Showing posts with label தியாகம். Show all posts
Showing posts with label தியாகம். Show all posts

Friday, January 19, 2024

முகமறியா தியாகிகள் நினைவாக . . .


சில வருடங்கள் முன்பாக நான் எழுதியிருந்த பதிவை செழுமைப்படுத்தி இன்று பகிர்ந்து கொண்டுள்ள தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 



 *நாளொரு கேள்வி: 19.01.2024*


தொடர் எண்: *1329*

*தியாகிகள் தினம்& ஆயுள் காப்பீட்டு தேசியமய நாள்* 

இன்று நம்மோடு வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் *எஸ். இராமன்*
###########################

*அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்*

கேள்வி: ஜனவரி 19 தியாகிகள் தினத்தின் வரலாற்று பின்புலம் என்ன? 

*எஸ். ராமன்*

அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்...

இவர்களைப் பார்த்ததில்லை. இவர்கள் மரணம் பற்றியும் அவர்கள் மரணித்த நாளில் அறிந்ததில்லை. இத்தனைக்கும் இவர்கள் வாழ்ந்த அதே கீழைத் தமிழ்நாட்டின் பகுதியில்தான், இவர்கள் உயிரை காவல்துறை தோட்டாக்கள் குடித்த காலத்தில் நான் பள்ளி மாணவனாய் பனிரெண்டாவது வகுப்பில் அப்போது படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஒரு மிகப் பெரிய கொடூரம் பற்றி அன்றைய அதே மாவட்டத்தில் இருந்த  திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் படித்து வந்த நான் அறிந்திருக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு வேளை அங்கே போராட்டங்கள் நடத்தியிருக்கலாம். தட்டிகள் கட்டி வைத்திருக்கலாம்.  மக்களின் கோரிக்கைகளுக்காக நடத்துகின்ற போராட்டங்களை எப்படி நடுத்தர வர்க்க மக்கள் மௌனமாக இப்போதும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்களோ, அது போல  நானும் ஒரு வேளை அன்று அதை மௌனமாகக் கடந்து போயிருக்கலாம்.

அந்த கொடூர நிகழ்வு பற்றி நெஞ்சை பதற வைத்த அந்த சம்பவம் பற்றி எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்த பின்பே சங்கத்தின் மூலமாகவே அறிந்து கொண்டேன். 

ஏன் இந்த உயிர் பறிப்பு? காவல் துறையின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அவர்கள் இரையாக்கப்பட்டது எதற்காக? 42 ஆண்டுகளுக்கு பின்னால் செல்வோம். 

அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 1982 ஜனவரி 19 ம் நாள் அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

உலக வங்கியிடமும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்கிய இந்திய அரசு, அந்த கடனுக்காக அந்த அமைப்புக்கள் விதித்திருந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தொடங்கி இருந்த காலம். இன்று போலவே அப்போதும் அந்த நிபந்தனைகள் என்பது  உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களாகத்தான் அமைந்திருந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலை வாசி உயர்வு, ஆலைகள் மூடல் என  தாக்குதல்கள் பன் முனைகளில்... பொதுத் துறைகள் மீதான தாக்குதலும் துவங்கிய காலம். 

இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைகின்றன. தலைநகர் டெல்லியை உலுக்கிய பேரணி நடைபெறுகின்றது.  1982 ஜனவரி 19 ம் நாள் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்ற அறைகூவல் விடப்படுகிறது.

வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறை குண்டாந்தடிகள் ஆவேச தாக்குதல் நடத்துகிறது.

இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமெய்ஞானம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் களமிறங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மறுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.
அஞ்சான் நாகூரான் எனும் இரண்டு விவசாயக் கூலித் தொழிலாளர்களை கொன்று தன் வெறியை அவர்களின் குருதியில் தணித்துக் கொண்டது. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி என்ற கடமையை நிறைவேற்றிய திருப்தி அதற்கு... அதுபோல மன்னார்குடி அருகில் உள்ள இரட்டைப் புளி கிராமத்தில் ஞானசேகரன் என்ற விவசாயத் தொழிலாளி உயிரையும் தோட்டாக்கள் பறித்தன. 

தியாகிகளின் மூவரின் புகைப்படங்கள் கிடைக்குமா என்று  இணையத்தில் தேடிப்பார்க்கிறேன். கிடைக்கவில்லை. அவர்களின் முகம் அறியாவிட்டாலும் கூட தமிழக உழைப்பாளி வர்க்கம் அவர்களை மறக்கவில்லை. அவர்களின் தியாகத்தை மறக்கவில்லை. 

சி.ஐ.டி.யு அமைப்பு 19 ஜனவரியை ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.

இன்று ஆயுள் காப்பீடு தேசிய மய நாள். பொதுத் துறையின் தாய் போன்று விளங்கும் மகத்தான நிறுவனமான எல்.ஐ.சியின் அரசு நிறுவனம் என்ற அந்தஸ்தை பாதுகாக்க வேண்டிய கடமை முன்னிற்கும் நேரம். இந்த தியாகம் பொதுத் துறை பாதுகாப்பு என்ற இலட்சியத்திற்கு உரமாகும். 

