Monday, November 30, 2015

ஆழமான உரையின் இரண்டாம் பகுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் தீக்கதிர் வெளியிட்ட செய்தியை  நேற்று பகிர்ந்திருந்தேன்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் உரையின் நிறைவுப் பகுதியை தீக்கதிர் நாளிதழில் இன்று பிரசுரம் செய்துள்ளனர். 

மிகவும் முக்கியமான இந்த உரையை அவசியம் படியுங்கள்.

 சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லையேல் சுதந்திரம் இல்லை!
சீத்தாராம் யெச்சூரி



“அரசு முன்வைத்துள்ள தீர்மானத்தில் சமூக நீதி தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் கூறிய முக்கிய அம்சம் விடுபட்டுள்ளது. இந்த அவையில் அதனை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.இப்போதுநான் அதனை முழுமையாக மேற்கோள் காட்டுகிறேன். “1950 ஜனவரி 26 அன்று - மீண்டும் ஒருமுறை குறித்துக்கொள்ளுங்கள், அதுதான் அரசமைப்புச்சட்ட தினம், குடியரசு தினம் - நாம் முரண்பாடுகள் மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைக் கொடுக்க இருக்கிறோம். ஆனால், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் இன்னமும் சமத்துவமின்மையையே பெற்றிருக்கிறோம். அரசியலில், `ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ (‘டிநே அயn டிநே எயடரந’) என்னும் கொள்கையை அங்கீகரித்திட இருக்கிறோம். ஆனால், நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், நம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளின் காரணமாக, `ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ என்னும் கொள்கை மறுக்கப்படுவதைத் தொடர இருக்கிறோம். இது முரண்பாடாகும்“ என்கிறார் அம்பேத்கர்.

அவர் மேலும் தொடர்கிறார்: “இந்நிலையினை நாம் மறுப்பது வெகுகாலத்திற்குத் தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையும் ஆபத்திற்குள்ளாக்குவதற்கே இட்டுச் செல்லும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த முரண்பாட்டை நாம் போக்கிட வேண்டும். இல்லையேல், இத்தகைய சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அரசியல் நிர்ணயசபை மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்.’’டாக்டர் அம்பேத்கர் கூறிய கூற்று இது. 

வறுமையின் பிடியில் 90 சதவீத குடும்பங்கள்

இன்று என்ன நிலைமை?ஒரு பக்கம், நம் நாட்டில் ஒரு நூறு பில்லியனர்கள். இவர்களின் சொத்து மதிப்பு என்பது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவினதாகும். சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 90 சதவீதக் குடும்பத்தினர், மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் வருமானம் பெறுகிறார்கள். இந்த முரண்பாட்டைக் களைந்திட ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா? அல்லது, இம்முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தக்கூடிய விதத்தில்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆனால், அதற்குப் பதிலாக, பிரதமரின் ஒவ்வொரு அயல்நாட்டுப் பயணத்தின்போதும், அந்நிய மூலதனத்திற்குப் புதிய சலுகைகளை அளிப்பதற்கான வழிவகைகளைத்தான் கண்டுகொண்டிருக்கிறோம்.
அந்நிய நேரடி முதலீட்டிற்கு பதினைந்து புதிய துறைகளைத் திறந்துவிட்டிருக்கிறீர்கள்.தாராள வர்த்தக ஒப்பந்தங்கள், நம் நாட்டில் பயிரிடப்பட்டுக் கொண்டிருந்த வணிகப் பயிர்களின் வேளாண்மையையே அழித்துக் கொண்டிருக்கின்றன. வேளாண் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே தொழில் உற்பத்தி அட்டவணை, இந்த மாதம் 6 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்தது, 3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் தொழிலில் 6 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.

டாக்டர் அம்பேத்கர் கூறிய சமூகநீதிக் கொள்கையின்இன்றைய நிலை என்ன?

தலித்துகள்/பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் நடைபெறும் அட்டூழியங்கள்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். சமூகத்தில் சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டிருப்பதால், நம் மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. ஏன் இந்த முரண்பாடு? எதார்த்த நிலைமைகளைப் பாருங்கள். இந்த விதத்தில்தான் நாம் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமா? இந்த விதத்தில்தான் நவீன இந்தியா, சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமா?அரசியல் கட்சிகளை மறந்துவிடுங்கள்.
நீங்கள் எந்தக் கட்சி, நான் எந்தக் கட்சி என்று பார்க்க வேண்டாம். ஓர் இந்தியன் என்ற முறையில், நாம் நமக்கு நேர்மையாக நடந்துகொள்கிறோமா? நாம் உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கருக்கு நீதி வழங்குகிறோமா?

கூட்டாட்சித் தத்துவம்

டாக்டர் அம்பேத்கர் கூட்டாட்சித் தத்துவம் (கநனநசயடளைஅ) குறித்து என்ன கூறியிருக்கிறார்? மத்திய அரசும், மாநில அரசுகளும் சமமானவைகளாக இருக்க வேண்டும் என்றார். அவரது உரையை நான் படிக்கிறேன்:“நம்முடைய அரசமைப்புச்சட்டத்தை ஒரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட (உநவேசயடளைஅ) ஒன்றாக அழைப்பது மிகவும் கடினம். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையே மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே சட்டமன்றங்களும், நிர்வாக ஏற்பாடுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசு எவ்விதச் சட்டமும் நிறைவேற்றக்கூடாது. அரசமைப்புச்சட்டம்தான் இதனைச் செய்திட வேண்டும்.’’இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் சாரம். இத்தகைய கூட்டாட்சித் தத்துவம் இன்றையதினம் கடைப்பிடிக்கப்படுகிறதா?அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து நீங்கள் கூறினீர்கள். இதற்குப் பலியானது நாங்கள்தான். முதலில் 1950இல் கேரளாவில். பின்னர் 1960களில் இருமுறை. வங்கத்தில் 1967இலும் 1969இலும் பலியானோம். இது இருக்கட்டும்.கூட்டாட்சித்தத்துவம் என்றால் என்ன? மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சமத்துவம் மட்டும் அல்ல; மாநிலங்களின் சுயேச்சையான மதிப்பும் ஆகும். இவற்றை இந்த அரசு வழங்கி இருக்கிறதா?

நீதித்துறை பற்றி அம்பேத்கர் சொன்னது என்ன?

இப்போது நீதித்துறை குறித்தும் பேசுகிறீர்கள். இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் கூறியிருப்பது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். அவர் கூறுகிறார்: “நீதிமன்றங்கள் சற்றே மாற்றியமைக்கப்படலாம், ஆனால் முழுமையாக மாற்றிட முடியாது. புதிய வியாக்கியானங்கள், புதிய விவாதங்கள் வரும்போது அவை தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனாலும் அவற்றுக்கென்று அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவை மாற்றி அமைத்துக்கொள்ள முடியாது.நிர்வாகம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் தனித்தனியேயும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தும் உருவாக்கப்பட்டிருப்பது நம் அரசமைப்புச் சட்டத்தின் முத்திரைச்சின்னங்களாகும்.
உலகிற்கே வழிகாட்டிய இந்தியாஇப்போது நீங்கள் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். 1946 முதல் 1950 வரை உலகின் நிலைமை என்ன?கோடிக்கணக்கான மக்கள் காலனிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தார்கள். இந்த நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சுதந்திரம் அடைந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உண்மையிலேயே நாம் ஒரு புரட்சிகரமான காரியத்தைச் செய்தோம். எந்த நாடுமே அளிக்காத விதத்தில், நாம் நம் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். 

