Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

Friday, November 21, 2025

குற்ற உணர்ச்சியா நீதி(அற்ற) அரசர்களே!


 
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனர்களுக்கோ எந்த காலவரையும் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்து ஆரெஸெஸ் ரெவி போன்ற ஆட்டுத்தாடிகள் தங்கள் அயோக்கியத்தனத்தை தொடர ஊக்க டானிக் கொடுத்த தீர்ப்பை எழுதிய நீதியரசர் யார்?

தெரியாது.

யார் எழுதியது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

ஒருவருக்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வென்றால் அத்தீர்ப்பை எழுதிய ஜட்ஜ் யார் என்பது அதிலே குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆனால் ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த இத்தீர்ப்பில் அந்த விபரம் சொல்லப்படவில்லை.

ஏன்?

ஜனநாயகத்திற்கு எதிராக, ஆட்டுத்தாடிகளின் அராஜகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கிறோம் என்ற குற்ற உணர்வா?

இதற்கு முன்பும் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம். மசூதிக்கு கீழே ராமர் கோயில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதியை இடித்த கிரிமினல் குற்றவாளிகளிடமே பாபர் மசூதி நிலத்தை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்படைத்த அந்த ஐவர் அமர்வு தீர்ப்பிலும் யார் எழுதியது என்பது சொல்லப்படவில்லை.

இதுதான் உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படைத்தான்.

"ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யறான்" என்ற ரஜினி பட பஞ்ச் வஜனம் போல கடவுளைக்கேட்டேன், அவர் உத்தரவிட்டதை எழுதினேன் என்று மோடியை வீட்டுக்கு அழைத்து பூஜை செய்ய வைத்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்  பின்னாளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது வேறு கதை. . . .

REASONABLE TIME தான் பிரச்சினை ஜட்ஜய்யா . . .

 


எப்போதாவது நீதித்துறை மீது சின்னதாக மொட்டு விடுவது போல நம்பிக்கை மலர்ந்தால், உடனடியாக நம்மை செருப்பால் அடிப்பது போல "உன்னை எவன்டா எங்களை நம்பச் சொன்னது?" என்று ஒரு தீர்ப்பு கொடுத்து விடுவார்கள் நம்ம ஜட்ஜய்யாக்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு அரசு சட்ட மன்றத்தில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமலோ அல்லது மறுக்காமலோ, திருப்பி அனுப்பாமலோ நிலுவையிலேயே வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் குடியரசுத் தலைவரோ, ஆளுனரோ முடிவெடுத்தே ஆக வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரை நிர்ணயிக்க முடியுமா என்று ஒன்றிய அரசு, ஜனாதிபதி மூலமாக உச்ச நீதிமன்றத்தை அணுக, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

எந்த ஒரு மசோதா மீதும் முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனருக்கோ காலவரை எல்லாம் நிர்ணயிக்க முடியாது என்பதுதான் அத்தீர்ப்பு.

இதன் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மசோதாவை நியமனம் மூலம் பதவிக்கு வரும் ஆளுனர் தன் இஷடத்திற்கு இழுத்தடிக்க ராஜபாட்டை போட்டுக் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். ஜனநாயக முறைப்படி எடுக்கப்பட்ட ஒரு முடிவை ஆளுனர் எச்.ராசாவின் ஹைகோர்ட்டாக கருத வழி வகுக்கப்பட்டுள்ளது.

இதிலே போனா போகுது என்று ஒரு வரி சொல்லப்பட்டுள்ளது.

ஒரு நியாயமான காலவரைக்குள் (REASONABLE TIME) க்குள்  ஆளுனர் முடிவெடுக்க  வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் ஒரு வரையறைக்குள் தலையிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.



ஐய்யா நீதிபதிகளே, நியாயமான காலவரை என்றால் என்ன என்பதையும் நீங்க சொல்லி இருக்கலாமே! மாநில அரசுக்கு நியாயமான காலவரை என்று தோன்றும் காலவரை, ஆளுனருக்கு தோன்றாதே!

மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய பின்பும் அதனை வருடக் கணக்கில் தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி நிலுவையில் வைத்திருந்ததால்தானே, பிரச்சினை உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

முன்பு அரசியலில் ஓய்வு பெற்றவர்கள் ஆளுனர் ஆனார்கள். மோடியின் ஆட்சிக்காலத்திலோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்யவே அயோக்கியர்களை பொறுக்கி எடுத்து ஆளுனர்களாக்குகின்றனர்.

அந்த இடையூறு அரசியலுக்கு உகந்ததாகவே நீங்கள் தீர்ப்பளித்துள்ளீர்கள், என்ன செய்ய? நீங்கள் தீர்ப்பு எழுதவில்லையே, பணி ஓய்வுக்கு பிந்தைய பதவிகளுக்கான விண்ணப்பங்களைத்தானே எழுதுகிறீர்கள்.

பிகு 1 : இது நியாயமான தீர்ப்பில்லை என்று அவர்களுக்கும் தெரிகிறது. அதனால்தான் ?????????? . கேள்விக்குறிகளுக்கான விளக்கத்தை மாலை எழுதுகிறேன்.

பிகு2 : இன்னொரு மோசமான தீர்ப்பும் தரப்பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை . . .

Tuesday, July 18, 2023

புதிய INDIA வெல்லும்

 


இன்று பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

Indian National Developmental, Inclusive Alliance   என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கூட்டணி நிச்சயம் வெல்லும்.

 

பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும் பின்னணியில் 38 கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டுவதும் 






INDIA  என்ற பெயரைக் கண்டு புலம்புவதுமே சங்கிகளின் பதற்றத்தை காண்பிக்கிறது.

