Showing posts with label வேள்பாரி. Show all posts
Showing posts with label வேள்பாரி. Show all posts

Tuesday, July 15, 2025

கொஞ்சமா? இல்லை ஹெவியா பொறாமை

 


கடந்த மூன்று நாட்களாக தோழர் சு.வெங்கடேசன் முக நூலில் வறு பட்டுக் கொண்டிருக்கிறார். காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது எப்படி வன்மம் தெளிக்கப்படுவதற்கான காரணமாக அமைந்ததோ அது போல இப்போதைய வன்மத்திற்கு "வேள்பாரி" நாவலின் விற்பனை ஒரு லட்சம்  பிரதிகளை கடந்திருப்பது  காரணமாக உள்ளது.



சங்கிகளைத் தவிர வேறு யாரெல்லாம் என்று பார்த்தால் . . .

பெரும்பாலும் எழுத்தாளர்கள் . . .
சுவாரஸ்யமாக எழுத முடியாத எழுத்தாளர்கள், இரண்டாவது பதிப்பை காணாதவர்கள்(இடதுசாரிகள் என்ற வரையறைக்குள்ளும் வருபவர்கள்) . சி.பி.எம் மீது ஒவ்வாமை கொண்டவர்கள், ரஜினிகாந்த் கலந்து கொண்டது வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது.  அதனால் முற்போக்கு முகாமில் இருக்கும் கமலஹாசன் ரசிகர்களும் இணைந்து விட்டனர்.

அத்தனை வன்மத்திற்கும் ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் எழுதிய ஒரு நூலின் விற்பனை ஒரு லட்சத்தை கடப்பதா என்ற பொறாமையன்றி வேறில்லை. 

இது ஒன்றும் புதிதல்லவே!

திருவிளையாடலில் வந்த வசனம்தானே!

Sunday, January 3, 2021

பெண்மை போற்றும் வேள்பாரி


 மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் அற்புத நூல் "வேள்பாரி" எப்படி பெண்மையை போற்றுகிறது என்ற கோணத்தில் எழுதப்பட்டுள்ள சிறந்த அறிமுகம்.

மதுரை கோட்டத் தோழர் பா.ரஞ்சனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வேள்பாரி யின், பறம்பு மக்களின் போர்த்தந்திரங்கள்,  போர்க்காட்சிகள் குறித்து பிரத்யேகமாக எழுத வேண்டும் என்று ஒரு ஆவல் பிறந்துள்ளது. அதற்காக மூன்றாவது முறையாக வேள்பாரியை படிக்க வேண்டும்.



*வாரம் ஒரு நூல்*

3.1.2021

*நூல் அறிமுகம்*

*வீரயுக நாயகன் வேள்பாரி*

*ரஞ்சனி பாசு*

*மதுரை*

*பெண்மை போற்றுதும்*



-------

*“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,*
*எந்தையும் உடையேம்;* *எம் குன்றும் பிறர் கொளார்;*
*இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,*
*வென்று எறி முரசின் வேந்தர் எம்*
*குன்றும்* *கொண்டார்;* *யாம் எந்தையும் இலமே!”*
(திணை - பொதுவியல் துறை – கையறுநிலை)