ஐரோப்பிய நாடுகள் அளிக்கவில்லை, அமெரிக்கா கூட அளிக்கவில்லை.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இங்கே வந்த போது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தினார். அவர் நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் என்ன எழுதினார்? “உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வாழ்த்துக்கள்’’ என்று எழுதியிருந்தார். (“ழுசநநவiபேள கசடிஅ வாந றடிசடன’ள டிடனநளவ னநஅடிஉசயஉல வடி வாந றடிசடன’ள டயசபநளவ.” ) இது அவர் அளித்த செய்தி. 

ஒபாமாவிடம் சொன்னேன்...

மாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்ட சமயத்தில் அவரிடம் இதை நான், “நீங்கள் உங்கள் நாட்டை பழைமையான ஜனநாயக நாடு என்று வரையறுத்திருப்பது தவறு,’’ என்று சுட்டிக்காட்டினேன். அவர், “ஏன்?’’ என்று கேட்டார். நான் அவரிடம், “நீங்கள் உங்கள் நாட்டில் அமெரிக்கர்கள் - ஆப்பிரிக்கர்கள் - அனைவருக்கும் 1962இல்தான் வாக்களிக்கும் உரிமையை அளித்தீர்கள்.
அதாவது நீங்கள் பிறந்து ஓராண்டு கழிந்தபின்னர்தான். ஆனால், நாங்கள் அதனை 1950இலேயே கொடுத்திருக்கிறோம்.’’உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?ஆனால், இன்றைய நிலைமை என்ன? ஹரியானா மாநிலத்தில் 86 சதவீத மக்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டி போடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.ராஜஸ்தானில், மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமை இன்றி இருக்கிறார்கள். குஜராத் குறித்து நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள்? “உங்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லையேல், உங்களுக்கு வாக்குரிமை கிடையாது, தேர்தலில் போட்டி போட முடியாது’’ என்று கூறியிருக்கிறீர்கள். 

இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள். நீங்கள் இங்கே வந்து அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமே அனைவருக்கும் வாக்குரிமை என்பதாகும். அதனை உங்கள் பாஜக அரசு மறுத்து வருகிறது.

(மணியடிக்கப்பட்டது)நீங்கள் மணி அடிப்பீர்கள் எனத் தெரியும். ஆளும் கட்சியின் அமரும் இருக்கைகள்அனைத்தும் அநேகமாகக் காலியாக இருக்கின்றன. அதிகாரிகள் அமரும்இருக்கைகள் கூட காலி.
நாங்கள் கூறுவதை யார் அரசுக்கு எடுத்துச்செல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாகவே ஆளுங்கட்சியினர், எங்களது உரைகளை உதாசீனம் செய்கிறார்கள்.அவைத் தலைவர் ஜெர்மனி குறித்தும், அதன் மூன்றாவது ‘ரெய்ச்’ (நாடாளுமன்றம்) குறித்தும் குறிப்பிட்டார். அற்புதம். எதேச்சதிகாரத்தை நினைவுபடுத்தியதற்காக அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோல்வால்கரின் புத்தகம்

1939இல் நாட்டில் நாம் கோரும் சுதந்திர இந்தியாவின் குணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு புத்தகம் வெளிவந்திருந்தது. அப்போது அது மிக முக்கியமான புத்தகமாக இருக்கும் என்று பலர் கருதவில்லை. ஆனால் அது இந்திய அரசியலிலும், இந்தியாவின் எதிர்காலத்திலும் மிக மிக முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்திய புத்தகமாகும். அதை எழுதியவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குரு என்று அழைக்கப்படுகிறார். 

அவைத் தலைவர், ஜெர்மனியின் மூன்றாவது ரெய்ச் குறித்துக் குறிப்பிட்டதால், அந்தப் புத்தகத்தில் அது குறித்து என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
அந்தப் புத்தகம் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ ஸறுந டிச டீரச சூயவiடிnhடிடின னநகiநேன (க்ஷhயசயவ ஞரடெiஉயவiடிளே, 1939, சுந. 1) மாதவ சதாசிவ கோல்வால்கர் எழுதிய புத்தகம். “நாம்’’ என்றால் யார்? இந்தியில் இதனை “ஸ்வராஜ்’’ என்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் முழுமையான சாரம் அதுதான். அந்தப் புத்தகத்தில் அவர், “இந்த நாட்டின் பூர்வகுடியினர் இந்துக்கள்தான், இந்துக்கள் மட்டுமே’’ என்று அவர் கூறியிருப்பார்.அதனையடுத்து, ஜெர்மனியின் மூன்றாவது ரெய்ச் குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார். “புராதன இன உணர்வு, ஜெர்மானியப் பழங்குடியினரை ஐரோப்பா முழுவதையுமே கைப்பற்றக்கூடிய அளவிற்கு செயலாற்ற வைத்திருக்கிறது. நவீன ஜெர்மனியில் மீண்டும் எழுச்சி உருவாக வைத்திருக்கிறது.
அதன் விளைவாக, வல்லமை பொருந்தியவர்களாக இருந்த மூதாதையர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பரியங்களின்படி முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்ட ஆசைகளைப் பின்பற்றி ஜெர்மானியர்கள் வெற்றிபெற்றார்கள்

.’’ஒரு கணம் இங்கே நான் சற்றே இடைவேளை விடுகிறேன்.இந்தியாவில் இதற்கு இணையாக அவர்கள் யாரைக் கொண்டு வருகிறார்கள் என்று பாருங்கள். இப்போது மீண்டும் கோல்வால்கரின் நூலில் உள்ள விவரங்களைத் தொடர்கிறேன்: “நாமும் அப்படி இருப்போம்; நம் இனத்தில் நாம் உற்பத்தி செய்த ஆன்மீக ஜாம்பவான்கள் இன்றையதினம் உலகில் வீர நடைபோட்டு பவனி வந்துகொண்டிருப்பதிலிருந்து நம் இன உணர்வு மீண்டும் ஒருமுறை எழுச்சி பெற்றிருக்கிறது என்பதைக் காண முடிகிறது”. (கோல்வால்கர், 1939, ப. 32).நமது நண்பர் வி.பி. சிங் பாதோர், பாஜக எம்பியாக இருந்தாலும், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அதிகம் தெரியாமல் இருக்கக்கூடும். இந்தப் புத்தகம் 1939இல் வெளிவந்தது. அதில் பக்கம் 35லிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன். இது பாரத் பிரகாசன் என்னும் பதிப்பகத்தாரால் 1939இல் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 1944இல் வெளிவந்தது. அது அப்புறப்படுத்தப்படாமல் இருக்குமாயின் நூலகங்களில் பார்க்கலாம். 