 

ஒன்பது ஆண்டு காலமாக இந்தியாவை பீடித்திருக்கும் பாசிச, மத வெறி, தரகு கிரகணம் அகன்று ஜனநாயக ஒளி பரவட்டும்.                                 

 

Thursday, May 25, 2023

நாடாளுமன்றக் காவலர்கள்

 


கடந்த ஒன்பது வருடங்களாக நாடாளுமன்றத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது.

பிரதமராக உள்ளவர் நாடாளுமன்றத்தை எச்.ராசாவின் ஹைகோர்ட்டாகவே மதிக்கிறார் என்பதை முந்தைய பதிவு சொல்லும்.

எந்த ஒரு மசோதாவும் விவாதிக்கப்படுவதில்லை.
எந்த ஒரு பிரச்சினையும் எழுப்ப அனுமதிக்கப்படுவதில்லை.
அரசுக்கு எதிரான பேச்சுக்கள் எல்லாம் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.
எந்த ஒரு மசோதாவும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு செல்லாது.

மொத்தத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது டிமோவின் ஆட்சிக் காலத்தில் உயிரிழந்து விட்டது.

காந்தி கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பயங்கரவாதி கோழை சாவர்க்கரின் பிறந்த நாளன்று திறக்கப்படும் கட்டிடம் என்பது நாடாளுமன்றக் கட்டிடம் அல்ல.

உயிரற்ற ஓர் எலும்புக்கூடு.

அதன் திறப்பு விழாவை புறக்கணிப்பவர்களே நிஜமான நாடாளுமன்றக் காவலர்கள்.  

Wednesday, May 17, 2023

நந்தவனத்து ஆண்டியாகாதீர் காங்கிரஸாரே!

 


வாராது வந்த மாமணியாய் வந்துள்ளது கர்னாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி.

முடிவுகள் வந்த சனிக்கிழமையன்று பெங்களூரில்தான் இருந்தேன். பெரிய அளவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. 

நாங்கள் அன்று சென்ற ஓலா டாக்ஸியின் ஓட்டுனர், பயண நேரம் நாற்பத்தி ஐந்து நிமிடம் முழுதும் பாஜகவின் தோல்வி குறித்து யாரிடமோ அலைபேசியில் புலம்பிக் கொண்டே வந்தார். ஸ்ரீராமுலுவை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லியிருந்தால் கோடிக்கணக்கில் பணத்தை வாரி விட்டு  பாஜகவை ஜெயிக்க வைத்திருப்பார். யெடியூரப்பாவை விட அவர் ஒன்றும் ஊழல் பேர்வழி கிடையாதே என்றெல்லாம் அவர் புலம்பல் அமைந்திருந்தது.

ஆனாலும் அவரிடம் ஒரு நம்பிக்கையும் இருந்தது. காங்கிரஸ் கட்சியினர் சண்டை போட்டுக் கொண்டு ஆட்சியை ஒரு வருடத்தில் நம்மிடமே கொடுத்து விடுவார்கள் என்பது அவரது நம்பிக்கை. கர்னாடகத்திலும் ஏக்நாத் ஷிண்டே கிடைப்பார் என்பது மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகளின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை நிஜமாகிடுமோ என்ற அச்சத்தை முதல்வர் தேர்வுக்கான இழுபறி அளிக்கிறது.

பாஜக தோற்க முடியாத கட்சி அல்ல என்ற நம்பிக்கையை நாடு முழுவதற்கும் அளித்தது கர்னாடக வெற்றி.

நந்தவனத்து ஆண்டி போல இந்த வெற்றியை போட்டுடைத்தால் அதன் பாதிப்பு நாடு முழுதும் எதிரொலிக்கும்.

ஆகவே காங்கிரஸாரே, பெற்ற வெற்றியை தக்க வைக்க உங்கள் கட்சிக்குள் ஒற்றுமையை முதலில் தக்க வையுங்கள்.

2024 ஐ மனதில் கொண்டு செயல்படுங்கள்.


Thursday, March 23, 2023

போஸ்டரை கிழி, மோடியை . . . .

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்க்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.


மோடி ஹட்டாவ்!

மோடியை வெளியேற்றுவோம்; தேசத்தை பாதுகாப்போம்னு ( மோடி ஹட்டாவ்; தேஷ் பச்சாவ் ) போஸ்டர் போட்டதற்காக அமித்ஷாவின் டெல்லி போலீஸ் 100 எஃப்ஐஆர் போட்டிருக்கு.6 பேரை கைது செய்திருக்கு.

இதை எதிர்த்து போஸ்டரை கிழிப்போம்; மோடியைக் காப்பாற்றுவோம் (போஸ்டர் ஹட்டாவ்; மோடி பச்சாவ்)னு கார்ட்டூன் போட்டு கிழிச்சிக்கிட்டு இருக்காங்க.




Annamalai யும்
BJP Tamilnadu உம்
DMK - Dravida Munnetra Kazhagam க்கு ஜனநாயகப்பாடம் எடுத்துக்கிட்டிருக்காங்க.

Tuesday, March 21, 2023

மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 



 

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் நாடாளுமன்றத்தில் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்திய ஜனநாயகத்தைப் பற்றி அவர் வெளி நாட்டில் பேசியதாக அவர்கள் காரணம் சொல்கிறார்கள்.

 

ராகுல் பேசியது வெளிநாடாக இருக்கலாம்.

 

இதோ உள்நாட்டிலேயே இந்திய ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.

 

கீழே உள்ள பத்திகளை முதலில் படியுங்கள்.

