Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, October 10, 2024

கோயிலுக்குள் கிரிக்கெட்

 




 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடினார்கள் என்றொரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. கோயில் நிலத்தை விற்று விட்டார்கள், நகைகளை திருடி விட்டார்கள், வருமானத்தை  தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள், பக்தர்களை மதிப்பதில்லை  என்று ஏராளமான பிரச்சினைகள்  எல்லாம் சர்ச்சையாகாமல் கிரிக்கெட் விளையாடுவது மிகப் பெரிய சர்ச்சையாகியிருப்பது கொடுமை. எது முக்கியமோ அது பின்னுக்குப் போய் விட்டது.

 நிற்க

 இப்பதிவின் நோக்கம் வேறு.

 எட்டு ஆண்டுகள் முன்பு நான் எழுதி தீக்கதிர் நாளிதழின் இணைப்பிதழான வண்ணக்கதிர் இதழில் வெளியான “சமரசம்” என்ற சிறுகதையில் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடுவது பற்றி குறிப்பிட்டிருப்பேன். நான் பார்த்த காட்சியைத்தான் கதைக்குள் கொண்டு வந்திருந்தேன். அந்த கதையை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 நிற்க

 அந்த கதையின் முக்கியமான பொருள் கோயிலுக்குள் கிரிக்கெட் ஆடுவது அல்ல.

                                                                              சமரசம்

 

-         வேலூர் சுரா

 


கல்யாண மண்டபத்தில்  நுழையும் போதே பெரும் இரைச்சல்களுக்கு மத்தியிலும் கூட  நாகஸ்வர இசை கம்பீரமாக  காதுகளை  வருடிச் சென்றது. இந்த ஊரில் இவ்வளவு சிறப்பாக யாரும் வாசித்ததில்லையே என்ற மனதின் கேள்வியோடு இருக்கையை தேடுகையில் தோடி ராகத்து ஆலாபனையை முடித்து “தாயே யசோதா” என்று பாடலைத் துவக்கி இருந்தார். யார் இந்த வித்வான் என்று நான் கழுத்தைத் திரும்பி நாகஸ்வர கோஷ்டிக்கான தனி மேடையை பார்க்கும் முன்பே

 “நேத்து ரிசப்ஷனுக்கே எதிர்பார்த்தேன். பரவாயில்லை முகூர்த்தத்துக்கு வந்துட்ட,  முகூர்த்தத்திற்கு  இன்னும் நேரமிருக்கு, முதலில் டிபனை முடிச்சிடு”

 என்று என் நண்பன் மூர்த்தி கையைப் பிடித்து மாடியில் இருந்த டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்று விட்டான்.  என்னுடைய அலுவலக நண்பனின் ஒரே மகளின் திருமணம்.

 செவிக்கு உணவு கிடைக்க வாய்ப்பில்லாத குளிர்சாதன அறையாக இருந்ததால் வயிற்று உணவில் கவனம் செலுத்தினேன்.  சுவையான உணவை அருந்திய நிறைவோடு படிகளில் இறங்கி வருகையில் ஆபேரி ராகத்தில் நகுமோ ஒலித்துக் கொண்டிருந்தது.

 இப்போது அந்த நாகஸ்வரக்காரரை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

 “அட, நம்ம சிக்கல் சண்முகசுந்தரம்!”

 அதுதான் அவர் பெயரா என்று தெரியாது.  ஒரு சம்பவத்தைப் பார்த்து நானே சூட்டிய பெயர்.

 ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு போயிருந்த நேரம். தஞ்சையிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் செல்லும் ஊர். பெயரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லாதே என்று சொல்வார்கள் அல்லவா? அதனால் இங்கே எந்த ஊர் என்பது அவசியம் இல்லை.

 தைப்பூசத் திருவிழா நடந்து கொண்டிருந்த காலம் அது.  ஊருக்கு வந்து விட்டு கோயிலுக்கு போகாவிட்டால் எப்படி என்ற என் அப்பாவின் வற்புறுத்தலால் நானும் சென்றிருந்தேன். கால வெள்ளத்தின் வேகத்தில் என் புரிதல்களும் கொள்கைகளும் மாறி இருந்தாலும் இளமைக் காலத்தின் பெரும் பகுதியை செலவழித்த இடமாயிற்றே என்றுதான் புறப்பட்டேன்.

 ஏதோ ஒரு சோழ மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். ஏதோ தஞ்சை பெரிய கோயில் போல பிரம்மாண்டம் என்றெல்லாம் கற்பனை செய்யாதீர்கள். அவ்வளவு பெரியதெல்லாம் கிடையாது. ஆனால் மதில் சுவருக்கும் ஆலயத்துக்கும் இடைப்பட்ட பகுதி பிரகாரம் என்ற பெயரில் மிகவும் பெரிதாக இருக்கும். மாதத்தில் ஒரிரு நாட்களைத் தவிர மற்ற நாட்களெல்லாம்  பக்தர்கள் வர மாட்டார்கள். அதனால் கோயில்தான் எங்களின் விளையாட்டு மைதானமே. ஒரே சமயத்தில் மூன்று நான்கு கிரிக்கெட் மாட்சுக்கள் கூட நடந்து கொண்டிருக்கும். எப்போதாவது கிடைக்கும் சுண்டலுக்காவும் புளியோதரைக்காகவும்  அடித்துக் கொண்டதை நினைத்தால் இப்போது வெட்கமாகக் கூட இருக்கிறது. 

 எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்.  நீ வயதானவனாக மாறிக் கொண்டிருக்கிறாய் என்று மகன் கிண்டலாகச் சொல்வது சரிதானோ?

