Saturday, August 31, 2019

புத்திசாலி புலனாய்வுப் புலிகள் ????

மனித உரிமை செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் முக நூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.




படத்தில் இருப்பது டாக்டர் பத்மஸ்ரீ உபேந்திர கவுல். காஷ்மீரில் புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். எல்லா காஷ்மீரிகளையும் போல காஷ்மீரின் சிறப்புநிலை ரத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். 


ஹுரியத் தலைவர்களில் ஒருவரும், ஒரு காலத்திய தீவிரவாதியும், இந்தியா / பாக் இரண்டின் பிடிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட சுதந்திர காஷ்மீர் எனும் கோரிக்கையை வைப்பவருமான யாசின் மாலிக்கின் இதய நோய்க்கு நீண்ட காலமாக வைத்தியம் செய்து வருபவர். அவர் யாசினுkகு ஒரு மெசேஜ் அனுப்புகிறார், அதில் “INR 2.78” என்றொரு குறிப்பு இருப்பதை கண்டு பிடித்துவிடுகிறது இந்தியாவின் ஆக அதிகாரம் பெற்ற சூப்பர் புலனாய்வு நிறுவனமான NIA. என்னது... INR ஆ? Indian National Rupee ?!

ஆஹாங்... இது ஏதோ பயங்கரவாத நடவடிக்கை தொடர்பான ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பான இரகசியத் தகவல் பரிமாற்றம் என்பதைக் கண்டுபிடித்து (!!!!!!!) அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இது எப்டி இருக்கு.. INR (International Normalized Ratio) என்பது இதயச் செயல்பாடு தொடர்பான ஒரு அளவீடு. தனது நோயாளிக்கு சிகிச்sai அளிக்கும் மருத்துவர் அனுப்பிய செய்தி இவ்வாறு ஹவாலா பணப் பரிமாற்றமாக நமது புலனாய்வாளர்களால் வாசிக்கப்பட்டுள்ளது.

ஏதோ புகழ்பெற்ற மருத்துவர், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் இத்தோடு தப்பித்து விட்டார். வேறு யாராகவும் இருந்தால். இது இப்படி ஒரு நகைச்சுவைக் கதையாக முடிந்திருக்காது. ஒரு சோகக் கதையாக அவர்கள் தலையில் விடிந்திருக்கும்.
(படமும் செய்தியும் : Indian Express, Aug 31)

இப்போது இன்னும் மோசம் . . .

முதலாளித்துவத்தின் குணாம்சம் பற்றிய ஒரு பழைய கார்ட்டூனை எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் பகிர்ந்து கொண்டிருந்தார்.



இன்றைய முதலாளிகள் இதை விட மோசமாகி விட்டார்கள் என்பதும் அவர்களுக்கு தலையாட்டுவதே அரசுகளின் பணியாகிவிட்டது என்பதும் இன்றைய யதார்த்தம். 

Friday, August 30, 2019

லாப வெறி பற்ற வைத்த தீ


எரியும் நுரையீரல் : லாப வெறி பற்ற வைத்த தீ









அமேசான் மழைக்காடுகள் கிட்டத்தட்ட இருபது நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது.  உலகம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடில் 25 % ஐ உள் வாங்கி, 20 % ஆக்சிஜனை வெளியிடக் கூடியதாய் அமேசான் மழைக்காடுகள் உள்ளதால் உலகின் நுரையீரல் என்றே அது வர்ணிக்கப்படுகிறது.

பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வடார், பொலிவியா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் 6.7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது அமேசான் மழைக்காடுகள். இதிலே அறுபது சதவிகிதம் பிரேசில் உள்ளது. இப்போது காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதும் பிரேசிலில்தான்.

பெரும்பாலான உலக மக்கள் கண்டறியாத அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் கொண்ட, அமேசான் மழைக்காட்டில் நீண்ட வாழ்நாள் கொண்ட பெரு மரங்களுக்கும் பஞ்சமில்லை. அவையெல்லாம் பற்றி எரிவதையும் பாம்புகளும் பறவைகளும் கருகிய கட்டைகளாக கிடப்பதைப் பார்த்து பதறாதவர்கள் இருக்க முடியாது.

காட்டுத் தீ என்பது இயற்கையில் நடைபெறக் கூடியதுதான். ஆனால் இப்போது பிரேசிலில் ஏற்பட்டுள்ளது இயற்கையானதா? இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 70,000 காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளதென்ற தகவலும் கடந்த ஆண்டை விட 83 % அதிகம் என்பதும் இந்த கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடைந்தெடுத்த பிற்போக்குவாதியான போல்சனரோ, தான் பதவியேற்ற உடனேயே அமேசான் மழைக்காடுகளில் உள்ள கனிம வளத்தை பயன்படுத்த காடுகளை அழிக்கப் போவதாகவும் சுற்றுச் சூழல் குறித்த உலக உடன்பாடுகளிலிருந்து வெளியேறப் போவதாகவும் அறிவித்தார் என்பதையும் இப்போதைய காட்டுத் தீயோடு இணைத்துப் பார்த்தால் தீ பரவுவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்  என்பது புரியும்.

தங்களின் லாபம் பெருகுவதற்காக கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை சூறையாடவோ அதன் மூலம் மனித இனமோ அல்லது மற்ற உயிரினங்களோ அழிவதைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள் என்பதற்கான இன்னொரு உதாரணமாக அமேசான் மழைக்காட்டுத் தீ திகழ்கிறது.

இப்பிரச்சினை பிரேசில் நாட்டோடு முடிகிற ஒன்றல்ல. புவி வெப்பமயமாதல் காரணமாக தட்ப வெப்ப நிலைகளில் பெரும் மாற்றம் நிலவிக் கொண்டு வருகிறது. துருவப் பிரதேசங்களில் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச் சூழல் அனுமதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இந்த பூமியின் இருப்பே கேள்விக்குறியாக மாறி விடும்.

Thursday, August 29, 2019

இது இருக்கலாமா யுவர் ஆனர்?


பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு அர்பன் நக்ஸல் என்று வர்ணிக்கப்பட்டுள்ளவர்களிடம் ஒருவரான தோழர் கோன்ஸ்லேவ்ஸ் அவர்களிடம்

உலகத்தின் தலை சிறந்த இலக்கியம் என்று புகழப்படுகிற 

"போரும் அமைதியும்" 

நூலை ஏன் வைத்துள்ளீர்கள் 

என்று இந்த நூற்றாண்டின் மகத்தான கேள்வியைக் கேட்டுள்ள மரியாதைக்குரிய நீதியரசர் அவர்களே,

என்னிடம் உள்ள ஏராளமான நூல்களில்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை,
மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள்,
லெனினின் "அரசும் புரட்சியும்", "என்ன செய்ய வேண்டும்?"
ஸ்டாலினின் "தேசிய இனப் பிரச்சினை குறித்து"
பிடல் கேஸ்ட்ரோவின் "வரலாறு என்னை விடுதலை செய்யும்?"
"சே-பிடல் புரட்சிகர நட்பு"
ஜூலியஸ் பூசிக்கின் "தூக்கு மேடைக் குறிப்புகள்"

ஆகிய நூல்களை ஏன் வைத்துள்ளாய் என்று நிச்சயமாய் கேள்வி கேட்பீர்கள் என்று தெரியும்.

கீழே உள்ள ஒரு நூலை வைத்துள்ளாய் என்றும் கேட்பீர்களா என்று சொல்லுங்கள்.



ஏனென்றால் அவை "போரும் அமைதியும்" எழுதிய லியோ டால்ஸ்டாய் எழுதிய சில கடிதங்களின் தொகுப்பு.

அதை விட முக்கியம்

இந்த நூலுக்கு முன்னுரை எழுதியவரைக் கண்டால் இன்றைய ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. 

ஆமாம். முன்னுரை எழுதியவர் மகாத்மா காந்தி

இதை ஏன் வைத்துள்ளாய் என்று கேட்பீர்கள் என்றால் அதை மட்டும் வேண்டுமானால் அமேசான் மழைக் காட்டில் பரவும் காட்டுத் தீயில் போட்டு விடுகிறேன். 

பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள்


ஒருவர் ஆளுனரானார்.
ஒருவர் வெளிநாட்டு தூதரானார்.
ஒருவர் மந்திரியானார்.
ஒருவர் சட்டமன்ற உறுப்பினார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
இன்னொருவரும் 
மேலிடத்தின் மனதுக்கேற்று
நடந்து கொண்டு 
ஓய்வு பெற்ற மறு நாளே
மற்றொரு பதவி பெற்றார்.

சட்டப்படியும் தர்மப்படியும்
நடந்து கொண்டால் 
பென்ஷன் தவிர வேறேது உண்டு?

நாயும் பிழைக்கும் 
இப்பிழைப்பென்பீர்!
நாய் விற்ற காசு
என்றைக்கு குரைத்துள்ளது?


Wednesday, August 28, 2019

ஒரு சாக்கடை வாயரின் சதவீத கணக்கு! - -

மதுக்கூர் இராமலிங்கம்




துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரி யரும், ஆடிட்டரும், அதிகாரத் தரகருமான குருமூர்த்தி தனியார் மருத்துவமனை ஒன்றின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போது,  இந்தியப் பெண்களில்  30 சதவீதம் பேர்தான் பெண்மை உள்ளவர்கள்; பெண்ணிற்கும் பெண்மைக்கும் வித்தியாசம் இருக் கிறது. பெண்மை இல்லாத பெண்களும் இருக்கிறார்கள்; பெண்மை உள்ள பெண்கள்தான் தெய்வம். அவர்கள் தெய் வம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால், எல்லாப் பெண்களையும் தெய்வம் என்று சொல்லமாட்டேன் என்று விஷம் கக்கி இருக்கிறார்.  