 

********************************************************************************************

 

 ஆட்சியாளர்களால் இந்திய ஜனநாயகம் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புக்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. சில அமைப்புக்களோ தங்களை ஆட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொண்டு விட்டன. முதலாளிகள் கட்டளையிடும் செயல்திட்டங்களை எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றும் இடமாகவே நாடாளுமன்றம் மாறி விட்டது. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அடிப்படை உரிமைகளை முடக்குவதால் இந்திய அரசியல் சாசனமே கறை படிந்து காட்சியளிக்கிறது

 

**************************************************************************************

 

பண மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றில் இருந்தே இந்தியப் பொருளாதாரம் சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. 2019-20 ஆண்டின் 3.1% உயர்வுதான் ஆறரை ஆண்டுகளின் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம்தான். மதியற்ற, பயனற்ற  கதவடைப்பு முடிவின் காரணமாக, பொருளாதாரம் சரியத் தொடங்கியது. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டதால் 2020-21 ல் ஒட்டு மொத்த உற்பத்தியில் 7 % சுருங்கியது. பண மதிப்பிழப்பு ஜி.எஸ்.டி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிறுதொழில் துறை ஒழுங்காக திட்டமிடப்படாத கதவடைப்பின் மூலம் முற்றிலுமாக அழிந்து போனது. லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்தனர்.

 

 **************************************************************************************

 

ஜனநாயகம் என்பது வெறுமனே தேர்தல்களை நடத்துவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ள  சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவையே உண்மையான ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்பது முடிவெடுக்கும் நடைமுறைகளில் மக்களையும் ஈடுபடுத்துவதாகும்.உண்மையான ஜனநாயகம் என்பது ஆட்சியில் உள்ளவர்களை கேள்வி கேட்பதும் அவர்களின் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பாக்குவதாகும். உண்மையான ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களையும் சமமாக கருதுவதும் யாருக்கும் சிறப்பு அந்தஸ்து தராமல் இருப்பதுமாகும்.

 

 

ஜனநாயகம் இன்று பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. அனைத்து மசோதாக்களும் ஆளும் கட்சியின் மிருக பலம் மற்றும் மோசடி உத்திகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்கும் வாய்ப்பே தரப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன. இதன் மூலம் முடிவெடுக்கும் நடைமுறையில் மக்களின் பங்கேற்பு நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. எந்த வித பாகுபாடும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக தேர்தல்களை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் எடுக்கிற பல முடிவுகள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமாகவே அமைகிறது. பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தாமல் தவிர்த்து வரும் உச்ச நீதிமன்றத்தின் போக்கு அவ்வமைப்பின் பாகுபாடற்ற தன்மை குறித்தே சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற ஊடகங்கள், அவை அச்சு ஊடகங்களோ அல்லது காட்சி ஊடகங்களோ பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. அவை ஆளும் கட்சிக்கு சேவை செய்வதையும் எதிர்கட்சிகளை சிறுமைப்படுத்துவதையுமே வழக்கமாகக் கொண்டுள்ளன.

 

 

இந்த ஜனவரி மாதம், கொல்கத்தாவில் நடைபெற்ற  எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பகுதிகள்தான் மேலேயுள்ள  பத்திகள்.

 

இவற்றில் எதையாவது மோடியாலோ அல்லது முட்டாள் சங்கிகளாலோயோ மறுக்க முடியுமா?

 

இந்திய ஜனநாயகம் இன்று கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது.

 

அதனால் மன்னிப்பு கேட்க வேண்டியது மோடிதான் . . .

 

 

Tuesday, February 21, 2023

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை . . .

 


நீங்கள் தமிழ்நாட்டு மக்கள், எங்களுக்கு ஓட்டு போடாமல் எங்களை தோற்கடித்தீர்கள். நாங்கள் ஜெயித்திருந்தால் அமைச்சராகி இருப்போம். இருந்தாலும் எங்கள் திறமையை புரிந்து கொண்ட மோடி எங்களை கவர்னராக்கினார். 

இது தமிழிசை அம்மையார் உதிர்த்த பொன்மொழி

தோற்றுப் போன எல்.முருகனை மந்திரியாக்கினார் என்பதை அவருக்கு நினைவு படுத்தி, மக்களால் நிராகரிக்கப்பட்ட உங்களை கவர்னராக்கியது பெருமை அல்ல, உங்களை நிராகரித்த ஜனநாயக நடைமுறைக்கு செய்யப்படும் அசிங்கம். ஆணவம்.

இதே அசிங்கத்தை இதர கட்சிகள் கூட சில முறை செய்துள்ளனர் என்பது இந்திய ஜனநாயகத்தின் களங்கம்.

Wednesday, January 18, 2023

அரசாணை 1 - அராஜகம்

 


ஆந்திரப் பிரதேச அரசு தனது அரசாணை 1 ன் மூலம் மாநிலத்தில் யாரும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள் என எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது. அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க அரசு உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்டது.

சந்திரபாபு நாயுடு கூட்டத்தின் நெரிசலில் உயிரிழப்பு காரணமாக இத்தடை என்று சொல்லப்படுகிறது.

நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சில விதிகளை கொண்டு வருவதற்குப் பதிலாக ஒட்டு மொத்த தடை என்பது அராஜகம், ஜனநாயக விரோதம், 

Tuesday, December 13, 2022

ஜனநாயகம் என்பது . . .

 


எங்கள் சங்க மாத இதழான “இன்சூரன்ஸ் வொர்க்கர்” டிசம்பர் 2022 இதழின் அட்டைப்பட செய்தி மிகவும் கவர்ந்தது. அர்த்தம் நிறைந்தது, ஆழமானது.

 அதனால் அதை தமிழ்ப்படுத்தி இங்கே பகிர்ந்து கொள்கிறேன். . .