வரலாறு கற்றறியா சமூகம் உயிரற்ற உடலுக்கு சமம். இன்றும் கூட பஞ்சப்படி உள்ளிட்ட பயன்கள் மற்றும் உரிமைகள் தொடர்வதற்கு அகில இந்திய வேலை நிறுத்தங்களும், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் போன்ற சாமானிய உழைப்பாளிகளின் உயிர்த் தியாகமும் காரணம் என்று அறியா வெள்ளைக் காலர் தொழிலாளர்கள் நிறைய பேர் இன்றும் உள்ளனர். 

தியாகிகள் தினம் இன்று... தொழிலாளர் விவசாயிகளின் கூடல் குறித்து நாம்

பகிர்வோம். நிமிர்வோம்! 

*செவ்வானம்*

Monday, May 1, 2023

போலீஸை செங்கொடி தூக்க வைத்தவர்

 

தலைமை ஆசிரியர் தோழர் இரா.எட்வின் அவர்களின் முகநூல் பதிவு



முப்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும்.
தோழர் ராஜாமணி எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிறிய நூலினை கையில் திணித்த அண்ணன் நந்தலாலா,.
“ இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்றி எழுது”
அப்போது திருச்சி த.மு.எ.ச விலிருந்து சோலைக் குயில்கள் என்றொரு கவிதை இதழை மாதா மாதம் கொண்டு வந்து கொண்டிருந்தோம்.
ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமைகளிலும் திருச்சி பழக்கடை பூங்காவில் ஒரு பதினைந்து இருபது பேர் கூடிவிடுவோம். நான், நந்தலாலா, புதிய கம்பன், பொன்னிதாசன், அண்ணன் முகில், முகவை அழகுடையான் போன்றோர் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாது பங்கேற்போம்.
எல்லோரும் கவிதை வாசிப்போம். வர இயலாதவர்கள் எங்களில் யாருக்கேனும் கவிதைகளை அனுப்பி வைப்பார்கள். அதையும் அங்கே வாசிப்போம். மனுஷ்யப் புத்திரன் கவிதைகளும் அங்கே அந்த காலத்தில் வாசிக்கப் பட்டதுண்டு.
கவிதை வாசிப்பு முடிந்ததும் எல்லோருடைய கவிதைகளையும் அண்ணன் முகில் சேகரிப்பார். பிறகு ஒரு நாள் அவரது வீட்டில் ஆசிரியர் குழு கூட்டம் நடக்கும். வந்துள்ள கவிதைகளில் இருந்து சினிமா பாட்டுப் புத்தகம் அளவில் வரும் சோலைக் குயில்கள் தயாரிப்போம்.
அந்த இதழுக்குத்தான் அண்ணன் விமர்சனம் கேட்டார்.
கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் ஆஷர்மில் பழநிச்சாமியைப் பற்றிஅந்தப் புள்ளியில் என்னிடமில்லை.
உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர்.
உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.
அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் எதையும் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.
திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.
எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.
அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார். தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள். தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.
அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.
எந்தக் காவலர் நெருங்குவார்.
அப்போது ஒரு ரயில் வருகிறது.
மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,
“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”
“ என்ன செய்யலாம்?”
“ரயிலை நிறுத்துங்கள்”
“எப்படி?”
“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”
தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.
காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.
சிரிக்கிறார் பழநிச்சாமி.
எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே செங்கொடிகள்.
அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.
மேதின வாழ்த்துகள்

பிகு : இணையத்தில் தேடிய போது தோழர் பழனிச்சாமியின் படம் கிடைக்கவில்லை. அவரது நினைவு நாளை திருப்பூர் மார்க்ஸிஸ்ட் கட்சி அனுசரித்த போது எடுத்த படம்தான் கிடைத்தது.


Tuesday, July 5, 2022

மோடி கம்மிங். தியாகிகள் உஷார்

 


காலையில் கண்ணில் பட்ட படம் முதலில் உள்ளது. ஆந்திராவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை மோடி வணங்குகிறாராம்.

விடுதலைப் போரைக் காட்டிக் கொடுத்த களவாணிக் கூட்டத்தின் வாரிசு, விடுதலை வரலாற்றை மாற்றி எழுதும் மோசடிப் பேர்வழி, சுதந்திரத்தின் விழுமியங்களை சிதைக்கும் கொலைகாரன், இந்திய செல்வத்தை விற்கும் தரகன் மோடிக்கு என்ன அருகதை இருக்கிறது!

தியாகிகளே எச்சரிக்கையாக இருப்பீர்!

நாடாளுமன்ற கட்டிடத்தை முத்தமிட்ட மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் சீரழித்த குற்றவாளி.

