Friday, March 31, 2017

இவ்வளவுதானா ஜெயமோகன் பவுசு!!!!!!!!

 எழுத்தில் ஜெயமோகன் படைத்துள்ள சாதனைகளை நெருங்க முடியாத கூட்டம்தான் அவர் மீது சாணி அடித்துக் கொண்டிருக்கிறது என்று அவரது லகுட பாண்டிகள் பீற்றிக் கொண்டிருப்பார்கள். 

கீற்று இணைய தள இதழில் தோழர் பாவெல் சக்தி எழுதியுள்ள கட்டுரை, அப்படி எல்லாம் ஜெயமோகன் புத்தகங்களின் விற்பனை எந்த சாதனையும் படைக்கவில்லை என்று அம்பலப்படுத்துகிறது. 

அடச் சே, இவ்வளவுதானா அவர் பவுசு என்று இக்கட்டுரையைப் படித்தால் உங்களுக்கே தோன்றும். 

இக்கட்டுரைக்கு ஜெயமோகன் தனது மெய்ஞான மரபுப்படி என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார், அவரது சிஷ்ய கோடிகள் என்னவெல்லாம் கேள்வி கேட்டு தெளிவான விளக்கம் பெறப் போகிறார்கள் என்பதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.

அதனால் அவரது இணைய தளம் பக்கம் கொஞ்ச நாள் போகப்போவதில்லை. 





 
ஜெயமோகன் என்ன எழுதினாலும் அது பெரும் சர்ச்சை ஆகிவிடுகிறது. அவரும் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், இடதுசாரிகள் என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு சுழற்றி அடிக்கிறார். அவரை மறுக்க ஒரு பெருங்கூட்டம் புறப்படுகிறது. சில நாட்கள் பின்பு இன்னொரு கட்டுரை, இன்னொறு மறுப்பு.

ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான்.

 ஜெயமோகன் எப்போதிருந்து தமிழிலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கிறார்? எப்படி அந்த இடத்தைப் பிடித்தார்? எதனடிப்படையில் அவர் அங்கே இருப்பதாகக் கருதப்படுகிறது? அவரை அந்த அளவுக்கு வாசகர்கள் மதிக்கிறார்களா? அல்லது அது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமா? என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். அதற்காக அவரது நூல்கள் எவ்வளவு விற்றுள்ளன என்று ஒரு சிறிய சர்வே எடுத்து பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

நாம் பட்டியலிடுகிற விபரங்களில் லைப்ரரி ஆர்டர் எனப்படும் நூலகங்களுக்கான பதிப்புகளும் அடங்கும். கூடவே இப்போதெல்லாம் ஒரு பதிப்பு என்பது 1000 பிரதிகள் என்றில்லை. அவரவர் வசதிக்கு தகுந்தபடி 300, 500 என புத்தகங்கள் போட்டுக் கொள்கிறார்கள். அதன்படி ஜெயமோகனின் நூல்கள் 1000 வீதமா, 500 வீதமா, 300 வீதமா என்று யாருக்கும் தெரியாது. எப்படி இருந்தாலும் அவரது எந்த நூலும் விற்பனையில் சாதனை படைக்கவே இல்லை என்பதைத்தான் எனது தேடலில் கண்டறிய முடிந்தது.  அவரது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் உடைவதால் ஒரு சின்ன வருத்தம் கூட ஏற்பட்டது.

எண் நூலின் பெயர் வெளிவந்த ஆண்டு பதிப்பு
1 விஷ்ணுபுரம் 1997 5 (19 வருடங்களில்)
2 பின்தொடரும் நிழலின் குரல் 1999 4 (17 வருடங்களில்)
3 கொற்றவை 2005 3 (11 வருடங்களில்)
4 காடு 2003 2 (13 வருடங்களில்)
5 ஏழாம் உலகம் 2000 2 (16 வருடங்களில்)
6 ரப்பர் 1990
2 (26 வருடங்களில்)
7 கன்னியாகுமரி 2000 2 (16 வருடங்களில்)
8 வெள்ளையானை 2013 2