இது குருமூர்த்தி என்ற தனி மனிதரின் வக்கிரக் குரல் அல்ல. அவர் முன்னிறுத்தும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குரலையே அவர் எதிரொலித்திருக்கிறார். பெண்களைப் பற்றி மிக இழிவான பார்வையை கொண்டிருப்பதுதான் இந்தக் கூட்டம். மநு சாஸ்திரம் 9.15 இப்படிக் கூறுகிறது, “ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல் பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தா லும் பெண்கள் துரோகிகளாகி விடு வார்கள்”.
பெண் வேத மந்திரங்களை ஓதக் கூடாது; ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில் பிராமணன் உண்ணக்கூடாது என்றெல்லாம் மநு சாஸ்திரத்தின் பல இடங்களில் பேசப்படுகிறது. இதைத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி சதவீத கணக்குப் போட்டு பேசியிருக்கிறார். சாணக்யன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரம், சூத்திர சாதிப் பெண்கள், உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு படைக்கப்பட்டவர்கள் என்கிறது.  மகாபாரதம் அனுஷானம் 28-ல், பெண்ணாகப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை; 
எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே; எவ்வளவு விலகினாலும் நெருப்பு திருப்தியடைவதில்லை; ஆறுகள்  கொண்டு வரும் எந்தளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை; அதேபோல, பெண்களின் பேராசையும் ஒருபோதும் தீருவதில்லை என்கிறது.  இந்த வேதங்களையும் சாஸ்திரங்களையும் வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படும் அளவுக்கு கரைத்துக் குடித்தவர்தான் குரு மூர்த்தி. அதனால்தான் இப்படிப் பேசுகிறார். இவர் மட்டுமல்ல, இவர் நம்புகிற சித்தாந்த வாதிகள் அத்தனை பேரும் அப்படித் தான். 
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்தி ரர், வேலைக்குப் போகிற பெண்கள் ஒழுக்க மற்றவர்கள் என்றார். துறவி என்று கூறிக் கொண்ட அவரது ஒழுக்கம் எப்படிப்பட் டது என்பதை உலகமே பார்த்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானவை. இந்துப் பெண்களுக்கு எதிரானவை. இதைப் புரிந்து கொண்டால் தான் இந்தியா தப்பிக்க முடியும்.  
சூரியனுக்கு கீழே உள்ள அனைத்து விசயங்கள் குறித்தும் கருத்துக் கூறும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், குருமூர்த்தி கருத்து குறித்து என்ன கருதுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டாமா? அவரால் முடியாது. ஏனென் றால், அந்த உரிமையை பாஜக அவ ருக்கு வழங்கவில்லை. 
குருமூர்த்தியின் நெற்றிப் பொட்டில் அடித்தது போல, பெண்மையின் இலக்கணத்தை நம் பாட்டுப் பாட்டன் பாரதி பாடுகிறான், “நிமிர்ந்த நன்னடை, நேற் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு”. குருமூர்த்தியைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது, ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. பேட்மிண்டன் உலக சாம்பியனாக சிந்து தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சிந்து!
காஷ்மீரை அடுத்து தமிழ்நாடு
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் முன்னிலையில், இந்து மிஷன் மருத்துவமனை விழா வில் பேசிய இந்து முன்னணி தலைவர் ஒருவர் காஷ்மீரில் ஆபரே சன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்து கில்ஜி, அடுத்து டாக்கா, அடுத்து லாகூர், அடுத்து நம்ம ஊர் தமிழ் நாடுதான். ஒரு மனிதனுக்கு நோய் ஏற் பட்டால் முதலில் தலையில் ஆபரேசன் செய்வோம். அதுதான் காஷ்மீரில் நடந் தது. சுகர் வந்துவிட்டால், அடுத்து காலில் ஆபரேசன் செய்ய வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் நாம் செய்ய வேண்டியது. இந்த ஆபரேசனை செய்து கொண்டிருக்கும் சர்ஜன்தான்  மோடி. மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர்தான் அமித்ஷா, இன்னும் பல டாக்டர்கள் ஊசி போடத் தேவைப்படுவார்கள். அந்த டாக்டர்கள் போல நாம் செயல்பட வேண்டும். அகண்ட இந்து ராஷ்டிரம் அமைப்பது தான் நம்முடைய நோக்கம். ராம கோபாலன்ஜி காலத்திலேயே அதை நிறை வேற்றி விட வேண்டும் என்று பேசியுள் ளார். இவர் அப்படி பேசியவுடன் கூட் டத்தில் இருந்தவர்கள், ஜெய் அகண்ட பாரதம் என்று கூச்சலிடுகின்றனர். 
காஷ்மீரைத் தொடர்ந்து இவர்கள் , 
ஒவ்வொரு மாநிலமாக சிதைப்பார்கள் என்ற அச்சம் உண்மையாகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அவர்கள் கண்ணில் விழுந்த தூசியைப் போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. எனவே, தமிழ் நாட்டையும் பல பகுதிகளாக சிதைத்து விட முயல்கிறார்கள். அவர்கள் 370-வது பிரிவை ரத்து செய்தது ஒரு துவக்கம் தான். இதை அந்த ஆசாமியே ஒப்புக் கொள்கிறார்.  உலக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு அகண்ட பாரதம் என்று எந்தெந்த நாட்டையோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு தமிழ் நாட்டையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த போலி டாக்டர்களிடமிருந்து இந்தி யாவையும் தமிழ்நாட்டையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இவர்கள் பேசுவதை வேடிக்கை என்று சிரித்துவிட்டு ஒதுங்கக் கூடாது. இப்படித்தான் தொடர்ந்து காஷ்மீரைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  தமிழ்நாட்டிலும் ஒரு மாநிலக் கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டதாக தேடிக் கொண்டிருப்பவர்கள் இத்தகைய பயங்கரவாதிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
நன்றி - தீக்கதிர் 26.08.2019

ஏன் வாய் திறப்பதில்லை தமிழிசை?


எதிர்க்கட்சித் தலைவர்கள் யாராவது தங்கள் கருத்துக்களைச் சொன்னால்,

சூர்யாவோ, விஜய் சேதுபதியோ ஏதாவது பிரச்சினை குறித்து தங்கள் கருத்தைச் சொன்னால்

வேக வேகமாக பாய்ந்து அவர்கள் மீது சீறுகிற 
தமிழிசை அம்மையாரே,

பெண்கள் குறித்து உங்கள் குரு பீடம் கொழுப்புமூர்த்தி சொன்ன கருத்துக்கு உங்களது எதிர்வினை என்ன?

அதென்ன பெண்களை இழிவுபடுத்தி உங்கள் கட்சி ஆட்கள் பேசும் போது மட்டும் மௌன விரதம் மேற்கொள்ள தொடங்கி விடுகிறீர்கள்?

பேசுங்கள் தமிழிசை அம்மையாரே,

குறைந்த பட்சம் குறிப்புக்கள் வைத்துக் கொண்டாவது பேசுங்கள்,

கொழுப்பு மூர்த்தி பேசுவது சரிதான் என்று ஏற்பதாகவே உங்கள் மௌனம் புரிந்து கொள்ளப்படும்.

அதுதான் உண்மை, பெண்களை இழிவுபடுத்தும் கட்சி பாஜக என்பதை தெரிந்து கொண்டுதானே அங்கே இருக்கிறேன், அதன் பின்பு இன்னும் ஏன் என்னை கேட்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா, 
சரி சரி 
கோடரிக்காம்புகள் புதிதா என்ன!

Tuesday, August 27, 2019

ப்ளான் பண்ணி அழிக்கனும் . . . .



எல்லாவற்றையும் எப்படி 'ப்ளான்" பண்ணி அழிக்கனும் என்பதை மோடியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளாத ரகுராம்ராஜன் நீக்கப்பட்டு உர்ஜித் படேல் நியமனம்.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசு கஜானாவிற்கு மாற்ற ஒப்புக் கொள்ளாத உர்ஜித் படேல் நீக்கப்பட்டு பொருளாதாரம் படிக்காத சக்திகாந்ததாஸ் நியமனம்.

பொய்க்கணக்கு, வாய்க்கொழுப்பு குருமூர்த்தி இயக்குனராக நியமனம்.

ரிசர்வ் வங்கி மொட்டையடிக்கப்பட்டு 1,76,000 கோடி ரூபாய் மத்திய அரசு கஜானாவிற்கு மாறி விட்டது.

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இனி வேறென்ன வேண்டும் ?