மேற்குறிப்பிட்ட புறநானூற்றுக் கவிதை வரிகள் தான் தமிழ் வாசக மனதுக்கு வேள்பாரி பற்றிய ஒரு அறிமுகத்தைக் கொடுத்த வரிகள். தமிழிலக்கியத்தில் பதிவான முதல் அகதிகளின் குரல் இதுவே. பறம்பு மலையையும், தலைவனாகிய பாரியையும் இழந்து அவருடைய மகள்கள் பாடியவை. கடையெழு வள்ளல்களில் ஒருவராகவும், முல்லைக்குத் தேர் தந்த பாரிவள்ளலாகவும் பொதுவான வாசிப்பில் பாரியைக் குறித்த தகவல்களாக இவற்றை மட்டுமே அறிந்திருந்தேன். இதைக் கடந்து, வேள்பாரி பற்றிய தொடர் என்ற அறிவிப்பினைப் பார்த்த போது என்னவாக இருக்கும், தொடர் எழுதும் அளவிற்கு என்ன உள்ளடக்கம் என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் உருவானது. முதல் அத்தியாயத்தில் *“மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது”* என்று கவித்துவ ரசனை தோய்ந்த கபிலரின் அறிமுகமும், கபிலரைக் கேள்விக் கணைகளால் திக்குமுக்காட வைத்த, காதலியைப் பார்க்க ஒரு நாளைக்கு இருமுறை குன்றுகளைத் தாண்டிச் செல்லும் வீரன் நீலனின் அறிமுகமும் ஆர்வத்தைத் தூண்டின. *நூலாசிரியர் சு.வெங்கடேசன்* அவர்களின் பச்சையம் மிகுந்த வரிகள் காட்டின் வாசனையை வாசகருக்கும் கடத்தி விட்ட மாயத்தை 111 அத்தியாயங்கள் முடித்த பின்னரும் வியந்து கொண்டே இருக்கிறேன். 
*“சொல்ல ஒருபாடு விஷயமிருக்கிறது…”* என்று சு.வெங்கடேசன் முன்னர் ஒரு பேட்டியில் பகிர்ந்தது நினைவில் எழுகிறது. இந்நெடுந்தொடர் குறித்தும், இதன் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்தும் எழுத ஒருபாடு விஷயமிருந்தாலும்,  *வீரயுகநாயகன் வேள்பாரி* யில் பெண்மையின் சிறப்புகள் சித்தரிக்கப்பட்டதைப் பற்றிய என் பார்வையை சுருக்கமாக  பதிவு செய்கிறேன்.

*இருவேறு சமூக அமைப்புகள்:*

ஒரு வரலாற்றுப் புனைவை வாசிக்கும் பொழுது எழுத்தாளரின் மொழியின் வழியே பல்லாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நிலம் நம் மனதில் விரிகிறது. மக்களின் வாழ்க்கை முறை, உணவு, இருப்பிடம் சார்ந்த பலவற்றைக் குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. சமூக அமைப்பு குறித்தும், பொருளாதார ஏற்பாடுகள், அரசியல் அதிகார வடிவம் என இம்மூன்று தளங்களிலும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க அடிப்படை அம்சங்களை காத்திரமாக வடிவமைப்பதின் வழியே தான் அப்புனைவு நம்பகத்தன்மை பெறுவதாக மாறுகிறது. வேள்பாரி இந்த அடித்தளத்தை மிகக் கச்சிதமாகப் பெற்ற புனைவாகும்.

சங்ககாலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக, தன் அக உலகின் எண்ணப் பெருக்கினைக் கவிதைகளாக வடிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு 41 பெண் கவிஞர்களின் கவிதை வரிகள் தமிழிலக்கியத்தில் சான்றாக உள்ளன. முன்னுரையில் நூலாசிரியர் *“இனக்குழு சமூக வாழ்வு முடிந்து உடமைச் சமுகம் மேலெழுகின்ற காலத்தை மிகத் துல்லியமாகவும் மிக விரிவாகவும் பதிவு செய்துள்ளது சங்க இலக்கியம்”* என்று குறிப்பிடுகிறார். ஒரு வகையில் வேள்பாரி சங்க இலக்கிய காலத்தின் மையக் குறியீடு என்றே சொல்ல முடியும் என்றும் கூறுகிறார்.
அரண்மனைப் பதுமை
பாண்டிய இளவரசன் பொதிய வெற்பனுக்கு, பெருவணிகன் சூல்கடல் முதுவனின் மகள் பொற்சுவையை திருமணம் செய்யும் நிகழ்வு, அதையொட்டி நடைபெறும் வணிகம் சார்ந்த பகடையாட்டங்கள், அரசியல் கணக்குகள் தான் வேள்பாரியின் மையமான நிகழ்வு. பெண் தேடும் போது உயரக் கணக்கு, செல்வக்கணக்கு, வணிக வருமானக் கணக்கு என்று பல கணக்கீடுகளில் தான் திருமணம் முடிவாகிறது. ஆடலரங்கத்தில், பாண்டியப் பேரரசின் பத்துப் பெரிய அடையாளங்களுக்கான திருப்பெயர்களை வரிசைப்படுத்தி கட்டியங்காரன் கூறுகிறான். சொல்லப்படாத ஒரு அடையாளமாகத் தான் பெண்கள் அரச குடும்பத்தில் வாழ்ந்து மறைகிறார்கள். இழந்த காதலை பெருஞ்சுமையாக தனக்குள் சுமந்திருக்கும் பொற்சுவையின் வலியை உணராத வாசகரும் உண்டோ? அவள் வைகையைப் பார்த்தபடி *“ஓடும் நீருக்குள் உறங்கும் நதி”* தான் பெண் என்பது எழுத்தாளரின் முத்திரை.