இந்த நூல்கள் எல்லாம் முதலில் நற்றிணை பதிப்பகத்தில் வந்தன. சென்ற ஆண்டு ஏதோ பிரச்சினையில் நூல்கள் விற்றுத் தீராத நிலையிலேயே கிழக்கு பதிப்பகத்துக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன. எனவே இன்னொரு பதிப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளிவிபரங்களின்படி பார்த்தால்,
  • இவருக்கு ஆன்ம வெளிச்சம் பாய்ச்சிய 'விஷ்ணுபுரம்' நாவல் வெளிவந்த ஆண்டு 1997. கடந்த 20 வருடத்தில் அந்த நாவல் 5 பதிப்புகளைக்கூட தாண்டவில்லை. அந்த நாவலின் பெயரில் வருடா வருடம் விருது வேறு கொடுக்கிறார்கள்.
  • புதுக்காப்பியம் என்கிற பெயரில் இவர் 2௦௦5-இல் எழுதிய 'கொற்றவை' கடந்த 12 வருடங்களில் இதுவரை கண்ட பதிப்புகள் மொத்தம் 3 மட்டுமே.
  • 1999-இல் வெளிவந்த 'பின் தொடரும் நிழலின் குரல்' 18 ஆண்டுகளாகியும் 4-வது பதிப்போடு திணறிக் கொண்டிருக்கிறது.
  • 'ரப்பர்', 'காடு', 'ஏழாம் உலகம்', 'கன்னியாகுமரி', 'வெள்ளை யானை' என பத்துக்கும் மேற்பட்ட நாவல்களின் பதிப்பு பராக்கிரமங்களும் இதே அளவுதான்.
  • இதில் சிறுகதை தொகுப்புகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாரிவேந்தர் பச்சைமுத்து கையில் விருது வாங்கியும் கூட 'அறம்' 6 பதிப்புகள்தான்.
  • அதைத்தவிர 'திசைகளின் நடுவே'யிலிருந்து 'வெண்கடல்' வரை ஒன்றிரண்டு பதிப்புகள்தான்.
  • இவர் ஆன்மிகம், தத்துவம், அரசியல், பண்பாடு, வரலாறு என்று அதாவது இந்து ஞான மரபிற்கும், இன்றைய காந்திக்கும், கண்ணகிக்கும் என பக்கம் பக்கமாக எழுதிக் குவித்த நூல்கள் அதன் பக்கங்களின் எண்ணிக்கை அளவிற்கு கூட விற்றிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
  • இவைத்தவிர தனது அனுபவம், இலக்கிய விமர்சனங்கள், அறிமுக நூல்கள் என வெளியிட்ட வெளியீடுகளுக்கும் இதே கதிதான்.
  • நாடகம், சிறுவர் இலக்கியம், தற்காலம், இன்றைய காலம், சமகாலம் என்ற தலைப்பில் ஜெயமோகன் மொழிபெயர்த்தவை, எழுதியவை பதிப்புகளாக வந்திருப்பது பற்றி அவரின் தீவிர விசிறிகளுக்குக்கூட தெரியவில்லை. விசாரித்தால் ‘என் தலைவன் எழுதாதை எழுதியதாகக் கூறி அவதூறு செய்ய வேண்டாம்’ என சட்டென்று நம் முகத்தில் அறைந்தார்போல பேசுகிறார்கள். அப்படியானால் எவ்வளவு விற்றிருக்கும் என நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
  • இதேபோல இந்துமதம் சில விவாதங்கள் என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட தமிழ்ஹிந்து.காமில் (http://www.tamilhindu.com/) வரவேற்பு விமர்சனம் வந்தும்கூட இப்போது அந்த நூலை மறுபதிப்பு போட யாருக்கும் துணிச்சலில்லை.
இத்தனைக்கும் சினிமா வசனகர்த்தா என்ற 'புகழும்' ஜெயமோகனுக்கு இருக்கிறது.

இங்கே நாம் தமிழில் பத்து பதிப்புகளைக் கடந்த மற்ற எழுத்தாளர்களின் நாவல்களை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தமிழில் எழுதினால் வரவேற்பே கிடைப்பதில்லை என்ற இவர்களின் உள்நோக்கம் கொண்ட காரியவாத புலம்பலை நாம் புரிந்து கொள்ள முடியும்.
  • சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை', 'ஜேஜே சில குறிப்புகள்' நாவல்கள் பல பதிப்புகளைக் கண்டுள்ளன. இதில் புளிய மரத்தின் கதை மலிவுப் பதிப்பாக பல்லாயிரம் வெளியிடப்பட்டு அதன் பின்பு இன்னமும் விற்றுக் கொண்டிருக்கிறது.
  • ப.சிங்கரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யும் அப்படித்தான்.
  • 'வாடிவாசல்' நாவல் 26000 பிரதிகள் வரை போயுள்ளது.
  • இன்றையச் சூழலை கணக்கில் கொண்டால், 2004ம் ஆண்டு வெளிவந்த ச.பாலமுருகனின் 'சோளகர் தொட்டி' 10 பதிப்புக்கும் மேல் சென்று விட்டது.
  • 2007ம் ஆண்டு வெளிவந்த, மொழிபெயர்ப்பு நாவலான பி.எச்.டேனியலின் 'எரியும் பனிக்காடு' 10வது பதிப்பு வெளிவந்து விட்டது.
தவிர தரம், வணிக இதழ் பிரபலம் என்றெல்லாம் பேச வாய்ப்பிருக்கிறது என்பதால் ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் எழுத்துக்களைச் சேர்க்கவில்லை. கி.ரா போன்றவர்களின் நூல் பற்றிய தகவல்களை இப்போதைக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அண்மையில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற நாவல்களைப் பார்த்தால்,
1. 'பார்த்தீனியம்', 'நஞ்சுண்ட காடு' நாவல்கள் வெளிவந்த உடனே இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. இந்நாவலாசிரியர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இல்லை என்றாலும் இந்நூல்களுக்கு ஏராளமான விமர்சனக் கூட்டங்களும், விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.

