Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Saturday, April 16, 2016

இது அந்தக் குடும்பக்கதை அல்ல

முகநூலில் தோழர் சொர்ணகுமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான கதையை இங்கே பதிவு செய்துள்ளேன். 

கதையை விட பின் குறிப்பு மிகவும் சுவாரஸ்யம்
 
ஒரு ஊரில் ஒரு வயதான அரசர் இருந்தார். அவருக்கு பல மனைவிகள். அவர்கள் மூலம் அவருக்கு நான்கு மகன்கள். அதில் இரண்டு மகன்களுக்கு மட்டும் ஆகவே ஆகாது!

இந்த அரசர் என்ன செய்தார்? தனக்கு மிகவும் பிடித்த ஒரு மகனை தன் கூடவே வைத்து கொண்டார்.

இன்னொரு மகனை நாட்டின் தெற்கு பக்கம் அனுப்பி அங்கே உள்ள "வரவு செலவுகளை" கவனிக்க செய்தார்! தெற்கே சென்ற அந்த மகன், தன் புஜபல பராக்கிரமத்தால் பல அடக்கு முறை   செய்து, மிகுந்த பொருள் ஈட்டி அதில் நன்றாக வாழ்ந்து வந்தார்!

தலைநகரில் இருந்த மகன், செல்லப் பிள்ளையாக இருந்ததால், மன்னரின் கூடவே இருந்து ராஜ தந்திரம் முழுக்க கற்றுக் கொண்டு அனைத்து  அதிகாரத்தையும் கைப்பற்றி கொண்டே வந்தார்!

மன்னர் கூட இருந்து ஜால்ரா அடித்த கூட்டம், அடுத்த மன்னர் இவர்தான் என்று யூகித்து இவருக்கு ஜால்ரா அடித்து இவர் தலைமை ஏற்க தயார் ஆனது!

இதை தெரிந்து கொண்ட தெற்கே இருந்த இளவரசன், அவ்வப்போது தலை நகர் வந்து, மன்னரிடம் நீதி கேட்டு முறையிடுவார்! 

மன்னரும் அவ்வப்போது ஏதாவது புதிய பொறுப்பு, மேலும் நிதி சேர்த்து கொள்ள வாய்ப்பு என்று ஏதாவது  செய்து கொடுத்து, சமாதானம் செய்து அனுப்புவார்!

ஆனாலும் இரண்டு இளவரசரிடையே பகை உணர்ச்சி மூண்டு கொண்டே வந்த நிலையில், மன்னருக்கு வயது முதிர்ந்து இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்தார்! தனக்கு அடுத்து பட்டத்திற்கு, தன் கூடவே இருக்கும் மகன் தான் வருவார் என்று அறிவிக்க முடிவு செய்தார்!

இது தெரிந்து, தெற்கு இளவரன் கொதித்து எழுந்தார். தன் தந்தை யுடன் சண்டை போட்டார். சண்டை முற்றியதில்,  "நீ என் மகனே இல்லை! போ வெளியே!" என்று அந்த இளவரசரை விரட்டி அவரிடம் இருந்த பொறுப்புகளை பறித்து விட்டார்!

இதற்கெல்லாம் காரணமாக இருந்த செல்லமகன், எதுவும் பேசாமல், ஆனால் உள்ளுக்குள் சந்தோஷபட்டு கொண்டு, மேலும் தனக்கு வலு சேர்க்க மக்கள் ஆதரவை திரட்ட தொடங்கினார்!  எந்த லெவலுக்கு போனார் தெரியுமா? 

தங்கள் பரம்பரைக்கே பிடிக்காத பெரும்பான்மையாக இருந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுடன் கூட உறவு வைத்து கொள்ள ஆரம்பித்தார்! அந்த மத அறிஞர்களுடன் கூடி விவாதம் செய்தார்.அவர்களையும் தன் கைக்குள் போட்டு கொண்டால் பிற்பாடு நம்மை ஆதரிப்பார்கள் என்று கணக்கு போட்டார்! 

இப்போது தான் கதையின் கிளைமாக்ஸ்...!!!!!!

எந்த மகன் ஒன்றும் ஆக மாட்டான் என்று தெற்கே அனுப்பி வைக்கப் பட்டாரோ, அவர் வீறு கொண்டு எழுந்தார்! யார் யாருடன் கூட்டு சேர்ந்தாலும்  பரவாயில்லை என்று முடிவு எடுத்து , நேரடியாக வீரத்தை காட்ட முடிவெடுத்தார்!

தலைநகர் மீது படையெடுத்து, தந்தையின் செல்ல மகனை கொன்று விட்டார்! தன் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார்! அதுவரை, மன்னருக்கும், அவர் செல்ல மகனுக்கும் ஜால்ரா அடித்த கூட்டம், இப்போது இவர் வசம் வந்து ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது!