மணமக்களுக்கான வேனிற்கால மாளிகையும், கார்கால மாளிகையும், பாண்டரங்கமும் ஆயிரக்கணக்கானோரின் உழைப்பை செலுத்தி உருவாகிறது. அதன் ஒவ்வொரு அடியிலும், கலைத்திறன் மிளிர்கிறது. ஆனால், இளவரசன் மனைவியிடம் அதிகமாகக் காதல் கொண்டு விடக்கூடாது என்று பேரழகி நீலவள்ளியை அழைத்துவரும் அரசியலும் நிகழ்கிறது. பெண் மனதுக்கும், உணர்வுகளுக்கும் அரண்மனைக்குள் என்ன பெறுமதி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பூக்களும் கனிகளுமாகப் பெண்கள் தம் இனத்தைப் பெருக்குபவளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கூட பலாவும், மாதுளையும் தட்டில் வைக்கப்பட்டது எனக்கூறும் போது, சுகமதியுடன் சேர்த்து நாமும் நடுங்கித்தான் போகிறோம். இளவரசன் தன் வழித்தோன்றலை உருவாக்கும் வேளையைக் கணித்து, அப்பொழுது தான் அவன் பள்ளியறை நுழைகிறான். பெண்ணுடல் மீதான ஆதிக்கத்திற்கு, அரண்மனையில் அளவேது?

மையூர்கிழாரின் பரிசாக வந்த காமன் விளக்கின் சிறப்புகளை பொற்சுவை மட்டுமே நுணுக்கமாக உணர்ந்து, ரசித்து, உருவாக்கிய காராளியை சந்திக்க விழைவதே பெரும்புலவர் கபிலரிடம் பெற்ற அவளது கல்வியறிவின் சாட்சி. அவள் அரண்மனைப் பதுமை இல்லை என்பதை உணர்த்தும் காட்சியும் அதுவே.

வனத்தின் பறவைகள் நீலன் - மயிலா காதல் இணையரைத் துவக்கத்திலேயே தெரிந்து கொள்கிறோம். முதல் அத்தியாயத்திலேயே *“பெண்ணின் இதழ் இவ்வளவு சுவையேறி இருக்கிறதே, எப்படி?”* எனக் கபிலரிடம் கேட்கிறான் நீலன். மயிலாவோ, கபிலரை வழிமறித்து காதலனைப் பிரிந்து இருப்பதன் வேதனையை வெளிப்படுத்துகிறாள். கதைகளின் வழி முருகன் - வள்ளியின் காதல் கதை விரிகிறது. வேடர் குலமும், கொடிக்குலமும் இணைந்தது கவிதையான கணம்.