உங்களை வணங்கும் கரங்களுக்குள் கொலை வாள் ஒளிந்திருக்கும். எச்சரிக்கையாக இருப்பீர். உங்கள் பென்ஷனைக் கூட அந்த படுபாவி பறிக்கலாம். உங்களை காட்டிக் கொடுத்த கருங்காலி எவனாவது இருந்தால் அவனுக்கும் தியாகி அடையாளி கொடுக்கலாம்.

எலிசபெத் ராணியின் கால்களில் மண்டியிட்டுக் கிடந்த துரோகி கோழை சாவர்க்கரை வீரன் என்று அழைப்பவர்கள் அல்லவா இவர்கள்!

Tuesday, October 6, 2020

விதையாய் புதைந்த வீரர்கள்

 குமரி மாவட்டத்தின் மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முக நூல் பதிவினை பகிர்ந்து கொள்கிறேன். நேற்று இரவு உறங்கச் செல்லும் முன்புதான் பார்த்தேன். நேற்றே பகிர்ந்து கொண்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

செவ்வணக்கம் தோழர் ஜி.எஸ்.மணி



#வலிய #மணி என்று, மக்களாலும், #சகாவ்:#GSஎன்று தோழர்களாலும், பரிவுடன் இன்றும் அழைக்கப்படும்,

தோழர்:#G.#S.#மணி......
எனது ஏழாவது வயதிலிருந்தே, நான் கண்ட, தோழர்......

1942-ம் ஆண்டு, முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர்;

1947ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானத்தில் நாஞ்சில் நாட்டின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் பணியாற்றியவர்;

1950ல், திருவாங்கூர்-தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்;
1956-ம் ஆண்டிலிருந்து,1959-ம் ஆண்டு வரை, கம்யூனிஸ்ட் கட்சியின், குமரி மாவட்ட செயலாளர்....

குமரி மாவட்ட, தோட்டங்களில் வேலை செய்து வந்த, தோட்டம் தொழிலாளர்களை, சிவலோகம் எஸ்டேட், மேனேஜர், அலெக்சாண்டர் என்ற வெள்ளைக்காரனின், சவுக்கடியிலிருந்து, காப்பாற்ற, 1943-ம் ஆண்டு,அகில திருவாங்கூர் எஸ்டேட் தொழிலாளர்கள் சங்கம் 1,என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கியவர்;

தோட்டம் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க, மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும், நடந்தே சென்று பணியாற்றியவர்;

குமரி மாவட்டத்தில், சுரண்டப்பட்ட, உழைப்பாளிகளுகளுக்காக, தொழிற்சங்கங்களை உருவாக்கியவர்...

5ஆண்டுகளுக்கு மேல், தலைமறைவாக இருந்து, கட்சிப் பணியாற்றியவர்;
5ஆண்டுகளுக்கு மேல், சிறைச்சாலைகளில், குரூரமான சித்திரவதைகளை எதிர் கொண்டவர்;

சுதந்திரப் போராட்டத்திலும், குமரி எல்லை போராட்டத்திலும், பங்கேற்றவர்;

சி. பி. ராமசாமி அய்யரின், திருவாங்கூர் மன்னனின், ராணுவத்தால், அதிக பட்ச, தாக்குதல்களை சந்தித்தவர்;

அப்போதைய, கேரள முதல்வர், பட்டம் தாணு பிள்ளையின், மலபார் ஸ்பெஷல் போலீசின், காட்டுமிராண்டித்தனமான, சித்திரவதைகளை, தைரியமாக, சந்தித்தவர்;

திருவனந்தபுரத்திலிருந்து அழைத்து வரும் வழியில்,தக்கலை சப் ஜெயிலில் வைத்து, தன்னை, சூரன் வேலுப்பிள்ளை என்ற, காவல்துறை அதிகாரி மூலம், கொலை செய்யப் போகிறார்கள் என்பதை, புரிந்து கொண்டு,கட்சியின் கட்டளைக்கு இணங்க, காவல்துறை அதிகாரிகள் கைது செய்து கொண்டு வரும் போது, 14 அடி, வெள்ளத்தில், குழித்துறை ஆற்றில் குதித்து, தப்பிச் சென்று, இரண்டு வருடங்கள், தலைமறைவாகவே, சென்றவர்;

திருவட்டார், கிளைச் சிறைச்சாலையில், இருந்த, தோழர்: P.T.புன்னூஸ் அவர்களை சந்திக்க,

கையூர், கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தலை மறைவாக இருந்த, தோழர்:E.K.நாயனார்(முன்னாள் கேரள முதல்வர்)அவர்களை, அழைத்துச் சென்று, காவலையும் மீறி, சந்திக்க வைத்தவர்;

பூஜப்புரை(திருவனந்தபுரம்)மத்திய சிறைச்சாலை உச்சியில், கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி ஏற்றி, காவல்துறையினரால், சிதைக்கப்பட்டவர்;

1964ம் ஆண்டு, கம்யூனிஸ்ட் கட்சி, பிளவுண்ட போது, உறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அரணாக நின்றவர்...