நாட்டை கைப்பற்றி பல்லாண்டு காலம் மன்னராக இருந்தார்!

அவ்வளவுதான் கதை...

‪#‎பின்குறிப்பு‬

1) இந்த கதையில் வரும் மன்னர் - ஷாஜகான்.
செல்ல மகன்- தாரா ஷூகோ, Dara Shikoh
தெற்கே அனுப்பப்பட்ட வேண்டாத மகன்- ஒளரங்கசீப்.

இந்த கதையை நிகழ்காலத்திற்கு பொருத்தி வேறு யாரையும் நீங்கள் கற்பனை செய்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

Wednesday, August 20, 2014

அமைச்சரைக் கிழித்தெறிந்த குறவர்

எங்கள் கோட்டச் சங்க மாநாட்டை ஒட்டி நடந்த மக்கள் ஒற்றுமைக் கலை விழாவில் உரை வீச்சு நடத்திய த.மு.எ.க.ச தோழர் சாத்தூர் லட்சுமணப் பெருமாள் சொன்ன கதை இது.

டெல்லியை ஆண்ட அரசனின் மகன் ஒரு குறவர் இனப் பெண்ணைப் பார்த்து   மோகித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். பெண் கேட்டு மந்திரியை அனுப்புகிறான். குறவர் இனத் தலைவரைப் பார்தத மந்திரி தனது அரசனின் பரம்பரை பற்றி இவ்வாறு புகழ்ந்தானாம்.

சத்தியம் தவறாத அரிச்சந்திரன்,
தேவர்கள்  பொறாமைப் பட்ட நளன்,
தந்தை சொல் கேட்டு கானகத்திற்குப் போன ராமன்,
ஆகியோரின் பரம்பரையில் வந்தவர்,
தர்மத்தின் அடையாளமான தர்மராஜா பரம்பரையோடு சம்பந்தம் செய்தவர் 

இந்த பரம்பரையில் பெண் கொடுப்பது உனக்கு பெருமை என்று சொன்னவுடன் குறவர் இனத் தலைவருக்கு கோபம் வந்து விட்டது.

மனைவியை  காசியில் விற்றவன் அரிச்சந்திரன்,
இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை விட்டு காட்டில் ஓடிப் போனவன் நளன்,
மனைவியை தீயில் குதிக்கச் சொல்லி பின்பு காட்டிற்கும்  அனுப்பியவன் ராமன்,
மனைவியை நட்ட நடு சபையில் துகிலுரித்த போது வேடிக்கை பார்த்தவன் தர்மன்.

இவர்கள் யாருமே மனைவியோடு ஒழுங்காக வாழாதவர்கள். இந்தப் பரம்பரையில் நான் பெண் தர வேண்டுமா?

நாங்களோ சிவ பெருமானுக்கே சம்பந்தி. முருகனுக்கு நாங்கள் வளர்த்த பெண்ணைக் கொடுத்தோம். அதுவும் சிவன் எங்கள் வேடர் இன கண்ணப்பர்  சாப்பிட்ட எச்சிலை உண்டதால். 

அதன் பின்பு அங்கே நிற்க மந்திரிக்கு பைத்தியமா என்ன? 

( இது சங்க இலக்கியப் பாடலில் வருவதாகச் சொன்னார் அவர்) 

Monday, October 14, 2013

பக்திமான்கள்தான் பதில் சொல்ல வேண்டும்


 தொலைக்காட்சி அறிவிப்பாளர் திருமதி பாத்திமா பாபு அவர்களின்
சுவரில் படித்த சுவாரஸ்யமான கதை இது.

மிகவும் ரசித்தேன். அதனால் உங்களுக்கும் பகிர்கிறேன்


ஒரு தேவாலயத்துக்கு அருகில் ஒரு மதுபானக் கடை திறக்கப்பட்டது. தேவாலயத்தில் தினமும் அதன் வியாபாரத்திற்கு எதிராய் பிரார்த்தனை நடத்தப்பட்டது. 

ஒரு நாள் மின்னல் தாக்கி அந்த மதுபானக் கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது.


 கடையின் உரிமையாளர் அவர்களது பிரார்த்தனையால் தான் தன் கடை எரிந்து நாசமானது என்று கூறி பாதிரியார்களுக்கு எதிராய் வழக்கு தொடர்ந்தார். 

பாதிரியார்கள் இதை முற்றாக மறுத்தார்கள். 


அப்போது நீதிபதி சொன்னார் - "இது மிகவும் சிக்கலான வழக்கு. மதுபானக் கடை உரிமையாளர் பிரார்த்தனையின் சக்தியை நம்புகிறார்.....ஆனால் மத நம்பிக்கையுள்ள தேவாலயமோ இதை அடியோடு மறுக்கிறது. எனவே தீர்ப்பளிப்பது கடினம்" என்று.