2. நக்கீரனின் 'காடோடி' நாவலுக்கு இரண்டு ஆண்டுகளில் 30 கூட்டங்களுக்கு மேல் நடந்துள்ளன. சுற்றுச் சூழல் அரங்கில் மிக முக்கியமான நாவலாக காடோடி பேசப்படுகிறது.

3. இவர் புதுக்காப்பியம் என்று கண்ணகியை வைத்து எழுதிய 'கொற்றவை'யுடன் ஒப்பிடும்போது 2014-இல் வெளியான சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்திய இரா.முருகவேளின் 'மிளிர்கல்' மூன்றே ஆண்டுகளில் 1000 வீதம் 5 பதிப்புகளைக் கண்டுள்ளது.

  ஜெயமோகனை விட அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியல் முழுமையானது அல்ல. இன்னும் ஏராளமான எழுத்தாளர்களின் நூல்கள் இருக்கிறார்கள். உதாரணம் தொ.பரமசிவன். அவரது ‘பண்பாட்டு அசைவுகள்’ இதுவரை 14 பதிப்புகள் கண்டு, 15,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளது.

தனது ஆக்கங்கள் பெரிய அளவில் வாசகர்களிடம் கவனம் பெறாத நிலையில், அவர் “எழுதும் கலை” என்கிற தலைப்பில் ஒரு வழிகாட்டி நூலை எழுதியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை.

ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு மாணவர், மகளிர், மீனவர், தலித், பழங்குடி, மத்தியதர வர்க்கம் என சமூகத்தின் எந்தப் பிரிவினராலும் அல்லது அப்பிரிவினர்களின் முன்னோடிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல், பெரும்பாலும் பார்ப்பனர்களின் ஒரு பிரிவு மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் தனது நூல்களின் நாலைந்து பதிப்புகளை வைத்துக்கொண்டு தமிழின் முதல்தர எழுத்தாளன் தான்தான் என தனக்குத்தானே கூறிக்கொள்ள ஒருவரால் முடியுமென்றால் அது ஜெயமோகனால் மட்டுமேதான் முடியும்.

திராவிட எதிர்ப்பு, பெண்ணிய எதிர்ப்பு, சிறுபான்மை எதிர்ப்பு, இந்துத்துவ ஆதரவு ஆகியவற்றை வெளிப்படையாகப் பேச ஆளில்லாத காரணத்தால் இவரை அந்தப் பிரிவு உயர்த்திப் பிடித்தது. ஆனால் ஜெயமோகனால் தன்னை அதற்கு ஏற்றாற்போல வளர்த்துக் கொள்ள முடியவில்லை. நவீன சமூகம் பற்றி அவரால் எழுத முடியவில்லை. சமூகத்தை அவதானிப்பதற்கு ஏற்ற சமூக அறிவு இல்லை. சமூகத்துக்குச் சொல்ல எதுவும் இல்லை. எனவேதான் வெண்முரசில் இறங்கிவிட்டார்.

தனது ஆக்கங்கள் பெரும்பாலானவர்களை சென்று சேரவில்லையென வெளிப்படையாகவே பேசுகிற சாருவிடம் கூட ஒரு நேர்மை இருக்கும். ஆனால் ஜெயமோகன் தனிரகம். ஒன்றுமே இல்லாத மோடியை ஊடகங்கள் காசு வாங்கிக் கொண்டு ஊதிப் பெருக்கியதே… அதே கதைதான் இவருடையதும். மோடிக்கு ஊடகங்கள் இருக்கிறது. இவரோ “தனக்குத் தானே திட்டம்” மூலம் அதை செயல்படுத்தி வருகிறார்.

தான் உன்னதமான, கூர்மையான, ஆழமான எழுத்தை எழுதுவதாக தனக்குத்தானே கூறிக்கொள்ளும் இவரை இன்றுவரை தமிழக வாசகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே மேலே உள்ள விபரங்கள் உணர்த்துகின்றன.

 இவர் கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், சுஜாதா போல பெஸ்ட் செல்லரும் கிடையாது. புதுமைபித்தன் போல சமகால அல்லது கடந்தகால தமிழ்ச் சமூகத்தை அதன் காலத்தை, இடத்தை, அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழல்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் புனைவாசிரியரும் கிடையாது.

