Wednesday, September 30, 2015

ஆரஞ்சு தோலை தூக்கியெறியாதீர்

வாட்ஸப்பில் வந்த படங்கள்தான். ஆரஞ்சுத் தோலில் செய்யப்பட்ட கலை  வடிவங்கள்.











 

Tuesday, September 29, 2015

பாஜக சட்டியில் கிரிமினல்கள் இருந்தால் அகப்பையில் எப்படி?


பீஹார் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக கட்சி கிரிமினல்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யப் படுவதற்கோ எதுவுமே இல்லை.

சட்டியில் என்ன இருக்கிறதோ அதுதானே அகப்பையில் வரும்!

பாஜக எனும் சட்டியில் கிரிமினல்கள் நிரம்பி வழிந்தால் எம்.எல்.ஏ சீட் கொடுக்க அகப்பையில் அள்ளினால் உத்தமர்களா வருவார்கள்?

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 

கிரிமினல்களுக்கு பாஜக முன்னுரிமை கொடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகளோ இல்லை ஊடகங்களோ இல்லை வேட்பு மனு விபரங்களைப் பார்த்து வேறு அமைப்புக்களோ சொல்வதற்கு முன்பாக பாஜக கட்சிக்காரரே முதலில் சொல்லி விட்டார். அவ்வளவுதான்.

பாம்பின் காலை பாம்பே நன்கறியும்.

பாஜக பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் நடத்தும் பணக்காரர்களின் கட்சி மட்டுமல்ல, கிரிமினல்களுக்காக கிரிமினல்கள் நடத்தும் கிரிமினல்களின் கட்சியும்தான் என்பதை  ஊருக்கு உரக்கச் சொன்ன அந்த எம்.பி யின் கதி என்னவாகப் போகிறதோ?

 

 

Monday, September 28, 2015

இந்த சாமியார் மேல சந்தேகம் வருதே…..





 
மறைந்த குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் எழுதிய “ப்ரமுக் ஸ்வாமிகளுடனான எனது ஆன்மீக அனுபவங்கள்” என்ற புத்தகத்தை ஸ்ரீதேவி கர்த்தா என்பவர் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

அதனை வெளியிட கரண்ட் புக்ஸ் என்ற பதிப்பகம் திருச்சூரில் விழா ஏற்பாடு செய்துள்ளது. எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிட ப்ரமுக் ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பிரம்மவிஹாரிதாஸ் என்ற சாமியார் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதாக திட்டமிடப் பட்டுள்ளது.

மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்த ஸ்ரீதேவி கர்த்தாவை விழாவுக்கு அந்த பதிப்பகம் அழைக்கவில்லை.

அதன் காரணம் என்ன தெரியுமா?

பிரம்மவிஹாரிதாஸ் சாமியார் இருக்கும் மேடையில் பெண்களே இருக்கக் கூடாதாம். அது மட்டுமல்ல, முதல் மூன்று வரிசைகளிலும் பெண்களே உட்காரக் கூடாதாம்.

ஆகவே மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் கூட அவர் பெண்ணாக இருப்பதால் விழாவிற்கு வருவதற்கு தடை போட்டு விட்டார்கள். அவர் தன் வேதனையை தனது முக நூல் பக்கத்தில் பதிவிட பிரச்சினை துவங்கியது.

பல்வேறு மாதர் அமைப்புக்கள், கலாச்சார அமைப்புக்கள், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் தலையிட்டன. பதிப்பகத்தைக் கண்டித்து விழா அரங்கிற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தின. சாமியார் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. விழா ரத்தாகி விட்டது.

இவர் இருக்கும் மேடையில் பெண்கள் இருக்கக் கூடாது. முதல் வரிசைகளில் பெண்களே இருக்கக் கூடாது என்றெல்லாம் லா போட்டு பெண்களை இழிவு படுத்தும் இந்த சாமியாரின் தாயும் ஒரு பெண்ணாகத்தானே இருக்க முடியும்? இல்லை இவர் சுயம்புவாக தோன்றிய அபூர்வப் பிறவியா இல்லை க்ளோனிங் முறையில் செய்யப்பட்டவரா இல்லை எந்திரன் சிட்டி போல ரோபாவா?

சாமியார்கள் ஒன்று நித்யான்ந்தா, பிரேமான்ந்தா, ஆசாராம் பாபு போல பெண்களை பாலியல் கொடுமை செய்து இழிவு படுத்துகிறார்கள். இல்லையென்றால் அவர்களை மனிதப் பிறவியாகவே மதிக்க மாட்டார்கள்.

எனக்கு இன்னொரு சந்தேகமும் வருகிறது.

