Sunday, September 26, 2010

இந்த சாமர்த்தியம் ஏன் எனக்கு வரவில்லை?

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தில்
தொழிலுறவு மேலாளராக இருந்தவர், அதிகார கித்தாப்பில்
வந்த புதிதில் எங்களோடு அதிகம் மோதியவர், பின்பு சங்கம்
சொல்வது சரியாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு
இணக்கமாகச் சென்றவர், தற்போது பணியிலிருந்து ஒய்வு
பெற்றவர், இரு தினங்களுக்கு முன்பு சொந்த வேலையாக வேலூர்
வந்தார். அலுவலகம் வந்து பார்த்தார். பழைய கதைகள்
பேசினோம். மற்றவர்களைப் பார்க்க முதல், இரண்டாவது
மாடிகளுக்குச் செல்லும் முன் என் மகனின் பெயர், என்ன
படிக்கிறான் என்றெல்லாம் கேட்டார். ரகுநந்தன் என்று
சொன்னதும் நல்ல பெயர் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

அன்று மாலை வீடு வந்ததும், என்னுடைய அலுவலகத்திலேயே
பணியாற்றும் என் மனைவி வியப்பாக ஒரு தகவலை பகிர்ந்து
கொண்டார். அந்த மேலாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு
நல்ல ஞாபக சக்தி, நம் மகனின் பெயரை பத்தாண்டுகளுக்கு
மேலானாலும் நன்றாக ஞாபகம்  வைத்துக் கொண்டு
ரகுநந்தன் நன்றாக படிக்கிறானா? என்று கேட்டார் என
வியந்து போனார். அப்போது பக்கத்தில் இருந்தவர்களும்
அவரது ஞாபக சக்தியைக் கண்டு பிரமித்தே போனார்களாம்!
அவரும் எப்படி நான் மறக்க முடியும் என்று ஒரு சீன்
போட்டிருக்கிறார்.

என்னிடம் பெயரைக் கேட்டு விட்டு மாடிக்குச்சென்று தான்
எவ்வளவு தூரம் உங்களையெல்லாம் நினைவில் வைத்துள்ளேன்
என்று சொல்வதும் ஒரு சாமர்த்தியம்தான். ஆனால் கொடுமை
என்னவென்றால் இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகள் உலகெங்கும்
நிறைந்துள்ளார்கள் என்பதும் மிகவும் சரியானவர்கள் என
நாம் நம்புகிற பலரும் கூட இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளின்
வசீகரப் பேச்சால் தடம் புரள்வதும்தான். உணமையாகவும்
நேரடியாகவும் பேசக்கூடியவர்கள், நடந்து கொள்ளக்கூடியவர்களை
இது போன்றவர்கள் சமயத்தில் போட்டுத்தள்ளி விட்டும்
முன்னே போய்க் கொண்டே இருப்பார்கள்!

நீண்ட நாட்களாக நான் என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி
இதுதான்.

இந்த சாமர்த்தியம் ஏன் எனக்கு  வரவில்லை?

Saturday, September 25, 2010

எந்தக் கொம்பனும் எதுவும் செய்ய முடியாது.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு
நேற்றும் இன்றும். இன்று மதியம் பேரணியும், பொதுகூட்டமும்
என்று முடிவு செய்திருந்தார்கள். பேரணியை துவக்கி வைக்க
என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் சத்துணவு ஊழியர்கள் 
கையில் துப்பாக்கியும் பீரங்கியும் எடுத்து வருவார்கள்
என்பதற்காக, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக காவல்துறை
பேரணிக்கான அனுமதியை மறுத்து விட்டது. ஆனால் சில
தினங்கள் முன்பாகத்தான் டாஸ்மாக் மணம் வீச விநாயகர்
ஊர்வலம் நடத்த அனுமதித்தார்கள் என்பது கவனத்திற்குரியது.
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று சொல்லவில்லை.