1977-ம் ஆண்டு நடைபெற்ற, சட்ட மன்ற தேர்தலில், விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று, 1979ம் ஆண்டு, அக்டோபர் மாதம் வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக, திகழ்ந்தவர்.....

1979-ம் ஆண்டு, அக்டோபர் மாதம்5ம் தேதி, புற்றுநோய் காரணமாக காலமானார்....

#சகாவ் #GS காலமானார் என்ற செய்தி அறிந்து, தோழரின் உடல் வருகிறது என்பதை புரிந்து கொண்டு, சாலைகளின் இரு மருங்கிலும்,மக்கள், கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியை, அதன் பிறகு, குமரி மாவட்டம், இது வரை கண்டதில்லை...

தியாகத்தால் பொழுதளந்த தூயவர்......!
எளிய மனிதர்களின் #சகாவ்....
இன்று ( 5-10-2019),தோழர் #GS அவர்களின்,
41வது, நினைவு நாள்....

காவிக் கயவர்களால் கேரளாவில் நேற்று வெட்டிக் கொல்லப்பட்ட தோழர் சனூப் பற்றி குமரி மாவட்டத்தின் இன்னொரு தோழர் சதன், தக்கலை அவர்கள் இன்று எழுதிய முக நூல் பதிவு மிகவுமே எழுச்சியூட்டியது. அந்த பதிவு இதோ இங்கே

செவ்வணக்கம் தோழர் சனூப்





தோழர். சனூப்...26 வயது...

சில காலம் முன்பு, தாயையும் தந்தையும் இழந்த பிறகு அவருக்கு உறவுகள் என்று யாருமில்லை...கட்சி தான் அவரது குடும்பம்...

இந்த சமூகத்தை அளவு கடந்து நேசித்ததால் தோழர்களும் அந்தப் பகுதி மக்களும் உறவுகள் ஆனார்கள்...

பிறப்பால் ஒரு தலித்...ஆனால் எல்லா மக்களையும் நேசித்தார்...எல்லா மக்களும் ஜாதி மத வேறுபாடின்றி அவரை நேசித்தார்கள்...

நடவடிக்கைகளால் ஒரு மக்கள் ஊழியர்...ஒரு கம்யூனிஸ்ட்...அதனால் அப்பகுதி மக்களின் தலைவர்...!

தனது இறப்புக்கு சற்று முன்பு கூட DYFI நடத்தும், எல்லா நாட்களும் மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்கும் நோயாளிகளுக்கு துணையாக இருப்பவர்களுக்கும் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்திற்கு தனது பகுதியின் சார்பில் உணவு வழங்கும் முறையான நேற்று உணவு வழங்க, முன்தினம் உணவு பொட்டலங்கள் திரட்டும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்....

நேற்று அவரது உடல் கூறாய்வுக்கு மருத்துவக் கல்லூரி சவக் கிடங்கில் நினைவற்று கிடக்கும் போது...

அதே மருத்துவக் கல்லூரி வளாகத்தின் இன்னொரு பகுதியில் சக தோழர்கள், அவரது முயற்சியால் திரட்டப்பட்ட உணவுப் பொட்டலங்களை அடக்க முடியாத அழுகையினூடே கண்ணீருடன், தடங்கலின்றி மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்...

அவருக்கென சொந்தமாக இருந்த 5 சென்ட் நிலமும் வீடும் இப்போது, உறவினர்கள் யாருமற்ற, தோழர் சனூபின் அன்புக்குரிய வேலாயுதன் என்ற முதியவருக்கு, அவரது சக தோழர்கள் கொடுத்துள்ளார்கள்...

வேலாயுதனின் காலத்திற்குப் பிறகு அது கட்சியின் அலுவலகமாக்கப் படும் என்று தோழர்கள் அறிவித்துள்ளார்கள்...!

அவருக்கு வங்கியில் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு இருக்கிறது...அதன் நாமினியாக அவரது அண்டை வீட்டில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தில் உள்ள பாத்திமா அக்காவின் மகளான லியாவின் பெயரைப் பதிவு செய்துள்ளார்...

தனது பெயரில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் பாலிசிக்கு நாமினியாக இன்னொரு அண்டை வீட்டு அக்காவான சரஸ்வதியின் உடல்நலக்குறைவால் அவதிப்படும் மகன் ஸ்யாம் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது...

இன்னும் இன்னும் அவரைப் பற்றி வெளிவரும் தகவல்கள் மனதை ரம்பமாக அறுத்து வதைக்கிறது...

கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களில் ஒருவரை இழந்தால் ஒரு சமூகத்தின் தலைவரை இழந்தது போன்றது என்ற கூற்றின் உண்மையான உதாரணமாக தோழர் சனூப் வாழ்ந்துள்ளார் என்றால் அது அதிகப் படியானது அல்ல.

கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்கள் மண்ணில் மறைந்தாலும் விதையாகவே புதைகிறார்கள். அடர்ந்த விருட்சமாக அவர்கள் மக்களுக்கு நிழலாக என்றென்றும் திகழ்வார்கள். கம்யூனிசம் என்பது பிழைப்பு வாதம் அல்ல. உழைக்கும் மக்களுக்கு தோள் கொடுக்கும் உன்னத உணர்வு. அதனை எந்த கொம்பனாலும் எந்த சட்டத்தாலும் அழித்து விட முடியாது.

Saturday, October 19, 2019

பாஜகவில் யாரேனும் உண்டோ?




மறைந்த மகத்தான தோழர் ஐ.மாயாண்டி பாரதி பற்றி மறைந்த பத்திரிக்கையாளர் சௌபா எழுதியது.

இப்படி ஒரு வீர வரலாறு, தியாக வரலாறு பாஜகவில் உள்ள யாருக்காவது உள்ளதா?

காட்டிக் கொடுத்தவர்களும் மன்னிப்பு கேட்டவர்களும்தான் இருக்கிறார்கள்.

அதனால்தான் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சங்கிகள் புறப்பட்டுள்ளார்கள்.


"ரெட் சல்யூட்!”

———சௌபா,------------------------------

12 வயதில் தொடங்கிய பொதுவாழ்க்கை. இளம்பிராயத்தில் தேச விடுதலைக்காக முழுதாக 13 ஆண்டுகள் சிறைவாசம்; நெல்லை சதி வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை; திரு.வி.-வின் நவசக்தியில் தொடங்கி, லோகோபகாரி லோகசக்தி, பாரதசக்தி, ஜீவாவின் ஜனசக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் போன்ற பத்திரிகைகளில், 50 ஆண்டுகள் எழுத்துப் பணி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை முதலில் அடையாளம் கண்டவர்; வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி முதலில் எழுதி பிரபலப்படுத்தியவர்

பாவலர் வரதராஜனை அவரது தம்பிகளோடு சேர்த்து இசைக் குழு ஆரம்பிக்கவைத்து மேடை ஏற்றியவர்... இத்தனை சிறப்புகளுக்கும் உரியவர் மதுரை மக்களால் அன்புடன் '.மா.பாஎன அழைக்கப்படும் .மாயாண்டி பாரதி.

  தாத்தாவுக்கு தற்போது வயது 98. வயோதிகத்தில் சோர்ந்திருப்பார் என்ற நினைப்பில்தான்மதுரையில் உள்ள அவரது பாரத மாதா இல்லத்துக்குச் சென்றேன். மனிதர் பரபரப்பாக சில படங்களை வெட்டி ஒட்டி ஏதோ லேஅவுட் செய்துகொண்டிருந்தார்.

''கண்ணாடி தேவைப்படலையா?'' - என்று கேட்டதும் சீறினார்.

''எனக்கு எதுக்குடா கண்ணாடி? உங்களை மாதிரி வயசாகிப்போனவன்களுக்குத்தான் கண்ணாடி வேணும். எனக்கு எதுக்கு?'' என்று சிரிக்கிறார்.

''நான் 23 வயசுல எழுதின 'படுகளத்தில் பாரத மாதாபுத்தகம் இப்போ மறுபதிப்பு வரப்போகுதுல. அதுக்குத்தான் புது லேஅவுட்!'' என்கிறார் உற்சாகமாக

அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் தன் பால்ய காலத்துக்குள் பிரவேசித்தார்...

''அப்ப எனக்கு 12 வயசு. கள்ளுக் கடை மறியல் தீவிரமா நடந்துட்டு இருந்துச்சு. தேசபக்தர்கள் எல்லாரும் கள்ளுக் கடைகளை மூடச் சொல்லி கூட்டங்கூட்டமா  மறியல் பண்ணாங்க. போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணி அவங்களை வெரட்டி அடிச்சாங்க. மதிச்சியம் கள்ளுக் கடை மறியல் நடந்தப்ப, நான் படிச்ச பள்ளிக்கூட ஜன்னல் வழியா பார்த்தேன்

போலீஸ் அடிக்க, தொண்டர்கள் கையில் கிடைச்சதை எல்லாம் எடுத்து, போலீஸ் மீது எறிஞ்சாங்க. ஒரே கலவரம். என் புத்தகப் பையை எடுத்துட்டு நைஸா வெளியே ஓடி வந்துட்டேன். பையில் இருந்த புத்தகங்களை தரையில் கொட்டிட்டு கொஞ்சம் தள்ளி குவிச்சுருந்த சரளைக் கற்களை, பையில் அள்ளிட்டுப் போய் தேசபக்தர்கள் பக்கத்தில் கொட்டினேன். அவங்க அதை எடுத்து போலீஸ் மேலே எறிஞ்சாங்க... 