கார்ப்பரேட்டுகளிடமிருந்து வர வேண்டிய வரி பாக்கி, கடன் பாக்கி, வட்டி பாக்கி எதையும் வசூலிக்க திராணியற்று இருக்கும் சொற்பத் தொகையையும் அவர்களுக்கே அள்ளிக் கொடுத்தால் இந்தியப் பொருளாதாரம் இனி வேகமாய் சாகும் . . .

ஆனாலும் கவனமாய் இருங்கள்.

வாய்க்கரிசி போடும் வேளையில் "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லாவிட்டால் குண்டாந்தடிகள் உங்கள் மண்டையைத் தாக்கும். 


Friday, August 23, 2019

முன்பு மிஸ் செய்திருந்தால்




காஷ்மீர் பிரச்சினை குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய நூல் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன். அப்போது படிக்கத் தவறியிருந்தால் இப்போதாவதாவது படியுங்கள்.

புத்தகத்தைப் பற்றி எழுதியதை மட்டுமல்ல, புத்தகத்தையும் கூட. இன்றைய தேதியில் மிகவும் அவசியமாக படிக்க வேண்டிய ஒன்று



நூல்    அறிமுகம்

நூல்               :                     காஷ்மீர் பிரச்சினையும்
                                              அரசியல் தீர்வுகளும்

ஆசிரியர்                            பேராசிரியர் அ.மார்க்ஸ்

வெளியீடு                           பாரதி புத்தகாலயம்’,
                                                  சென்னை - 600018

விலை                                 ரூபாய் 20.00

நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு திரைப்படப் பாடலில் “காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர், வொண்டர்புல் காஷ்மீர்” என்று பாடப்பட்டது போல அழகை ரசிக்கும் சூழலில் காஷ்மீர் இன்று இல்லை என்பதை இந்த நூலின் அட்டையே உணர்த்தி விடுகிறது. பியூட்டிபுல் காஷ்மீரை பெல்லட் காஷ்மீராக்கிய பெருமை மோடி அரசையே சாரும்.

முப்பத்தி இரண்டு பக்கங்களில் காஷ்மீர் பிரச்சினையை தெளிவாக நமக்கு சொல்கிற நூல் இது.

காஷ்மீரின் வரலாறு. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது அன்றைய காஷ்மீர் அரசு எடுத்த நிலை, இந்தியாவின் தலையீட்டை கோரிய சூழல், அப்போது இந்தியா அளித்த வாக்குறுதிகள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அன்றைய நேரு அரசு தொடங்கி தொடர்ச்சியாக வந்த பிரதமர்கள் இழைத்த துரோகங்கள், பிரச்சினைகளை வளர்த்தெடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று எல்லா நிகழ்வுகளும் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டுள்ளது. அதனை படித்தால்தான் காஷ்மீரின் இன்றைய நிலையை புரிந்து கொள்ள முடியும்.

காஷ்மீரின் தீவிரவாதத்தின் தோற்றுவாய் தொடங்கி இன்றைய நிலைமை வரை விவரிக்கிற பேராசியர் மார்க்ஸ், தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கொள்கைகள் கொண்டதல்ல என்பதையும் அவற்றின் தலைவர்களின் அணுகுமுறை மாறுபட்டது என்பதையும் பதிவு செய்கிறார்.

எப்போதெல்லாம் ராணுவம் அத்துமீறியதோ அப்போதெல்லாம் அங்கே பிரச்சினை வெடிக்கிறது என்பதை கூறும் நூலாசிரியர், தற்போதைய காஷ்மீர் மக்களின் கொந்தளிப்பிற்கு காரணமான புர்கான் வானி கொல்லப்பட்டதில் ராணுவம் சொன்ன பொய்களை அம்பலப்படுத்தி இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி உந்தப்படுவதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.

காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு உடனடி சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை சொல்கிற பேராரியர் மார்க்ஸ்  தீர்வுக்கான சூழல் உருவாக வேண்டுமென்றால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதையும் பட்டியலிடுகிறார்.

அந்த பரிந்துரைகள் கீழே உள்ளது

370 ம் பிரிவு முழுமையாக செயல்பட வேண்டும். பழைய திருத்தங்கள் நீக்கப்பட வேண்ரும்.

ஆயுதப்படைகள் சிறப்புச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்  சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பண்டிட்டுகள் உரிய பாதுகாப்புடன் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும்.

ஆனால் இதைச் செய்யும் அரசியல் உறுதி ஆட்சியாளர்களுக்கு உள்ளதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இக்கேள்விக்கான பதிலில்தான் பெல்லட் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீராக மாறுமா என்பது அடங்கியுள்ளது ஏனென்றால் காஷ்மீரின்  அழகு ஏரிகளிலோ, இமயமலைச் சரிவுகளிலோ, மணம் வீசும் மலர்களிலோ இல்லை. மக்களின் அமைதியில்தான் உள்ளது.

கட்சிக்கு வரியா? ஜெயிலுக்கு போறியா?

கங்கை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தமும் கோமியமும் கலந்த ஒரு தூய்மையான கலவையில் சில துளிகள் தெளிக்கப்பட்டால் எந்த ஒரு ஊழல்வாதியும் மகாபுனிதராக மாறும் மோடி மகாத்மியத்தைத்தான் இந்த கார்ட்டூன் சொல்கிறதாம்.

எங்க கட்சிக்கு வர மாட்டேன்னு சொன்னா ஜெயில்தான்.




Thursday, August 22, 2019

இவ்வளவு கேவலமான மனிதர்கள் உள்ளவரை . . .






வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் வெட்கக்கேடானது. ஜாதிய வெறி தலைக்கேறிப் போன மனிதர்கள் உள்ளவரை இந்தியா எந்நாளும் உருப்படப் போவதே இல்லை. 

ப.சி விவகாரம்: அல்பத்தனமா?



ப.சிதம்பரத்தை எப்போதுமே எனக்கு பிடிக்காது
ஏனென்றால்
அவர் தொழிலாளர்களுக்கு எதிரானவர்,

சாதாரண மக்களுக்கு எதிரானவர்.