‘நானும் ரௌடி, நானும் ரௌடி’ என்று இவர் கூவிக் கொண்டிருக்கும் காலத்திலேயேதான் பலரின் நாவல்கள், மொழிபெயர்ப்புகள், தத்துவ - அரசியல் நூல்கள் ஆயிரக்கணக்கில் பல பதிப்புகளைத் தாண்டி விற்றுத் தீர்ந்திருக்கிறது.

  இவர் ஊடக பிரமை என்றும், குருவிமண்டை என்றும் அருந்ததிராயைச் சொன்னாலும், அது ஜெயமோகனுக்கே அதிகம் பொருந்துகிறது. இப்போது இந்த விபரங்களை பரிசீலிக்கிற எல்லோருக்கும் ஜெயமோகன் ஒரு நல்ல எழுத்தாளர் இல்லையென்பது விளங்கி விடுகிறது. நல்ல ஆக்கங்களை கொடுத்து வாசகர்களிடம் பிரபலமாக முடியாத அவரது இயலாமை சமூகப் பிரச்சினைகள் குறித்து விதண்டாவாத கருத்து சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தவும், அதன்மூலம் பிரபலமடையவும் தூண்டுகிறது.

தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருந்த மற்றவர்களுக்கு வாசகர்கள் கொடுத்திருந்த மதிப்பைப் பார்க்கும் போது ஜெயமோகன் ஒன்றுமே இல்லை. அவர் முதலிடத்திலும் இல்லை என்பதே தெளிவாகிறது. எத்தனை குழந்தைகளுக்கு ஜெயகாந்தன் என்று பெயர்? ஜெயகாந்தன் வருகிறார் என்றால், விடிய விடிய காத்திருந்த கூட்டம்... இத்தனைக்கும் அவர் தெருமுனைகளிலும், கிராமங்களிலும் உழைக்கும் மக்கள் நடுவே பேசினார்.

அண்மையில் ஜெயமோகன் தான் வழக்கமாகச் செல்லும் வங்கியின் ஊழியர்களுக்குத் தன்னைத் தெரிவதில்லை என்று சொல்லியிருந்தார். அதே இடத்தில் சுஜாதாவையோ, பாலகுமாரனையோ வைத்துப் பாருங்கள். மேனேஜர் ஓடி வந்திருப்பார் அல்லவா? இன்றுவரை தங்கள் வீட்டிலும் கடைகளிலும் மு.வ. படத்தை வைத்திருக்கும் அவரது வாசகர்களை நினைத்துப் பாருங்கள்.

மத்தியதர வர்க்கமோ வேறு எந்த வர்க்கமோ அதற்காக ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார்? அவர்கள் ஏன் இவரைக் கொண்டாட வேண்டும்? வாசகர்கள் எல்லோரையும் வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறார்கள்.

ஆக அறிவுஜீவிகள்தான் பிம்பங்களைப் பார்த்து குழம்பிப் போய், இவரைத் திட்டி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்குறிப்பு: “எழுதியவனைக் கண்டுபிடித்தல்” என்கிற தலைப்பில் ஜெயமோகன் ஒரு நூலை எழுதி இருக்கிறார். கூடிய விரைவில் அது சாத்தியமாகும்.

- பாவெல் சக்தி

போங்கடா, நீங்களும் உங்க டெக்னாலஜியும்.




          
சந்திரனுக்குப் பாய்ந்தது ஒரு விண்கலம்,
செவ்வாய்க்கும் கூட
விரைவில் செல்லுமாம்.          
                                                 
ஒரு ராக்கெட்டில் ஒரே நேரத்தில்
நூற்றுக்கும் மேல் செயற்கைக் கோள்கள்
விண்ணில் சீறிப் பறந்து
வட்டப்பாதையில் நிலை கொண்டதும்
இந்தியாவின் தலை நிமிர்ந்ததாம்.

கசங்கிப் போகும் ரூபாயைத் தவிர்க்க
கணிப்பொறியில்தான் இனி பரிமாற்றமாம்.

காகிதப் பயன்பாடே இல்லாமல்
மின்னஞ்சலில்தான் எல்லாமே.    

ஆதார் அட்டையைத் தேய்த்தால்தான்
கழிவறைக் கதவும் திறக்குமாம்.

மூச்சு விடுவதும் முனகுவதும் கூட
அரசு கண்காணிப்பில் வருமாம்.  

டிஜிட்டலில் இந்தியாவில்
எல்லாமே மாறுமாம்.  

இந்தியா வேகமாய்
முன்னேறவும் செய்யுமாம்.

கழிவை சுத்தம் செய்ய
சாக்கடைக் குழியில் இறங்கி
மரணிப்பது மட்டும் மாறாதாம்.
                                                        
எது எதற்கோ இயந்திரம் வந்தாலும்
இதற்கு மட்டும் வாராதாம்.

போங்கடா,   
நீங்களும் உங்க டெக்னாலஜியும்.    