இப்படித்தான் என் பொதுவாழ்க்கை ஆரம்பிச்சது. கண் மூடி கண் திறக்கிறதுக்குள்ள 86 வருஷம் ஓடிருச்சு. எத்தனை ஜெயில்... எத்தனை அடி - உதை! தமிழ்நாட்டில் என்னை அடைக்காத ஜெயிலே கிடையாது. 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலுனு எனக்குப் பட்டப் பெயர்கூட உண்டு.

ரெண்டாவது உலக யுத்தம் தொடங்கினப்போ, ஆங்கிலேயர்கள் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தாங்க; யுத்த நிதி திரட்டினாங்க. 'பட்டாளத்தில் சேராதே... பணம்-காசு கொடுக்காதேனு சிவகாசியில் பேசினேன். அதுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சப் ஜெயிலில் ஆறு மாசம் அடைச்சு, 50 ரூபாய் அபராதம் விதிச்சாங்க. எனக்கு ஜாமீன் கொடுக்க அப்போ இருந்த வெள்ளைக்கார டெபுடி கலெக்டர், ' உனக்கு சொத்து ஏதும் இருக்கா?’னு கேட்டார். 'இருக்குங்கய்யா... மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற மங்கம்மா சத்திரம் என் சொத்து. மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் எல்லாம் எங்க அப்பாவோட சொத்து. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் எங்க பாட்டன், முப்பாட்டன் சொத்துதாங்கனு சொன்னேன்

இதை மொழிபெயர்த்துச் சொன்னதும் டெபுடி கலெக்டர் கடுப்பாகி, 'இவனுக்கு ஜாமீன் கிடையாது. ஜெயிலில் தூக்கிப்போடுங்கனு சொல்லிட்டுப் போயிட்டாரு.

1938-ல் ராஜபாளையத்தில் காங்கிரஸ் மாநாடு. அதுக்கு குமாரசாமி ராஜா தலைமை. அந்த மாநாட்டில் விநியோகிக்க மதுரையில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிச்சு, 'திருப்பூர் குமரனை அங்கீகரிக்கணும்னு கோரிக்கை வெச்சுருந்தோம். அச்சடித்த நோட்டீஸ்களோடு மதுரையில் இருந்து நானும் என் நண்பனும் சைக்கிள்லயே ராஜபாளையம் போனோம். இப்ப இருக்கிற மாதிரி ரோடு இல்லை. வண்டிப்பாதைதான். பல தடவை விழுந்து எழுந்து கை கால் எல்லாம் காயங்களோடு போய்ச் சேர்ந்தோம்

அங்கு வந்திருந்த சக்திதாசன் சுப்ரமணியம், கே.ராமநாதன், மா..குருவேங்கடம்... மூவரும்தான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றினாங்க.

'நல்லா எழுதுற; பேசுற. நீ எங்ககூட பத்திரிகை ஆபீஸ் வேலைக்கு மெட்ராஸுக்கு வர்றியா?’னு கேட்டாங்க

நான் அப்போ போராட்டம், ஜெயில்னு அநாதைப் பயபோலத்தானே சுத்தித் திரிஞ்சுட்டு இருந்தேன். 'சரி வர்றேன்னு வண்டி ஏறிட்டேன். 'லோகசக்தியில் உதவி ஆசிரியர் வேலை. அண்ணா சாலைக்குப் பக்கத்தில் ஒரு தகரக் கொட்டகையில் எங்க பிரஸ் மறைவா இருக்கும். பகல் முழுக்க கை ரிக்ஷா இழுக்கிறவன் மாதிரி அப்பாவியா உட்காந்திருப்பேன். இரவு எல்லாம் கம்போஸிங், பிரின்டிங் நடக்கும்.

அப்ப நான் எழுதின, 'போருக்குத் தயார்’, 'கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்கட்டுரைகள் ரொம்பப் பிரபலம்

போலீஸ் தேடி வந்து, 'மாயாண்டி பாரதிங்கிறது யாரு... தெரியுமா?’னு எங்கிட்டயே கேட்டாங்க. 'நான் ரிக்ஷா கூலி சாமிஎன் வண்டியில்தான் அவரு ஏறுவார். நாளைக்கு வருவாருனு சொல்வேன். மறுநாள் போலீஸ் வரும். 'அடடா... இப்பத்தான் அவரை பிராட்வேயில் எறக்கிவிட்டுட்டு வர்றேன்னு சொல்வேன்

அப்புறம் ஒரு வழியா, அது நான்தான்னு எப்படியோ கண்டுபிடிச்சு ஜெயிலில் போட்டானுக. வெளியே வந்த பின்னாடி, என்னை சோஷலிஸ்ட் இளைஞர் சங்கத்தின் செயலாளர் ஆக்கிட்டாங்க. அப்போ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காந்தியின் எதிர்ப்பை மீறி இரண்டாவது முறையா காங்கிரஸ் தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

காங்கிரஸ்காரர்கள் யாரும் அவரை வரவேற்கவில்லை. ரயில் நிலையத்தில் நான்தான் அவருக்குக் கைகொடுத்து வரவேற்றேன். அவரோடது அகலமான முரட்டு கை. அப்புறம் மதுரைக்குப் போனார் நேதாஜி. எனக்கும் போக ஆசைதான்; ஆனா முடியலை. அங்கே முத்துராமலிங்கத் தேவர், கோபி, ஜானகியம்மா எல்லாரும் அவரை வரவேற்றாங்க!'' - ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தார் .மா.பா.