 கோயில் பிரகாரத்தில் ஒரு பெரிய மேடை போட்டு நாகஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. “அபாரமான ஞானஸ்தன்” என்று சொல்லும் அளவிற்கு அந்த வித்வான் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனாலும் கூட்டத்தில் சலசலப்பு.  ஒரே நிறத்தில் டி.ஷர்ட் அணிந்த வாலிபர்கள் சிலர் ஏதோ குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துகிறபடி டி,ஷர்ட் போடுவது, கையில் கயிறு கட்டிக் கொள்வது என்று ஒரு விபரீதப் போக்கு உருவாகியுள்ளதாக கொஞ்ச நேரம் முன்பாக அப்பா கவலையோடு சொன்னது நினைவுக்கு வந்தது.

 ஒரு நடிகரின் பெயரைச் சொல்லி அவர் நடித்த படத்தின் பாடலை வாசிக்குமாறு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கும்பல் இன்னொரு நடிகருக்காக கூப்பாடு போட்டது. பெரியவர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

 வித்வான் வாசிப்பதை நிறுத்தினார். நாகஸ்வரத்தை கீழே வைத்தார். மைக்கை தன் பக்கம் இழுத்து

 “இது கோயில். இங்கே என்னால் சினிமா பாட்டுக்கெல்லாம் வாசிக்க முடியாது.  நான் வாசிக்கிறதை கேட்க பிடிக்கலைனா நீங்க தாராளமா போயிடலாம்”

 “எங்க ஊருக்கு வந்துட்டு எங்களையே வெளியே போக சொல்றியா.  நாங்க வசூலிச்சு கொடுத்த காசை வாங்கிட்டு எங்க இஷ்டப்படி வாசிக்க மாட்டியா”

 என்று அந்த கும்பலின் தலைவன் போல இருந்தவன் கத்த

 “நீங்க என்னத்தை வசூலிச்சீங்க? அதை மட்டும் வச்சுட்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது. பப்ளிக்கில சீன் போடறீங்களா?”

 என்று இன்னொரு கும்பல் எகிற  அது கோஷ்டி மோதலாக மாறும் நிலை.

 கோயில் தர்மகர்த்தா கையெடுத்து கும்பிட்டு இரண்டு கோஷ்டியையும் அடக்கி விட்டு

 “போனா போகுது. ஒரு ரெண்டு பாட்டு பசங்க விருப்பப்படி வாசிச்சுடுங்க தம்பி”  என்று வித்வானிடம் கேட்க

 “இல்லைங்க. இது கோயில். சரிப்பட்டு வராது  அது மட்டுமில்லை நான்  சினிமா பாட்டுக்கெல்லாம்   வாசிக்கறது  கிடையாது”

 என்று நிதானமாக அதே நேரம் உறுதியான குரலில் மறுக்க

 கூச்சல் குழப்பத்திற்கிடையே தங்கள் வாத்தியங்களை உறையில் போட்டு மேடையிலிருந்து கீழிறங்கி போய்க்கொண்டே இருந்தார்கள்.

 அவனுக்கு ஓவர் திமிருப்பா!

நம்ம ஊரு பசங்க நாசமாத்தான் போகப்போறாங்க!

 என்று இரண்டு நாட்கள் ஊரெங்கும் இதே போல இரண்டுவிதமான பேச்சுக்கள்தான்.

 தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரம் மாதிரி  கறாரான பேர்வழியாக  உள்ளாரே என்பதால் நான் அவ்வாறு அவருக்கு பெயர் சூட்டியிருந்தேன்.

 அந்த நிகழ்வுக்குப் பிறகு இன்றுதான் அவரைப்பார்த்தேன்.

 தாலி கட்டுதல், மொய் அளித்து புகைப்படமெடுத்தல் முதலிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் தொலைபேசி அழைப்புக்களுக்காக மண்டபத்திற்கு வெளியே சென்று நிதானமாக பேசி விட்டு உள்ளே வந்தால் எனக்காக ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

 “கண்ணோடு காண்பதெல்லாம்”  என்று திரைப்படப்பாடலை வாசித்துக் கொண்டிருந்தார் சிக்கல் சண்முகசுந்தரம். அந்த ஒரு பாட்டோடு நிற்கவில்லை, வரிசையாக புது புது பாட்டாக வாசித்துக் கொண்டே இருந்தார்.

 சினிமா பாட்டுக்கு வாசிக்க மாட்டேன்னு அன்னிக்கு பாதிக் கச்சேரியில எழுந்து போனவரா இப்படி என்று நினைக்க நினைக்க கோபமாக வந்தது. அவரிடமே கேட்டு விடுவோம் என்று காத்திருந்தேன். கேட்டும் விட்டேன். அவர் பெயர் சண்முகசுந்தரமில்லை, மீனாட்சி சுந்தரம்.

 “சார் நீங்க இப்படி வெளிப்படையா பேசினதில சந்தோஷம். அன்னைக்கு தகறாரு செஞ்சது ஏதோ விடலைப் பசங்கன்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா அவங்க ஜாதி சங்கத்து ஆளுங்க.  பெரிய நெட்வொர்க் போல. நான் எந்த கோயில்ல வாசிச்சாலும் அவங்க ஆளுங்க கலாட்டா செஞ்சிக்கிட்டே இருந்தாங்க. அவங்க செய்யற கலாட்டாவை கோயில் நிர்வாகமும் தடுக்கலை. கோயிலுக்குள்ள இருக்கற சாமியும் தடுக்கலை”

 “ஓ அதனாலதான் உங்க கொள்கைல சமரசம் செஞ்சுகிட்டு சினிமா பாட்டுக்கெல்லாம் வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?”

 என்று கேட்டேன்.

  “அம்மி கொத்த சிற்பி எதுக்குன்னு நான் சினிமா பாட்டுக்கு வாசிக்காம இருந்தேன்.  அதை மக்கள் ரசிச்சு கேட்கறபோது எதுக்கு பிடிவாதம் பிடிக்கனும்தான் நான் மாத்திக்கிட்டேன். அதை விட முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு”

 அதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருந்தேன்.