நாடாளுமன்ற நூலகத்திலும் இது கிடைக்கும். எங்குமே கிடைக்கவில்லையெனில் நான் ஒரு பிரதி உங்களுக்குத் தருகிறேன்.அந்த நூலில் கோல்வால்கர் மேலும் கூறுகிறார்:“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாகப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.இப்படித்தான் கோல்வால்கர் சொல்கிறார்.பளிச்சென்று சொன்னால், கோல்வால்கர் சொல்வதன் அர்த்தம், “இந்து ராஷ்ட்ரம்’’ என்பதுதான்.

சமத்துவமும், சகோதரத்துவமும்

எனவேதான் கூறுகிறேன், டாக்டர் அம்பேத்கருக்கு உண்மையிலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர் தன் உரையில் நிறைவாகக்கூறியதை நினைவுகூர்க. இனம் (உசநநன)குறித்து அவர் கூறியதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “சமத்துவம் இல்லையேல், உங்களால் சுதந்திரத்தைப் பெற முடியாது. சகோதரத்துவம் இல்லையேல், உங்களால் சமத்துவத்தையோ, சுதந்திரத்தையோ பெற முடியாது. சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இல்லையேல், உங்களால் சுதந்திரத்தைப் பெற முடியாது.’’இந்தியாவின் விடுதலை மற்றும் அதன் சுதந்திரத்தைக் கொண்டாட விரும்பினால், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்கிற இரு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. ஆனால், சகிப்புத்தன்மையற்ற இன்றைய சூழ்நிலையில் மேற்கண்ட இரண்டும்தான் சமரசம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.

பிரசாத்தும் படேலும்

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியதை மேற்கோள்காட்டி என் உரையை நிறைவு செய்கிறேன். அவர் வரைவு அரசமைப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போடும்போது இவ்வரிகளைக் குறிப்பிட்டார். அப்போது அவர் நாட்டின் குடியரசுத் தலைவர் அல்ல. அவர் ஜனவரி 26 அன்றுதான் குடியரசுத் தலைவர் ஆனார். அப்போது அவருக்கு முன் இந்நாட்டிலிருந்த கவர்னர் ஜெனரல் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்ய முடியவில்லை. ஏனெனில் கவர்னர் ஜெனரல் என்பவர் பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டவர். எனவே, தலைமை நீதிபதி அழைக்கப்பட்டு, மைய மண்டபத்தில், குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

டாக்டர் ராஜேந்திர பிரசாத் இடைக்கால அரசாங்கத்திற்காகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பிறகு, இந்த அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன்பின்னர், மாநிலங்களின் எல்லைகள் வகுக்கப்பட்டு, புதிதாகத் தேர்தல்கள் நடைபெற்றன. 1952இல் தேர்தல் நடைபெற்றது.

இன்றைய தினம், சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராவது மறுக்கப்பட்டதாக, ஒருசாரார் கூறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக சர்தார் பட்டேல் 1950இலேயே இறந்துவிட்டார். ஆனால் தேர்தல் நடந்ததோ 1952. இது புரிந்து கொள்ளப்படுகிறதா? பிள்ளையார் போன்று சிலர் மூலமாக மந்திர தந்திரங்கள் செய்து, இறந்தவரைப் பிழைக்க வைத்து மீளவும் கொண்டு வந்திருந்தார்களானால், அவரைப் பிரதமராக்கி இருந்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை.

பிரசாத் என்ன சொன்னார்?

அப்போது டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த அரசமைப்புச் சட்டத்தை வரவேற்றுக் கூறியதாவது: “அரசமைப்புச் சட்டம் என்பது ஓர் எந்திரம் போன்று, ஓர் உயிரற்ற பொருள்தான். இதனைக் கட்டுப்படுத்துபவர்கள், இதனைச் செயல்படுத்துபவர்கள் மூலம்தான் இது உயிர்பெறுகிறது. நாட்டின் நலனில் அக்கறையுள்ள நேர்மையான மனிதர்களே இன்றைய தினம் இந்தியாவுக்குத் தேவை.’’டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும், டாக்டர் அம்பேத்கரும் “மனிதர்கள்’’ (‘அநn’) என்று கூறியபோது, அவர்கள் ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சேர்த்துத்தான். பெண்களும் சுதந்திர இயக்கத்தின் அங்கமாக இருந்தார்கள்.“நம்முடைய வாழ்க்கையில் நம்மிடையே பிளவு உண்டாக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற சக்திகள் செயல்படலாம்’’ என்று 1949 நவம்பர் 26 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார். 

அவர் மேலும், “நாம் மதரீதியாக, இன ரீதியாக, சாதி ரீதியாக, மொழி ரீதியாக, மாகாண ரீதியாக மற்றும் பல விதங்களிலும் வேறுபாடுகளைப் பெற்றிருக்கிறோம். இத்தகு சமயத்தில் ஆங்காங்கே தங்கள் பகுதிகளில் மேற்கண்ட வேறுபாடுகளை உயர்த்திப்பிடிக்கக்கூடிய நபர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, நாட்டின் நலனுக்காகத் தியாகம் செய்யக்கூடிய, நேர்மையான வலுவான மனிதர்கள், தொலைநோக்குப் பார்வையுடைய மனிதர்களே இன்று நமக்குத் தேவை. அத்தகைய மனிதர்களை அபரிமிதமாக இந்த நாடு உருவாக்கும் என்று நாம் நம்புவோமாக!’’

இன்றையதினம் நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அத்தகைய மனிதர்களை அபரிமிதமாக நம்மால் உருவாக்க முடியுமா? முடியாது எனில், அதனைச் சரிசெய்துகொள்ள முயல்வோம்.

மாஸாவும் மசாலா வடையும்

கேரளப் பயணத்தில் முதலில் சென்றது அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு.

அருவியை நோக்கி செல்லும் வழியில் முதலில் கண்ணில் பட்ட சுவாரஸ்யமான காட்சி எது தெரியுமா?

ஒரு குரங்கு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு  ஒரு மசால் வடையை கையில் வைத்துக் கொண்டு இரண்டாக பிய்த்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

கொஞ்ச தூரம் சென்றால் அங்கே இன்னொரு குரங்கோ ஒரு மாஸா பாட்டிலை துளை போட்டு குடித்துக் கொண்டிருந்தது.



இப்படியே போனால் அவை போன் போட்டு பீட்சாவை வரவழைத்து சாப்பிடும் போல!

Sunday, November 29, 2015

ஊடகங்கள் ஒதுக்கிய அற்புத உரை






அரசியல் சாசன அமைப்பு தினம் என்ற பெயரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி நிகழ்த்திய அற்புதமான உரையை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. 

சோனியா காந்தியும் நரேந்திர மோடியும் நிகழ்த்திய வெற்று லாவணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தோழர் யெச்சூரியின் அர்த்தம் பொதிந்த, ஆழமான உரைக்கு அளிக்க தவறி விட்டன.

