா.ம.க, தனிக் கட்சி, பின்பு திமுக,  மீண்டும் அதிமுக,  என்றெல்லாம் கட்சி மாறி  கடைசியில் ஓ.பி.எஸ் அணி என்று வலம் வந்து 88 வயதில் தனிக்கட்சி துவங்கியுள்ளார்.

உலக வரலாற்றிலேயே 88 வயதில் தனிக்கட்சி தொடங்கியவர் இவர்தான்.

இந்த மன தைரியத்தைப் பாராட்டி குறைந்த பட்சம் அவருக்கு பண்ருட்டி தொகுதியில் டெபாசிட்டாவது மக்கள் கொடுக்க வேண்டும்.

பிகு: எம்.ஜி.ஆர் காலத்து மந்திரி ஹெச்.வி.ஹண்டே போல பாகஜகவில் சங்கமிக்காமல் பாஜக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவரை பாராட்ட வேண்டும். 

Friday, February 20, 2026

பழம் நழுவி பாலில் விழ பத்தாண்டுகள்

 


தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. என்ன பேரம் என்பது தெரியவில்லை. சிவராத்திரி அன்று பாஜகவின் ராஜ்நாத்சிங், அதிமுகவின் தங்கமணி ஆகியோரோடு ஜக்கியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இரண்டு தினங்களுக்குள் அறிவாலயம் வந்து விட்டார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பத்தாண்டுகளுக்கு முன்பாக கலைஞர் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

"பழம் நழுவி பாலில் விழுந்து விடும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் பல முறை கூறிக்கொண்டிருந்தார். ஆனால் திமுக கூட்டணிக்கு வராத விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியோடு கரம் கோர்த்துக் கொண்டார். அதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக போனது.

சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, மதிமுக, விசிக ஆகிய நான்கு  கட்சிகள் இணைந்து பல கூட்டியக்கங்கள் நடத்தி பின்பு அந்த போராட்ட ஒற்றுமை மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்த போது மக்கள் ஆதரவு இருந்தது. ஊடகங்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது.

எப்போது விஜயகாந்தும் ஜி,கே.வாசனும் வந்தார்களோ, அதற்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது. சமூல வலைத்தளங்களின் துவக்க காலமாக இருந்தாலும் அவையும் ஊடகங்களும் அக்கூட்டணியை ஒரு கேலிப் பொருளாக மாற்றி ஒரு மாற்று அரசியல் சக்தி உதயமாவதை கருக்கி விட்டார்கள்.

கலைஞர் காலத்தில் பால் கிண்ணத்தில் விழாத பழம் பத்தாண்டுகளுக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் காலத்தில் விழுந்து விட்டது.

Thursday, February 5, 2026

அவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களா?

 


நேற்று மணிப்பூரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

யும்மாம் கேம்சந்த்சிங் என்ற மெய்தி இனத்தவர் முதலமைச்சராகவும் நிம்சேன் கிப்கேன் என்ற குக்கி இனப் பெண் எம்.எல்.ஏ வும் லோசில் டிகோ என்ற நாகா இனத்தவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி மற்றும் நாகா அமைப்புக்கள், அரசில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இணையக்கூடாது என்றும் தாங்கள் வாழும் பகுதியை தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அவர்களை பாஜக அரசு தாக்கியதன் ஒடுக்கியதன் விளைவு அது. மத்திய அரசின் மீதும் மோடியின் மீதும் அவர்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டனர். புதிதாக உருவான அமைச்சரவை ஒரு வெத்து வேட்டு என்பதையும் அவர்கள் அறிவார்கள். 

அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள், பெண்களுக்கு ஏற்பட்ட அராஜகங்கள், இழந்த உயிர்கள், அழிந்த உடமைகள் அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை தள்ளியுள்ளன.

இந்த சூழலில் குக்கி இனத்தையும்  நாக இனத்தையும் சேர்ந்தவர்களை துணை முதலமைச்சராக்கினால் பிரச்சினை தீரும் என்று சாணக்கியத்தனமாக முடிவெடுத்துள்ளதாக  பாஜக  கருதுகிறது.