 “ஒரு தொழிலாளிக்கு வேலை போனா என்ன கஷ்டப்படுவாங்கங்கறது உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். என் நிலைமையும் அது போலத்தான் ஆச்சு. கோயில் கச்சேரிங்க குறைஞ்சு போச்சி. என் குடும்பம் மட்டுமல்ல, என்னை நம்பி இருக்கிற மத்த கலைஞர்களுக்கும் பிழைப்பு இல்லை. வேற வித்வானோடு வாசிக்க அவங்களும் தயாரா இல்லை. அதனாலதான் கல்யாண கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பிச்சேன். முகூர்த்தம் முடியவரை என் விருப்பம். அதுக்கப்பறமா மக்கள் விருப்பம். பிழைப்பும் சுமாரா ஓடிக்கிட்டிருக்கு”

 என்றவர் கடைசியாக ஒன்றைச் சொன்னார்.

 “என் சுய மரியாதைக்கு பாதுகாப்பே இல்லாத இடத்தில வாசிக்கறதை மட்டும் நிறுத்திட்டேன். ஆமாம் கோயில் கச்சேரி எதையும் ஒத்துக்கறதே இல்லை” 

 

Friday, October 6, 2023

மீண்டும் "தாத்தா வந்தார்"

 

முகநூல் இன்றும் நினைவு படுத்தியது. "தாத்தா வந்தார்" என்ற எனது சிறுகதை வண்ணக்கதிரில் ஒன்பதாண்டுகளுக்கு முன்பு வெளியானது என்பதைத்தான் அது நினைவு படுத்தியது. 

கதை வெளியான அன்றைய தினம் விழுப்புரத்தில் ஒரு திருமண விழாவிற்கு போய் விட்டு வேலூர் திரும்ப இரவாகி விட்டது. என் இரண்டாவது அக்காவின் குடும்பத்தினர் திருப்பதி சென்று விட்டு வேலூர் வந்திருந்தனர். நிஜமான பக்தரான என் அக்காவின் கணவர் நான் வீட்டில் நுழையும் போது அந்த கதையைத்தான் படித்துக் கொண்டிருந்தார். இப்படி எழுதியுள்ளீர்களே, அவர் என்ன சொல்வாரோ என்று என் மனைவி வேறு காதில் மெல்லமாக சொல்லி பதற்றத்தைக் கூட்டினார்.

 அவரோ கதையை எழுதியது யாரென்று தெரியாமலே “இந்த கதையை படி, ரொம்ப நல்லா இருக்கு” என்று அவர் சொல்ல என் மனைவியின் முகத்தில் நிம்மதியுடன் கூடிய சின்ன பெருமிதம். இவர்தான் எழுதினார் என்று சொல்ல, அவரும் பாராட்டினார்.

 மறைந்த தலைவர் தோழர் இ.எம்.ஜோசப் தொலைபேசியில் அழைத்து பாராட்டி, இதென்ன மேஜிக்கல் ரியலிஸ கதையா என்றார். தோழர் அதெல்லாம் எனக்கு தெரியாது. உயிரோடு இருக்கும் போது அவஸ்தைப்படுத்தி விட்டு, இறந்த பிறகு செய்யும் சடங்குகளின் போலித்தனம் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதினேன் என்றேன்.

 முகநூல் நினைவு படுத்தியதும் இதெல்லாம் கூட நினைவுக்கு வந்து விட்டது.

 "முற்றுகை" நாவல் மனதில் தோன்றிய பின்பு சிறுகதைகள்  எழுதுவது நின்று போய் விட்டது. அடுத்த நாவலும் மனதில் ஓடிக்கொண்டிருப்பதாலோ என்னவோ, சிறுகதை எழுதுவதில் ஒரு இடைவெளி விழுந்து விட்டது. இதை போக்க வேண்டும் என்பதால்தான் முகநூல் நினைவு படுத்தியதோ!


தாத்தா வந்தார்

வேலூர் சுரா,

 

காலை நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே விசாலத்திற்கு விழிப்பு வந்து விட்டது. இன்றைக்கு கணவரின் திதியல்லவா! பல் தேய்த்து தனக்கு மட்டும் காபி கலந்து குடித்து விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தபடியே கறிகாய்களை வெட்டத் தொடங்கினார். அந்த வேலை முடிந்ததும் ஏற்கனவே லாஃப்டிலிருந்து எடுத்து வைத்திருந்த பித்தளைப் பாத்திரங்களை மீண்டும் ஒரு முறை அலம்பி வைத்து விட்டு நேரத்தைப் பார்த்தால் ஐந்தரை ஆகியிருந்தது.

 பத்தாண்டுகள் அதற்குள் ஓடிப் போய் விட்டதா? விசாலத்திற்கு கண்ணீர் ததும்பியது. ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் இருக்கும் போது அலுவலகத்திற்கு சென்றவரை திடிரென நெஞ்சு வலி வந்து மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்லும் முன்னே இறந்து விட்டார் என்று சடலமாகத்தான் வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்.

 சொந்த வீடு, கார், வங்கியில் சேமிப்பு, குடும்ப பென்ஷன் என்று இருந்ததால் பொருளாதார ரீதியில் விசாலத்திற்கு பெரிய சிரமம் எதுவுமில்லை. ஒரே பையன் பிரசாத்தும் கேம்பஸிலேயே தேர்வு பெற்று வேலைக்கும் போய் விட்டான். அவனது கம்பெனியில் வேலை பார்க்கும் வாணியை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற போது விசாலத்திற்கு கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் தூரத்து சொந்தம் என்பதால் மனதைத் தேற்றிக் கொண்டாள். பேத்தி ஐஸ்வர்யா எனும் சின்னுவைக் கொஞ்சுவதில் பொழுது போய்க் கொண்டிருந்தது. அவளும் இப்போது முதல் வகுப்பு படிக்கிறாள். எவ்வளவு வேகமாக காலம் ஓடினாலும் சில நினைவுகளை அதனால் எடுத்துச் செல்ல முடியாதே!