நம் தமிழ் திரைப்படங்களில் தீவிர பிரம்மச்சாரிய விரதம் கடைபிடிப்பவர்கள் எல்லாம் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த சாமியார் எப்படியோ?

என்றைக்காவது ஒரு நாள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாமலா இருக்கப் போகிறது!

அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம்.

மூவர்ணக் கொடியை இழிவு படுத்துவது மோடியின் பாரம்பரியம்








பாரக் ஒபாமாவிற்கு அளிப்பதற்காக  அமெரிக்க சமையல்காரர் விகாஸ் கண்ணாவிற்காக இந்தியாவின் மூவர்ணக்கொடியில் நரேந்திர மோடி கையெழுத்திட்டுக் கொடுத்தது சர்ச்சையானது.

அப்படியெல்லாம் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் முதலில் சாதித்தார்கள். அதற்காக விகாஸ் கண்ணாவிடமிருந்த மோடி கையெழுத்திட்ட கொடியையும் வாங்கி ஒளித்து வைத்து விட்டார்கள். இப்போது மோடி கையெழுத்து போட்டது வெறும் வெள்ளைத் துணியில்தான் என்று புது பொய் ஒன்றையும் சொல்கின்றார்கள்.

கொடியின் காவி நிறப்பகுதியில் மோடி கையெழுத்துப் போட்டதன் புகைப்பட ஆதாரம் உலகெங்கும் பரவிய பின்னரும் இப்படி மாய்மாலம் செய்கின்றார்கள் என்றால் அதிலிருந்தே மோடியும் அவரது கூட்டமும் எப்பேற்பட்ட மோசடிப் பேர்வழிகள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நிற்க

மோடிக்கோ அவரது குரு பீடத்திற்கோ மூவர்ணக் கொடி மீது எந்த மரியாதையும் கிடையாது என்பதை அறிந்து கொள்ள கீழேயுள்ளதைப் படியுங்கள்.

“விதியின் சதியால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் நம் கையில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனால் அக்கொடி எக்காலத்திலும் ஹிந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மதிக்கவும் மாட்டார்கள். மூவர்ணக்கொடி என்ற  வார்த்தையே ஒரு தீய சக்தியாகும். கொடியில் மூன்று வர்ணங்கள் இருப்பது மோசமான மன நிலையை உருவாக்கும். அது நாட்டிற்கு நாசத்தை உருவாக்கும்.”

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பத்திரிக்கையான ஆர்கனைசர் இதழில் 14.08.1947 அன்றைய இதழில் வெளியான கட்டுரையில் எழுதப்பட்டதுதான் மேலே உள்ளது. இதை தோழர் பூஷண் பட்டாச்சார்யா என்ற எங்களின் போபால் கோட்டப் பொறுப்பாளர் கண்டுபிடித்து வாட்ஸப்பில் அனுப்பி வைத்தார்.

சில நாட்கள் முன்புதான் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் இந்தியக் கொடியில் காவி நிறம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொன்னதையும் சேர்த்துப் பாருங்கள்.

இந்தியாவின் கொடியை, மக்களை, பன்முகக் கலாச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இழிவு படுத்துவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் பாரம்பரியம்.

ஆகவே மூவர்ணக் கொடியில் ஆட்டோகிராப் போடுவது என்பதெல்லாம் மோடிக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது.

இந்த மனிதன் கையால் இன்னும் மூன்று வருடம் மூவர்ணக் கொடி ஏற்றப்படப் போகிறது என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.

மோடியால் ஏற்றப்படுவதையும் விட மிகப் பெரிய இழிவு தேசியக் கொடிக்கு வந்து விடப் போகிறதா என்ன?

Sunday, September 27, 2015

மீண்டும் ஜீவனோடு எம்.எஸ்.வி - ராஜ மரியாதை

 

சன் டிவி யில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "என்னுள்ளில் எம்.எஸ்.வி" என்ற இளையராஜாவின் இசையஞ்சலி நிகழ்ச்சி மூலம் மெல்லிசை மன்னர் மீண்டும் உயிரோடும் அதே ஜீவனோடும் நம் முன்னால் தோன்றியுள்ளதாக உணர்கிறேன்.

நெகிழ்ச்சியும் பரவசமும் தரும் இந்நிகழ்ச்சியை பார்க்க தவறாதீர்கள்.

