Showing posts with label சுனில் மைத்ரா. Show all posts
Showing posts with label சுனில் மைத்ரா. Show all posts

Wednesday, September 17, 2025

எல்.ஐ.சி யை, எல்.ஐ.சி யாகவே நீடிக்க வைத்தவர்


 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாள் இன்று.

பி.யு.சி படிக்கும் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பத்து மாத காலம் சிறைத்தண்டனை பெற்றவர். சுதந்திரப் போராட்ட தியாகிக்கான எந்த சலுகையையும் பெறாதவர்.

தனியார் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்த அவர், சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் நாக்பூர், கோவை, அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றார்.  என்ன ஆனது? அங்கேயெல்லாம் சங்கம் வலிமையானது.

தேச உடமையாக்கப்பட்ட பிறகு  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவராகிறார். சங்கத்தின் போர் அமைச்சர் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு உத்திகளை வகுப்பதில் விற்பன்னர்.

அவரது போராட்ட உணர்வும் திறமையும் ஞானமும் அவரை மேலும் மேலும் உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை 1980 ல் கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட வைத்தது. ராஜிவ் காந்தி காலத்தில் அமைச்சரான  அஜித் குமார் பஞ்சா என்ற பெரும் பணக்காரரை வென்று நாடாளுமன்ற உறுப்பினர்.

பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பீப்பிள்ஸ் டெமாக்ரஸியின் ஆசிரியராகவும் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட காலத்தில்தான் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்து கூறுகளாக பிரிக்கும் மசோதாவை 19.12.1983 அன்று  அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிகிறார். அப்போதே தோழர் சுனில் மைத்ரா கடுமையாக  எதிர்க்கிறார். 48 மக்களவை உறுப்பினர்களிடமிருந்து உடனடியாக கடிதம் பெற்று சபாநாயகரிடம் அளிக்கிறார்.

அவரது கடுமையான முயற்சி காரணமாக மசோதா நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் ( STANDING COMMITTEE)  பரிசீலனைக்குச் செல்கிறது. அங்கே ஒருமனதான கருத்து எட்டப்படாததால் நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் (SELECT COMMITTEE)  பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த தேர்வுக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட தோழர் சுனில் மைத்ரா, யாரெல்லாம் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று விழைகிறார்களோ, அவர்கள் அனைவரது கருத்துக்களையும் குழு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனை குழுவும் ஏற்றுக் கொள்கிறது. 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு புறத்தில் வேலை நிறுத்தம், பிரச்சார இயக்கம், கையெழுத்து இயக்கம் போன்ற நடவடிக்கைகளையும் மறுபுறம் தொழிற்சங்க அமைப்புக்கள், அறிவு ஜீவிகள், பல துறை ஆளுமைகள் ஆகியோரை தேர்வுக்குழுவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கடிதம் எழுத வைக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்வுக்குழு நூற்றுக் கணக்கானவர்களின் கருத்துக்களை கேட்கிறது. தேர்வுக்குழுவின் முன்பாக நானும் சாட்சியம் சொன்னேன் என்று இந்தியாவின் முக்கிய பொருளாதார நிபுணர்களில் ஒருவரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவரோடு  பேசிக் கொண்டிருக்கையில்  ஒரு முறை கூறினார்.

ஆளும் கட்சியே பெரும்பான்மை என்பதால் தேர்வுக்குழு எல்.ஐ.சி யை பிரிப்பதற்கு ஆதரவாகவே பரிந்துரை அளித்தது. 25.08.1984 அன்று மசோதா மீது விவாதம் நடக்கிறது. தோழர் சுனில் மொய்த்ரா ஆவேசமாக உரையாற்றுகிறார். முடிவு எதுவும் எடுக்கப்படாமல் அவை ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டத் தொடரும் கூட.

சில மாதங்களிலேயே இந்திரா அம்மையார் கொல்லப்படுகிறார். புதிய பிரதமரான ராஜீவ் காந்தி மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கு ஆயத்தமாகிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேர்தல் காலத்தில் இதனை ஒரு முக்கியமான பிரச்சினையாக முன்வைக்கிறது. அனைத்து வேட்பாளர்களிடமும் ஆதரவு கோருகிறது.

தேர்தலுக்குப் பின்பு மீண்டும் பிரதமரான ராஜீவ் காந்தியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர்கள் சந்தித்து எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதன் பாதகங்களை விளக்கி பேசுகின்றனர்.

மத்தியரசு தன் முடிவை கைவிடுகிறது. தன் அன்னை எடுத்த முடிவை மாற்றுவதா என்று ராஜீவ் காந்தி ஈகோ பார்க்கவில்லை. எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கும் முடிவை கைவிடுகிறோம் என்று ராஜீவ் காந்தியே தோழர் சுனில் மைத்ராவுக்கு நேரடியாக கடிதம் அனுப்புகிறார். 


எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.

எல்.ஐ.சி யின் இயக்குனர் கூட்ட அறையில் (BOARD ROOM)  ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கிய அன்றைய நிதியமைச்சர் திரு சிந்தாமணி தேஷ்முக் அவர்களின் படம் உள்ளதாம். அங்கே வைக்க வேண்டிய இன்னொரு படம் தோழர் சுனில் மைத்ராவுடையது. எல்.ஐ.சி, எல்.ஐ.சியாகவே நீடிப்பது அவரால்தானே!

செவ்வணக்கம் தோழர் சுனில் மைத்ரா 

பிகு: அவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது. அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில் . . .


Sunday, September 18, 2022

எல்.ஐ.சி பிளவை தடுத்த தலைவர்

 



ஆறு வருடங்களுக்கு முன்பாக எழுதியதை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்க முயன்ற இந்திரா காந்தியின் முயற்சியை முறியடித்ததில் முக்கிய பங்காற்றிய தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளில் வரலாற்றை நினைவு கூர்கிறேன். அதுதான் எதிர்கால இயக்கங்களுக்கு ஊக்கம் தரும்.


தோழர் சுனில் மைத்ரா அவர்களுக்கு செவ்வணக்கம். 

வைர விழாவும் அந்த முன்னாள் டைப்பிஸ்டும்




எல்.ஐ.சி நிறுவனத்தின் வைர விழா ஆண்டு இது. இன்சூரன்ஸ் வாரம் மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கியது பற்றியும் மும்பையில் நடைபெற்ற விழாவில் அருண் ஜெய்ட்லி எல்.ஐ.சி க்கு எதிராகவே நன்றி கெட்டு  நடந்து கொண்டதையும் முன்னரே எழுதியுள்ளேன்.

எல்.ஐ.சி நிறுவனம் இன்று வைர விழா கொண்டாட முடிகிறது என்றால் அது மிகவும் முக்கியமானவர் தோழர் சுனில் மைத்ரா. 

எண்பதுகளின் முதல் பகுதியில் எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிளப்பதற்கான ஒரு மசோதாவை இந்திரா காந்தியின் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் முன் வைக்கிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையான போராட்டத்தை, பிரச்சாரத்தை, மக்கள் கருத்துத் திரட்டலை இந்திய வீதிகளில் நடத்துகிறது.

அதே போராட்டத்தை நாடாளுமன்றத்திற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. மக்களவையில் வீரியம் மிகுந்த அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்துகிறவர் தோழர் சுனில் மைத்ரா. சுதந்திரப் போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையை அனுபவித்தவர். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். ஏ.ஐ.ஐ.இ.ஏ உருவான பின்பு அதனை வளர்த்தெடுப்பதில் வேகம் காண்பித்ததால் எல்.ஐ.சி நிர்வாகத்தால் கோயம்பத்தூர், நாக்பூர் என்றெல்லாம் கல்கத்தாவிலிலிருந்து மாறுதல் செய்யப்பட்டவர். 

அகில இந்திய இணைச் செயலாளராக இருந்த அவரை மார்க்சிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தல் வேட்பாளராக கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் களமிறக்குகிறது.  அஜித் குமார் பஞ்சா என்ற பிற்காலத்தில் மந்திரியான காங்கிரஸ் காரரை தோற்கடித்து எம்.பி யாகிறார் தோழர் சுனில் மைத்ரா. 

எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதா, நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுகிறது. அம்மசோதா குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென்று ஏராளமான ஆளுமைகள், அமைப்புக்கள் கடிதம் அனுப்புகின்றனர். அதன் பின்னணியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கடுமையான உழைப்பு இருந்தது. 

தேர்வுக்குழுவின் செயலாளராக இருந்த தோழர் சுனில் மைத்ரா, அந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றார். நாடெங்கிலும் தேர்வுக்குழு பயணம் செய்து கருத்துக்களை திரட்டுகிறது. எல்.ஐ.சி நிறுவனம் ஒரே நிறுவனமாக நீடிக்க வேண்டும் என்பதுதான்  அனைவரும் வலியுறுத்தும் கருத்தாக இருந்தாலும் தேர்வுக்குழுவின் பரிந்துரை என்னவோ ஆளும் கட்சியின் முடிவை ஒட்டியே அமைகிறது.

மசோதா வாக்கெடுப்பிற்கு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. தோழர் சுனில் மைத்ரா மக்களவையில் புயலாக உரையாற்றுகிறார். அவரது ஆணித்தரமான வாதங்களுக்கு அரசால் பதிலளிக்க முடியவில்லை. வாக்கெடுப்பு நடக்காமலேயே மக்களவை ஒத்தி வைக்கப்படுகிறது. மசோதா காலாவதியாகி விடுகிறது.