 மணி ஆறரை ஆனது. ஒன்பது மணிக்கெல்லாம் சாஸ்திரிகள் வந்து விடுவார். இந்தக் காலப் பசங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா என்று மனதிற்குள் முனகிக் கொண்டே குளித்து விட்டு ஈரப்புடவையோடு வெளியே வந்தால் வாணி அடுப்பில் ஐஸ்வர்யாவிற்கு தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். இவளது முகக்குறிப்பைப் புரிந்து கொண்டு

 “பரவாயில்லை, சமைக்கிறதுக்கு முன்னாடி இன்னொரு தடவை துடைச்சிடறேன்” என்றாள்.

 “கண்ணாடி அடுப்பு. நிமிஷமா துடைச்சிடுவே. எங்க மாமியார் உயிரோட இருந்தவரை பிரசாத்தோட தாத்தா தெவசம் கிராமத்திலதான் நடக்கும். மண் அடுப்ப சாணம் போட்டு மொழுகனும். ஸ்ரார்த்தம் முடியறவரைக்கும் பிரசாத் பட்டினியாவே இருப்பான். நீதான் என்னமோ ஐ.ஏ.எஸ் படிப்பு பாழாப் போகுதுனு சின்னுவை ஸ்கூலுக்கு அனுப்பற”

 விசாலத்தின் புலம்பலை காதில் வாங்காமலேயே வாணி சென்று விட பேப்பரும் பிரஷ்ஷுமாக வந்த பிரசாத்தைப் பார்த்து

 “சீக்கிரமா குளிச்சுட்டு வா, காபி கலந்து தரேன்” என்று சொல்ல அவனோ

 “நீ முதல்ல காபிய குடுமா, அப்பறமா குளிக்கப் போறேன்” என்று பேஸ்ட் வாயோடே சொல்ல விசாலம் கடுப்பானார்.

 “இன்னிக்கு ஒரு நாளாவது நான் சொல்றத கேட்கக் கூடாதா”

 “சாஸ்திரிகள் வரதுக்கு முன்னாடி நாலு தடவை ரெடியாடுவேன். காபியைக் குடிச்சுட்டு குளிக்கப் போறேன்”.

 யூனிபார்மோடு பேத்தி வந்தாள்.

 “பாட்டி, இன்னிக்கு யார் கெஸ்ட் வராங்க? இவ்வளவு வெஜிடபிள்ஸ் கட் பண்ணி வெச்சுருக்க?”

 “இல்லைம்மா இன்னிக்கு உங்க தாத்தா வராரு. அதுக்காக இன்னிக்கு பூஜை”

 “இந்த போட்டாவில இருக்கற தாத்தாவா? சாமி கிட்ட போய்ட்டாருன்னு சொன்னீங்களே, மறுபடியும் வரப் போறாரா? இங்கேயேதான் இருப்பாரா?”

 “நீ ஸ்கூல் போய்ட்டு வரதுக்குள்ள போய்டுவார். சாயந்தரம் உனக்கு பாட்டி அதிரசம், வடை, அல்வா எல்லாம் தரேன்”

 “அதெல்லாம் எனக்கு பிடிக்காது. எனக்கு ப்ளாக் ஃபாரெஸ்ட் கேக் தான் பிடிக்கும்”

 அதற்குள் வாசலில் ஆட்டோவின் ஹாரன் ஒலி கேட்க கணவனும் மனைவியுமாக புத்தக மூட்டையோடு மூட்டையாக சின்னுவையும் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போய் விட்டார்கள்.

 “என்னம்மா ஒன்பது மணிக்கெல்லாம் சுப்ரமணிய சாஸ்திரிகள் வந்துடுவாரா, நாலு மணிக்கு பாஸ் ஒரு மீட்டிங் வச்சுருக்காரு. அதுக்கு போயாகனும். ஒவ்வொரு வருஷமும் லேட் பண்றதே அந்த மனுஷனுக்கு பொழைப்பா போச்சு”  என்ற பிரசாத்தின் கேள்விக்கு

 “அப்படியெல்லாம் சொல்லாதேடா, பிதுர்காரியம் செஞ்சு வைக்கறவர் அவர். பிதுர்காரியம் செஞ்சா உன்னோட பரம்பரைக்குத்தான் நல்லது”

 என கெஞ்சும் குரலில் விசாலம் மன்றாட

 “அதுக்காகத்தான் ஒவ்வொரு வருஷமும் நான் லீவ் போட்டு ஸ்ரார்தம் பண்றேன். ஏதோ தனி வீடுங்கறதனால ஹோமம் செய்ய முடியுது. ப்ளாட்டுனா சான்ஸே இல்லை”.

 மணி ஒன்பதைக் கடந்திருந்தது. சாஸ்திரிகள் வரவில்லை. போனிலும் ரிங் போய்க்கொண்டிருந்ததே தவிர எடுத்துப் பேசவில்லை. பிரசாத்தின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் கூடிக் கொண்டிருந்தது.

 வாசலில் மணியடிக்கும் ஓசை கேட்டதும்

 “இதோ வந்துட்டாங்க” என்று விசாலம்  வேகமாக எழுந்து போய் கதவைத் திறந்தால் கணேஷ் நின்று கொண்டிருந்தான். கணவரின் அண்ணன் மகன். அவனைப் பார்த்தவுடனேயே விசாலத்திற்கு நெஞ்சு படபடத்தது. சாஸ்திரிகள் வரும் நேரம் இவன் இங்கே இருந்தால் மீண்டும் மோதிக் கொள்வார்களே என்று கவலையும் வந்தது. அது ஒரு பத்தாண்டு கால பகை. விசாலத்தின் கணவர் இறந்த பின்பு பனிரெண்டாம் நாள் சவுண்டிகரணத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை அது.

 இரண்டு வரிசையில் மூன்று மூன்று பிண்டங்களை இலையில் அடுக்கி வைத்து பிரசாத்திடமும் மற்றவர்களிடமும் சாஸ்திரிகள் விளக்க ஆரம்பித்தார்.