பேரணியை துவக்கி வைக்கிற வேலை இல்லாததால் வேறு சில
பணிகளை முடித்து விட்டு தாமதமாகத்தான் சென்றேன். அங்கே
நான் கண்ட சில காட்சிகள் உண்மையிலேயே அற்புதமானது.
கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள், அதிலே
கிட்டத்தட்ட 85 %  பெண் தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு மிகப் பெரிய அடக்குமுறையை சந்தித்து அதன் காயம்
இன்னமும் வலித்துக் கொண்டிருக்கிறபோது, தலைமை
முழுவதுமே அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் பணி நீக்கம்
இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போது, மோசமான ஒரு
பொய்ப்பிரச்சாரத்தை  முதலமைச்சரே முன் நின்று செய்யும்
வேளையில்  இந்த அளவு தோழர்கள் பங்கேற்றது என்பது
உண்மையிலேயே மகத்தானது. மெய் சிலிர்க்க வைத்த
அத்துணைத் தோழர்களுக்கும் செவ்வணக்கம்.

கூட்டத்திற்கு அனுமதிக்கடிதம் வழங்கவில்லை என்ற
ஞானோதயம்  திடீரென காவல்துறைக்கு வர மேடைக்கு
அருகே வந்து சலம்பல் செய்தார் ஒரு அதிகாரி. கூட்டம்
முடியும் நேரம் என்றதும் சற்று அமைதியாய் போனார்.
அப்போது மேடையில் பேசிய அரசு ஊழியர் சங்கப்
பொறுப்பாளர் காவல்துறையின் அணுகுமுறையை
விமர்சனம் செய்ய, வேதாளம் மீண்டும் முருங்கை
மரத்தில் ஏறி விட்டது. மீண்டும் சலம்பல், குழப்பம்,
அதிகார அதட்டல், மிரட்டல், உருட்டல் என எல்லாமே
நடந்தது. மேடையையும் கூட்டத்தையும் ஒரு காவலர்
வீடியோ வேறு எடுக்கத்தொடங்கி விட்டனர்.

இத்தனை களேபரம் நடந்தும் ஒரு தோழர் கூட
இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அங்கிருந்து
தப்பிக்கலாம் என்ற சிந்தனையே இல்லாமல் நடப்பதை
மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மன உறுதியும்
போராட்ட உணர்வும் இல்லாவிடில் இது சாத்தியமில்லை.
இந்தத் தோழர்களைத்தான்  சுற்றுலா என்று சொல்லி
ஏமாந்து வந்தவர்கள் என கொச்சைப்படுத்தினார் கலைஞர்.

இன்று அவர்கள் காண்பித்த நெஞ்சுரம் கண்டு வியந்து
சொல்கிறேன்.

எந்தக் கொம்பனும் அவர்களை எதுவும் செய்திட முடியாது.

Sunday, September 19, 2010

நீதி தேவதை கண் திறப்பாளா?

ரூ தினங்களுக்கு  இந்து நாளிதழில் பார்த்த செய்தி
அதிர்ச்சியளித்தது. உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை
நீதிபதிகள் பதினாறு பேரில்  எட்டு பேர் ஊழல்  பேர்வழிகள்
என பிரபல வழக்கறிஞரும்  மொரார்ஜி தேசாய் காலத்திய
மத்திய சட்ட அமைச்சருமான திரு சாந்தி பூஷன் குற்றம்
சுமத்தியுள்ளார். அதுவும் ஏதோ தமிழக அரசியல் தலைவர்கள்
போல மேடை உதார் இல்லாமல் உச்ச நீதி மன்றத்திலேயே
பட்டியல் அளித்து அங்கே நடக்கும் அவமதிப்பு வழக்கு ஒன்றில்
தன்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்.
வலுவான ஆதாரங்களின் பின்னணியில்  மட்டுமே இவ்வாறு
செய்ய முடியும்.