ஏழிலைப்பாலையின் மொத்தப் பூக்களும் தனக்குள் இருந்து மலர்ந்தவை என்று வள்ளி மயங்கி நிற்பது காதலின் உச்சம். சிலாக்கொடியில் பிணைக்கப்பட்ட சந்தனமரக்கிளைகளின் நறுமணமும், வேங்கை மரத்தின் ஈரமும், காதலைக் கொண்டாட்டமாக்கிய தருணம் ரசனைக்குரியவை. பொதினி மலை குலமகள் ஆதினியை, வேளிர் குலத்தலைவன் பாரி மணம் புரிவதும் கூட, காதலின் வெளிப்பாடேயன்றி, அரசியல் பகடையாட்டம் அல்ல என்பது கவனத்துக்குரியது. தனக்கானவனைக் கண்டு விட்டால் மயில் கொன்றை மரத்துக்கு மாலை சூட்டி மகிழ்வர் பொதினி மலைப் பெண்கள் என்ற செய்தி, பெண் உணர்வுகளுக்கு செய்த மரியாதை. திரையர் குலத்துப் பெண் தூதுவையை வேளிர் குல சூலிவேள் தன் வீரத்தை நிரூபித்து, காதலைப் பரிசாகப் பெறுவது காலம் கடந்த கதை.

அங்கவையும் உதிரனும் காதலிப்பதற்கு வசதியாக கபிலரைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு உதிரனை நியமிக்கும் பாரியின் தந்தைமை அழகு. கொற்றவைக்கூத்தில் புதிய இணையர்கள் தீக்களி பூசி ஆடிய போது அங்கவையைக் கண்டதினால் உணர்ச்சிவயப்படும் பாரி, சந்தன வேங்கை மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று அங்கவை சொல்லும் போது, அவளிடம் தோற்று தாயாகவும் உணரும் தருணம் நெகிழ்ச்சி. நாளை என் பேரக்குழந்தையின் கண்கள் நாகர்குடி அடையாளத்துடன் நீலவளையம் பூத்திருக்கும் என்று காதலைக் கொண்டாடும் குடும்பத்தலைவன், குலத்துக்கே தலைவனாய் இருப்பது பெரும் வரமல்லவா? சிறகு நாவல் பழங்களின் பொழிவும், இரவில் ஒளி உமிழும் இராவெரி மரமும், வெண்சாரையின் கூடலும் என்றும் நினைவில் நிற்கும் காதற் காமத்தின் சின்னங்கள்.

அறிவின் விரிவு

பெருவணிகரின் மகளாக, பேராசான் கபிலரின் மாணவியாக வளர்ந்த பொற்சுவையின் அறிவின் விரிவு பிரமிப்பூட்டுகிறது. மழைநீர் மட்டுமே அருந்தும் சக்கரவாகப் பறவையை நேசிக்கிறாள். அவளின் சொற்கள் அறிவில் தோய்ந்தவையாகவே வெளிப்படுகின்றன. *“எது இலக்கியம், எது காதல் என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது”* என்பது தீர்க்க அறிவின் வெளிப்பாடு. சுகமதியும் பொற்சுவையின் அறிவிற்கு ஈடுகொடுத்து உரையாடும் திறன் பெற்றவளாக இருக்கிறாள். பொற்சுவையின் கூர்மதிக்கு, பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். கபிலர் தன் திருமண நிகழ்விற்கு வராமல், பறம்பு நாட்டுக்குப் போயிருப்பார் என்று யூகிக்கிறாள். நறுமணக்கலவையை, அதன் கடுமணம் காரணமாக ஆண் உருவாக்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். 

காமன் விளக்கின் சிறப்பறிய வெங்கல் நாட்டிற்கு பயணப்பட்டாலும், போரின் பாதிப்புகளைக் குறித்து கவலையுறுகிறாள். நிலமொரண்டி எனும் காதல் மலரின் சிறப்பை காராளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள, கலைத்திறனை மதித்து அவன் இருப்பிடம் நோக்கி செல்கிறாள்.

திசைவேழரை நோக்கி,” கோள் கணிக்கும் பேராசான் கொலை நிலத்தில் பரண் ஏற எப்படி ஒப்புக் கொண்டீர்" எனக் கேள்வி எழுப்பும் துணிவு அறிவின் ஆற்றல் தான். கபிலரைக் காண பல்லக்கில் செல்லும் இறுதிப்பயணத்திலும், தன் நுண்ணறிவால் செயல்பட்டு, ஈங்கையனை வீழ்த்துகிறாள். 

புதினம் முழுவதிலும் அரச குடும்பத்து மகளிர் எந்த விதமான கதாபாத்திரமாகவும் வரவில்லை என்பது ஆச்சரியமே.