Thursday, June 3, 2021

புதுவைக்கு பொங்குங்கய்யா

 


தமிழக அரசை கலைக்க வேண்டும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவர் பதவியேற்ற நாள் முதலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதே நேரம் புதுவை பற்றி அவர்கள் வாய் திறப்பதே இல்லை.

 புதுவையில் ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றாரே தவிர அங்கே அமைச்சரவை இன்னும் பதவியேற்றகவில்லை.

 முதலமைச்சரும் கொரோனா தொற்று என்று கதவை சாத்திக் கொண்டு விட்டார்.  பத்து தொகுதிகளில் ரங்கசாமி காங்கிரஸும் ஆறு தொகுதிகளில் பாஜகவும் வென்றது. மூன்று பாஜக காரர்களை நியமன எம்.எல்.ஏ க்களாக்கி ஆறை ஒன்பதாக்கினார்கள். மூன்று சுயேட்சைகளை சேர்த்து ஒன்பதை பனிரெண்டாக்கி, உங்களை விட நாங்கள் இரண்டு அதிகம் என்று சொல்ல, முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்றவற்றை விட மருத்துவமனையே பாதுகாப்பானது என்று முதல்வர் நினைக்கிறார் போலும்.

 அங்கே ஆட்சி என்ற ஒரு நடைபெறவே இல்லை என்பதைப் பற்றி சங்கிகள் கவலைப்பட மாட்டார்களா? ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்ல மாட்டார்களா?

 உண்மையில் அந்த முதல்வர் பதவியை அவரிடமிருந்து பறிக்கவே முயல்கின்றனர் என்பதுதான் உண்மை. ராஜினாமா செய் என்று சொல்லாமல் அதற்கான நிலைமையை அவருக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்ககள் என்பதும் உண்மை.

 ரங்கசாமிக்கும் இது தேவைதான்.

 

Tuesday, December 15, 2020

கூடாவிட்டால் குடி முழுகாது

 


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கப் போவதில்லை என்று மோடி அரசு முடிவெடுத்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் அவையில் எதிரொலிக்கக் கூடாது என்ற அச்சம் இம்முடிவின் பின்னணியில் உள்ளது. ஜனநாயகத்தை முடக்கும் இன்னொரு நடவடிக்கை இது.

இருந்தாலும் இக்கூட்டத் தொடர் நடக்காதது நல்லது என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால்

கடந்த தொடரில் இந்த அரசு

தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புக்களாக மாற்றியது.

மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.

மாநிலங்களில் வாக்கெடுப்பு நடத்தவில்லை.

இந்த அரசு இது வரை மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. தன்னுடைய மிருக பலம் கொண்டு மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்ற மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளது. விவாதத்திற்கோ நிலைக்குழு பரிசீலனைகளுக்கோ வாய்ப்பில்லாமல் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தாக்குதல்கள் அடுத்த பட்ஜெட் தொடர் வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.

கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் ஒன்றும் குடி முழுகிப் போகப் போவதில்லை. அடுத்த தொடர் வரை மக்கள் உயிர் வாழ்வது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றம் கூடினாலும் ஜனநாயத்தை படுகொலை செய்பவர்கள் இப்போது கூடாமல் செய்துள்ளார்கள். 

Thursday, April 16, 2020

ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான குரல்களை முடக்குவது . . .




தலித் அறிஞரும் இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளில் ஒருவருமான ஆனந்த டெல்டும்டே, மும்பையில் தேசிய புலனாய்வு முகமையின் முன்பு சரணடைய அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 129 வது பிறந்த நாளை நாடு கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அவரது கொள்ளுப் பேரன் கைது செய்யப்பட்டது என்பது மிகப் பெரிய முரண் நகை. அதே போல இன்னொரு சமூக ஆர்வலரான கௌதம் நாவல்கே, டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ வில் சரணடைய அவரும் கைது  செய்யப்பட்டுள்ளார். அவர்களது முன்பிணை விண்ணப்பங்களை உச்ச நீதி மன்றம் ஏற்க மறுத்து சரணடையுமாறு அறிவுறுத்தியதால் அவர்கள் சரணடைந்தார்கள்.

தலித், ஆதிவாசி மற்றுமுள்ள விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுக்கும் இந்த இரண்டு சமூக செயற்பாட்டாளர்களும்  “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” என்ற கொடும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 01,ஜனவரி,2018 அன்று மகாராஷ்டிராவில் உள்ள பீமா கொரேகானில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீண்டினார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது. முன்னதாக இன்னும் ஒரு ஒன்பது சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு வருடத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டு எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் வாடுகிறார்கள்.  ஆனால் நிஜமாகவே யார் வன்முறையை தூண்டினார்களோ, இந்த ஆட்சியின் ஆதரவாளர்களாக இருக்கிற அவர்கள்  சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என்பதையும் நாம் பார்ப்பது முக்கியம்.

இந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நம்பகத்தன்மையுடனான எந்த ஒரு சாட்சியத்தையும் அளிக்க பூனா காவல்துறை தவறி விட்டது. இதனை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாறுபட்ட தீர்ப்பை அளிக்கையில் நீதியரசர் சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை மறு ஆய்வு செய்ய புதிய மஹாராஷ்டிர அரசு முடிவு செய்த போது மத்தியரசு தந்திரகரமாக இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்து விட்டது.  அரசு இயந்திரத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகப்படுத்துவதாகும். ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளை கையிலெடுப்பவர்கள்,  குரல் கொடுப்பவர்கள் ஆகியோரை அரசு பழி வாங்கும் நடவடிக்கையாகும்.

பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற தீவிரமான குற்றச்சாட்டை புலனாய்வு அமைப்புக்களால் எப்படி இவ்வளவு சாதாரணமாக கையாள முடியும் என்பது மிகவும் வினோதமாகவே உள்ளது. சதித்திட்டம் குறித்த தகவல்கள் ஏன் தேசத்திடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை? வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? அரசு அவர்களின் குரல்களை ஒடுக்கி, பிணை கூட கிடைக்க வாய்ப்பில்லா கொடுஞ்சட்டங்களில் வழக்கு பதிவு செய்து அவர்களின் உறுதியை தகர்க்க வேண்டும் என்று விரும்புவதாகவே தெரிகிறது. நகர்ப்புற நக்ஸல்கள், துக்டே, துக்டே கும்பல் ஆகிய சொற்றொடர்களை ஆட்சியின் உயர் பீடத்தில் உள்ளவர்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர்.  ஆனால் தகவலறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் விசித்திரமானது. நகர்ப்புற நக்ஸல்கள் யார் என்றோ துக்டே துக்டே கும்பல்கள் எப்படி அமையும் என்பது பற்றியோ தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று பதிலளித்துள்ளார்கள்.

கடந்த சில வருடங்களாகவே ஜனநாயகமும் ஜனநாயக உரிமைகளும் திட்டமிட்டு  தாக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடு என்பது தேசத்துரோகமாக சித்தரிக்கப்படுகிறது. பிரதமருக்கு எதிராகவோ அல்லது வேறு சில முதல்வருக்கு எதிராக பேசுபவர்கள் மீது தேசத் துரோக வழக்கு புனையப்படுகிறது. அரசை ஏற்றுக் கொள்ளாதவர்கள்  தேச விரோதிகள் என்று மிக சுலபமாக முத்திரை குத்தப்படுகிறார்கள். அதனால்தான் உலக அளவிலான ஜனநாயகக் குறியீட்டில் (Global Democracy Index) ல் இந்தியா பத்து புள்ளிகள் சரிந்து ஐம்பத்தி ஒன்றாவது இடத்திற்கு வந்ததில் எந்த வியப்பும் இல்லை.

ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் இதர சமூக செயற்பாட்டாளர்கள் அற்பத்தனமான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து பொய்க்குற்றச்சாட்டு புனையப்பட்டவர்களுக்கு துணை நிற்பது அவசியமாகும். நியாயமான வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு அந்த சமூக செயற்பாட்டாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்றால் அவர்கள் சீக்கிரமாகவே விடுவிக்கப்பட வேண்டும் என்று நாம் கோர வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்காவிட்டால், நாடு எதேச்சாதிகாரத்தின் வசம் செல்வதை தடுக்காவிட்டால் அது மக்களின் அரசியல் சாசன உரிமைகளுக்கு மட்டுமல்ல, தேச நலன்களுக்கே ஆபத்தானது என்பதையும் நாம் அழுத்தமாக சொல்வது அவசியமா என்ன!

-         இன்சூரன்ஸ் வொர்க்கர் மே 2020
தலையங்கத்தின் தமிழாக்கம்

பிகு : மேலே உள்ள ஓவியம் தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது


Thursday, October 10, 2019

துரதிர்ஷ்டவசமாக இதுதான் உண்மை



அரசியல் சாசனம் கொடுத்துள்ள பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பறிக்க வேண்டுமென்ற ஆட்சியாளர்கள் உள்ள எல்லா நாட்டிலும் இதுதான் உண்மை.

இந்தியாவிலும் கூட . . .

Thursday, May 9, 2019

இது நிஜமான சோதனைக் காலம்


இந்திய ஜனநாயகத்திற்கு சோதனைக் காலம்



புதிய அரசை உருவாக்க வாக்களிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஏழு கட்ட தேர்தலாக  11 ஏப்ரல் 2019 அன்று துவங்கிய வாக்குப்பதிவு 19, மே,2019 அன்று நிறைவடைய உள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடி முற்றியுள்ள, இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் உள்ள பின்னணியில் நடைபெறும் தேர்தல் இது.  வேலையின்மை, விவசாய நெருக்கடி, பண வீக்கம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அரசியல் கட்சிகளின் பார்வை என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களின் முடிவை எடுக்கலாம் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமரின் தலைமையில் ஆளும் கட்சி, மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும்  இப்பிரச்சினைகள் குறித்து பேசாமல் தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தது ஏமாற்றமளித்தது. கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் குறித்து பதிலளிக்கும் பொறுப்பு தனக்கில்லை என்று பிரதமர் கருதுகிறார். எனவே ஒட்டு மொத்த பிரச்சாரமும் மத ரீதியிலான அணி சேர்க்கையாகவும் போலி தேசியவாதத்தை உசுப்பேற்றி விடுவதுமாகவே இருந்தது. இத்தேர்தலில் கண்ட அளவிற்கு முன்பு எக்காலத்திலும் பிரச்சாரம் தரம் தாழ்ந்ததாக இருந்திடவில்லை.