இந்திய ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களான
அரசும் நிர்வாகமும் ஊழல் கறை பிடிந்ததாய் மாறி பல காலம்
ஆகி விட்டது. நான்காவது தூணான ஊடகம் பெரும்பாலும்
சார்புத்தன்மை உடையதாகவே உள்ளது. ஒரே நம்பிக்கையாக
இருந்த நீதித்துறை மீதும் சீர்குலைவின் நிழல் படியத் துவங்கி
விட்டது. கீழ் மட்டத்தில் இது அதிகமாகவும் மேலே செல்லச்செல்ல
குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் தகர்ந்து போய் விட்டது.

நாங்கள் நீதிபதிகள், எங்கள் சொத்துக்கணக்குகளை  வெளியிட
முடியாது என்று எப்போது முரண்டு பிடிக்க ஆரம்பித்தார்களோ,
அப்போதே தெரிந்து விட்டது, இவர்கள் மடியில் கனம் இருக்கிறது
அதனால்தான் பயப்படுகின்றனர் என்று. தங்களைத் தாங்களே
தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை வேறெங்கும் நாம் காண
முடியாது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு சபர்வால் இருந்தபோது
அவரது  மகன்களின் வணிக நலன்களுக்காகவே  ஏழை மக்களின்
குடிசைகளை இடிக்க ஆணையிட்டார் என்ற குற்றச்ச்சாட்டு
எழுந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஆக்கிரமிப்பு புகழ்
தினகரன்,பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான  பல்வேறு
நீதிபதிகள் என்று பெரிய பட்டியலே உண்டு.

இப்போது  எட்டு தலைமை நீதிபதிகள் மீதே புகார் என்கிற போது
ஊழல் புரையோடிப்போயுள்ளது  என்பதைத்தான் காண்பிக்கிறது.
மத்தியரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.
அவர்கள்தானே ஊழல்களின் பாதுகாவலர்கள்.

நீதி   தேவதை   கண் கட்டை  அவிழ்த்து  சுட்டேரிக்காவிட்டால்  இவர்கள்
தொடர்ந்து இப்படியேதான் இருப்பார்கள்
                                                                                                                           

Friday, September 10, 2010

சமத்துவ மயானமும் மஞ்சள் கண்ணாடி கலைஞரும்

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வேலூர்
மாவட்ட அமைப்பாளர் தோழர் குபேந்திரன் செப்டம்பர்
ஒன்பது அன்று மாநிலக்குழு முடிவின்படி அனைத்து
நகராட்சிகளிலும் மின் மயானம் அமைக்க வேண்டும்,
கிராமப்பகுதிகளில் சமத்துவ மயானங்கள் அமைக்க
வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்
எனவும் அதற்காக ஒரு பிரசுரமும் காவல்துறை
அனுமதிக்கான கடிதமும் தயார் செய்யுங்கள் என்று
கூறினார்.

ஒரு வினாடி இது என்ன கோரிக்கை என்று யோசித்தேன்.
இது  தொலைநோக்குப் பார்வையுடனான அற்புதமான ஒரு
கோரிக்கை என்பது அடுத்த கணம் புரிந்தது. தமிழகத்தின்
பல ஜாதி மோதல்களுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும்
மையக் காரணியாக மயானங்களே இருந்து வருகிறது. தலித்
மக்கள் இறந்து போனால் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ
இன்னமும் மயானங்கள் இல்லாத நிலை பல  கிராமங்களில்
உள்ளது. அப்படி இருக்கும் மயானங்களுக்கு பாதை மறுக்கப்படும்
நிலையும் உள்ளது.

நம் வாழ்வில் காணா  சமரசம் உலாவும் இடமே என மயானங்கள்
பற்றி பாடப்பட்ட பாடல் பொய்யாகிப் போய் பல்லாண்டுகள் ஆகி
விட்டது. ஜாதிக்கொரு சுடுகாடு என்பதுதான் இன்றைய யதார்த்தம்.
கிராமங்கள் மட்டுமல்ல நாகரீகம் வளர்ந்ததாக சொல்லப்படும்
நகரங்களில் கூட இதுதான் நிலை.

தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களில் மயான
உரிமை மறுக்கப்படுவதும் ஒரு முக்கியமான வகை. உயிருடன்
இருக்கும் ஒரு தலித் இறந்து போனால் அவரது சடலம்
ஆதிக்க சாதி மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக
எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. சடலத்தை தெருவில்
வைத்து எத்தனையோ மோதல்கள் நடந்திருக்கின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இது போன்ற
தடை இருந்த காரணத்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
ஒரு பெரியவரை அவர் இறந்து விட்டால் பல கிலோ மீட்டர்கள்
சுற்ற வேண்டியிருக்கும் என்பதால் உயிருடன் இருக்கும்போதே
சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்ற அவலம் குறித்து ஒரு
கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்
தோழர் சம்பத் சொன்னதும் நினைவிற்கு வருகின்றது.

நகர்ப்புற விரிவாக்கத்தால் சுடுகாடுகளையும் மனை போட்டு
விற்பதும் தலித் மக்களின் சுடுகாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதும்
அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழலில்
நகர்ப்புறங்களில் மின் மயானம், கிராமப்புற ஜாதிவாரி
மயானங்களை மாற்றி சமத்துவ மயானம் என்ற கோரிக்கை
பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்.

தமிழக அரசு இதனை ஏற்று அமுல்படுத்துவது மாநிலத்திற்கு
நல்லது. ஆனால் தமிழக அரசு இக்கோரிக்கையை எப்படி
அணுகும்? வழக்கம் போல் இவர்களுக்கு இதேதான் வேலை
என்று ஒதுக்கித்தள்ளுமா? அல்லது மீண்டும் கம்யூனிஸ்டுகள்
போர்க்களம் புகுந்து விட்டார்கள், தடியடிக்கு தயாராகுங்கள்
என காவல்துறைக்கு ஆணையிடுமா?

மார்க்சிஸ்டுகள் மீது காழ்ப்புணர்வு என்ற மஞ்சள் கண்ணாடி
அணிந்திருப்பதால் கலைஞருக்கு எல்லாமே தவறாகத்தான்
தெரிகிறது. மஞ்சள் துண்டு அணியத் தொடங்கியதும் அவரது
பகுத்தறிவுப்பார்வை மங்கத்தொடங்கியது.  மஞ்சள் கண்ணாடி
அவரை பதட்டமடையச்செய்கிறது.

சற்று நிதானமாக சிந்தித்தால் இக்கோரிக்கை எத்தனை
நன்மைகளை உருவாக்கும் என்பது புரியும். பகுத்தறிவுப்
பகலவன், சமத்துவப் பெரியார், அம்பேத்கார் சுடர் என்று
அழைக்கப்படும் முதல்வர் என்ன செய்யப் போகிறார்?

(கிராம மயானமும் சென்னை மின் மயானமும்)

Wednesday, September 1, 2010

கலைஞர் எனும் இரும்புக்கை மாயாவி


சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத மனிதராக
கலைஞர் மாறி விட்டார். பாலும் தேனும்
பெருக்கெடுத்து ஓடும் மாநிலமாக தமிழ்நாடு
இருப்பதாகவும் ஏதோ அவரது அரசுக்கு
களங்கம் விளைவிப்பதற்காகவே மார்க்சிஸ்ட்
கட்சியும் தொழிற்சங்கங்களும் போராட்டங்கள்
நடத்திக்கொண்டிருப்பதாக கற்பனை உலகில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மக்கள்
அரசிடமிருந்து நியாயம் கிடைக்கும் என
எதிர்பார்க்கிறார்கள்.  மனு அளித்தல் ,
ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் என்ற
பல்வேறு வடிவங்களை ஆளும் வர்க்கம்
அலட்சியப் படுத்துகையில்தான் வேலை
நிறுத்தம், முற்றுகை போன்ற ஆயுதங்களை
 கையில் எடுக்க வேண்டியுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களை வேலை நிறுத்தம்
செய்யவைத்தது தமிழாக அரசுதான். ஐந்து
முறைக்கு மேல் சந்தித்தும் மாவட்ட ஆட்சியர்
காண்பித்த அலட்சியம் குடியாத்தம் தாலுகா
அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் முடிவு
செய்ய காரணியாக இருந்தது.