அடுத்த கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு அரசியலில் சில எதிர்பாராத நிகழ்வுகள். இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ராஜீவ் காந்தியை சந்தித்து எல்.ஐ.சி ஏன் ஒரே நிறுவனமாக நீடிக்க வேண்டும் என்பதை விபரமாக விளக்குகிறது. தோழர் சுனில் மைத்ரா அக்காரணங்களை விளக்கி கடிதமாகவும் அளிக்கிறார். 

சில தினங்களுக்குப் பிறகு பிரதமர் ராஜீவ் காந்திக்கு தோழர் சுனில் மைத்ராவிற்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார். (ஆக கடிதங்களுக்கு பதில் அனுப்பும் நாகரீகம் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது) 

அக்கடிதம் என்ன சொன்னது?

"எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிளக்கும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம்."



அன்றைக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் தோழர் சுனில் மைத்ராவும் நடத்திய போராட்டமே எல்.ஐ.சி யை ஒரே நிறுவனமாக பாதுகாத்திருக்கிறது. எல்.ஐ.சி யின் வளர்ச்சி, தேசத்திற்கு அதன் பங்களிப்பு, வைரவிழா எல்லாமே அதனால் மட்டுமே சாத்தியமானது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் இதழான "பீப்பிள்ஸ் டெமாக்ரஸி" யின் ஆசிரியராகவும் தன் இறுதி மூச்சு வரை தோழர் சுனில் மைத்ரா செயல்பட்டார்.

இன்று அவரது இருபதாவது நினைவு நாள்.

தலைப்பு தொடர்பாக எதுவுமே எழுதவில்லை என்ற கேள்வி வருகிறதா? 

ராஜீவ் காந்தியை சந்தித்து பேசி விட்டு கிளம்புகையில் தோழர் சுனில் மைத்ராவைப் பார்த்து அவர் கேட்கிறார்.

எல்.ஐ.சி யில் நீங்கள் என்னவாக வேலை பார்த்தீர்கள்?

அவர் சொன்ன பதில்

டைப்பிஸ்ட்.

Sunday, September 19, 2021

அந்த காலத்திற்கே ஒரு பயணம் . . .

 அர்த்தமிக்க  உரை. அவசியம் பார்க்கவும்



அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர்ப்படைத் தளபதி தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் 

தமுஎகச அமைப்பின் மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன்

"என்று தணியும்???" 

என்ற தலைப்பில் ஆற்றிய அருமையான, அர்த்தமிக்க, அற்புத உரையை

இந்த யூட்யூப் இணைப்பில் சென்று  பாருங்கள்.

நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்திற்கு சென்று வருவீர்கள், நிகழ்காலத்தின் பொறுப்புக்களும் புரியும்.

பிகு

தோழர் சுனில் ஒவியம் ஆரணி கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் கைவண்ணம்

Sunday, September 20, 2020

ராஜீவ் காந்தி அனுப்பிய கடிதம்




 நேற்று முன் தினம் எங்கள் மகத்தான் தலைவர் தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளன்று எழுதிய பதிவில் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்தாக பிரிக்கும் முடிவை கைவிடுவது என்ற மத்தியரசின் முடிவை ராஜீவ் காந்தி தோழர் சுனில் மைத்ரா அவர்களுக்குத்தான் கடிதம் எழுதி தெரிவித்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஒரு அனானி சங்கி அப்படி கடிதம் இருந்தால் அதை வெளியிட வேண்டியதுதானே, சும்மா கதை விடாதே என்று சவால் விட்டிருந்தது. பாவம் மோடியின் பொய்களை கேட்டு கேட்டு எல்லோருமே பொய்தான் பேசுவார்கள் என்ற நினைப்பு போல. இதோ அந்த கடிதம்.



ஏற்கனவே ஒரு முறை இங்கே பகிர்ந்து கொண்டதால், இம்முறை பகிர்ந்து கொள்ளவில்லை. எங்களின் வரலாற்று ஆவணம் அல்லவா இக்கடிதம்!

அந்த அனானி சங்கி நாங்கள் ஒன்றும் "கதை அளந்து மாட்டிக் கொண்ட கங்கணா ராவத்" அல்ல என்று இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.

அது என்ன கதை அளந்து மாட்டிய கங்கணா என்று கேட்கிறீர்களா?

அதுதானே அடுத்த பதிவு . . .

பிகு: கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாட்டிற்கு தோழர் ஜோதிபாசுவை தோழர் சுனில் மைத்ரா அழைத்து வருவதுதான் மேலே உள்ள படம்.