(கடலூர் சம்பவத்தின் போது எழுதியது)  

Thursday, March 30, 2017

இந்த இசைக்கூட்டணி இந்தியாவின் பெருமிதம்



மோடி, எச்.ராஜா, யோகிகள், ஜெமோ போன்ற கண்ணியமிக்க கனவான்களைப் பற்றிய பதிவுகள் கொஞ்சம் அதிகமாகி விட்டது. வேறு வழியில்லை. அவர்களை அம்பலப்படுத்தும் பணியிலிருந்து அகல முடியாது. இருந்தாலும் சற்றே இளைப்பாற இசை தவிர வேறு வழியில்லை. காபிரைட் பிரச்சினை காரணமாக வழக்கம் போல ராஜாவிடமும் செல்ல தயக்கமாக இருந்த வேளையில் வாட்ஸப்பில் வந்து விழுந்தது இந்த பொக்கிஷம். 

 ரவிசங்கர் சித்தாரும் அல்லாரக்கா தபேலாவும்

என்ன ஒரு அற்புதக் கூட்டணி!!!! 


ரசிகர்களின் (அதுவும் வெளிநாட்டினர்) முக பாவங்களை பாருங்கள். அதுவுமே ரசனைக்குரியதுதான்.

இந்தியாவின் பெருமிதமான இந்து முஸ்லீம் நல்லிணக்கத்திற்கு இந்த இசைக்கூட்டணியும் ஒரு சான்று  என்பதை மதவெறியை பரப்பும் ஆசான்கள்  உணர மாட்டார்கள். 






Wednesday, March 29, 2017

ஜனாதிபதியா? யாரந்த பித்தன்?




பிரபஞ்சங்களின் தலைவன் நான்.
துண்டு நிலமா என் ஆளுகையில்?

கண்ஜாடையில் உத்தரவிடுபவன் 
கையில் பேனா தருவீர்களா?

காலடியில் மண்டியிடுபவர்களை
கை குலுக்கி வரவேற்பதா?

பதவிகளை பிச்சையாய் தருபவன்
பதவியேற்பு வேறு நடத்தித் தருவதா?

பிடிக்காத  கொடியை
ஏற்றி வைத்து வணக்கம் சொல்வதா?

மதச்சார்பற்ற நாடெனச் சொல்லும்
அரசியல் சாசனத்தின்
பாதுகாவலனாய் இருப்பதா?

அரை டவுசர் போடும் எனக்கு
புஷ் கோட் பொருந்திடுமா?

நடிப்புதான் என்றாலும்
நாகரீகமாய் எப்படி நான்?

தலைவர்களின் தலைவன்,
பிரதமர்களின் பிரதமர்.
என்னை ஜனாதியாகச்
சொன்ன பித்தன் எவன்?

(ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தை ஜனாதிபதியாக்க
வேண்டும் என்ற ஆலோசனைக்கு அவரின் மைன்ட் வாய்ஸ் 
எப்படி இருந்திருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை) 

 

 



 

“மை” அரசியல்



ஒரு சிறப்பான தமிழாக்கத்திற்காக ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன்  அவர்களுக்கு நன்றி சொல்லி முக்கியமானதொரு உரையை பகிர்ந்து கொள்கிறேன். முழுமையாக படிப்பதும் மிகவும் முக்கியம்.


மையை வீசுபவர்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களாகி விட்டனர். மையைப் பயன்படுத்துபவர்கள் பிரச்சாரகர்களாகி விட்டனர்.

(என்டிடிவி இந்தியா (இந்தி) தொலைக்காட்சியின் பிரபல நெறியாளர் ரவிஷ் குமார். நிகழ்ச்சிகளில் அமைதியாக, ஆணித்தரமாக, சமரசமின்றி பேசும் இவருக்கு ஏராளமன ரசிகர்கள் சமீபத்தில்   பத்தான்கோட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த இவருடைய நிகழ்ச்சியில் ரகசியமாகப் பாதுகாக்கப் பட வேண்டிய விஷயங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி என்டிடிவி இந்தியா 24 மணி நேரம் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது மோடி அரசு. அந்த ஆணையையும் எதிர்த்து கேலி செய்து அதே சானலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ரவிஷ் குமார்.