நிம்சேன் கிப்கேனும்  லோசில் டிகோவும் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். ஆனால் அந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களா? அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர்களா? அம்மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களா?

இல்லை,

இல்லவே இல்லை.

இதுதான் யதார்த்தம். 

அந்த இனங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வராக்குவது என்பது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது அல்ல. எப்படி ராம்நாத் கோவிந்த் ஒரு பொம்மையாக இருந்தாரோ, எப்படி திரௌபதி முர்மு பொம்மையாக இருக்கிறாரோ, அது போன்ற பொம்மைகளாக இருக்க பதவி கொடுக்கப்பட்டவர்கள். 

அதனால் அமைதிக்கு வாய்ப்பில்லை.

பிகு: நேற்று மாநிலங்களவையில் கமலஹாசனின் உரை நன்றாக இருந்தது என்பதை இரண்டு மூன்று முறை பார்த்து கேட்ட பின்பே புரிந்தது. எளிய மொழியில் நேரடியாக இருந்திருந்தால் வீச்சு இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

ஒரு குழப்பமான தலைப்பை வைக்க அவரது உரையே காரணமாக இருந்தது. 

 

Friday, January 16, 2026

அது ஒரு வீர காவியம்



 நேற்றைய பதிவில் இந்திரா காந்தி முன்னிலையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு அறிக்கையை படிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அந்த சம்பவம் என்ன?


தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கிறேன்.


“இந்திரா அவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற பின்னும் ஜேஎன்யு வேந்தர் பதவியில் தொடர்ந்தார். அவசர நிலைக் காலம் கொண்டு வந்ததாலும் அப்போது நிகழ்ந்த அநீதிகளாலும் அவர் அந்த பதவியில் தொடரக்கூடாது என நாங்கள் கூறினோம். நான்கு பக்க குற்றப்பத்திரிக்கை ஒன்றை எழுதி அனைத்து மாணவர்களும் வெலிங்டன் க்ரெஸெண்டில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். அவசர நிலைக்காலத்தின் போது தலை மறைவாக இருந்த மாணவர்களின் கைது வாரண்டுகளை ஜேஎன்யு விடுதியில் உள்ள அவர்களின் அறைக்கதவுகளில் ஒட்டி விட்டுச் செல்வார்கள். நாங்கள் எங்கள் மனுவை அவர் வீட்டுக் கதவில் ஒட்ட நினைத்தோம்.

 நாங்கள் அங்கே சென்ற போது வி.சி.சுக்லா எங்களிடம் என்னவென்று வினவினார். நாங்கள் இந்த மனுவை அவர்களிடம் தர வந்துள்ளோம் என்று சொன்னேன்.அவர் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். ஐந்து பேர் மட்டும் உள்ளே வரலாம் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன்.  அனைத்து மாணவர்களும்தான் வருவோம் என்று சொன்னேன். அவர் மீண்டும் உள்ளே சென்றார்,  இம்முறை இந்திரா அம்மையாரே கதவுக்கருகில் வந்தார்.  அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். என்ன இதெல்லாம் என்று அவர் கேட்டார். நான் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த மனுவை உங்களிடம் அளிக்க வந்துள்ளோம் என்று அவரிடம் சொன்னேன். அங்கே போலீஸ் காவல் எதுவும் இல்லை. நீங்கள் வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னேன். நீங்கள்  அப்பதவியில் தொடர்வது சரியல்ல என்றேன். அவர் அந்த மனுவை வாசிக்குமாறு என்னிடம் சொன்னார்.  நாங்கள் சற்று தயங்கினோம். ஏனென்றால் அதில் ஏராளமான வசைகள் இருந்தன. நான் படித்தேன். முகத்தில் ஒரு நிரந்தரமான புன்னகையுடன் அவர் அதனை முழுமையாகக் கேட்டார்.



 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடன் விலகி விட்டார். 