உள்நாட்டு, வெளி நாட்டு பெரு முதலாளிகளின் சேவகர்,

எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாரிடம் தாரை வார்க்க துடித்தவர், 

தனியார் மயத்தை ஒப்புக்கொண்டால் கேட்கும் ஊதிய உயர்வை வழங்குவேன் என்று ஆசை காட்டியவர்,

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கும் வேளையில் "அந்த குரங்குகளுக்கு  கொஞ்சம் பட்டாணியை வீசுங்கள்" என்று ஆணவமாக பேசியவர்.

அப்படிப்பட்டவர் கைது ஆவதும் சிறைக்குச் செல்வதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்திகள்.

ஊழலே செய்திருக்க வாய்ப்பில்லாத உத்தமர் அல்ல அவர்.

ஆனால் வழக்கம் போல மோடி அரசு தன்னுடைய அராஜகப் போக்கில் செய்த ஒரு வேலையைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முன் ஜாமீன் கிடைக்கவில்லை. 

போ, கைது செய்.

அதை விட்டு "பெருமாள் பிச்சை தலைமறைவு" என்று "போலீஸ், இல்லை பொறுக்கி" புகழ் சாமி செய்தது போல 

தலைமறைவு, தப்பி ஓட்டம் என்று செய்தி பரவ விட்டது எல்லாம் அரசியல் அல்பத்தனம்.

அந்த செய்தியை வைத்து ஊடகங்கள் ஒரு நாள் முழுதும் குப்பை கொட்டியது  அயோக்கியத்தனம்.

அல்பர்களுக்கு அதிகாரம் வந்தால் வேறென்ன நடக்கும்!

Wednesday, August 21, 2019

வேலூரில் மழையின் போங்காட்டம்




நேற்று இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வேலூரில் நல்ல மழை. திங்கட்கிழமை மதியம் கூட நல்ல மழைதான். இரண்டு நாள் மழை தொடரும் என்று வானிலை எச்சரிக்கை வேறு.

இப்படிப்பட்ட வானிலையில் பொதுக்கூட்டம் நடத்துவது சாத்தியமா என்று விவாதித்து அந்த் நிகழ்வை ஒத்தி வைப்பது என்று முடிவெடுத்தோம்.

ஆனால் கொடுமை என்னவென்றால்

நேற்று ஒரு துளி தூறல் கூட இல்லை.

பொதுவாக சில நிகழ்ச்சிகளை மழை வந்து கெடுக்கும்.
நேற்று வராமல் கெடுத்து விட்டது.


நேரம் முக்கியமே இல்லை தமிழிசை அம்மையாரே!

எந்த குறிப்பும் இல்லாமல் தன்னால் மூன்று மணி நேரம் பேச முடியும்  என்று தமிழிசை அம்மையார் சொல்லியுள்ளார். 

நல்ல திறமைதான். பாராட்டுக்கள்.

ஆனால் நீங்கள் எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதை விட என்ன பேசுகிறீர்கள்

என்பதும்

அதிலே கொஞ்சமாவது 
நேர்மையும் உண்மையும் இருக்கிறதா என்பதும்

உங்கள் உரை 
அன்பைப் பரப்புமா 
அல்லது
வன்மத்தையும் மத வெறியையும் பரப்புமா

என்பதல்லவா மிக முக்கியம்1

அப்படிப் பார்க்கையில் 

உங்களது உரை

மூன்று மணி நேரமோ
அல்லது 
முப்பது மணி நேரமோ

இந்திய சமூகத்திற்கு
தேவையில்லாத ஆணிதான் . . .

Tuesday, August 20, 2019

சூப்பர் மந்திரிங்கய்யா!!!


கர்னாடக மாநில சட்டபேரவையில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி உங்களுக்கு  ஞாபகம் இருக்கிறதா? 

இப்போ எதுக்கு அவங்க ஞாபகம் என்று கேட்கிறீர்களா?

அந்த இரண்டு உறுப்பினர்கள்

லட்சுமண் சாவடி,
சி.சி. பாடீல்

ஆகியோர் இப்போது கர்னாடக அமைச்சர்களாம்!

பாரதீய ஜொள்ளு கட்சியில் உத்தமர்களா அமைச்சர்களாக முடியும்?

சட்டியில் இருப்பதுதானே அகப்பைக்கு வரும்!

நாளைக்கு இவர்கள் முதலமைச்சர் ஆனால் கூட ஆச்சர்யப்பட ஏதுமில்லை! 

Monday, August 19, 2019

தனியே, யெட்டி, தன்னந்தனியே . . .


ஜுலை மாதம் 26 ம் தேதி யெட்டி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். 29 ம் தேதி நம்பிக்கை வாக்கிலும் வெற்றி பெற்று விட்டார்.

ஆனால் இதுவரை அவரால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை. ஆனால் தனியே, தன்னந்தனியே நான்கு அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தி விட்டாராம்.

ஏன் இந்த கால தாமதம்?

பாஜக  எம்.எல்.ஏ க்கள் யாரும் அமைச்சராக விருப்பமில்லையா? அந்த அளவு பதவி ஆசை இல்லாத சன்னியாசிகளா அவர்கள்?

பாவம் மக்கள் ஆதரவிலா யெட்டி மீண்டும் முதல்வரானார்!

எத்தனை பணம் ! எத்தனை டீலிங!!, எவ்வளவு பேரம் !!!!

இதிலே கொஞ்சம் ஸ்லிப்பானாலும் முதல்வர் பதவி மீண்டும் அல்பாயுசில் முடிந்து விடுமல்லவா?

அதனால்தான் இப்படி சிங்கிள் மேன் ஆர்மி நடத்துகிறார் யெட்டி. 


பிகு :

 நாளை அமைச்சரவை  அமைக்கப்போவதாய் செய்திகள் வருகிறது.  அதற்குப் பிறகுதான் சுவாரஸ்யம் காத்திருக்கிறது

நினைவுக்கு வந்தாரா சங்கரராமன்?


அத்தி வரதரை தரிசிக்கச் சென்ற விஜயேந்திரரே,

அத்திவரதர் சயனக் கோலத்தில் வைக்கப்பட்ட அதே இடத்தில்தான் 

உங்களது கூலிப்படை வெட்டிக் கொன்ற சங்கரராமனின் உடல்
ரத்த வெள்ளத்தில் கிடந்தது என்பது உங்களின் நினைவுக்கு வந்ததா?