இவருக்கு எமெர்ஜென்சி காலத்தில் சிறையிலடைக்கப்பட்ட பிரபல பத்திரிக்கையாளர் குல்திப் நய்யார் நினைவு விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில், அவர் நன்றி தெரிவித்து ஆற்றிய இந்தி உரையில் ஆங்கில மொழியாக்கத்தை தி வயர்  இணைய இதழ் வெளியிட்டது. அதன் தமிழ் மொழியாக்கம் இங்கே:  

தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்




இது வெறுப்பின் காலம் என்று உலகம் முழுவதும் உணரப்படும் நேரத்தில் கவுரவிக்கப்படுவது சிறிது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. டிக் டிக் என்று சப்தமிடும் கடிகாரங்கள் அமைதியாய் அடங்கிப்போய் பல பத்தாண்டுகள் ஆன பின்னும் அந்த சப்தத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு அது. மென்மையான சப்தங்களின் மூலம் காலத்தை உணரும் திறமையை நாம் இழந்து விட்டோம். ஆகவேதான், நாம் வாழும் காலத்தினைக் குறித்து சரியான நிர்ணயம் செய்யத் தவறிக் கொண்டிருக்கிறோம். கண்காணிப்புக் குழுக்களும், பறக்கும் படைகளும் தொடர்ந்து ரெய்டு நடத்தும் ஒரு தேர்வு மன்றத்தில் அமர்ந்திருக்கும் உணர்வுடன் நாம் வாழ்கிறோம் _ நமக்குள் இருக்கும் ஒரு குற்றவாளி எந்த நேரமும் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுவான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுவது போல். நாம் தொடர்ந்து பரிசோதனைக்குள்ளாகிறோம். சுதந்திரமாகப் பேசுபவர்கள் மீது ட்ரோல்கள் (வம்பர்கள்) ஏவி விடப்படுகின்றனர்.

இந்த தேர்வு மன்றத்தில்அமர்ந்திருக்கும்போது ஒவ்வொரு முறை ரெய்டு வரும்போதும் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. தவறு செய்யாதபோதிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளோவோமோ என்கிற பயம் தொற்றிக் கொள்கிறது. இந்த கண்காணிப்புக் குழுக்கள் தவறிழைத்தோரைப் பிடித்ததை விட அப்பாவி மக்களை பயமுறுத்தியதுதான் அதிகம். உண்மையான டிகிரிகள், போலியான டிகிரிகள் குறித்து விவாதம் நடக்கும் இந்தக் காலத்தில், மூன்றாம் டிகிரி (அடி உதையுடன் கூடிய போலீஸ் விசாரணை) முறைதான் பல்வேறு வடிவங்களில் திரும்பி வந்துள்ளது. நம் காலத்தில் தொலைகாட்சி நெறியாளர்தான் அதிகார மையமாகி இருக்கிறார். அவர் கருத்திற்கு மாறாகப் பேசுபவர்களை விளாசித்தள்ளுகிறார். மாற்றுக் கருத்து வைத்திருப்பது குற்றம். மாற்றுக் கருத்தை முன்வைப்பது மோசமான குற்றம்; உண்மைகளை எடுத்துரைப்பது நிந்தனை; உண்மையாக இருப்பது பாவம். முன்பெல்லாம் மாலைப் பொழுதுகளில் மட்டுமே தொலைக் காட்சி நம்மைக் கட்டிப்போட்டது. இப்போது இந்தக் காவல் நிலையங்கள்நாள் முழுவதும் செயல்படுகின்றன.

உங்களின் முதல் விருதுக்கு ஒரு தொலைக்காட்சி நெறியாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் _ ஆபத்து நிறைந்த வேலையில் ஈடுபடுபவர்கள் இன்னும் பிழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் ஆதாரம். மேலும் ஒரு தோல்வியைச் சந்திக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். அவர்கள் உயிரோடிருப்பது ஒரு மாயை போலிருந்தாலும் கூட நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருதை வழங்கிய காந்தி அமைதி அறக்கட்டளைக்கு நன்றி.

நம்மில் எத்தனை பேர் அன்பைப் பற்றிப் பேசவாவது செய்கிறோம்? அன்பைப் பற்றி மக்கள் சிந்திக்கிறார்களா என்பதில் கூட எனக்கு சந்தேகம். இப்போதெல்லாம் சூரியனைப் பார்த்து நம் நாளைத் தொடங்குவதில்லை. வாட்சாப்பில் வரும் குட் மார்னிங் செய்தியைப் பார்த்துத்தான் தொடங்குகிறோம். வாட்சாப்பில்தான் சூரியன் உதிக்கிறது என்று உலகம் நம்பத் தொடங்கும் நாள் தொலைவில் இல்லை. விரைவில் நாம் கலிலியோவை மீண்டும் தண்டிக்கப்போகிறோம். அதை தொலைக்காட்சியில் நேரலையாகக் கூட காணலாம்.