நான் முன்பே பகிர்ந்து கொண்டதுதான். ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மெய் சிலிர்க்கும்.

நிஜ வாழ்வின் உண்மையான கதாநாயகன் இவர்தான்.

இந்த சம்பவம் ஒரு வீர காவியம்.

மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய காவியம்.

தோழர் யெச்சூரி போன்ற மிகுந்த ஞானம் கொண்ட தலைவரை இழந்தது இந்தியாவின் துயரம்.



Thursday, January 15, 2026

இந்திரா காந்தி இரும்புப் பெண்மணியாம் - என்னா பல்டி !!!!

 


மோடிக்கு மட்டுமல்ல, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகள், சிகண்டிகளுக்கும் நேரு குடும்பம் என்றால் எப்போதும் பிடிக்காது. 

அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நாள் வரும் போது அப்படியே பொங்கி எழுந்து ஜனநாயகக் காவலர்களாக சீன் போடுவார்கள் பாருங்கள், அப்போது நமக்கே புல்லரிக்கும். அப்போதெல்லாம் இந்திரா காந்தியை எந்த அளவிற்கு சாட முடியுமோ அந்த அளவிற்கு சாடுவார்கள்.

அவசரநிலைக்காலத்தில் அன்றைய ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் தேவரஸ், மன்னிப்புக் கடிதம் எழுதி இருபது அம்சத் திட்டத்திற்காக பிரச்சாரம் செய்தார் என்பதை மறந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் இரண்டு பதிவுகள் பார்த்தேன்.



பராசக்தி திரைப்படம் வந்த பிறகு  அது சொல்லும் செய்தி பாஜக கருத்தியலுக்கும் எதிரானது என்பதால் 

இந்திரா காந்தி இரும்புப் பெண்மணியாகி விட்டார்.

பக்தவத்சலம் பெரியவராகி விட்டார்.

காங்கிரஸிற்கும் திமுகவிற்கும் இடையில் சிண்டு முடிய இப்போது பராசக்தி படத்தை கீழிறக்கி இந்திராவை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

மோடியின் விருந்தில் பராசக்தி குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதிலே சிவ கார்த்திகேயனும் ஜி.வி.பிரகாஷும் பாஜகவும் சேர்ந்து விட்டதாக வேறு  பாஜகவின் பெண் ரௌடிகள் கோஷ்டியின் தலைவி மயிலை ரமா பதிவிட்டுள்ளார். 

அந்த செய்தி உண்மையென்றால் இன்னும் என்னென்ன பல்டிகள் அடிப்பார்களோ?

பிகு: மேலே உள்ள படம் - அது தோழர் யெச்சூரி நடத்திய ஒரு வீரப் போர். ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். இருப்பினும் நாளை மீண்டும் பகிர்கிறேன். மீண்டும் மீண்டும் நாம் பேச வேண்டிய வீர காவியம் அல்லவா அது!

Friday, January 9, 2026

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்தானே அன்புமணி?

 


அதிமுகவுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளது பாமகவின் அன்புமணி கோஷ்டி. ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்து இப்போது அதிமுகவை நடத்திக் கொண்டிருப்பவர்கள், குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களைப் பற்றி அன்புமணியின் மதிப்பீடு என்ன?

கீழேயுள்ள காணொளியை பாருங்கள்.


மன்ணு என்றும் டயர் நீக்கி என்றும் சொன்ன அன்புமணியும் சொல்லப்பட்ட எடப்பாடியும் இப்போது அந்த காணொளி பற்றி என்ன சொல்வார்கள்?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா . . .


Monday, January 5, 2026

அமைச்சர்களை அடக்குங்கள் முதல்வரே

 


சுசீந்திரம் தேர்த்திருவிழாவில் "பாரத் மாதாக்கீஜே" என்று "சாவர்க்கர் வாழ்க" என்று கோழை செல்பி சாவர்க்கரை வாழ்த்தியும் கூச்சல் போட்ட சங்கிகளைப் பார்த்து பேசிய வார்த்தைகள் அநாகரீகமானவை. அமைச்சர் என்ற பதவிக்கு பொருத்தமானதும் அல்ல. ஒன்றும் இல்லாத விஷயத்தையே மிகைப்படுத்தி பூதாகரமாக்கி சர்ச்சைகளை உருவாக்க சங்கிகள் அலையும் போது அவர்களுக்கு அவல் கொடுத்தது மூடத்தனமும் கூட.