மனசாட்சி கொஞ்சமாவது உங்களை உறுத்தியதா?

Sunday, August 18, 2019

உழைப்பு ஓரிடம், கலெக்சன் வேறிடம் . . .


அத்திவரதர் வைபவத்திற்காக யாரெல்லாம் கடுமையாக உழைத்தார்கள் என்பதை மேலே உள்ள தமிழ் இந்து செய்தி சொல்கிறது.

இதற்காக எல்லாம் அவர்களுக்காக ஏதாவது சிறப்பு ஊதியம் ஏதாவது கொடுத்திருப்பார்களா?

நீங்கள் வேறு, இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு உணவு கூட ஒழுங்காக கிடைத்திருக்காது. அத்திவரதர் என்று இல்லை, அரசு ஊழியர்கள் இதே இன்னல்களைத்தான் எந்த ஒரு பெரிய நிகழ்விலும் சந்திப்பார்கள்.  சொல்லப் போனால் இவர்களின் கைக்காசுதான் செலவழிந்திருக்கும்.

இப்போது ஒரு கணக்கு உலாவுகிறது. 

அரசு நாற்பது கோடி ரூபாய் செலவழித்தது. ஆனால் வரவு வெறும் ஏழு கோடி ரூபாய் மட்டுமே.

அப்படியென்றால் ஒரு கோடி பேர் அத்திவரதரைத் தரிசித்ததாக சொல்லப்படுவதில் ஒருவர் சராசரியாக ஏழு ரூபாய் மட்டும்தான் உண்டியலில் போட்டார்களா?

சாதாரண பாஸ், வி.ஐ.பி பாஸ், வி.வி.ஐ.பி பாஸ் என்றெல்லாம் வினியோகம் செய்து வந்த பணம் எவ்வளவு?

ஐம்பதாயிரம் ரூபாய் வரை அதை பிளாக்கில் விற்று  வந்த பணம் யாருக்கு போனது?

அர்ச்சகர் தட்டில் விழுந்த நோட்டுக்கட்டுக்கள் யாருடைய பைக்கு சென்றது?

ஆயிரம் கோடி ரூபாய் வரை வந்ததாக சொல்வது கொஞ்சம் மிகைப்படுத்தலாக இருக்கலாம். ஆனால் ஏழு கோடி ரூபாய் என்பது நிச்சயமாக மிகப் பெரிய பொய்க்கணக்கு.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களிடம் இருந்ததை இழந்து பணியாற்ற, மாவட்ட ஆட்சியர், பட்டுப்புடவைக் கடை வியாபாரிகள், உயர் காவல் அதிகாரிகள், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள். அர்ச்சகர்கள் ஆகியோர் இந்த நாற்பத்தி எட்டு நாட்களில் நன்றாக கல்லா கட்டியுள்ளார்கள்.

"கோயில் கோயிலாக இருக்க வேண்டும், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது"

என்பது வேண்டுமானால் கலைஞரின் வசனமாக இருக்கலாம். அதை நடைமுறைப்படுத்துவதற்காக போராடியதற்காக சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்ட அதே இடத்தில்தான் இத்தனை நாள் அத்திவரதர் அருள்பாலித்துள்ளார்.

அந்த இடத்தில் ஒரு மெகா ஊழல் நடப்பதில் என்ன வியப்பு உள்ளது?

Friday, August 16, 2019

கண்டிப்பாக சந்தேகிப்போம் மோடி




“செல்வம் ஈட்டுபவர்களை சந்தேகிக்க வேண்டாம் என்றும் செல்வம் ஈட்டப்பட்டால்தான் செல்வப் பகிர்வு நடைபெறும்”

என்று மோடி கூறியுள்ளார்.

அப்பட்டமான அயோக்கியத்தனமான வாதம் இது. யதார்த்தத்திற்கு முற்றிலும் முரணானதும் கூட.

செல்வந்தர்களிடம் அச்செல்வம் எந்த வழியில் சேர்கிறது என்பதை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதே!

உழைப்பின் அடிப்படையில் செல்வம் பெருகினால் யாரும் சந்தேகிக்கப் போவதில்லை. நீங்கள் யாருக்காக எருமைக் கண்ணீர் (முதலை என்று சொன்னால் வேறு விஷயம் நினைவுக்கு வருவதால் மாறுதலுக்காக எருமையை பயன்படுத்தியுள்ளேன்) வடிக்கிறீர்கள் என்பது எல்லோருக்குமே நன்றாக புரிகிறது.

உங்கள் நண்பர்களாக உள்ள அதானி, அம்பானி உள்ளிட்ட பெரு முதலாளிகளின் செல்வம் நீங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல மடங்கு பெருகியுள்ளது. அதெல்லாம் முழுக்க முழுக்க அவர்களின் கடின உழைப்பால் பெருகிய செல்வமா?

உங்கள் நண்பர்களின் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை ஏற்பாடுகளை நீங்கள் செய்து தந்துள்ளீர்கள்? உங்கள் நண்பர்கள் செல்வம் பெருகுவதற்காக அரசு நிறுவனங்களுக்கு வருவாய் வரும் வழியை அடைக்க வேறு செய்கிறீர்கள்.

முகேஷ் அம்பானியின் ஜியோ கொழிப்பதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சீரழிக்கிறீர்கள்.

தம்பி அம்பானிக்காக ரபேல் விவகாரத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தை நட்டாற்றில் தவிக்க விட்டீர்கள்.

அதானி கல்லா கட்டுவதற்காகவே விமான நிலையங்களின் விரிவாக்கம் நடைபெறுகிறது. ஒருவருக்கு இரண்டு என்ற விதியைக் கூட காற்றில் பறக்க விட்டுள்ளீர்கள்.

கார்ப்பரேட் வரியை குறைப்பீர்கள். இறக்குமதி வரியைக் குறைப்பீர்கள். வங்கி வாராக்கடனை தள்ளுபடி செய்வீர்கள்.