''சுதந்திரம் வாங்கிட்டோம். வெள்ளைக்காரன்கிட்ட வாங்கின அடியும் உதையும் முடிஞ்சுதுனு நினைச்சோம். ஆனா முடியலை. 'சீனாவை ஆதரிச்சோம்னு சொல்லி கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது காங்கிரஸ் சர்க்கார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறை காலம். நர வேட்டையாடினாங்க. சிக்கினவங்களை எல்லாம் சிறையில் போட்டாங்க.       பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் போயிட்டாங்க. ஆனால், செயல்பாடுகள் மட்டும் நிற்கலை.

வி.பி.சிந்தன், .கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களுடன் கோவை சிறையில் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. சிறைக்குள்ளயே வகுப்பு எடுப்பாங்க. சிறைக்குள்தான் நான் முழுமையான கம்யூனிஸ்ட் ஆனேன். அதுக்காக இப்ப வரைக்கும் நான் ரொம்பப் பெருமைப்படுறேன்

பரோல்ல வெளியே வந்தப்போ, 'இவன் நாடு, மக்கள்னு திரியிறான். இவனுக்குக் கல்யாணம் முடிச்சுவெச்சா பொண்டாட்டி, புள்ளைனு திருந்திருவான். ஊர் வேலைக்குப் போகாம இருப்பான்னு எனக்கு பொண்ணு பாத்தாங்க. நமக்கு யாரு பொண்ணு குடுப்பா? கடைசியா எங்க அக்கா மக பொன்னம்மாவைக் கட்டிவெச்சாங்க

நான் கடலூர் ஜெயிலில் இருந்தப்ப, மனு எழுதிப் போட்டு பார்க்க வந்தா எம் பொஞ்சாதி.

'ஏன் மாமா, இந்தச் சீனாக்காரன் பண்ணுறது தப்புனு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா, உங்களை வெளியில் விட்டுருவாகளாமே?’னு கேட்டா. அன்னைக்கு அவ கன்னத்துல ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டேன். 'இதுக்காடி நீ இங்க வந்தே, காங்கிரஸ்காரன் அனுப்பிவெச்சானா?’னு கேட்டேன். அவ அழுதுக்கிட்டே போயிட்டா. ஆனா, அதுக்குப் பிறகு அவ சாகிற வரைக்கும், அவ மேல் கோபமா என் கை பட்டது இல்லை.

நான் விடுதலையான கொஞ்ச காலத்தில், சேலம் சிறையில் அரசியல் கைதிகள் உரிமை கேட்டுப் போராடினாங்க. 22 பேரைச் சுட்டுக் கொன்னுட்டாங்க. நான் பல நாட்கள் சாப்பிடலை; தூக்கம் இல்லை. ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அப்போ தூத்துக்குடியில் தலைமறைவா  இருந்தோம். தூத்துக்குடி அருகே 'மீளவிட்டான்என்ற இடத்தில் ரயிலைக் கவிழ்க்கணும்னு முடிவு பண்ணினோம். அஞ்சே பேர்தான். தண்டவாளத்தைக் கழற்றிட்டுக் காத்திருந்தோம்.

அதிகாலையில் வந்த ரயில் கவிழ்ந்துச்சு. பயங்கர சத்தம். ஆனா, உயிர்சேதம் எதுவும் இல்லை. நாங்கதான் இதைச் செய்தோம்னு போலீஸ் கண்டுபிடிச்சிருச்சு. மாநிலம் முழுக்கத் தேடினாங்க. நாங்க திருநெல்வேலி மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த வீட்டில்தான் குடியிருந்தோம். காலையில் போலீஸுக்கு டீ வாங்கிக் குடுப்போம். பலமுறை அவங்களும் எங்களுக்கு      டீ வாங்கிக் குடுத்தாங்க. ஆனா, எவனோ தகவல் சொல்லி எங்களைப் புடிச்சுட்டாங்க. மறுபடியும் ஜெயில்.

'ஏகலாம் சிறைச்சாலையே - நமக்கு
அதைவிட வேறென்ன வேலையே
னு பாடிக்கிட்டே ஜெயிலுக்குப் போனோம். எல்லாம் முடிஞ்சு மறுபடியும் ஜீவாவின் 'ஜனசக்தியில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒருநாள் நெடுநெடுனு வளர்த்தியா ஒரு பையன் வந்தான். 'உம் பேரு என்ன?’னு கேட்டேன். 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு சொன்னான். 'நண்டு செய்த தொண்டுனு ஒரு கவிதை எழுதியிருக்கேன். உங்க பத்திரிகையில் போட முடியுமா?’னு கேட்டான். '

இதுக்கு முன்னாடி பத்திரிகையில் உன் கவிதை வந்திருக்கா?’னு கேட்டேன். 'இல்லைனு உதட்டைப் பிதுக்கினான்.