அரசியல் என்பது இப்போது மக்களுக்கான சேவையாகவோ அல்லது தொலை நோக்குப் பார்வையுடன் சமூகத்தை கட்டமைப்பதாகவோ இல்லை. அரசியல் இப்போது அதீத லாபம் கொழிக்கும் துறையாக மாறி விட்டது. தேசத்தின் ஒற்றுமையே பாதிக்கப்பட்டாலும் கூட கவலையில்லை, எப்படியாவது தேர்தலில் வென்றால் போதும் என்று நிலைமை மாறி விட்டது. இத்தேர்தலின் போது நாம் பார்த்த சில போக்குகள் கவலையளிக்கின்றன. அவை காலப்போக்கில் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அபாயமாக உருவெடுக்கும். அரசு இயந்திரத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்து  தன் அரசியல் போட்டியாளர்களை மிரட்டுவது என்பது அப்படிப்பட்ட நிகழ்ச்சிப் போக்குகளில் ஒன்று. ஆளும் கட்சிகள் அரசு இயந்திரங்களை எப்போதுமே தவறாகத்தான் பயன்படுத்தி வந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் இப்போதைய அளவோ முன்னெப்போதையும் விட பல மடங்கு அதிகமானது, முன்னெப்போதும் காணாதது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான வருமான வரி சோதனைகள், அமலாக்கப்பிரிவு நடவடிக்கைகள் ஆகியவை எல்லாம் நிச்சயமாக மிரட்டல் நடவடிக்கைகள்தான். வலிமையில்லாமல் கிடக்கிற தேர்தல் ஆணையமே இந்த அமைப்புக்களை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிற அளவிற்கு சென்று விட்டது.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, வாக்காளர்களும் கூட மிரட்டப்படுகின்றனர். வாக்குச்சாவடிகளில் மோடி காமெராக்களை நிறுவியுள்ளார், பாஜகவிற்கு யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என குஜராத்தில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மிரட்டுகிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் அவர்களின் கோரிக்கைகளை பொருட்படுத்த மாட்டேன் என்று மேனகா காந்தி சிறுபான்மையினரை எச்சரிக்கிறார். யாருக்காக ஒரு அரசு செயல்பட வேண்டும் என்ற அடிப்படையான கேள்வியை இது எழுப்புகிறது.  ஒரு அரசு அனைத்து குடிமக்களுக்காக பணியாற்ற வேண்டுமா? அல்லது வெற்றி பெற்ற கட்சியின் ஆதரவாளர்களுக்காக மட்டுமா? எங்களுக்கு வாக்களித்தவர்களுக்காக மட்டுமே நாங்கள் பணியாற்றுவோம் என்று சட்டமியற்றுபவர்கள் கூறினால் அதுவே ஜனநாயகத்தை கொன்று விடும்.

இது வரை காணாத வெறுப்புப் பிரச்சாரம், இத்தேர்தலில் நாம் கண்ட இரண்டாவது போக்கு. பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சிக்கான திசை வழியை முடிவு செய்வதுதான் தேர்தலின் நோக்கம். ஆனால் இத்தேர்தல் அலி க்கும் அனுமானுக்குமான மோதலாக மாறும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. இன்று அலி, அனுமான் இருவருமே வேலையின்மை, விலையேற்றம், கிராமப்புற நெருக்கடி ஆகிய பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார்கள். அனைத்து சமுதாயத்தினருடைய அன்றாட வாழ்வை பாதிக்கிற உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே மத வெறி அரசியல் பயன்படுகிறது. மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கும் எதிர்க்கட்சிகளின் செயல்களையும் நம்மால் மன்னிக்க முடியாது என்பதிலும் நாம் தெளிவாக இருப்போம். பெண்களை இழிவுபடுத்துகிற பல பாலியல் ரீதியிலான சொற்களையும் அணுகுமுறையையும் பல தலைவர்களும் வேட்பாளர்களும் கையாண்டதையும் பிரச்சாரத்தில் பார்க்க முடிந்தது.

“அனைவரோடு அரசு, அனைவருக்குமான வளர்ச்சி” என்ற தன் முழக்கத்தை பிரதமர் மோடி மறந்து விட்டார் போல.  தான் இந்தியாவுக்கான பிரதமர் என்பதை அவர் மறந்து விட்டார். தன் கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டுமான பிரதமராக இருந்தாலே போதும் என்று நிறைவடைந்து விட்டார் என்பது போல அவரது நடவடிக்கைகள் உள்ளது. அவர் தன் தேர்தல் உரைகளில் வெளிப்படையாகவே மத ரீதியிலான கருத்துக்களை உதிர்க்கிறார். இதர மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெறுப்பையும் வெளிப் படுத்துகிறார். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் போட்டியிட அச்சப்பட்டே ராகுல் காந்தி சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் வயநாடு தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார் என்று அவர் கூறியது ரசனைக்குறைவானது மட்டுமல்ல, சிறுபான்மையினரும் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அவரது கட்சித்தலைவர் அமித் ஷாவோ, “வயநாடு என்ன பாகிஸ்தானில் உள்ளதா?” என்று வியந்துள்ளார். இது அராஜகம் மட்டுமல்ல மன்னிக்க முடியாத கூற்று. அமித் ஷா, குடிமக்களுக்கான தேசிய பட்டியல் (National  Register for Citizens) பற்றி பேசுகையில் எந்த குழப்பமும் இல்லாமல் மதத்தின் அடிப்படையில்தான் குடிமகன் அந்தஸ்து முடிவு செய்யப்படும் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.  பிரதமரைப் பற்றி பேசுகையில் ராகுல் காந்தியும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்ட அவசியம் உள்ளது.

மூன்றாவதாக இத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் பார்த்த அபாயகரமான போக்கு, நம் பாதுகாப்பு படைகளுக்கு அரசியல் வண்ணம் பூசியது. அரசியல் ஆதாயங்களுக்காக பாதுகாப்புப் படைகள் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கண்டிப்போடு வழிகாட்டினாலும் அதனை மீண்டும் மீண்டும் பிரதமரே மீறிக் கொண்டிருக்கிறார். புலாவாமாவில் உயிர்த்தியாகம் செய்த மத்தியப் பாதுகாப்புப்படை வீரர்களின் பெயரில் வாக்குகளை கேட்கிற பிரதமர், அவர்களின் துரதிர்ஷ்டவசமான மரணத்துக்குக் காரணமான பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க மட்டும் மறுக்கிறார். பிரதமருடைய அணுகுமுறையால் ஊக்கமடைந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ நம் நாட்டின் பாதுகாப்புப் படைகளை “மோடியின் சேனை” என்றழைக்கிறார்.  இவ்வளவு அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிகள் மீறப் பட்டாலும் சக்தி மிக்கவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அஞ்சுகிற அமைப்பாகவே தேர்தல் ஆணையம் உள்ளது.