செல்வத்தை ஈட்டுபவர்களை சந்தேகித்து ஆராய்ந்தால் நாற்றம் அடிக்கிறது. ஊழல் நாற்றம், அதிகார துஷ்பிரயோக நாற்றம், அந்த நாற்றத்தை வாசனை திரவியம் போட்டு மறைப்பதற்கான முயற்சிதான் உங்கள் உபதேசம்.

அவர்கள் செல்வம் ஈட்டினால்தான் செல்வப் பகிர்வு நடக்கும் என்பது நீங்கள் உதிர்த்த இரண்டாவது முத்து.

ஆமாம் யாரோடு அந்த செல்வத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்?

மக்களோடோ?

உங்களோடுதான் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவிற்கு கிடைத்த கொழுத்த நிதியே சொல்கிறதே.

உங்கள் தொடர்பான அத்தனையையும் சந்தேகப்படுவோம்.

ஏனென்றால்

உங்களிடத்தில் இதுவரையிலும் நேர்மை இருந்ததில்லை.
இனியும் இருக்கப் போவதில்லை.

மனதில் முதலில் ஒலிக்கட்டும்




உங்களோடு ஒரு உரையாடல்...

15.08.2019 அன்று தஞ்சையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு தொடங்கியது. இன்று மாநாட்டின் நிறைவு நாள். மாலை பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. தஞ்சை நோக்கி செல்லும் வழியில்தான் இப்பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்ட பிரசுரம் கீழே உள்ளது.  மிகவும் முக்கியமானது. பல உண்மைகளை பேசுகிறது.

இப்பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டு பல மையங்களில் உரையாடல் நிகழ்வு நடந்தது. எங்கள் சங்க அலுவலகத்தில் கூட சில தோழர்களோடு உரையாடல் நிகழ்வை கடந்த வாரம் நடத்தினோம். வெளிப்படையான, மனம் திறந்த உரையாடலாக அது அமைந்திருந்தது.



அப்படிப்பட்ட உரையாடல் நிகழ்வதற்கான அடிப்படையாக இருந்த அப்பிரசுரத்தை அவசியம் படியுங்கள். சமூக மாற்றத்திற்கான குரல் நம் மனதில் முதலில் ஒலிக்கட்டும்

உங்களோடு ஒரு உரையாடல்...

பிரியத்திற்குரியவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!

சமீப காலங்களில் பொதுவெளியில் விவாதிக்கப்படாத ஒன்றைப் பற்றி விவாதிப்பதற்காகவே உங்களை சந்திக்கிறோம்.விரும்பத்தகாத சூழ்நிலை தான் இது. ஆனால் இனியும் தாமதிக்காமல் அதைப் பற்றி விவாதித்தே ஆக வேண்டும்

அதுதான் சாதி!

நண்பர்களே சற்று நிதானமாக பேசுவோம். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பொதுவாக அப்படித்தான் பேசப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்பது உங்களுக்கே தெரியும்.

இந்த துண்டு அறிக்கையின் வழியாக உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை வெளிக்கொணர்ந்தோம். இந்த வடிவங்கள் அனைத்தும் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறது என்று நாங்கள் வாதிடவில்லை. ஆனால் இதில்  ஏதாவது சில வடிவங்கள் இல்லாத பகுதிகளே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பால்வாடிக்கு வருகிற தலித் குழந்தைகள் செருப்பு அணியக்கூடாது என்று சொல்கிற கிராமங்கள் உண்டு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலித் பெண்களுக்கு பிரசவம் பார்க்க மறுத்த சம்பவங்கள் உண்டு.வயது வரம்பின்றி ஒருமையில் அழைப்பதில் தொடங்கி தேனீர் கடைகள், கிராம முடிதிருத்தகங்கள், பொதுவினியோக கடைகள்,பேருந்து நிறுத்தங்கள், சமுதாயக்கூடங்கள் என தனித்தனி மயானங்கள் வரை நம்மைச் சுற்றி நூறு நூறு வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள்.

அதுசரி இதுவெல்லாம் நகரங்களில் எங்கே இருக்கிறது என்கிறீர்களா?

நகரத்திற்கு குடிபெயர்ந்து வரும் தலித்குடும்பங்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் துவங்கி படிக்கும் அல்லது பணிபுரியும் இடங்களில் எதிர்கொள்ளும் பாரபட்சங்களுக்கு அடையாளம் தான், மனிதர்கள் நட்சத்திரத் தூசிகள் என்று விஞ்ஞானக் கனவு கண்ட தலித் மாணவன் ரோகித் வெமுலாவின் துயர மரணம்.

இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். நான் சாதி பார்ப்பதில்லையே என்கிறீர்களா

இல்லை நண்பரே நாம் வாழும் சமூகத்தில் தானே இந்த தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சாதியினரை மற்றொரு சாதியினர் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்று பார்ப்பதும் தொடரத்தானே செய்கிறது.

உண்மையில் இந்த சாதிக்கு ஏதாவது அறிவியல் அடிப்படை உண்டா?

நிச்சயமாக இல்லை.உலக மனிதர்கள் அனைவருமே ஆப்பிரிக்கர்களின் வாரிசுகளே என ஐயத்திற்கு இடமின்றி அறிவியல் நிரூபிக்கிறது. மனிதனின் தோற்றத்தில் மட்டுமல்ல செல்களிலும், மரபணுக்களிலும் கூட வேறுபாடுகள் இல்லை என்கிறது விஞ்ஞானம்.

முதல் மனிதன் உலகில் தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆறறிவு படைத்த மனிதர்களைப் பாகுபடுத்தி மோத விடுகிற சாதி தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை.இடையில்  வர்ணாசிரமம் ஏற்படுத்திய செயற்கையான  பாகுபாடே சாதி.

பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பொய்மையான பாகுபாடுகளை உருவாக்கி,புனைவுகள் காவியங்கள், காப்பியங்கள் வழியாக சாதியை இந்தியா முழுமைக்குமான  கருத்தியலாக்கிவிட்டனர்.இது கருத்தியலாக மட்டுமில்லாமல் வாழ்க்கை முறையாகவும் உள்ளது. இந்திய சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் அதர்ம ஆட்சியே நடைபெற்றது. பெரும்பகுதியினராக உள்ள சூத்திர, பஞ்சம சாதிகளின் உரிமைகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டே வந்தன.