நீலனுடன் காதல் கொண்ட வேளையிலும் கபிலரின் வரவை உணர்ந்து கூறிய மயிலா, காதலனுடன் பயணித்த வேளையில், அவன் மயக்கமுற்ற போதிலும், தனி ஒருவளாக அவனை எதிரிகளிடம் காத்து, நெடுங்காடர்களைப் பற்றி அவதானித்து, படையினரைப் பற்றிய முழுமையான தகவல்களைக் கடத்திய அங்கவை, ஒற்றைப் பச்சிலையால் மதங்கொண்ட யானையை அமைதிப்படுத்திய பறம்பின் பெயரறியாப் பெண், காட்டெருமையை கால் நரம்பில் தாக்க வேண்டும் என்று நுட்பம் சொல்லும் திரையர் குல முதுபெண், நெருப்பு சூழ்ந்த காட்டில் நாகங்கள் தப்பிப் பிழைத்ததைக் கண்டறிந்து, அவ்வறிவைப் பெற தானே தீக்களி பூசி நெருப்பில் இறங்கிய நாகர் குடியின் முதுமகள், காதலனைப் பறி கொடுத்த வஞ்சினம் தீர செம்பா கிள்ளியைப் பழிவாங்குதல், குலநாகினிகளின் பேரறிவு என பறம்பில் ஒவ்வொரு பெண்ணும் பேரறிவின் சேகரமாக நடமாடுகிறார்கள். 

பறம்பின் மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, காதலைக் கொண்டாட்டமாக, பெண்களின் ஆளுமையைப் பெருமிதமாகப் போற்றி வாழ்கின்றனர். உடைமைச் சமுதாய அரச குடும்பங்கள் பெண்களைப் பகடைக்காய்களாகப் பார்க்கிறார்கள். கபிலரிடம் போர் துவங்கும் முன், பாரியின் மகளை மூவேந்தரில் ஒருவருக்கு மணமுடிப்பது என்ற முன்மொழிவைக் கூறி, மண உறவை அரசியலாக்கும் இழிசெயலைக் கூசாமல் செய்கிறார்கள். மான்கள் இணைசேரும் கார்கால இரவில், பாழி நகருக்கு தேரில் செல்ல மாட்டான் பாரி என்பதும், முல்லைக் கொடி படர்ந்த தேரை அவற்றுக்கான பரிசாக விட்டு நகர்வதும் பாரியை பெருந்தலைவனாக உணர்த்துகின்றன.

சு.வெங்கடேசன் அவர்களின் முதல் புதினமான காவல் கோட்டம் முழுவதிலும் பெண் கதாபாத்திரங்கள் ஆளுமை மிக்கவர்களாக, அறிவிற் சிறந்தவர்களாக உலவினர். வேள்பாரியிலும் அது தொடர்கிறது. மனித குல வரலாற்றில் விவசாயத்தைக் கண்டு பிடித்ததும், உணவுப் பொருட்களை பதப்படுத்துவதைக் கண்டுபிடித்ததும் பெண்ணறிவே. நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு ஆண் உணவு என்றும், நீரில் வேக வைக்கப்பட்ட உணவுகளுக்கு பெண் உணவு என்றும் பெயர் என்று இரண்டாம் அத்தியாயத்தில் ஆசிரியர் கூறுகிறார். *ஆண் அவசரத்தின் அடையாளம்*, *பெண் பக்குவத்தின் அடையாளமாகவும் ஆனாள்* என்று.

ஆணும் பெண்ணுமான இருசக்திகளின் இணைந்த காதல் தான் இயற்கையின் ரகசியம். அது தான் மனித குலம் தழைக்கவும் காரணமாகிறது. பெண்ணின் ஆளுமை போற்றப்படும் சமூகங்கள், நாகரிகத்தில் முன்னேறியவை என்பதற்கு சங்ககால தமிழ்ச்சமூகம் மானுடவியலில் மிகப் பெரிய அடையாளம். வேள்பாரி புதினம் அந்த அடையாளத்தை முத்திரையாக்கி இருக்கிறது.