டாக்டர் அம்பேத்கருக்கு செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி என்ன என்பதை தோழர் யெச்சூரி சொல்வதையும் சுதந்திர வரலாற்றுக்கு தொடர்பில்லாத பாஜக வரலாற்றை எப்படி திரிக்க முயல்கிறது என்பதையும் அவர் அம்பலப்படுத்தியதையும் முதலாளித்துவ ஊடகங்களால் எப்படி பிரசுரிக்க முடியும்.

தீக்கதிர் நாளிதழில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அதிலும் கூட சில பகுதிகள் விடுபட்டுள்ளது. 

இந்திய அரசியலின் மிக முக்கியமான ஆளுமையான தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் பன்முக ஆற்றலை நீங்கள் நேரடியாக உணர்ந்து கொள்ள அவரது உரையின் காணொளியை இந்த இணைப்பின் மூலம் காணுங்கள்.  ஐம்பது நிமிடங்களை பயனுள்ளதாக செலவிடுங்கள். சில நிமிடங்களில் ஹிந்தியில் பேசினாலும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. 

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கியமான உரைகளில் ஒன்று என ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது மிகையல்ல என்பதை நீங்களும் உணர்வீர்கள். 


இனி தீக்கதிர் வெளியிட்டதை படியுங்கள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------
அடிமைகளும் புரட்சியாளர்களும்

 சீத்தாராம் யெச்சூரி

பாஜக அரசாங்கம், “அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’’ நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. “மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்’’ என்கிற கேள்வி ஏன் எழுந்தது? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன்? அரசமைப்புச் சட்டம் இல்லையேல், நீங்கள் இங்கே இருக்கவே முடியாது. இதனை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நவம்பர் 26ஐ ஏன் அரசமைப்பு தினமாகக் கொண்டாடுகிறீர்கள்?வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். நவம்பர் 26 அன்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையின் தலைவரால் கையெழுத்திடப்பட்டது. அதன்மீது வாக்கெடுப்பு நடந்து அது நிறைவேற்றப்பட்டது. 

அதில் மிகவும் தெளிவாக, “1950 ஜனவரி 26 முதல் இந்தியா குடியரசாக இருந்திடும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் நவம்பர் 26க்கு எப்படி முக்கியத்துவம் தருகிறீர்கள்? அன்றைய தினம் தான் அரசியல் நிர்ணயசபை இந்த அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது என்பது உண்மைதான்; ஆயினும் அன்றைய தினமே அது அரசமைப்புச் சட்டம் ஆகிவிடவில்லை. அது இந்நாட்டின் அரசியல் சாசனமாக 1950 ஜனவரி 26 அன்றுதான் மாறியது. 
அரசியல் நிர்ணயசபை மீண்டும் 1950ஜனவரி 24 மற்றும் 25இல் கூடி, “ஜன கன மன’’ பாடலை தேசிய கீதமாக நிறைவேற்றியது, நவம்பர் 26 அன்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 15 மட்டும்தான் அமலுக்கு வந்தன. 1950 ஜனவரி 26 அன்றுதான் அனைத்துப் பிரிவுகளும் அமலுக்கு வந்தன. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருமூத்த தலைவர் பிரதமரை மிகச்சிறந்த `நிகழ்வு மேலாளர்’ (Event Manager)  என்று வர்ணித்துள்ளார். லண்டன், பின்னர் மலேசியா, பின்னர் ஆசியா, பின்னர் அரசமைப்புச்சட்ட தினம். நாளையிலிருந்து அவரது பயணம் பாரீசாக இருக்கலாம். இவ்வாறு பிரதமரின் நிகழ்ச்சி நிரலை ஆய்வு செய்யும்போது, நாடாளுமன்றத்தின் நிகழ்வு வலுவற்றதாக மலினமானதாக மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது.

ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பு

ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள்” குறித்த தீர்மானத்தின் (டீதெநஉவiஎநள சுநளடிடரவiடிn’) அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபை தொடங்கியது என்பது இந்த அரசுக்குத் தெரியுமா? அரசியல் நிர்ணயசபையின் மொத்த 11 அமர்வுகளில் 6 அமர்வுகள் இந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள்” பற்றிய தீர்மானத்தின் மீதுதான் நடைபெற்றன என்பது இந்த அரசுக்குத் தெரியுமா?அரசியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங்களில் பெரும்பகுதி ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் நடைபெற்றன. இதுதான் வரலாறு. நம்மில் பலர் சுதந்திரத்திற்குப்பிறகுதான் பிறந்துள்ளோம். நீங்கள் வரலாற்றை மாற்றி அமைத்துவிட முடியாது. புதிதாக ஒரு வரலாற்றை எங்களுக்குக் கூற முடியாது. 

அரசமைப்புச்சட்ட தினத்தை இப்போது திடீரென ஏன் அனுசரிக்கிறீர்கள்? 

தேசிய இயக்கத்தில் எந்தக்காலத்திலுமே எந்தப் பங்களிப்பினையும் செய்யாத நபர்கள், தேசிய இயக்கத்தைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கான முயற்சி இது என்ற முடிவுக்கே நான் வர முடியும். ஓர் அரசிதழ் அறிவிக்கையில், “ஒவ்வோராண்டும் நவம்பர் 26 அரசமைப்புச்சட்ட தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது’’ என்று திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சம் வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வோராண்டும் தேசிய தினம் அனுசரிக்க இந்த அமைச்சகம் தீர்மானிக்க முடியுமா? மேற்படி அரசிதழ் அறிவிக்கை நவம்பர் 19 அன்று வெளியிடப்படுகிறது; ஆனால் அதற்கு முன்பே, நவம்பர் 10 அன்றே மேற்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் “நவம்பர் 26ம்தேதி அரசமைப்புச்சட்ட தினம் அனுசரிக்க வேண்டும்’’ என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது எப்படி? இங்கே என்ன நடக்கிறது? 

சங் பரிவாரம் குறித்துபிரிட்டிஷ் அரசாங்கத்தின் கணிப்பு

சங் பரிவாரங்கள் குறித்து அன்றைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எத்தகைய கணிப்பிற்கு வந்திருந்தது? 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற சமயத்தில் பிரிட்டிஷ் பம்பாய் உள்துறை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: “சங் பரிவாரம், சட்டத்திற்கு உட்பட்டு குற்றமற்றமுறையில் நடந்து கொள்கிறது, குறிப்பாக 1942 ஆகஸ்டில் நடைபெற்ற கலவரங்களில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளது.’’இது பிரிட்டிஷ் அரசாங்கம் செய்துள்ள பதிவு. 

இப்போது பாஜக உறுப்பினர் தருண் விஜய், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பதிவு என்ன? அதையும் கூறுகிறேன். குறிப்பாக கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களுக்குப்பின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மை யானவர்களின் அணுகுமுறை, அவர்கள் எப்போதுமே பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன,’’ என்று கூறியிருக்கிறார்கள். இதனை இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் குடியரசுத் தலைவரே குறிப்பிட்டிருக்கிறார்.