 “இதோ இப்பதான் உங்கப்பா தன்னோட முன்னோர்களோட கைலாசத்துக்கு போய் ஐக்கியமாகப் போராரு. உங்க தாத்தாவோடயும் கொள்ளுத்தாத்தாவோடயும் போய் சேர்ந்துடுவார். உங்கப்பா அங்கே போனதும் உங்க எள்ளுத்தாத்தா  அங்கேயிருந்து கிளம்பிடுவார்”

 அப்போதுதான் கணேஷ் அந்த கேள்வியைக் கேட்டான்.

 “சாஸ்திரிகளே, மூனு வருஷம் முன்னாடி எங்கப்பா தவறிப் போன போது எங்க எள்ளுத் தாத்தா கிளம்பியிருப்பாரே, எங்க அண்ணா போன வருஷம் ஆக்ஸிடென்டில் இறந்து  போது எங்க கொள்ளுத்தாத்தாவும் கிளம்பியிருப்பாரு. இப்ப அவங்க ரெண்டு பேரும்  மறுபடி அங்க வருவாங்களா?”

 சாஸ்திரிகள் முகத்தில் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவரால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. யோசித்துக் கொண்டே இருந்த போது

 “அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். டைம் ஆகறது பாருங்கோ” என்று யாரோ அவசரப்படுத்த தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்று அவர் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். ஆனாலும் கணேஷ் விடுவதாக இல்லை.

 “இப்ப சொல்ல முடியலைனா பரவாயில்லை. ஆனா எனக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியேயாகனும்”

 அதன் பின் இந்த இருவரும் எப்போது பார்த்தாலும் கணேஷ் அவரை வம்பிற்கு இழுப்பதும் அவர் நழுவி ஓடுவதுமே வழக்கமாகி விட்டது.

 “என்ன சித்தி, இன்னிக்கு சித்தப்பா ஸ்ரார்த்தமா? நான் அப்புறமா வரேன்” என்று சொல்லிப் போனவன் மீண்டும் திரும்பி வந்து 

 “சுப்ரமணிய சாஸ்திரிகளை நான் விசாரிச்சேன்னு சொல்லுங்கோ. பிரசாத் நீ சாஸ்த்ரோக்தமா திவசம் பண்றதுக்கு காக்காவுக்கு பதிலா உங்கப்பாவே நேரில் வருவார் பாத்துக்கோ” என்று சொல்லி விட்டுப் போனான்.

 அவன் வெளியே செல்வதற்கும் சாஸ்திரிகள் உள்ளே வருவதற்கும்  சரியாக இருந்தது.

 “பத்து வருஷமாயும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்களே” என்ற கேள்வியை அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளே வந்து

 “உங்க குடும்பத்துல இப்படி ஒரு நாத்தீகனா?” என்று கேட்க

 “அவனை விடுங்க மாமா, நீங்க ஆரம்பிங்கோ, பிரசாத் வேற சாயந்தரம் ஆபீஸ் போகனும்” என்று விசாலம் சமாதானம் சொன்னார்.

 எல்லாம் முடிந்து விசாலமும் வாணியும் சாப்பிடும் போது மூன்று மணியாகி விட்டது. மூன்றரை மணிக்கு வந்து சின்னு கேட்ட முதல் கேள்வியே

 “பாட்டி, தாத்தா எங்க?”

 “ஏதோ வேலையிருக்குனு அவர் கிளம்பிட்டாருமா கண்ணா,  வா ட்ரெஸ் மாத்திட்டு வந்ததும் உனக்கு ஸ்வீட்டெல்லாம் தரேன்” என்று சொன்ன விசாலத்தின் சிந்தனை கணவர் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்று விரிந்தது. கணேஷ் சொன்னது போல காக்காய் வடிவில் வராமல் சொந்த வடிவில் அவர் வந்திருக்கலாமே என்று யோசித்தபடியே டி.வியைப் போட சீரியல் உலகில் அந்த சிந்தனை அப்படியே மறைந்து போனது.

 விஜய், சன் என்று விரல்கள் சேனலை மாற்றிக் கொண்டிருக்க வரவேற்பு மணி ஒலிக்கிற ஓசை.

 கதவைத் திறந்த வேகத்தில் அப்படியே மூடிய விசாலம் அலறினார்.

 “பிரசாத், இங்க வாடா”

 ரூமிலிருந்து பிரசாத், வாணி, சின்னு மூன்றுமே பேருமே அந்த சத்ததைக் கேட்டு ஓடி வந்தார்கள்.

 “என்னம்மா? என்னாச்சு?”

 “வாசல்ல பாருடா, உங்கப்பா நிக்கறாரு”

 என்னம்மா முழிச்சுண்டே ஏதாவது கனவு கண்டியா எனக் கேட்டபடியே அவன் கதவைத் திறக்கப் போக,

 “வேண்டாம்டா, கதவைத் திறக்காத, ஜன்னல் வழியா பாரு”

 பிரசாத்தும் பார்த்தான்.

 இறந்து போன அன்று அலுவலகத்திற்கு செல்லும் போது அணிந்திருந்த அதே வெள்ளை சட்டை, கறுப்பு பேண்ட், கண்ணாடியோடு முகத்தில் கொஞ்சம் சிடுசிடுப்போடு வாசலில் அப்பா நின்றிருந்தார்.

 “எப்படிம்மா இது? நான்தான் அவருக்கு கொள்ளி வச்சேன். அஸ்தியைக் கூட நீ சொன்னியேன்னு ராமேஸ்வரத்துல போய் கரைச்சுட்டு வந்தேன்”

 “ஆவியா வந்திருக்காருடா, ஐயோ அப்படி வரது வீட்டுக்கு நல்லதில்லையே”

 “இப்ப என்னம்மா செய்யறது?”

 சாஸ்திரிகளுக்கு போன் போட அவர் வீட்டில் ஏதாவது தோஷம் வந்திருக்கும். நவக்கிருக ஹோமம் செஞ்சா சரியா போயிடும் என அவர் அடுத்த வேலைக்க்கு அடித்தளம் போட்டார்.