இதே போல்தான் திருத்தணியில் வட மாநில வாலிபர் வெட்டப்பட்ட போது தமிழ்நாட்டில் கஞ்சா 0 என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்னதெல்லாம் எரிச்சலூட்டும் ரகம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில்  திமுகவிற்கு பின்னடைவு வருமானால் அதற்குக் காரணம் சேகர்பாபு, மா.சு போன்ற பொறுப்பற்ற அமைச்சர்கள்தான் என்று இப்போதே சொல்லி விட முடியும்.

ஆமாம், சங்கிகளா, சுசீந்திரம் கோயிலுக்கும் கோழை சாவர்க்கருக்கும் என்னங்கடா சம்பந்தம்? "ஓம் காளி, ஜெய் காளி" , "ஜெய்ஸ்ரீராம்" போல "பாரத் மாத்தாக்கீஜே" என்பதையும் கலவர முழக்கமாக்கி விட்டீர்களே

Saturday, November 22, 2025

சங்கிகள் -தமிழ்நாட்டின் துரோகிகள்

 


மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் கிடையாது என்று ஒன்றிய அரசு அனுமதி மறுத்து விட்டது. 2011 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த நகரங்களின் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ செயல்படும் போது மதுரைக்கும் கோவைக்கும் மட்டும் மறுப்பது மோடியின் அப்பட்டமான தமிழ்நாட்டு விரோத அரசியல்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் 2021 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் இருபது லட்சம் கடந்திருக்கும். ஆக இவர்கள் மறுத்த காரணத்திற்கும் இவர்களே பொறுப்பு.

மத்தியரசின் செயலை சங்கிகள் கண்டிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மை இருந்தால் அந்த மூடர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!

முதலில் செய்தி தவறு என்றார்கள்.

அடுத்து விளக்கம்தான் கேட்டுள்ளார்கள் என்றார்கள்.

தமிழ்நாடு அனுப்பிய திட்ட அறிக்கை தவறு என்று வியாக்யானம் கொடுத்தார்கள்.

ஆனால்  இவர்களை மக்கள் எள்ளி நகையாடுவதால்

கோவைக்கும் மதுரைக்கும் எதற்கு மெட்ரோ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் இப்போது அந்த ஒப்பாரியைத்தான் வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எதிரிகள், துரோகிகள். அவர்களை இந்த மாநிலத்திலிருந்தே துரத்த வேண்டும். 


Saturday, November 15, 2025

கவலைக்கிடமாய் . . .

 


தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு,

வாக்குத் திருட்டு,

மத வெறி பிரச்சாரம்,

தேர்தலுக்கு முதல் நாள் வெடித்த வெடிகுண்டு,

தமிழ்நாட்டில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதை பிச்சை கொடுப்பது என்று இழிந்து பேசிக் கொண்டே பத்தாயிரம் ரூபாய் அளித்தது,

என்று ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதெல்லாம் நமக்கு   நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வதாகத்தான் இருக்கும். 

அயோக்கியத்தனம் செய்வதையே வாழ்வியலாகக் கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் வாக்குகளைக் குவிக்க முடிகிறது என்றால்

நம் மக்களிடமும் ஏதோ கோளாறு இருக்கிறது. தங்கள் வாழ்வைப் பறிக்கிறவர்களையே விரும்புகிற அளவிற்கு மோசமாகி விட்டார்கள்.

அவர்களின் நம்பிக்கையை "இந்தியா" எப்படி வெல்லப் போகிறது?

இப்போது இந்திய ஜனநாயகத்தின் நிலைமை தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக உள்ளது. அது மீளுமா அல்லது மீளாத்துயரை நமக்கு அளிக்குமா?