வழிகாட்டும் நெறிமுறைகள்

அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் என்ன கூறுகின்றன?“நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களுக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிறது. அம்பேத்கர் கூறியது என்ன? அதையேதான் அவரும் கூறினார்.அரசமைப்புச் சட்டம் 46 ஆவது பிரிவில் அது இருக்கிறது. அடுத்த பிரிவான 47 என்ன கூறுகிறது? மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், போஷாக்கையும் மேம்படுத்திட அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகள் அதிகமாக இருப்பது, இந்தியா இல்லையா? இது வெட்ககரமானதில்லையா? இதனை மாற்ற இந்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது? உங்களுக்கு என்ன தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவேதான் உங்கள் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகம் எழுகிறது. 

அடிப்படை உரிமைகள் பகுதியில் 51-ஏ(எப்) பிரிவில் என்ன கூறப்பட்டிருக்கிறது? “நம் நாட்டின் மிகவும் வளமான பாரம்பரியப் பன்முகக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து மதித்து நடந்திட வேண்டும்’’ என்று அது கூறுகிறது. அத்தகையப் பன்முகக் கலாச்சாரத்தை நாம் பேணிப் பாதுகாக்கிறோமா? 51-ஏ(எச்) என்ன சொல்கிறது? “மக்களின் அறிவியல் உணர்வை, மனிதாபிமானத்தை மற்றும் எதையும் கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்திட’’ வேண்டும் என்கிறது. பிள்ளையார், பிளாஸ்டிக் சர்ஜரியால் உருவானார் என்றும், மகாபாரத காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி உருவானது என்றும் கூறுவதை நாம் சரி என்று சொல்லிவிட்டால் அது அறிவியல் உணர்வை வளர்ப்பதாகக் கூற முடியுமா?ஆனால் நமது பிரதமரே இப்படிப் பேசுகிறாரே?என்ன நடந்து கொண்டிருக்கிறது? நீங்கள் எதனை அமல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அமல்படுத்த விரும்புவதுதான் என்ன? தீவிரமான இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை (hயசனஉடிசந ழiனேரவஎய யபநனேய) புதுப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். பசுப் பாதுகாப்பைப் புதுப்பிக்க விரும்புகிறீர்கள். 

அரசமைப்புச் சட்டம் 15 இவ்வாறு கூறுகிறது: “எந்தவொரு பிரஜையையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவற்றில் எதை ஒன்றையும் வைத்துப் பாகுபாடு காட்டக்கூடாது,’’ என்று கூறியிருக்கிறது. நம் உள்துறை அமைச்சர் `மதச்சார்பின்மை’ என்கிற வார்த்தை நம் அரசமைப்புச் சட்டத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது என்றும், அதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல் நடிகர் அமீர்கான் மீது அவதூறு அள்ளிவீசப்படுகிறது. “அம்பேத்கர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவில்லை. ஆனால் அவர் இங்கேயே இருந்துதான் போராடினார்’’ என்று அமீர்கான் கூறியிருக்கிறார். அப்படிக் கூறியதற்காக நான் மகிழ்ச்சிகொள்கிறேன். 

இடதுசாரிகள்தான் இவ்வாறெல்லாம் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்று நீங்கள் கூறலாம். எங்கள் தரப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவில்லை. அவர் ஒரு தேசாபிமானி. ஆயினும் அவர் இந்து மதத்தைத் துறந்து, புத்த மதத்தைத் தழுவினார். நீங்கள்இதனை நினைவில் கொள்ள வேண்டும். ஏன் அவர் அப்படிச் செய்தார்? சகிப்பின்மை பிரச்சனை இங்கேதான் வருகிறது. இவையெல்லாம் வரலாறு. இவற்றை நீங்கள் அழித்திட முடியாது. அதேபோன்று சகிப்பின்மை குறித்து டாக்டர் அம்பேத்கர் அன்று கூறியதையும் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன சொல்கிறார்.“வரலாறு திரும்புமா? அதாவது, நாம் மீண்டும் நம் சுதந்திரத்தை இழப்போமா?’’“இந்தியர்கள் தங்கள் இனத்திற்கும் மேலாக நாட்டைக் கருதுவார்களா? அல்லது நாட்டிற்கும் மேலாக இனத்தைக் கருதுவார்களா? எனக்குத் தெரியவில்லை.’’ அம்பேத்கர் இன்றிருந்தால் என்ன கூறியிருப்பார்? “இந்தியர்கள் நாட்டைவிட மேம்பட்டதாகத் தங்கள் இனத்தைக் கருத வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்,’’ என்றே கூறுவார். 

இத்தகைய சகிப்பின்மைதான் இன்றைய தினம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல்கட்சிகள் நாட்டைவிட தங்கள் இனத்தை மேம்பட்டதாகக் கருதினால், நம் சுதந்திரம் இரண்டாவது தடவையாக ஆபத்திற்குள்ளாக்கப்படும்.இவ்வாறான நிலை நாட்டில் உருவாவதை நாம் அனைவரும் இணைந்துநின்று தடுத்தாக வேண்டும். இன்றைய தினம், டாக்டர் அம்பேத்கர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாரோ அதைத்தான் மிகச்சரியாக நான் செய்து கொண்டிருக்கிறேன். அம்பேத்கர் தனது உரையில் கூறியிருப்பதைப்போலவே,“இத்தகைய சகிப்பின்மைக்கு எதிராக நாம் அனைவரும் எழுவோம்.’’

(நவ.27 அன்று மாநிலங்களவையில், டாக்டர் அம்பேத்கரின் 125ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அரசமைப்புச் சட்ட தின சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையிலிருந்து...)

தமிழில் : ச.வீரமணி

 

சொர்க்கமே என்றாலும் அது ???????

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?"

ராஜாவின் இந்த பாடலை இன்று அதிகாலை எங்கள் வீட்டில் நுழைந்த அடுத்த நிமிடத்தில்

"சொர்க்கமே என்றாலும் அது நம் வீடு போல வருமா!"

என்று பாடினேன். 

ஆம். கடந்த ஞாயிறு இரவு தொடங்கிய கேரள சுற்றுப் பயணம் இன்று காலைதான் முடிந்தது.

எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், காணும் இடங்கள் எங்கும் பசுமைகள், ஆக்ரோஷத்தோடு மண்ணை நோக்கி சீறும் அருவிகள், சலசலவென்று  பாயும் ஓடைகள், அமைதியான நதிகள்,  தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மலைப்பாதைப் பயணங்கள், அலைகள் போல ஆர்ப்பரிக்கும் மேகக் கூட்டங்கள், இன்னும் பாதுகாப்போடும் உயிர்ப்போடும் இருக்கிற வனங்கள், வசதியான விடுதிகள், கனிவான சேவையால் சுவையின்மையை ஈடுகட்டும் உணவகங்கள், படகு வீட்டில் ஒரு நாள்

என்று ஒரு வார பயணம் நெஞ்சமெல்லாம் இனிக்கும் அனுபவங்களை அள்ளிக் கொடுத்திருந்தாலும்

நமது வீட்டிற்குள் நுழைந்தால் ஏற்படுகிற நிறைவே அலாதியானது.

அதைத்தான் அனுபவித்துப் பாடினேன்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...
எந்நாடு என்றாலும் அது நம் வீடு போல வருமா....