'கவிதை இருக்கட்டும். இதைப் பாட்டா படிக்க முடியுமா?’னு நான் கேட்ட மறுநிமிஷமே, மேஜையில் தாளம் போட்டு, அதைப் பாட்டா படிச்சான். 'இப்படி இசையோட எழுதுனு சொல்லிட்டு, கவிதையைப் பிரசுரித்தேன்

அடிக்கடி கவிதையோடு வருவான். நானும் பிரசுரம் பண்ணுவேன். ஒருநாள் படபடப்போடு வந்து, 'எம்.ஜி.ஆர்., பாட்டு எழுதக் கூப்பிடுறார். நான் போகட்டுமா?’னு கேட்டான்.

'டேய்... கட்சிக்காரன் எவன்கிட்டயும் சொல்லாத. 'வேணாம்னுவாங்க. அவரு மகா நடிகர்டா. உனக்கும் நல்லது; அவருக்கும் நல்லதுனு சொல்லி அனுப்பிவெச்சேன்.

தேவிக்குளம், பீர்மேடு இடைத்தேர்தல் சமயத்தில் பண்ணைபுரத்தில் இருந்து 'வரதராஜன்னு ஓர் இளைஞன் வந்தான். அவனே பாட்டுக் கட்டி ஒரு கி.மீ சுற்றளவுக்குக் கேட்கிற மாதிரி பாடுவான். அப்படியொரு  கூட்டம் கூடுச்சு. தேர்தல் முடிஞ்சதும் மதுரைக்கு வந்தான்.

'எனக்கு ஏதாச்சும் நீங்க வழி சொல்லணும்னு சொன்னான்.

'நான் என்ன வழி சொல்ல... ஒண்ணு செய்யிநீ தனியாளா பாடினது போதும். உன்கூடப் பாடுறதுக்கு ஆளுங்க இருக்கானுகளா?’னு கேட்டேன்.

'என் தம்பிகள் இருக்காங்கனு சொன்னான்.
'பொண்ணுக?’

'என் தம்பி ராசைய்யா பெண் குரலில் பாடுவான்னு சொன்னான்.
'நீங்க இசைக்குழு ஆரம்பிங்கனு சொன்னேன்


உடனே 'பாவலர் சகோதரர்கள் இன்னிசை நாடக மன்றம்னு ஆரம்பிச்சாங்க. ஊர் ஊராப் போயி சக்கபோடு போட்டாங்க. அந்த ராசைய்யாதான் நம்ம இளையராஜா.

இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா, நேத்து நடந்ததுபோல இருக்கு. ரொம்பப் பெருமிதத்தோடு இருக்கேன். ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் என் மனசை அறுக்குது!'' என்றார் .மா.பா.

சற்றுநேர மௌனத்துக்குப் பிறகு, ''அப்ப போலீஸ்காரன் எங்களை அடிக்கிறப்ப நாலு அடிதான் வலிக்கும். மீதி நாப்பது அடி பொத்து பொத்துனு சத்தம்தான் கேட்கும். இப்ப பேப்பர்களில் வர்ற செய்திகளைப் பார்த்தா ஒவ்வொரு வரியும் வலி தருது. இதுக்குத்தானா இத்தனை வருஷம் சிறைப்பட்டோம், அடிபட்டோம், குடும்பம் பெருசு இல்லை... நாடுதான் முக்கியம்னு அலைஞ்சோம்?’னு வருத்தமா இருக்கு.

சாதிச் சண்டைங்கிறான், மதக் கலவரம்கிறான், சொத்து குவிச்சிட்டாங்கங்கிறான். அரசியல்ல ஆலமரங்கள்கூட காளான்கள்கிட்ட அண்டி நிக்குது

ஒண்ணு மட்டும் சொல்றேன்... அதிக சொத்தும் பணமும் சேர்ந்தா, அது சனியன் பிடிச்சது மாதிரி. எனக்கு இருந்த சொத்துக்களைப் பிரிச்சு சொந்தபந்தங்களுக்குக் கொடுத்திட்டு, பென்ஷன் பணத்தில் நிம்மதியா இருக்கேன். எனக்கு புள்ளகுட்டி இல்லைங்கிற குறைகூட இல்லை. எல்லாருமே என் புள்ளைங்கதானே!'' என்கிறார் .மா.பா.

விடை பெறும் முன் கைகூப்பி வணங்கினேன். தனது இடது கையால் என் கையை அழுத்திப் பிடித்து, தனது வலது கை முஷ்டியை உயர்த்தி .மா.பா-வின் உதடுகள் பெருமிதம் பொங்க உச்சரித்தன.

''ரெட் சல்யூட்!'