சிகிச்சை தர வேண்டிய பொறுப்பில் உள்ள "இந்தியா" அணி தங்களுக்குள் உண்மையான பரிசீலனை செய்ய வேண்டும். 

அநேகமாக "இந்தியா" அணியின் அனைத்து கட்சிகளுக்குள்ளும் சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுறுவியுள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு தூக்கி வீசப்பட வேண்டும். 

பல கட்சிகளிலும் (இடதுசாரிகள் உட்பட) களைகள் மண்டிக் கிடக்கின்றன. கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி அந்த களைகள் அகற்றப்பட வேண்டும்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து கொண்டு அவற்றின் தீர்வுக்கான போராட்டங்களை நடத்த வேண்டும். 

இவற்றையெல்லாம் செய்தால் ஜனநாயகம் பிழைக்கும். இல்லையென்றால் புலம்பலே வாழ்வாகும். 

Thursday, November 13, 2025

அந்த ஆட்டுக்குட்டி கதை பொய்யா?

 


நேற்று ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி ஒன்று.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை "தேசியத் தலைவர்" என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதாம்.

காமராஜர் பற்றி தவறாக சித்தரித்துள்ளதால் அத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு நாடார் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை செய்யக் கோரியுள்ளது என்பதுதான் அந்த செய்தி. 

அப்படி என்ன தவறான செய்தி அத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்?

அந்த காலத்தில் தேர்தலில் நிற்க சொத்து வேண்டுமாம். காமராஜரிடம் எதுவும் சொத்து கிடையாது. காமராஜரின் அன்னை பெயரில் இருந்த நிலத்தை காமராஜர் பெயருக்கு மாற்றித் தர தேவர் சொன்ன போது அவர் தன் மகள் திருமணத்துக்கு அந்த நிலம் தேவை என்பதால் மறுத்து விட்டாராம். ஏனவே முத்துராமலிங்க தேவர் காமராஜருக்காக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி  அதற்கு காமராஜர் பெயரில் ரசீது வாங்கினார். அந்த அடிப்படையில்தான் காமராஜர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இந்த தகவலை இதற்கு முன்பு வாட்ஸப்பில் உலா வந்திருக்கிறது. 

இந்த தகவல் பொய்யானது, ஆதாரமற்றது, காமராஜர் மீது அவதூறு பரப்புகிறது என்பது வழக்கின் மையக்கருத்து. 

நான் கூட 

தலித் தலைவர் இமானுவேல் சேகரன் கொலை தொடர்பாக முதல்வராக இருந்த காமராஜர் முத்து ராமலிங்கத் தேவரை கைது செய்ய உத்தரவிட்டது,

முதுகளத்தூர் கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்தது.

கீழ்த்தூவல் என்ற இடத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் கண்களைக் கட்டி போலீஸ் சுட்டது என்ற குற்றச்சாட்டு ஆகியவை பற்றிதான் திரைப்படம் காமராஜரை உண்மயாகவோ, தவறாகவோ சித்தரித்துள்ளதோ என்று நினைத்தேன்.

கடைசியில் பார்த்தால் "ஆட்டுக்குட்டி" பிரச்சினை!

பிகு: மேலே உள்ள படத்தில் ஆட்டுக்குட்டியை கையில் வைத்துள்ள ஆள்தான் டுபாக்கூர் என்பது இன்றைய நிலவரம் என்றால் அந்த காலத்திலும் ஆட்டுக்குட்டி கதை டுபாக்கூர்தான் போல . . .


Tuesday, November 11, 2025

நேருவின் பெயர் என்பதால் இடிப்பா மோடி?

 







மேலே உள்ள படங்களை பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கம்பீரமான விளையாட்டு அரங்கை புதுடெல்லிக்கு சென்று நீங்கள் நேரில் பார்க்க விரும்பினாலும் அதற்கு வாய்ப்பு கிடையாது.

ஏனென்றால் இந்த விளையாட்டு அரங்கம் இடிக்கப்படவுள்ளது.