*பெண்மை போற்றுதும்!! பெண்மை போற்றுதும்!!*

*செவ்வானம்*

Thursday, November 19, 2020

இந்தியில் எழுதாதே போய்யா!

 மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் விரிவான முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்தி வெறி பிடித்த அமைச்சருக்கு அவர் அனுப்பிய கடிததை முழுமமையாக படியுங்கள்.

அந்த கடிதம் சொல்லும் அர்த்தம்

"இந்தியில எழுதாதே போய்யா"




தமிழக எம்.பி -க்களுக்கு ஹிந்தியில் பதிலளிப்பது சட்டவிதி மீறலாகும்.

மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.
பெறுநர்,
மாண்புமிகு அமைச்சர் திருமிகு நித்யானந்த ராய்,
உள்துறை இணை அமைச்சர்,
இந்திய அரசு.
மாண்புமிகு அமைச்சர் திருமிகு நித்யானந்தா ராய் அவர்களுக்கு,
பொருள்: *இந்தி மொழியிலான உங்களின் பதில் கடிதம்*

உங்களின் 09.11.2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அக் கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

நான் தங்களுக்கு 9-10-2020 அன்று சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியிருந்தேன். தற்போது வந்துள்ள பதில் அக் கோரிக்கை குறித்ததாகவே இருக்கக்கூடுமென்று அனுமானிக்கிறேன்.

1963 ல் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்படாது என அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உறுதியளித்தது தாங்கள் அறிந்ததே. இப் பிரச்சினை மீது எழுந்த நாடு தழுவிய விவாதத்தில் பிறந்த கருத்தொற்றுமையின் விளை பொருளே நேரு அவர்களின் உறுதி மொழி. பின்னர் 1965 ல் தமிழகத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பின் புலத்தில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களாலும் இதே உறுதி மொழி திரும்பவும் வழங்கப்பட்டது. 1967 ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலும் இது உறுதி செய்யப்பட்டது.

நான் இங்கு 1976 அலுவல் மொழி விதிகள் (இந்திய ஒன்றியத்தின் அலுவல் தேவைகளின் பயன்பாட்டிற்காக) - (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது) ஆவணத்தில் இருந்து சில பகுதிகளை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

*"இந்த விதிகள், அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்குரியது) விதிகள் 1976 என்று அழைக்கப்படும். இவை இந்தியா முழுமைக்கும், தமிழ்நாடு மாநிலம் தவிர, பொருந்தும்"*

இச் சட்ட விதிகள் மிகத் தெளிவாக தமிழ்நாடு மாநிலத்துக்கு ஒன்றிய அலுவல் மொழிச் சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளதை குறிப்பிடுகிறது.

மொழிப் பிரச்சினையில் தனது நிலையை அழுத்தமாக நிலை நிறுத்துவதில் தனித்துவமான இடம் தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேற்கூறிய விதி விலக்கு எங்கள் மாநிலத்திற்கு தரப்பட்டதும் அதன் வெளிப்பாடேயாகும்.

மேலும் அதே விதிகள், "சி" பிரிவில் குழுவாக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அலுவல் மொழிச் சட்டம் அமலாக்கப்ப்டுவது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. அதன் பொருத்தமான பகுதியைக் கீழே தந்துள்ளேன.

*"சி" பிரிவில் இடம் பெற்றுள்ள பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மற்றும் அம் மாநிலங்களைச் சேர்ந்த, அலுவலகங்கள் (மத்திய அரசு அலுவலகங்கள் அல்லாதவை), தனி நபர்களுக்கான மத்திய அரசு அலுவலகங்களின் கடிதப் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும்."*

எனவே இந்தியில் பதில் தருவதான உங்கள் அமைச்சரவையின் நடவடிக்கை இச் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுவது ஆகும்.