 “காலம்பற வரைக்கும் கதவை திறக்கவே  வேண்டாம். அதுவாவே போயிடும்” என்று விசாலம் சொல்ல

 சின்னுவுக்கு மட்டும் ஒரே குழப்பம்

 “ தாத்தா வரதுக்காக பூஜையெல்லாம் செஞ்சிட்டு இப்ப ஏன் அவர் வந்தா கதவை திறக்க மாட்டேங்கறாங்க”

 யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதால் அந்த கேள்வியை அவள் கேட்கவேயில்லை.  



Thursday, September 8, 2022

எட்டு வருடங்களுக்கு முன்பு

 எட்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் “தாத்தா வந்தார்” என்ற எனது சிறுகதை வண்ணக்கதிரில் பிரசுரமானதாக முகநூல் நினைவு படுத்தியது.

 அன்றைய தினம் விழுப்புரத்தில் ஒரு திருமண விழாவிற்கு போய் விட்டு வேலூர் திரும்ப இரவாகி விட்டது. என் இரண்டாவது அக்காவின் குடும்பத்தினர் திருப்பதி சென்று விட்டு வேலூர் வந்திருந்தனர். நிஜமான பக்தரான என் அக்காவின் கணவர் நான் வீட்டில் நுழையும் போது அந்த கதையைத்தான் படித்துக் கொண்டிருந்தார். இப்படி எழுதியுள்ளீர்களே, அவர் என்ன சொல்வாரோ என்று என் மனைவி வேறு காதில் மெல்லமாக சொல்லி பதற்றத்தைக் கூட்டினார்.

 அவரோ கதையை எழுதியது யாரென்று தெரியாமலே “இந்த கதையை படி, ரொம்ப நல்லா இருக்கு” என்று அவர் சொல்ல என் மனைவியின் முகத்தில் நிம்மதியுடன் கூடிய சின்ன பெருமிதம். இவர்தான் எழுதினார் என்று சொல்ல, அவரும் பாராட்டினார்.

 மறைந்த தலைவர் தோழர் இ.எம்.ஜோசப் தொலைபேசியில் அழைத்து பாராட்டி, இதென்ன மேஜிக்கல் ரியலிஸ கதையா என்றார். தோழர் அதெல்லாம் எனக்கு தெரியாது. சடங்குகளின் போலித்தனம் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதினேன் என்றேன்.

 முகநூல் நினைவு படுத்தியதும் இதெல்லாம் கூட நினைவுக்கு வந்து விட்டது.

 அது மட்டுமல்ல, சிறுகதை எழுதி நான்காண்டுகளாகி விட்டது என்பதையும் கூட நினைவு படுத்தியது. “முற்றுகை” நாவல் மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் கவனம் திசை திரும்பக் கூடாது என்று சிறுகதை பக்கம் போகாமல் இருந்தேன். இப்போது “லாக் அவுட்” மனதை ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும் முயற்சிக்கலாமே என்று இன்னொரு குரலும் மனதில் ஒலிக்கிறது. பார்ப்போம் எந்த குரலுக்கு வலிமை என்று!


 

தாத்தா வந்தார்

வேலூர் சுரா,

 

காலை நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே விசாலத்திற்கு விழிப்பு வந்து விட்டது. இன்றைக்கு கணவரின் திதியல்லவா! பல் தேய்த்து தனக்கு மட்டும் காபி கலந்து குடித்து விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தபடியே கறிகாய்களை வெட்டத் தொடங்கினார். அந்த வேலை முடிந்ததும் ஏற்கனவே லாஃப்டிலிருந்து எடுத்து வைத்திருந்த பித்தளைப் பாத்திரங்களை மீண்டும் ஒரு முறை அலம்பி வைத்து விட்டு நேரத்தைப் பார்த்தால் ஐந்தரை ஆகியிருந்தது.

 

பத்தாண்டுகள் அதற்குள் ஓடிப் போய் விட்டதா? விசாலத்திற்கு கண்ணீர் ததும்பியது. ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் இருக்கும் போது அலுவலகத்திற்கு சென்றவரை திடிரென நெஞ்சு வலி வந்து மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்லும் முன்னே இறந்து விட்டார் என்று சடலமாகத்தான் வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்.

 

சொந்த வீடு, கார், வங்கியில் சேமிப்பு, குடும்ப பென்ஷன் என்று இருந்ததால் பொருளாதார ரீதியில் விசாலத்திற்கு பெரிய சிரமம் எதுவுமில்லை. ஒரே பையன் பிரசாத்தும் கேம்பஸிலேயே தேர்வு பெற்று வேலைக்கும் போய் விட்டான். அவனது கம்பெனியில் வேலை பார்க்கும் வாணியை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற போது விசாலத்திற்கு கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் தூரத்து சொந்தம் என்பதால் மனதைத் தேற்றிக் கொண்டாள். பேத்தி ஐஸ்வர்யா எனும் சின்னுவைக் கொஞ்சுவதில் பொழுது போய்க் கொண்டிருந்தது. அவளும் இப்போது முதல் வகுப்பு படிக்கிறாள். எவ்வளவு வேகமாக காலம் ஓடினாலும் சில நினைவுகளை அதனால் எடுத்துச் செல்ல முடியாதே!

 

மணி ஆறரை ஆனது. ஒன்பது மணிக்கெல்லாம் சாஸ்திரிகள் வந்து விடுவார். இந்தக் காலப் பசங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா என்று மனதிற்குள் முனகிக் கொண்டே குளித்து விட்டு ஈரப்புடவையோடு வெளியே வந்தால் வாணி அடுப்பில் ஐஸ்வர்யாவிற்கு தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். இவளது முகக்குறிப்பைப் புரிந்து கொண்டு

 

“பரவாயில்லை, சமைக்கிறதுக்கு முன்னாடி இன்னொரு தடவை துடைச்சிடறேன்” என்றாள்.