பாதுகாப்புப் படையினரை அரசியலாக்கும் போக்கு முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. முப்படைகளின் தளபதிகளாக இருந்தவர்கள் உள்ளிட்ட நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் அரசியல் ஆதாயத்திற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தும் போக்கினை தடுத்து நிறுத்த உடனடியாக தலையிட வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இப்புகார் மீது ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுப்பார் என்று தெரியவில்லை. அரசியல் சாசனப் பதவியில் இருந்தாலும் வெளிப்படையாகவே பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஒரு ஆளுனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் அளித்த முன்மொழிவின் மீது எந்த அசைவையும் செய்யாமல் ஜனாதிபதி மௌனம் காத்து வருகிறார்.

இது நாள் வரை காணாத அளவற்ற பண பலத்தின் பயன்பாட்டை இத்தேர்தலில் காண முடிந்துள்ளது.  தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதை சட்டபூர்வமாக்கி விட்டது. அரசியல் கட்சிகளுக்கு யார், எவ்வளவு நிதியை எப்படி அளிக்கிறார்கள் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை வழக்கறிஞர் வாதாடியது அராஜகத்தின் உச்சகட்டம்.  தேர்தல் பத்திரங்களின் மூலமாக கிடைக்கப்பெற்ற நன்கொடைகளில் 95 % பாஜகவிற்குத்தான் சென்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிப்பது பிரதிபலனை எதிர்பார்த்துத்தான் என்பது அனைவரும் அறிந்தது. இது சாமானிய மக்களின் நலனை பாதிக்கும். தற்போதைய நாடாளுமன்றம் அதிகபட்ச கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் கூட போட்டியிடுகிற வேட்பாளர்களில்  பெரும்பான்மையானவர்கள் கோடீஸ்வரர்களே. இந்திய நாடாளுமன்றமும் அரசும் செல்வந்தர்களிடம் சிறைப்பட்டு விட்டது.  எனவே ஜனநாயகத்தைப் பாதுகாக்க, விகிதாச்சார பிரதிநிதித்துவம், அரசு செலவு செய்தல் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடித் தேவையாகும்.

கடந்த ஐந்தாண்டு காலமாக, அரசின் பொருளாதாரக் கொள்கைகளினால் கடுமையான தாக்குதல்களை சந்தித்தவர்கள் உழைக்கும் வர்க்கம்தான். ஆனால் அத்தாக்குதல்களுக்கு எதிர்வினைகள் இல்லாமல் இல்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள் ஆகியோர் நிகழ்த்திய பெரும் திரள் வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல எதிர்ப்பியக்கங்களை தேசம் கண்டது. இந்திய மக்கட்தொகையின் முக்கியமான அங்கமாகிய இவர்கள் தங்கள் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இப்போராட்டங்களை தலைமையேற்று வழி நடத்திய இடதுசாரிகள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்.  இடதுசாரிகள்தான் ஏதுமற்ற ஏழை மக்களின்  குரலாக திகழ்கின்றனர். அக்குரல் நாடாளுமன்றத்தில்  வலிமையாக ஒலிக்க வேண்டும். மத வெறியர்களிடமிருந்தும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாளர்களிடமிருந்தும் நாம் நாட்டை பாதுகாக்க வேண்டும். தேசத்தின் பன்முகத்தன்மையையும் பொருளாதார, சமூக, பாலியல் சமுத்துவ நீதிக்காக உழைக்கும் சக்திகளை ஆதரிக்க வேண்டும்.

“அரசியலில் 
பக்தி மனப்பான்மையும், 
நாயக வழிபாட்டு துதிபாடலும் உருவானால் 
அது நிச்சயமாக ஜனநாயகத்தைச் சிதைத்து 
இறுதியில் 
சர்வாதிகாரத்திற்கே இட்டுச் செல்லும்” 

என்று நீண்ட காலத்திற்கு முன்பே டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். டாக்டர் அம்பேத்கரின் எச்சரிக்கை முன்னைக் காட்டிலும் இன்றைய இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு நிஜமாகவே இது சோதனைக் காலம். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு இந்திய உழைக்கும் வர்க்கத்திற்குத்தான் உள்ளது.

(இன்சூரன்ஸ் வொர்க்கர் மே 2019 இதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)

Friday, January 25, 2019

கொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் முன்


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இந்த நாளிலே சிலருக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொடியேற்று விழாக்களில் கலந்து கொள்ளும் பலருக்கு ஆரஞ்சு மிட்டாயோ அல்லது எக்ளேய்ர்ஸ் சாக்லேட்டோ அல்லது லட்டோ சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.

பெரும்பாலானவர்கள் இந்த நாளை தொலைக்காட்சிகள் முன்பாக செலவழிப்பார்கள்.

கொடியேற்றும் முன்பாக,

மிட்டாய் சாப்பிடும் முன்பாக,

தொலைக்காட்சி முன்பு அமரும் முன்பாக, 

கொஞ்சம் இதைப் படித்து விடுங்கள்.



ஆம் இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

அரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா?

இந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்

இந்திய மக்கள் அனைவருக்கும்

அரசியல், பொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்

கருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்

சம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்

அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்

தனி நபரின் கண்ணியத்தையும்
தேசத்தின் ஒற்றுமையையும்  

பாதுகாப்போம்  என்று 

உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம். 