வேலூரிலும் இருக்கிறது இயற்கையின் வனப்பு என்று இரண்டு நண்பர்கள் அனுப்பிய படங்கள் கீழே.

சத்துவாச்சாரி மலை

 பாலாற்றில் சூர்ய அஸ்தமனக் காட்சி


பகிர்ந்து கொள்வதற்கும் பதிவு செய்வதற்கும் ஒரு வார கேரளப் பயணம் நிறையவே கொடுத்திருக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்வேன்.


Sunday, November 22, 2015

84 வயதிலும் தொடரும் ஆர்வம்




திருமதி வைஜயந்திமாலா பாலி அவர்கள் சமீபத்தில் மும்பை சண்முகானந்தா சபாவில் நிகழ்த்திய நடனத்திலிருந்து ஒரு பகுதி.

எண்பத்தி நான்கு  வயதிலும் அடங்காத அவரது கலைத் தாகம் போற்றுதலுக்குரியது.

 

மிச்சமிருக்கும் ரத்தமும் சதையும்





மழைக்காலத்தில் வெளியில் போக முடியாத நேரத்தில் உருப்படியாக செய்த ஒரு வேலை தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் நூலை முழுமையாக படித்து முடித்ததுதான்.

592 பக்கங்கள் அடங்கிய அந்த நூலை மதிப்பீடு செய்யும் அளவிற்கு எனக்கு தகுதியோ அனுபவமோ கிடையாது.

ஒவ்வொரு பக்கமும் தியாகத்தை, போராட்டத்தைச் சொல்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், பழங்குடியின மக்கள், மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள், என அனைத்து பிரிவினருக்குமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஐம்பது வருடங்களில் தமிழகத்தில் நிகழ்த்திய போராட்டங்களின் வரலாறு இந்த புத்தகம்.

காவல் துறையிடம் அடிபட்டுள்ளார்கள், சிறைவாசம் அனுபவித்துள்ளார்கள். முதலாளிகளால், பண்ணையார்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். ஆளுங்கட்சிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அடியாட்களை ஏவி விட்டுள்ளார்கள். எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள்.

ரௌடிகளால் கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைக்கிற தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் வீடு திரும்பும் போது ஒரு கூட்டத்தில் ஒரு வார்த்தையாவது பேசுமாறு மக்கள் கேட்கிறார்கள்.

அவரும் பேசுகிறார்.

"தோழர்களே, அதிக நேரம் பேச முடியாமல் இருக்கிறேன். ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டதால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். மிச்சமிருக்கும் ரத்தமும் சதையும் உங்களுக்காகத்தான்"

இந்த தியாகப் பாரம்பரியம் இன்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தில் இணைந்திருப்பதை விட வாழ்வில் வேறென்ன பெருமிதம் இருக்க முடியும்.....

ஆரஞ்சுத் தோலும் தர்பூசணியும்

ஆரஞ்சுத் தோலிலும் தர்பூசணிப் பழத்திலும் செய்யப்பட்ட 
கலை வடிவங்கள் 














 

உற்றுப் பாருங்கள், இவை பூக்கள் அல்ல

வாட்ஸப்பில் வந்தது.

பூக்கள் போல தோன்றினாலும் மலர்கள் அல்ல.
மனிதர்களின் கலையின் உச்சம், கற்பனையின் உச்சம்








சூரியனை மறைக்கும் மேகங்கள் - அரசியல் அல்ல

ஒரு அதிகாலைப் பயணத்தின் போது நான் எடுத்த படங்கள். உங்களின் பார்வைக்காக



 

கச்சிதப் பொருத்தமா இல்லை போட்டோஷாப்பா?

கீழேயுள்ள படங்கள் மின்ஞ்சலில் வந்தது.

கச்சிதமாக எடுக்கப்பட்டதா இல்லை போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. டவுசர் பாய்ஸ் யாராவது இருந்தால் சொல்லுங்கள். ஏனென்றால் அவர்கள்தான் போட்டோஷாப் வித்தகர்கள்.

எது எப்படியானாலும் சுவாரஸ்யமாக உள்ளது.




அச்சம், பயம், தாக்குதல்







மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் காட்டாட்சிக்கு எதிராக விரிவான பிரச்சார இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடக்கவுள்ள சிறப்பு மாநாட்டிற்கு முன்னோட்டமாக இந்த பிரச்சார இயக்கம் நடக்கிறது 

மக்களின் வரவேற்பு பெருகி வருவதால் மம்தா தீதிக்கு அச்சம் வந்து விட்டது. ஆட்சியை பறி கொடுத்து விடுவோமோ என்ற பயம் பெருகி விட்டதால் வழக்கம் போல ரௌடித்தனத்தில் இறங்கி விட்டார்.

திரிணாமுல் குண்டர்கள் நேற்று சில இடங்களில் பிரச்சார இயக்கத்தில் குறுக்கே புகுந்து தாக்கியுள்ளார்கள். முன்னாள் எம்.பி, இந்நாள் எம்.எல்.ஏ என தாக்கப்பட்டுள்ளார்கள். மம்தாவின் ஏவல் துறை வேடிக்கை பார்த்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதல்களுக்கு அஞ்சாமல் பிரச்சாரம் நடக்கிறது, தொடர்கிறது. மம்தா ஆட்சிக்கு முடிவுரை விரைவில் மேற்கு வங்க மக்களால் எழுதப்படும்.

 

Saturday, November 21, 2015

எந்நாளும் மறவோமே!

எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர்.நாராயணன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்து சங்கத்தை கட்டிய முக்கிய தூண்களில் ஒருவர். தொன்னூறு வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கியவர். 



தோழர் நாராயணன் அவர்களுக்கு செவ்வணக்கம். 

அவர் பற்றி இந்த ஆண்டு துவக்கத்தில் 01.02.2015 அன்று எழுதிய பதிவை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 

உங்கள் பெயரை நீங்கள் மறந்தால் என்ன?

மதுரையில் நேற்று எங்கள் சங்கத்தின் ஆறாவது தமிழ் மாநில மகளிர் மாநாடு  நடைபெற்றது. 
அம்மாநாட்டில் எங்கள் சங்கத்தின் மூத்த தலைவ்ர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  துவக்க காலத் தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர்.நாராயணன் கலந்து கொண்டார். தொன்னூற்றி மூன்று வயதான அத்தோழர் பேசுகையில் 'இப்போதெல்லாம் என் பெயரே எனக்கு மறந்து போகிறது" என்று குறிப்பிட்டார். சங்கத்தின் துவக்க காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டு  அடைந்துள்ள முன்னேற்றம்  குறித்த  பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டார். "எந்த ஒரு பலனும் போராட்டம் இல்லாமல் பெற்றதில்லை. போராட தயாராக இல்லாத மனிதன் வாழ்வதற்கு தகுதியிழக்கிறான், Never Say Die, Never Accept Defeat, Fight Continuously" என்று எழுச்சியளிக்கும் விதத்தில் பேசினார்.

பிறகு மாநாட்டு அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற ஒரு இளைய பெண் தோழர் பேசியதுதான் அருமை.