 

“கண்ணாடி அடுப்பு. நிமிஷமா துடைச்சிடுவே. எங்க மாமியார் உயிரோட இருந்தவரை பிரசாத்தோட தாத்தா தெவசம் கிராமத்திலதான் நடக்கும். மண் அடுப்ப சாணம் போட்டு மொழுகனும். ஸ்ரார்த்தம் முடியறவரைக்கும் பிரசாத் பட்டினியாவே இருப்பான். நீதான் என்னமோ ஐ.ஏ.எஸ் படிப்பு பாழாப் போகுதுனு சின்னுவை ஸ்கூலுக்கு அனுப்பற”

 

விசாலத்தின் புலம்பலை காதில் வாங்காமலேயே வாணி சென்று விட பேப்பரும் பிரஷ்ஷுமாக வந்த பிரசாத்தைப் பார்த்து

 

“சீக்கிரமா குளிச்சுட்டு வா, காபி கலந்து தரேன்” என்று சொல்ல அவனோ

 

“நீ முதல்ல காபிய குடுமா, அப்பறமா குளிக்கப் போறேன்” என்று பேஸ்ட் வாயோடே சொல்ல விசாலம் கடுப்பானார்.

 

“இன்னிக்கு ஒரு நாளாவது நான் சொல்றத கேட்க்க் கூடாதா”

 

“சாஸ்திரிகள் வரதுக்கு முன்னாடி நாலு தடவை ரெடியாடுவேன். காபியைக் குடிச்சுட்டு குளிக்கப் போறேன்”.

 

யூனிபார்மோடு பேத்தி வந்தாள்.

 

“பாட்டி, இன்னிக்கு யார் கெஸ்ட் வராங்க? இவ்வளவு வெஜிடபிள்ஸ் கட் பண்ணி வெச்சுருக்க?”

 

“இல்லைம்மா இன்னிக்கு உங்க தாத்தா வராரு. அதுக்காக இன்னிக்கு பூஜை”

 

“இந்த போட்டாவில இருக்கற தாத்தாவா? சாமி கிட்ட போய்ட்டாருன்னு சொன்னீங்களே, மறுபடியும் வரப் போறாரா? இங்கேயேதான் இருப்பாரா?”

 

“நீ ஸ்கூல் போய்ட்டு வரதுக்குள்ள போய்டுவார். சாயந்தரம் உனக்கு பாட்டி அதிரசம், வடை, அல்வா எல்லாம் தரேன்”

 

“அதெல்லாம் எனக்கு பிடிக்காது. எனக்கு ப்ளாக் ஃபாரெஸ்ட் கேக் தான் பிடிக்கும்”

 

அதற்குள் வாசலில் ஆட்டோவின் ஹாரன் ஒலி கேட்க கணவனும் மனைவியுமாக புத்தக மூட்டையோடு மூட்டையாக சின்னுவையும் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போய் விட்டார்கள்.

 

“என்னம்மா ஒன்பது மணிக்கெல்லாம் சுப்ரமணிய சாஸ்திரிகள் வந்துடுவாரா, நாலு மணிக்கு பாஸ் ஒரு மீட்டிங் வச்சுருக்காரு. அதுக்கு போயாகனும். ஒவ்வொரு வருஷமும் லேட் பண்றதே அந்த மனுஷனுக்கு பொழைப்பா போச்சு”  என்ற பிரசாத்தின் கேள்விக்கு

 

“அப்படியெல்லாம் சொல்லாதேடா, பிதுர்காரியம் செஞ்சு வைக்கறவர் அவர். பிதுர்காரியம் செஞ்சா உன்னோட பரம்பரைக்குத்தான் நல்லது”

 

என கெஞ்சும் குரலில் விசாலம் மன்றாட

 

“அதுக்காகத்தான் ஒவ்வொரு வருஷமும் நான் லீவ் போட்டு ஸ்ரார்தம் பண்றேன். ஏதோ தனி வீடுங்கறதனால ஹோமம் செய்ய முடியுது. ப்ளாட்டுனா சான்ஸே இல்லை”.

 

மணி ஒன்பதைக் கடந்திருந்தது. சாஸ்திரிகள் வரவில்லை. போனிலும் ரிங் போய்க்கொண்டிருந்ததே தவிர எடுத்துப் பேசவில்லை. பிரசாத்தின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் கூடிக் கொண்டிருந்தது.

 

வாசலில் மணியடிக்கும் ஓசை கேட்டதும்

 

“இதோ வந்துட்டாங்க” என்று விசாலம்  வேகமாக எழுந்து போய் கதவைத் திறந்தால் கணேஷ் நின்று கொண்டிருந்தான். கணவரின் அண்ணன் மகன். அவனைப் பார்த்தவுடனேயே விசாலத்திற்கு நெஞ்சு படபடத்தது. சாஸ்திரிகள் வரும் நேரம் இவன் இங்கே இருந்தால் மீண்டும் மோதிக் கொள்வார்களே என்று கவலையும் வந்தது. அது ஒரு பத்தாண்டு கால பகை. விசாலத்தின் கணவர் இறந்த பின்பு பனிரெண்டாம் நாள் சவுண்டிகரணத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை அது.

 

இரண்டு வரிசையில் மூன்று மூன்று பிண்டங்களை இலையில் அடுக்கி வைத்து பிரசாத்திடமும் மற்றவர்களிடமும் சாஸ்திரிகள் விளக்க ஆரம்பித்தார்.

 

“இதோ இப்பதான் உங்கப்பா தன்னோட முன்னோர்களோட கைலாசத்துக்கு போய் ஐக்கியமாகப் போராரு. உங்க தாத்தாவோடயும் கொள்ளுத்தாத்தாவோடயும் போய் சேர்ந்துடுவார். உங்கப்பா அங்கே போனதும் உங்க எள்ளுத்தாத்தா  அங்கேயிருந்து கிளம்பிடுவார்”

 

அப்போதுதான் கணேஷ் அந்த கேள்வியைக் கேட்டான்.