இதுதான் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம். எண்பதுகளில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போது கட்டப்பட்ட அரங்கம்.

அப்படி என்றால் இது பழைய அரங்கமாகத்தானே இருக்கும்! பலவீனமாகி இருக்குமே! இடித்தால் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த அரங்கம் 1982 ல்  கட்டப்பட்டாலும்  அது மீண்டும் 2010 ல் இந்தியா, காமன்வெல்த் போட்டிகளை நடத்திய போது 961 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. 

அது மட்டுமல்ல 27 செப்டம்பர் 2025 முதல் 5 அக்டோபர் 2025 வரை மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சேம்பியன்ஷிப் போட்டிகள் இதே அரங்கில்தான் நடந்தது. அதற்காக பல வசதிகளை அதிகரிக்க ஐம்பது கோடி ரூபாய் இப்போதுதான் செலவழிக்கப்பட்டுள்ளது.

ஆக இப்போது இந்த ஸ்டேடியத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது?

புதிய விளையாட்டு மையத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறார்கள்.

அதற்கான திட்டம் தயாராக உள்ளதா?

இல்லைங்க.

எவ்வளவு செலவாகும் என்ற மதிப்பீடு உள்ளதா?

இல்லைங்க.

இப்போது கால்பந்து விளையாடலாம். தட களப் போட்டி நடத்தலாம், குதிரை சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் நடத்தலாம். ஊக்க மருந்து சோதனை மையம் உள்ளது. இந்திய விளையாட்டு முன்னேற்ற ஆணையத்தின் அலுவலகம் உள்ளது. வேறு ஏதாவது புதிய விளையாட்டு இணைக்க வாய்ப்பு உண்டா?

தெரியாதுங்க.

ஸ்டேடியம் இடிக்கப்பட்டால் மேலே சொன்னவை எல்லாம் எங்கே செல்லும்?

தெரியாதுங்க.

அப்பறம் என்னதான்யா தெரியும்?

இந்த ஸ்டேடியம் மோடிக்கு பிடிக்காத நேருவின் பெயரில் உள்ளது.

அதனால்தானா?

ஆமாங்க. அதனால்தான் ஸ்டேடியத்தை இடிக்கறோம்., 

புதுசா கட்டுவீங்களா?

கட்டினாலும் கட்டுவோம். மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மாதிரி கிடப்பில போட்டாலும் போடுவோம். ஆனா?

என்ன ஆனா?

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் பெயரில இனி டெல்லியில் ஸ்டேடியம் கிடையாது.

அப்படியா?

நேருவுக்கு பதிலா மோடி தூக்கி வச்சுக்கற சர்தார் படேல் பெயரில் அகமதாபாத்தில் இருந்த ஸ்டேடியத்தை லைட்டா புதுசாக்கிட்டு படேல் பெயரை தூக்கிட்டு மோடி அவரு பெயரையே வச்சுக்கிட்டவரு. படேலுக்கே இதான் மோடி மரியாதைன்னா, நேருவுக்கு ????????


Tuesday, October 21, 2025

ராஜீவ் கூட்ட்டத்தில் சுருண்ட கதை . . .



 விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த நாள் முதல் எழுத நினைத்த என் சொந்த அனுபவம் இது.

1984 ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார். தன் தாயின் மரணத்தால் உருவான அனுதாபத்தை அறுவடை செய்ய மக்களவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கிறார்.

அத்தேர்தலுக்காக நாடெங்கிலும் பிரச்சாரம் செய்கிறார். அப்போது நாங்கள் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இருந்தோம். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான பிரச்சாரத்திற்காக நெய்வேலி வருகிறார். முதல் நாள் மாலையில்தான் ஆட்டோவில் அறிவிப்பு செய்கிறார்கள். 

மதுரையில் படித்துக் கொண்டிருந்தாலும் ஐந்தாவது செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன். 

ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு புறப்பட்டேன். ராஜீவ் காந்தி மீது பெரிய நாட்டம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அந்த காலகட்டத்தில் பிடித்த தலைவர் ராமகிருஷ்ண ஹெக்டேதான்.  இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் ( நான் பார்த்த போது அவர் பிரதமர் இல்லை) ஆகிய மூன்று பிரதமர்களை பார்த்துள்ளேன். அந்த பட்டியலில் ஒன்று கூடுவதை வைத்து கல்லூரியில் பீற்றிக் கொள்வதுதான் நோக்கம்.

மந்தாரகுப்பம் சுரேஷ்குமார் பேலஸ் தியேட்டர் (பெயர் சரியாக நினைவில் இல்லை, சந்தோஷ்குமார் பேலஸாகக் கூட இருந்திருக்கலாம்)  பக்கத்தில் கூட்டம்  என்று சொன்னார்கள். சைக்கிளில் போனால் அங்கே கூட்டம் நடப்பதற்கான  எந்த சுவடும் இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் போனால் கூட்டம் நடக்கும் இடம் வரும் என்றார்கள். 

காலை பத்தரை மணி இருக்கும். மிகக் கடுமையான வெய்யில். சைக்கிளை மிதிக்கிறேன், மிதிக்கிறேன், மிதித்துக் கொண்டே இருக்கிறேன். வானில் ஹெலிகாப்டர் செல்லும் சப்தம். சைக்கிளை மிதிக்கும் வேகம் அதிகரிக்கிறது.

கிட்டத்தட்ட ஏழெட்டு கிலோ மீட்டர் சென்ற பின்பு கூட்டம் நடக்கும் இடம் வந்தது. அந்த ஹெலிகாப்டரில் வந்தது ராஜீவ் காந்தி இல்லை. அந்த பொட்டல் மைதானம் சென்றதும் சைக்கிளை நிறுத்தி விட்டு அப்படியே கட்டாந்தரையில் சுருண்டேன். படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. தொண்டை தாகத்தில் வரண்டது. ஆனாலும் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடங்கள் சோர்வில் படுத்துக் கொண்டே இருந்தேன். 

அதன் பிறகு எழுந்து பார்த்தால் பக்கத்தில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது. கைகளில் தண்ணீரை பிடித்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது. நீண்ட நேரம் காக்க வைக்காமல் ராஜீவ் காந்தியும் வந்து விட்டார். அவருடைய பேச்சு அவ்வளவு சுகமில்லை. தமிழாக்கம் செய்த ப.சிதம்பரம் தன் சொந்த சரக்கையும் சேர்த்து சமாளித்தார் என்பது வேறு கதை.

மீண்டும் அதே வெய்யிலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.  அப்படியே ஒரு பெஞ்சில் படுத்தேன். மதியம் சாப்பிடக் கூட எழுந்திருக்கவில்லை. மாலையில் உடல் கேஸ் அடுப்பு போல கொதித்தது.  மந்தாரக்குப்பத்தில் உள்ள மருத்துவரிடம் இரண்டு மூன்று நாள் சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் என்.எல்.சி பொது மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டார். 

அங்கே டைபாய்டு என்று கண்டறிந்து உள் நோயாளியாக சேர்ந்து ஒரு வாரம் இருந்தேன். கடைசி செமஸ்டரில் இப்படியாகி விட்டதே என்று என் அப்பா திட்டினாரே தவிர, எதற்காக ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு போனாய் என்று அவர் திட்டவேயில்லை. இந்திரா காந்தி, எம்,ஜி.ஆர், கலைஞர், மொரார்ஜி தேசாய், சோ ஆகியோருடைய கூட்டங்களுக்கு 1977 ல் அழைத்துச் சென்றவரே அவர்தானே. அரசியலை பின்பற்றத் தொடங்கியது அந்த காலகட்டத்திலிருந்தேதான். 

அதனால்தான் , அந்த நாற்பத்தி எட்டு வருட அனுபவத்திலிருந்து சொல்ல முடிகிறது. த.வெ,க  போன்ற பொறுப்பற்ற கட்சி எதுவுமில்லை.