நான் உங்கள் கவனத்திற்கு - மத்திய அரசு பணியாளர், பொது மக்கள் முறையீடுகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அலுவல் நிர்வாகப் பிரிவு (DOPT - அலுவலக சேவைப் பிரிவு) வெளியிட்ட "அரசு நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ சட்ட மன்ற உறுப்பினர்களுக்குமான அலுவல் தொடர்புகள் - முறையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்" என்ற தலைப்பிலான எஃப்/எண் 11013/4/2018 - அலுவலக சேவை/ ஏ /III / 10.02.2020 தேதியிட்டது - அரசாணையைக் கொண்டு வர விழைகிறேன்.

இந்த அரசாணையின் இரண்டாவது பத்தி இதே பொருள் குறித்து இதற்கு முன்பாக அக்டோபர் 2012, நவம்பர் 2014, பிப்ரவரி 2018, அக்டோபர் 2018 ல் பல்வேறு தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளைக் குறிப்பிடுகிறது. மூன்றாவது பத்தி, மேற்கூறிய அரசாணைகள் கடைப்பிடிக்கப்படாமை குறித்து அத் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட மீறல்கள் பற்றிப் பேசுகிறது. எதிர்காலத்தில் முறையான அமலாக்கத்தை உறுதி செய்ய மூல அரசாணையையும் அது இணைப்பாக தந்துள்ளது.

அந்த 01/12/2011 தேதியிட்ட மூல அரசாணை எண் 11013/4/2011 - அலுவல் சேவை (ஏ)- பிரிவு 5 (எக்ஸ்) ன் வரிகள் இவை.
*"எப்பொதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று அதற்கான பதிலை அலுவல் மொழிச் சட்டம் 1963 ன் அடிப்படையில், அதன் விதிகளின்படி, இந்தியில் தர வேண்டியிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்"*

அலுவல் மொழிச் சட்டத்தில் குறிப்பான விதி விலக்கைப் பெற்றுள்ள தமிழகத்திற்கு இதன் இந்தி மொழிப் பயன்பாடு குறித்த அம்சம் பொருந்தாவிட்டாலும் இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திற்குமே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆங்கிலக் கடிதம் வரப்பெறும் பட்சத்தில் ஆங்கில மொழியாக்க வடிவம் அனுப்பப்பட வேண்டுமென்ற கட்டாயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே உங்கள் அமைச்சகம் ஆங்கில மொழியாக்கம் இல்லாமல் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது இந்த அண்மைய அரசாணையையும் மீறுவது ஆகும். இந்த அரசாணையே தொடர் மீறல்களை சரி செய்ய வெளியிடப்பட்டதே எனும் போது அதுவும் மீறப்படுகிறது.

முந்தைய பிரதமர்களால் வழங்கப்பட்ட உயர்வான உறுதிமொழிகள் இன்றைய ஆட்சியாளர்களாலும் மதிக்கப்பட வேண்டுமென்பது எனது ஆழமான உணர்வு. இருப்பினும் அரசாங்கமே சட்டங்களையும் நடைமுறைகளையும் திரும்பத் திரும்ப மீறுவது மனதை வருத்துவதாகும். ஆகவே தமிழ்நாட்டிற்கு மொழிப் பிரச்சினையில் தரப்பட்ட தனித்துவமான உறுதி மொழியை மதித்து அதன் சட்ட ரீதியான அம்சங்களை அமலாக்குமாறு வேண்டுகிறேன்.

இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்கிற பன்மைத்துவ பண்பை பாதுகாக்கிற மேன்மையான வரலாற்றுப் பெருமிதம் உள்ள நாடாகும். அத்தகைய பார்வை அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்விலும் வெளிப்பட வேண்டும். இதுவே நாட்டின் ஒற்றுமையை, கூட்டாட்சி முறைமையை வலுப்படுத்துவதாய் அமையும்.

ஆகவே உங்கள் அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்தும் வந்தது போன்றே, ஆங்கிலத்திலேயே பதில் தருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்.
உங்களின் விரைவான மறு மொழியை எதிர் நோக்கி,
தங்கள் உண்மையுள்ள,
(சு. வெங்கடேசன்)
நாடாளுமன்ற உறுப்பினர்,
மதுரை