வாய்ப்புகளைக் கண்டறியும் காலகட்டம் இது. புதிய வாய்ப்புகளையும், மீதமிருக்கும் வாய்ப்புகளையும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் போற்றும் மனிதர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆயினும் இந்த நம்பிக்கைகளும், வாய்ப்புகளும் தற்போது மங்கி வருகின்றன. இதற்கு நடுவில்    நம் நம்பிக்கைகளும் தனிமைப்பட்டு வருகின்றன. எவ்வளவு நாள் நாம் தாக்குப்பிடிப்போம் என்ற கேள்வி நம்மை வாட்டிக்கொண்டிருக்கிறது. நாம் வாழப்போகும் காலத்தில் கூட அர்த்தமுடன் வாழ்வது எப்படி என்பதை நாம் மறந்துவிட்டோம். இந்த சூழலில் நம் சக்திகளையும் உணர்வுகளையும் மீண்டும் தூண்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. கேள்விகளுக்கு பட்டை தீட்டுங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கான கேள்விகளுக்கு. இந்த இயக்கங்கள் நம் நம்பிக்கையை உடைத்துவிட்டன. உங்களுக்கு நம்பிக்கை இல்லாதவர்களையும் கேள்வி கேளுங்கள். நம் சமுதாயத்தில் வாழும் பிற மக்களோடு நம் தகவல் தொடர்பு முழுவடும் உடைந்து விட்டது. இன்றைய மாற்றம் குறித்தான எல்லா நம்பிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மீது இந்த சமுதாயம் குவித்து வைத்துள்ளது. அரசியல்ரீதியாக பலம் பொருந்தியவர்கள்தான் சுகமான அல்லது அபாயகரமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று சமுதாயத்திற்கு இப்போது தெரிந்திருக்கிறது.

இதனால்தான் அரசியல் கட்சியின் மீது அனைத்து நம்பிக்கைகளையும் குவித்துவைப்பதிலிருந்து மக்கள் இன்னும் பின்வாங்கவில்லை. மக்கள் இந்த ரிஸ்க்கை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். அரசியல் கட்சிகள் ஒவ்வொரு முறையும் தவறுகின்றன. ஆனால் அடுத்த முறையும் கட்சிகள் மீதுதான் நம்பிக்கை வைக்கிறார்கள்.   உறுப்பினர்கள் வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான கருவியாக அரசியலை இனிமேலும் பார்க்க முடியாது என்று நினைத்து வெளியேறுபவர்கள்தாம் இவர்கள். அரசியல் கட்சிகளில் அவர்கள் இல்லாததால் கட்சிகளின் தார்மீக பலம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளைப் புனர்நிர்மாணம் செய்து மறுவடிவம் கொடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் உள் முரண்பாடுகளை ஒதுக்கி வையுங்கள்.

கடந்த 30-40 ஆண்டுகளாகவே இந்தப் போக்கைக் கண்டு வருகிறோம். இடதுசாரிகள், காந்தியவாதிகள், அம்பேத்காரிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் _ இவர்கள் அனைவரும் அவர்களுடைய மைய நீரோட்ட அரசியல் அமைப்புகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வெளியேற்றத்திற்குப் பிறகு ஒரு மாற்று அரசியலுக்கான் உணர்வை மையநீரோட்ட அரசியல் இழந்து விட்டது. இந்த கட்சிகளுக்கு நீங்கள் திரும்பி அமைப்புகளை உங்கள் கையிலெடுங்கள். இறந்தகாலத்தை மறந்து விடுங்கள். புதிய அரசியலுக்காக கடுமையாக வேலை செய்யுங்கள். நம்முடைய கையாலாகாத்தனதையும், கோழைத் தனத்தையும் உணர வேண்டிய நேரமிது. தயவுதாட்சண்யமற்ற நேர்மையுடன் நம்மை நாமே மதிப்பீடு செய்துகொள்வதற்கு இந்த இருண்ட காலம்தான் சரியான நேரம்.

என்னுடைய இதழியல் பணிக்காக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதழியல் நெருக்கடியிலிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அப்படி இல்லை என்று பெரு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். தலைநகரிலிருந்து சிறு மாவட்டங்கள் வரையிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிற பத்திரிக்கை ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தத்துவார்த்தப் புயலினால் அடித்து செல்லப்படுவதற்கு மகிழ்ச்சியுடன் தயாராயிருக்கிறார்கள். நான் அவர்களை எவ்வளவுதான் விமர்சித்தாலும், அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதழியலாளர்களாக இப்போதுதான் சாதித்திருக்கிறோம் என்று அவர்கள் உணர்கிறார்கள். கடந்த 50-60 வருடங்களாகவே ஊடகங்கள் அரசியல் அமைப்புகளுடன் ஒன்றிவிட இடையறாது முயன்று வருகின்றனர். ஹோட்டல்கள், மால்கள், சுரங்கங்கள் போன்றவற்றுக்காக உரிமங்கள் பெற்ற பிறகும் கூட ஊடகங்களின் பசி தீரவில்லை.

அவர்களின் ஆன்மாக்கள் நிறைவில்லாமல் இருந்தன. இப்போது அவர்கள் அமைதி நிலையை அடைந்துவிட்டன. இறுதியாக, அதிகார அரசியலின் அங்கமாக வேண்டும் என்கிற அவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டு விட்டது.