இதனை நேர் செய்வதற்கான ஒரு கருவி தான் இட ஒதுக்கீடு. எதிர்காலத்தில் சமத்துவ சமூகம் மலர்ந்திட நிகழ்காலத்தில் அசமத்துவ ஏற்பாடுகள் அவசியப்படுகிறது என அண்ணல் அம்பேத்கார் குறிப்பிட்டது பஞ்சமர்களின் இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமல்ல, இன்றைய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட  சாதிகளுக்காகவும் தான்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் தொடர்ந்து வற்புறுத்துகிறார். பிற்படுத்தப்பட்டோர் யார் யார் என பட்டியலிடவில்லை.எனவே பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைத்து கணக்கிடுவதாக அண்ணல் அம்பேத்கருக்கு பதில் அளித்த அரசு அதனை செய்யாமல் காலம் கடத்தியது.இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி தான் அண்ணல் அம்பேத்கர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இட ஒதுக்கீடு இல்லை என்றால் என்ன நிலை இன்றும் நீடித்திருக்கும்?

1921 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் அளித்துள்ள விவரப்படி சட்டம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்டு பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 14,927 பேர்,  இதில் 11 532 பேர் முற்படுத்தப்பட்டவர்கள் தான்.மீதம் இருப்பவர்கள் தான் தமிழகத்தில் இருக்கிற அத்தனை சாதிகளையும் சேர்ந்தவர்கள். கல்வி,நிலம் உள்ளிட்ட தேசத்தின் வளங்கள் அனைத்தும் நேர்மையாக அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது தான் சமூக நீதி. ஆனால் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்றுவருபவர்களே இன்று தலித்துகள் மீது இரக்கமற்ற முறையில் தீண்டாமையை, வன்முறையை, ஆணவப் படுகொலைகளை  நிகழ்துவது துயரமானது.

முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்கிற வரிசை அடிப்படையிலேயே இங்கே உரிமையும் சலுகைகளும் ஆண்டாண்டு காலமாக கிடைத்திருக்கிறது.

எனவே கீழே உள்ளவர்களுக்கு பலன்கள் மிகச் சொற்பமான அளவே கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை .என்றாலும் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து பிரிவிலும் உள்ள உழைப்பாளி மக்கள் சந்திக்கிற பிரச்சினைகள் ஒன்றா? இரண்டா?

காசாகும் கல்வி,கார்ப்பரேட்டாகும் மருத்துவம், பதற வைக்கும் பெட்ரோல் விலை ஏற்றம் ஜி.எஸ்.டி, பணமதிப்பு  நீக்கம் ,விவசாய பாதிப்பு,  தொழில் பாதிப்பு ,வர்த்தக பாதிப்பு, குதிரைக்கொம்பான வேலை வாய்ப்பு, குடிநீர்,சுகாதாரம் என எத்தனை எத்தனை

இவற்றில்  எதற்காவது சாதி உண்டா? நிச்சயமாக இல்லை.

அறிவியல் வளர்ச்சி ஆகாயத்தை கடந்து விட்ட பின்னரும் கூட  சாதி மனநிலைக்கு தடை போட முடியவில்லை. தானாக சாதி உணர்வு வளர்வதில்லை.அது நமக்கு புலப்படாத பல்வேறு வகைகளில்  வளர்க்கப்படுகிறது.சாதி உணர்வுகளை தூண்டிவிட கார்ப்பரேட்டுகள் பலநூறு கோடிகளை கொட்டிக்கொடுக்கிறத்து.

உள்ளூரில் உருவாகி வளர்ந்திருக்கும் பணக்கார வர்க்கமும் சாதிக்கு ஊக்கமளிக்கிறது.அதனால் பலன் அடைகிறது.மற்றபடி சாதியால் சாதாரண மக்கள் அடைந்த பலன் என்ன?

இதில் கார்ப்பரேட்டுகளுக்கு என்ன லாபம்?

ஊர் இரண்டுபட்டால் தானே
கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டம்.

இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படுகிற போது,வெறும் ஒரு சதவீதம் பேராக உள்ள பில்லியன் டாலர் கோடீஸ்வர முதலாளிகள் கையில் இந்திய தேசத்தின் சொத்துக்களில் 57 சதவீதம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த அளவிற்கு ஏழை,நடுத்தரமக்களிடமிருந்து சாதி மத பாகுபாடின்றி ஒட்ட சுரண்டப்படுகிறது 

இப்போது சொல்லுங்கள்

சாதிய துவேசமும், பாகுபாடும்,   ஆணவக்கொலைகளும் யாருக்குப் பயன்படுகிறது என்று. தொழிலாளர்களாக,  விவசாயிகளாக, வர்த்தகர்களாக, தொழில் முனைவோராக, மாணவர்களாக ஒன்று சேர்ந்தால் தங்களை பாதிக்கிற உண்மையான பிரச்சினைகள் மீது  கவணம் திரும்பி,அது  கார்ப்பரேட்களுக்கு ஆபத்தாகி விடும் என்பதற்காகவே பிரித்து வைக்க பணம் செலவழிக்கிறார்கள்.

தமிழ்நாடு சமூகநீதி போரில் முன்னணி பங்கு வகித்த மாநிலம். திருவள்ளுவர்,சித்தர்கள்,வள்ளளார், வைகுண்டசாமிகள், தந்தை பெரியார், சிங்காரவேலர், அயோத்தி தாசப்பண்டிதர்,சீனிவாசராவ், ஜீவாநந்தம் என சாதி கடந்து மானுடம் பேசியவர்கள் மண் இது.

உண்மைகளை அறிவோம்!             பொய்மைகளை விரட்டுவோம்!
அறிவியல் போற்றுவோம்!                          அஞ்சானம் அழிப்போம்!
சாதியம் தகர்ப்போம்!                                    மனிதம் வளர்ப்போம்!
சாதி கடந்து கைகோர்ப்போம்!  சமம் நாமென்று சங்கமிப்போம்!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
3 வது மாநில  மாநாடு
 ஆகஸ்டு 15,16,17, தஞ்சை
ஆகஸ்டு 17 மாபெரும் சாதி ஒழிப்பு பேரணி.