ஏமாற்றமளித்த "சிவாஜி" வரலாறு




எங்களது தோழர் ஒருவர் வேலூர் நூலகத்திலிருந்தது இந்த புத்தகம் என்று  சொல்லி என்னிடம் காண்பித்தார். ஆஹா, அருமையான ஒரு நூல் என்று ஆவலோடு வாங்கிக் கொண்டேன். நான் ஒப்படைக்க வேண்டிய நாள் முடிந்து விட்டது என்றவரை வலியுறுத்தி மீண்டும் எடுத்துக் கொண்டு வரச் சொன்னேன். நேற்று மதியம் அலுவலகம் விட்டு வீடு வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சில பக்கங்களை கடந்ததுமே ஆர்வம் கொஞ்சம் வடிய ஆரம்பித்தது. ஆனாலும் விடாமல் படித்து முடித்து விட்டேன். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய ஏராளமான தகவல்கள், அவரைப் பற்றி பல்வேறு பிரமுகர்கள் பகிர்ந்து கொண்டவை என்று பல விஷயங்கள் இருந்தாலும்  ஒட்டு மொத்த நூலில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. 

அது தொகுக்கப்பட்ட விதத்தில் உள்ள குறைபாடாக எனக்கு தோன்றுகிறது.  நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, முக்கிய சம்பவங்கள் என்ற முறையில் ஒரு கால வரிசையில் தொகுத்திருந்தால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

மாறாக அவ்வப்போது கிடைத்த தகவல்களை அங்கங்கே ஒட்டி வெட்டி எழுதப்பட்டதாக இருப்பதால் ஒரு வரலாறு என்ற முறையில்  இந்த நூல் அமையவில்லை. வாசிப்பு சுகம்  என்பது கொஞ்சமும் கிடைக்கவில்லை. 

பல நல்ல புகைப்படங்கள்  நூலெங்கிலும்  உள்ளது என்பது ஒரு நல்ல அம்சம்.

இதே விஷயங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் கைவசம் சென்றிருந்தால் ஒரு மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்குமே என்ற ஏக்கத்தை அளித்தது இந்த நூல்.

எதிர்பார்ப்பு இருந்ததால் ஏமாற்றம் பெரிதாக இருக்கிறது.

பின் குறிப்பு : நடிகர் திலகம் நடித்த 288 திரைப்படங்களில் பட்டியலும் இந்த நூலில் இருக்கிறது. அதிலே 153 திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன், தியேட்டரில்.

  

Saturday, September 26, 2015

தர்பூசணியில் அழகோ அழகு

வாட்ஸப்பில் வந்த படங்கள்.

தர்பூசணி பழத்தில் செய்யப்பட்ட கலை வடிவங்கள் உங்கள் பார்வைக்காக








 

Friday, September 25, 2015

ஹஜ் பலி - முதல் முறைதான் விபத்து. தொடர்ந்தால் அது ………



நேற்றைக்கு சவுதி அரேபியாவில் ஹஜ் பயணிகளுக்கு நிகழ்ந்தது கொடுமையான ஒன்று. ஹஜ் பயணத்தில் மினா என்ற இடத்தில் சாத்தான் மீது கல்லெறிவது என்ற சடங்கின் போது ஏற்பட்ட நெரிசலில் எழுநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்து போயுள்ளனர்.
           
இந்த இடத்தில் நெரிசல் ஏற்படுவதோ, பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இறந்து போவதோ முதல் முறையல்ல. 1991 ம் ஆண்டு இதே இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். அப்போது அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியளித்தது.

ஆனால் அதற்கு பிறகு பார்த்தால் அதே இடத்தில் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் இறப்பது தொடர்கதையாகி விட்டது. முதல் முறை விபத்து நடந்த போதே சவுதி அரேபிய அரசு விழித்துக் கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தொடர் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாத அளவிற்கு சவுதி அரேபிய அரசு ஒன்றும் பஞ்சப் பரதேசி அரசு கிடையாது. செல்வச் செழிப்பு மிக்க அரசுதான். மேலும் ஹஜ் பயணத்தின் மூலமும் அரசுக்கு நிதி வந்து கொட்டுகிறது.

அப்படி இருக்கையில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் தனது நாட்டிற்கு வரும் பக்தர்களின் உயிரோடு விளையாடுவது, அவர்கள் உயிரை துச்சமென மதிப்பது சவுதி அரேபிய அரசின் அலட்சியம் என்று சொல்வது கூட தவறு. அராஜகம் என்பதே பொருத்தமான வார்த்தையாக இருக்கும்.

ஹஜ் பயணத்தின் போது மெக்காவில் இறப்பவர்கள் நேரடியாக அல்லாவிடம் செல்கின்றார்கள் என்றொரு வாதத்தை சில தினங்கள் முன்பு நடந்த விபத்தின் போது சிலர் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைத் தவிர வேறில்லை.

இப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் சவுதி அரேபிய அரசின் அராஜகம் தொடர்வதற்கே வழி வகுக்கும், மேலும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் எதிர்காலத்தில் நெரிசலில் சிக்கி இறப்பதற்கும் கூட.