இந்திய ஊடகங்கள் இன்று பரவச நிலையில் இருக்கின்றன. ஒரு காலத்தில் சொர்க்கத்தின் படிக்கட்டுகளைக் கண்டறிய வேண்டும் என்று மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று பூமியிலேயே சொர்க்கத்தைக் கண்டுவிட்டனர். இனி படிக்கட்டுகள் தேவையில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பவில்லையெனில், ஏதாவது ஒரு பத்திரிக்கையைப் படியுங்கள்; அல்லது ஒரு தொலைக்காட்சியைப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அரசியல் திட்டத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பாசத்தையும் விசுவாசத்தையும் கண்டு பிரமித்து விடுவீர்கள். பல பத்தாண்டுகள் விரக்தியில் வாழ்ந்த பிறகு அவர்கள் இன்று அடைந்திருக்கும் மகிழ்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ளும்போதுதான் உங்கள் வலியை இன்னும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். அலங்கரிக்கப்பட்ட நெறியாளர்கள் முன்னேப்போதும் இவ்வளவு அழகாகத் தெரிந்ததில்லை. அரசாங்கத்தைப் புகழும் பெண் நெறியாளர்கள் முன்பு இவ்வளவு அழகாக இருந்ததில்லை. இன்று பத்திரிக்கையாளர்கள் அரசாங்கமாகவும் இருக்கின்றனர்.

உங்களுக்குப் போராடும் நோக்கம் இருந்தால் செய்தித்தாளையும், தொலைக்காட்சியையும் எதிர்த்துப் போராடுங்கள். இதழியலைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உங்கள் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளுங்கள். தாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களே நினைக்கவில்லை. மீதமிருப்பவர்களை எளிதாக வெளியேற்றி விடலாம். ஒரு தனிப்பட்ட பத்திரிக்கையாளர் பிழைத்திருப்பது எந்த விதத்தில் நிலைமையைச் சீராக்கும்? ஊடக நிறுவனங்கள் முழுமையாக வகுப்புவாதமயமாகி விட்டன. இதழியல் இந்தியாவில் வகுப்புவாதத்தைப் பரப்புகின்றது. ரத்த தாகம் எடுத்து அலைகிறது. அது ஒரு நாள் தேசத்தை ரத்தக் களரியாக்கும். அதன் திட்டத்தை அது இன்று நிறைவேற்ற முடியாத நிலையிலிருக்கலாம். ஆனால் அதன் முயற்சிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அதனால்தான் இவற்றையெல்லாம் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் அரசியல் கட்சிகளின் கிளைகளாகி விட்டன. கட்சிகளில் பொதுச்செயலாளர்களை விட தொலைக் காட்சி நெறியாளர்கள்  அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்தப் புதிய அரசியல் அமைப்புகளை எதிர்த்துப் போராடாமல், மாற்று அரசியல் சிந்தனைகள் வடிவம் பெறாது. பலரும் நீ ஏன் கேள்விகள் கேட்கிறாய் என்று என்னை கேட்கும் அளவுக்கு மக்களின் சிந்தனைகளை இவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். மையை வீசுபவர்கள் பத்திரிக்கை தொடர்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்; மையை வைத்து எழுதுபவர்கள் பிரச்சாரகர்களாகி விட்டனர்.

ஆனால், வாய்ப்புகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை செய்து வரும் பத்திரிக்கையாளர்களை நாம் எப்படி கவனிக்காமல் போக முடியும்? இந்த வாய்ப்புகள் நாளை மங்கிப் போகலாம்; ஆனால் இந்தப் பத்திரிக்கையாளர்கள் காட்டும் வழி நமக்கு எதிர்காலத்தில் பலம் தரும். முகஸ்துதியைக் கண்டு சலிப்புற்றும், துரோகதைக் கண்டு அடங்கிபோயும் இருக்கும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழும்போது, போற்றி வளர்த்த நம்பிக்கைகளும், வாய்ப்புகளும்தான் அவர்களைக் காப்பாற்றும். அதனால்தான் நான் நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் பேணிக் காக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகிறேன். நிகழ்காலத்தை, நம்பிக்கை அல்லது தோல்வி என்கிற முப்பட்டைக் கண்ணாடியின் ஊடாகப் பார்க்காதீர்கள். ஒரு ரயில் பாதையில் பூதாகரமான எஞ்சினுக்கு மிக அருகில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். ஓடவோ தப்பிக்கவோ முடியாது. நம்பிக்கை, தோல்வி என்று தேர்வு செய்யும் நிலையில் நாம் இல்லை. உங்களைக் கடமைக்குள் ஆழ்த்திக்கொள்ள வேண்டிய நேரம். நமக்கு நேரம் குறைவாகத்தான் இருக்கிறது.. அது வெகு வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது.

தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்