 

“சாஸ்திரிகளே, மூனு வருஷம் முன்னாடி எங்கப்பா தவறிப் போன போது எங்க எள்ளுத் தாத்தா கிளம்பியிருப்பாரே, எங்க அண்ணா போன வருஷம் ஆக்ஸிடென்டில் இறந்து  போது எங்க கொள்ளுத்தாத்தாவும் கிளம்பியிருப்பாரு. இப்ப அவங்க ரெண்டு பேரும்  மறுபடி அங்க வருவாங்களா?”

 

சாஸ்திரிகள் முகத்தில் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவரால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. யோசித்துக் கொண்டே இருந்த போது

 

“அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். டைம் ஆகறது பாருங்கோ” என்று யாரோ அவசரப்படுத்த தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்று அவர் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். ஆனாலும் கணேஷ் விடுவதாக இல்லை.

 

“இப்ப சொல்ல முடியலைனா பரவாயில்லை. ஆனா எனக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியேயாகனும்”

 

அதன் பின் இந்த இருவரும் எப்போது பார்த்தாலும் கணேஷ் அவரை வம்பிற்கு இழுப்பதும் அவர் நழுவி ஓடுவதுமே வழக்கமாகி விட்டது.

 

“என்ன சித்தி, இன்னிக்கு சித்தப்பா ஸ்ரார்த்தமா? நான் அப்புறமா வரேன்” என்று சொல்லிப் போனவன் மீண்டும் திரும்பி வந்து 

 

“சுப்ரமணிய சாஸ்திரிகளை நான் விசாரிச்சேன்னு சொல்லுங்கோ. பிரசாத் நீ சாஸ்த்ரோக்தமா திவசம் பண்றதுக்கு காக்காவுக்கு பதிலா உங்கப்பாவே நேரில் வருவார் பாத்துக்கோ” என்று சொல்லி விட்டுப் போனான்.

 

அவன் வெளியே செல்வதற்கும் சாஸ்திரிகள் உள்ளே வருவதற்கும்  சரியாக இருந்தது.

 

“பத்து வருஷமாயும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்களே” என்ற கேள்வியை அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளே வந்து

 

“உங்க குடும்பத்துல இப்படி ஒரு நாத்தீகனா?” என்று கேட்க

 

“அவனை விடுங்க மாமா, நீங்க ஆரம்பிங்கோ, பிரசாத் வேற சாயந்தரம் ஆபீஸ் போகனும்” என்று விசாலம் சமாதானம் சொன்னார்.

 

எல்லாம் முடிந்து விசாலமும் வாணியும் சாப்பிடும் போது மூன்று மணியாகி விட்டது. மூன்றரை மணிக்கு வந்து சின்னு கேட்ட முதல் கேள்வியே

 

“பாட்டி, தாத்தா எங்க?”

 

“ஏதோ வேலையிருக்குனு அவர் கிளம்பிட்டாருமா கண்ணா,  வா ட்ரெஸ் மாத்திட்டு வந்ததும் உனக்கு ஸ்வீட்டெல்லாம் தரேன்” என்று சொன்ன விசாலத்தின் சிந்தனை கணவர் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்று விரிந்தது. கணேஷ் சொன்னது போல காக்காய் வடிவில் வராமல் சொந்த வடிவில் அவர் வந்திருக்கலாமே என்று யோசித்தபடியே டி.வியைப் போட சீரியல் உலகில் அந்த சிந்தனை அப்படியே மறைந்து போனது.

 

விஜய், சன் என்று விரல்கள் சேனலை மாற்றிக் கொண்டிருக்க வரவேற்பு மணி ஒலிக்கிற ஓசை.

 

கதவைத் திறந்த வேகத்தில் அப்படியே மூடிய விசாலம் அலறினார்.

 

“பிரசாத், இங்க வாடா”

 

ரூமிலிருந்து பிரசாத், வாணி, சின்னு மூன்றுமே பேருமே அந்த சத்ததைக் கேட்டு ஓடி வந்தார்கள்.

 

“என்னம்மா? என்னாச்சு?”

 

“வாசல்ல பாருடா, உங்கப்பா நிக்கறாரு”

 

என்னம்மா முழிச்சுண்டே ஏதாவது கனவு கண்டியா எனக் கேட்டபடியே அவன் கதவைத் திறக்கப் போக,

 

“வேண்டாம்டா, கதவைத் திறக்காத, ஜன்னல் வழியா பாரு”

 

பிரசாத்தும் பார்த்தான்.

 

இறந்து போன அன்று அலுவலகத்திற்கு செல்லும் போது அணிந்திருந்த அதே வெள்ளை சட்டை, கறுப்பு பேண்ட், கண்ணாடியோடு முகத்தில் கொஞ்சம் சிடுசிடுப்போடு வாசலில் அப்பா நின்றிருந்தார்.

 

“எப்படிம்மா இது? நான்தான் அவருக்கு கொள்ளி வச்சேன். அஸ்தியைக் கூட நீ சொன்னியேன்னு ராமேஸ்வரத்துல போய் கரைச்சுட்டு வந்தேன்”

 

“ஆவியா வந்திருக்காருடா, ஐயோ அப்படி வரது வீட்டுக்கு நல்லதில்லையே”

 

“இப்ப என்னம்மா செய்யறது?”

 

சாஸ்திரிகளுக்கு போன் போட அவர் வீட்டில் ஏதாவது தோஷம் வந்திருக்கும். நவக்கிருக ஹோமம் செஞ்சா சரியா போயிடும் என அவர் அடுத்த வேலைக்க்கு அடித்தளம் போட்டார்.

 

“காலம்பற வரைக்கும் கதவை திறக்கவே  வேண்டாம். அதுவாவே போயிடும்” என்று விசாலம் சொல்ல

 

சின்னுவுக்கு மட்டும் ஒரே குழப்பம்

 

“ தாத்தா வரதுக்காக பூஜையெல்லாம் செஞ்சிட்டு இப்ப ஏன் அவர் வந்தா கதவை திறக்க மாட்டேங்கறாங்க”

 

யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதால் அந்த கேள்வியை அவள் கேட்கவேயில்லை.