26  வருட கால சோகம் சத்துணவு ஊழியர்களை
கோட்டையை நோக்கி முற்றுகை என்று அறிவிக்க
வைத்தது. முப்பது நாட்களுக்கு முன்பே அறிவிப்பு
அளித்திருந்தும் அதனை கண்டு கொள்ளாதது யார்
குற்றம்? ஒரு வேளை சத்துணவு ஊழியர்களும்
பாசததலைவனுக்கு பாராட்டு விழா என நடத்தி
குத்தாட்டம் நிகழ்த்தியிருந்தால் கலைஞருக்கு
புரிந்திருக்குமா?

போராடிய சத்துணவு ஊழியர்களை காவல்துறை மூலம்
அணுகியவிதம் கேவலமானது. ஜெயலலிதா பிரயோகித்த
அதே பிற்போக்கு ஆயுதத்தை இவரும்  பயன்படுத்தி
நானும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என
நிருபித்து விட்டார்.

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமான
பொறுப்பாளர்கள் பணி  நீக்கமும்   இடை நீக்கமும்
செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு தீவிரவாதத்திற்கு
எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமை
ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவருக்கும் உண்டு.

ஒழுங்கு நடவிக்கை என்பது பணிக்குச்செல்லாதவர்கள்
மீதும் பணியை முறையாக செய்யாதாவர்கள் மீதும்
எடுக்கப்படுவதுண்டு. நாடாளுமன்றத்திற்கு செல்லாத
அமைச்சர் பதவியை ஒழுங்காக செய்யாத
அஞ்சா நெஞ்சன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்
தைரியம் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த
வீரருக்கு உண்டா?

போராட்டத்திற்காக சென்னை வந்தவர்களை
கோயில்களுக்கும் சுற்றுலா செல்வதாகவும் சொல்லி
போய் சொல்லி கூப்பிட்டு வந்துவிட்டார்கள் என்று
வேறு கொச்சைப்படுத்தியிருக்கிறார்.  தன்னைப் போல்
பிறரையும் என்னும் தயாள குணம் கொண்டவரல்லவா?
குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தால்
மட்டுமே இவர் கட்சித்தொண்டர்கள் வருவதால்
எல்லோரையும் அப்படியே நினைக்கிறார். ( இன்று
வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில்
இதைச்சொன்னபோது ஒரு தோழர் என்னை சரி
செய்தார். ரேட் ஏறி விட்டதாம். ஆப் பாட்டிலும்
இருநூறு ரூபாயும் பிரியாணியுமாம்)

நான் சிறுவனாக இருக்கையில் சித்திரக்கதைகள்
வரும். இரும்புக்கை மாயாவி என்ற கதாபாத்திரம்
மிகவும் பிரபலம். அவர் மின்சாரத்தில் கைவைத்தால்
உடல் மறைந்து போய் கை மட்டும் தோன்றும்.
அவர்  கதாநாயகன். ஆனால் இவரோ வில்லனாக
அல்லவா மாறியிருக்கிறார். அதனால்தான்
இரும்புக்கரம் கொண்டு உழைக்கும் மக்களின்
போராட்டத்தை ஒடுக்கப்பார்க்கிறார்.

தொழிலாளி வர்க்கம் எனும் மின்சாரத்தை
இவரது இரும்புக்கரம் தீண்டுகிறபோது  இவரே
வரலாற்றிலிருந்து மாயமாக மறையப்போகிறார்.
மாயாவியின்   ஆட்சியின் அந்திமக்காலம்
இதுதான் போலும்.