அவர் தோழர் நாராயணன் தன்னுடைய பெயரே தனக்கு மறந்து போகிறது என்பதை குறிப்பிட்டு

"உங்களுடைய பெயரை நீங்கள் மறந்தால் என்ன சார்? உங்களுடைய தியாகத்தாலும் உங்களுடைய பணிகளாலும் இன்று நீங்கள் நிகழ்த்திய அற்புதமான உரை மூலமாகவும் உங்கள் பெயர் எங்கள் மனதில் என்றும் நினைவில் இருக்குமே சார்"

அதுதானே நம் பெயரை நாம் மறந்தால் என்ன?

மற்றவர்கள் மறக்காமல் இருக்கும்படி நம் செயல்பாடு அமைய வேண்டும் என்பதுதானே முக்கியம். 
 
எங்களின் மூத்த தோழர் காஷ்யபன் எழுதியதையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
 
எங்களின் தொழிற்சங்க தந்தை
" தோழர் நாராயணன் அவர்களுக்கு "
அஞ்சலி !!!






"நான் அப்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரத்திற்கு முன்பு.மூத்த உழியர்கள் ஜனவரி முதல் தேதி அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வார்கள். வேறும் கையோடு அல்ல. ஆப்பிள்,ஆரஞ்சு, அல்லது இனிப்பு பொட்டலங்களோடு செல்வார்கள்.

நான் புதியவன்.என்னையும் அழைத்து சென்றார்கள். எங்கள் கிளை அதிகாரி kRK .பட் என்பவர். எல்லரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். பரிசுபொரு ளைகொடுத்தார்கள். என் முறை வந்த போது நானும் சென்றேன். நான் கையில் எதுவும்கொண்டு செல்லவில்லை.
கைகுலுக்கினேன். 

What Narayanan you are very Hot ? என்றார் அதிகாரி.

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

I am always hot sir ! என்று சொல்லி வைத்தேன் 

அவர் முகம் சிவந்து விட்டது.

In That case I Will pour ice cold Water on your head !"என்றார் அதிகாரி.

அவர் என்னவோ மிகப்பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போன்று வந்திருந்த சக ஊழியர்கள் சிரித்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாக  இருந்தது. என்ன செய்ய ?  நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட் ! அவ்ர்கிளை மேலாளர்.

காலம் மாறியது..

1960ம் ஆண்டு. இன்சூரன்ஸ் துறை நாட்டுடமை யாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரை மண்டல அலுவலகத்தில் நான் பாணியாற்றிக் கொண்டிருந்தேன் ..KRK பட் இப்போது மண்ட மேலாளராஇருக்கிறார்ஹை திராபாத்திலிருந்து  மதுரை மண்டலத்திற்கு மாற்றலாகி வந்தார் .

வந்தவர் தொழிற்சங்க நடவடிக்கைகளை பற்றி விசாரித்திருக்கிறார். பழைய ஓரியண்டல்  நாராயனன் தான் இப்போது மண்டல சங்க தலைவர் என்று கூறியிருக்கிறார்கள். கோட்டு சூட்டு போட்ட  மண்டல மேளாளரான krk பட் சேம்பரை விட்டு எழுந்து நான் இருக்கும் அறைக்கு வந்தார். 

hallo ! naaraayanan ! how are you ? என்று கைகுலுக்கினார்


நான் அன்றும் டைப்பிஸ்ட் தான்> இன்றும் டைப்பிஸ்ட்தான்.

ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு.

அன்று ஒரியண்டல் கம்பெனியில்  தொழிற்சங்க அமைப்பு இல்லை. இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற தீரமிக்க சங்கம் இருக்கிறது." அது தான் வித்தியாசம்."


(961ம் ஆண்டு நாராயணன் அவர்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் மாற்றலாகி சென்றார்கள் . அப்போது ஊழியர்கள் கூட்டத்தில் பேசியது)

அர்ப்பணிப்பும் தியாகமுமே வாழ்வின் அடையாளமாய் வாழ்ந்து காட்டிய தோழரை எந்நாளும் மறவோம்.

தோழர் நாராயணன் அவர்களுக்கு செவ்வணக்கம்
  

விவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம் ரூ.180 மெகா பருப்பு ஊழல்

 இன்றைய தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி. 

 மோடி நேர்மையானவர் என்று 
இனிமேலும் சொல்ல முடியுமா?




புதுதில்லி, நவ.20-பருப்பு விலை உயர்வு குறித்தபிரச்சனை மீண்டும் பூதாகரமாக கிளம்ப துவங்கியிருக்கிறது. இப்போது பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பைஇருப்பு வைத்துக் கொள்வதற்காக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம் திடீரென விதிமுறைகளை தளர்த்தியது போன்ற விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், மிகப் பெரும் பருப்பு ஊழல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டினை அகில இந்திய விவசாயிகள் சங்கம் எழுப்பியிருக்கிறது.பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து பெரும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதித்ததை தொடர்ந்து, பருப்பு கிலோஒன்றுக்கு வெறும் 40 ரூபாய் மட்டுமே விவசாயிக்கு கொடுத்த பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், அதை வெளி மார்க்கெட்டில் 180 ரூபாய் அதிகம் விலைவைத்து மொத்தம் 220 ரூபாய்க்குவிற்று பல்லாயிரம் கோடி ரூபாய்கொள்ளையடித்தன; இதற்கு மத்திய அரசு உறுதுணையாக நின்றது என இந்த மெகா பருப்புஊழலை விளக்குகிறது விவசாயிகள் சங்கம்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 17 அன்று தில்லியில் அதன் தலைவர் அம்ரா ராம் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாய நிலைமை குறித்து இந்தக் கூட்டம் விரிவாக ஆய்வு செய்தது. தமிழகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்கள் சமீபத்திய கனமழை - வெள்ளம் காரணமாக மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மறுபுறத்தில் நாட்டின் மொத்தமுள்ள 676 மாவட்டங்களில் 302 மாவட்டங்கள் வரலாறு காணாத வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. மிகப் பெருமளவில் பயிர்கள்கருகிப் போனதால் விவசாயிகள் துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.இத்தகைய பின்னணியில்தான் மிகப்பெருமளவில் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை கொள்முதல் செய்த தனியார் பெரும் கம்பெனிகள், விவசாயிக்கு கொடுத்ததை விட5 மடங்கு கூடுதலாக விலைவைத்து மக்கள் தலையில் விலையை ஏற்றி விற்று கொள்ளை லாபமடித்த விபரங்களும் வெளியாகியுள்ளன. ஆண்டொன்றுக்கு இந்தியாவில் சுமார் 24 மில்லியன் டன் பருப்பு வகைகள் உட்கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்கின்படி கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உட்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 4 மில்லியன் டன் பருப்பை விற்றவகையில் மட்டும் ஒரு கிலோவிற்கு ரூ.180 கொள்ளையடித்துள்ளன பெரும் நிறுவனங்கள்.இந்த விபரத்தை வெளியிட்டுள்ள விவசாயிகள் சங்கம், இந்தக் கொள்ளையை மத்திய பாஜக தலைமையிலான மோடிஅரசின் ஆதரவோடு நடத்தியபெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பெயர்களையும்வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக மோடியின் மிக நெருங்கிய நண்பரான அதானியின் விவசாய மார்க்கெட்டிங் கம்பெனியான அதானி- வில்மர் நிறுவனம் தனது ‘பார்ச்சூன்‘ நிறுவனத்தின் மூலம்பருப்பு வகைகள் மற்றும் எண் ணெய் வகைகளை விற்பதற்காக பல லட்சம் டன் பருப்பு வகை களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. ஆனால், கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.40மட்டுமே விவசாயிக்கு வழங்கி விட்டு, அதே பருப்பை பாக்கெட் போட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.220 என்ற விலையில் விற்று சம்பாதித்துள்ளது. விலை ஏறும் வரையில் அதானியின் பார்ச்சூன் நிறுவனம் ஒட்டுமொத்த பருப்பு வகைகளையும் பதுக்கியது என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி - வில்மர் மட்டுமின்றி, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், ஐடிசி மற்றும் இதர கார்ப்பரேட் விவசாய வர்த்தக நிறுவனங்களும், பருப்பு இருப்பு வைத்துக் கொள்வதற்கான வரையறையை அரசு தளர்த்தியதை காரணமாகக் கொண்டு, மிகப் பெருமளவில் பதுக்கி விலையை ஏற்றின என்றும், விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே, விவசாயி களிடமிருந்து கூடுதல் பருப்பை கொள்முதல் செய்யப் போவதாக கூறிக் கொண்ட மத்திய அரசு, மிகவும் தாமதமாக ஒரு வாரத்திற்கு முன்பு, 2015 - 16 பருவத்திற்கான துவரம் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4625 என்றும், பாசிப் பருப்பு ரூ.4825 என்றும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அறிவித்துள்ளது. அதாவது விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.46 மற்றும் ரூ.48 என்றஅளவில் மட்டுமே இதில் கிடைக் கும். இதனால் விவசாயிக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக வெறும் ரூ.1 மட்டும் கொடுத்து இதே அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய திட்டமிட் டுள்ளன. அந்த ஒட்டுமொத்த பருப்பையும், அந்த நிறுவனங்கள் பதுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இதனிடையே, உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளை நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் கையாளுகிற மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பினையும், அதே அதானி நிறுவனத்திடமே மோடி அரசு கொடுத்துவிட்டதும் என்பதும் கவனிக்கத்தக்கது.

2014 - 15ம் ஆண்டில் இந்தியாவின் பருப்பு உற்பத்தி மொத்தம் 17.20 மில்லியன் டன்னாக வீழ்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 19.25 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உற்பத்தியானது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக நடப்பு நிதியாண்டில் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு வெளிநாடுகளி லிருந்து பருப்பு இறக்குமதி செய் திட அரசு உத்தரவிட்டது.இது அக்டோபர் மாத இறுதி யில் நடந்தது. ஆனால் அதற்கு முன்பே அக்டோபர் இரண்டாவது வாரத்தில், நாட்டின் அனைத்து துறைமுகங்களிலும் வந்திறங்கும் பருப்பை கையாளுகிற பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப் படைக்கப்பட்டுவிட்டது. இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்கம்என்ற அமைப்புடன் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொரு ளாதார மண்டலம் எனும் மிகப் பெரும் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் படி நாட்டின் 7 துறைமுகங்களில் அதானி நிறுவனம் சொந்தமாக வைத்துள்ள துறைமுக டெர்மினல் களுக்கே வெளிநாடுகளின் பருப்பு வந்திறங்கும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முந்த்ரா, டாகெஜ், கண்ட்லா, கஜீரா (இவைநான்கும் குஜராத்தில் உள்ளன),தம்ரா (ஒரிசா), மர்மகோவா (கோவா) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய 7 துறைமுகங்களிலும் பருப்பு இறக்குமதி கையாளப்படும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது. குறிப்பாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும்கருங்கடல் பிரதேச நாடுகளி லிருந்து சுமார் 5 மில்லியன் டன் பருப்பு, மேற்படி அதானி குழும துறைமுகங்களுக்கு வந்து சேரும் என்றும் இறுதி செய்யப்பட்டது. இந்த பருப்பை கிலோ ஒன்றுக்கு ரூ.185 விலையில் சில்லரை சந்தையில் விற்பனை செய்யவும் அதானி குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே பருப்பு விலை எந்த விதத்திலும் இறங்காமல் விண்ணிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. 

ஒட்டுமொத்த பருப்பும் தற்போது அதானி நிறுவனத்தின் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த பருப்பை கொண்டு, அதானி குழுமம் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது; திட்டமிட்டு உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி தீக்கதிர் 21.11.2015

Friday, November 20, 2015

“குமுதம்” கதையின் பின்னணி





கடந்த வார குமுதம் இதழில் பிரசுரமான எனது ஒரு பக்க கதையை 16.11.2015 அன்று பதிவிட்டிருந்தேன். அதன் பின்னணியை நாளை சொல்வதாகவும் எழுதியிருந்தேன்.

ஆனால் அதற்கான அவகாசம் இன்றுதான் கிடைத்தது.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் எனக்கு ஒரு மணி ஆர்டர் வந்துள்ளதாகவும் அதை மறுநாள் காலை தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தபால்காரர் சொல்லி விட்டுச் சென்றார் என்று சொன்னார்கள்.

மறுநாள் காலை சென்றால் அது குமுதம் பத்திரிக்கையிலிருந்து வந்த நூறு ரூபாய். நான் குமுதம் பத்திரிக்கைக்கு எதுவும் எழுதி அனுப்பாதபோது எதற்கு பணம் அனுப்பியுள்ளார்கள் என்று குழப்பம் வந்தது.

வாராவாரம் குமுதம் வாங்குவதோடு சரி. ஒரே ஒரு தொடர்பு என்னவென்றால் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அவசியமில்லை என்று எனது வலைப்பக்கத்தில் எழுதியதை எடுத்து பிரசுரித்து இருந்தார்கள். அதற்காக 750 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள். அந்த தொகையையும் கூட எங்கள் சங்க இதழான Insurance Worker க்கு நன்கொடையாக அனுப்பி விட்டேன்.

பிறகு குமுதம் அலுவலகத்திற்கு ஒரு இரண்டு முறை தொலைபேசி செய்து விசாரித்த போது ஒரு குறிப்பிட்ட இதழில் எனது ஒரு பக்க கதை வந்திருப்பதாக சொன்னார்கள். அதனை புரட்டிப் பார்த்தால் அந்த கதையை எழுதியவர் பெயரும் எஸ்.ராமன்.

அவருக்கு போக வேண்டிய தொகை எனக்கு வந்து விட்டது. ரிப்போர்ட்டர் கட்டுரையால் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன். அந்த தொகையை மீண்டும் குமுதம் அனுப்பி விட்டேன்.

அந்த அனுபவத்தையே கொஞ்சம் கற்பனை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதத்திற்கே அனுப்பி வைத்தேன். அதுவும் பிரசுரம் ஆனது.