மேலே சொல்லப்பட்ட அரசியல் சாசன அடிப்படைகளை பாதுகாப்பவர்கள் யார்? அதற்கு எதிராக நிற்பவர்கள் யார்? 

கடந்த ஆகஸ்ட் பதினைந்து அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றியவரோ, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ நிச்சயம் கிடையாது. 

அரசியல் சாசனத்திற்கு எதிரான,
ஜனநாயகத்திற்கு எதிரான,
அரசியல், பொருளாதார, சமூக நீதிக்கு எதிரான,
மக்கள் ஒற்றுமை, மதச் சார்பின்மை, இறையாண்மைக்கு எதிரான 

மோடி வகையறாக்களை முறியடிப்பதே இந்தியாவிற்கு நல்லது. அந்த நல்லதை செய்ய தயாராவோம். அதுதான் இந்த குடியரசு தினத்தன்று நம் முன் உள்ள கடமை.

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் . . .




Friday, May 18, 2018

நாளை 4 மணிக்கு என்ன நடக்கும்?


உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாளை நான்கு மணிக்கு கர்னாடக சட்டப்பேரவையில் யெடீயூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாக வேண்டும்.

நாளை நான்கு மணிக்கு என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு?

பல்லாயிரம் கோடி முதலீட்டில் நடந்து கொண்டிருக்கிற குதிரை பேரம் ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் யெடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம்.

ஒரு வேளை பதினைந்து நாள் அவகாசம் குறைக்கப்பட்டதால் குதிரை பேர முயற்சிகள் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் அப்போது என்னவெல்லாம் நடக்கலாம்?

குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் யெட்டி வெற்றி பெற்றதாகக் கூட தற்காலிக சபாநாயகர் அறிவிக்கலாம். அதற்குத் தகுந்தாற்போலத்தான் ஒரு மோசடிப் பேர்வழியை தற்காலிக சபாநாயகர் அறிவித்துள்ளார் என்பது கவனத்திற்குரியது.

காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப் பேரவையிலிருந்து அடித்து துரத்த ரௌடிகளை சட்டமன்றத்துக்கு உள்ளே பாஜக அனுப்பலாம்.

சட்டப்பேரவைக்கு உள்ளேயே ஏதாவது பிரச்சினையை உருவாக்கி  காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றி விட்டு உள்ளே உள்ள பாஜக உறுப்பினர்களை மட்டும் வாக்களிக்க வைத்து யெட்டி ஜெயித்ததாக அறிவிக்கலாம்.

நீதிபதி குமாரசாமி பாணியில் தற்காலிக சபாநாயகர் தப்புக் கணக்கு கூட அறிவிக்கலாம்.

ஒரு வேளை இந்திய அரசியல் வானில் மிகப் பெரிய அதிசயம் நிகழ்ந்து நேர்மையோடு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் யெட்டி தோற்றுப் போய் ராஜினாமா செய்யலாம். 

காத்திருப்போம்.

நாளை நல்லதே நடக்கும் என்று.




Saturday, March 19, 2016

பாரத மாதாவில் யாரெல்லாம் உண்டு?



ஜெய் ஹிந்த் என்று சொல்வதிலோ ஜெய் ஹிந்துஸ்தான் என்று சொல்வதிலோ எனக்கு தயக்கமில்லை. பாரத் மாதா கீ ஜெய் என்றுதான் சொல்ல மாட்டேன் என்பதால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரத மாதா என்ற வடிவத்திற்குள் யாரெல்லாம் வருவார்கள் என்பதை மோடியோ இல்லை மோகன் பகவத்தோ விளக்கம் சொன்னால் நாமும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்வதா, வேண்டாமா என்று முடிவு செய்து விடலாம்.

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றினால் அவர்களுக்கு மோட்சம் உண்டு, சொர்க்கத்திற்குப் போகலாம் என்று மோடி சொன்னாரா, அந்த மக்களும் சேர்ந்ததுதான் பாரத மாதாவா?

பழைய சோறோ இல்லை பால் பாயசமோ, மாட்டுக் கறியோ இல்லை பன்றியின் மாமிசமோ, எனக்கான உணவை முடிவு செய்ய வேண்டிய உரிமை என்னுடையது, கடவுளுக்கோ இல்லை கடவுளின் பெயரால் அற்ப அரசியல் நடத்துபவர்களோ, எனது உணவு உரிமையில் தலையிட முடியாது என்பவர்களுக்கு பாரத மாதாவின் இதயத்தில் இடம் உண்டா?

விமானத்தில் பறந்து போன மல்லய்யாக்கள் மட்டும் புத்திரர்களா இல்லை தூக்குக் கயிற்றை நாடிய அழகர் போன்ற விவசாயிகளும் பாரத மாதாவின் புத்திரர்கள்தானா?

பாலியல் வன் கொடுமைக்கு நீதான் காரணமே தவிர வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் அல்ல என்று மூன்று வயதுக் குழந்தை தொடங்கி மூதாட்டிகள் வரைக்கும் உபதேசம் செய்கிற தாயா இந்த பாரத மாதா?

துர்க்கையின் வடிவத்தை பாரத மாதாவிற்கு அளித்துள்ளீர்கள். மேரி மாதாவையோ அல்லது வடிவமற்ற ஆண்டவனையோ வழிபடுகிற, ஆண்டவனே இல்லை என்று அறிவியலாய் சொல்கிறவர்களுக்கும் பாரத மாதா எனும் சிந்தனையில் இடமுண்டா?

துர்க்கையின் வாகனமான சிங்கம்தான் உங்களின் பம்மாத்து மோசடித் திட்டமான மேக் இன் இந்தியாவிற்கு சின்னம். இந்தியாவை விற்கிற தேச விரோதி நீங்கள் என்று சொல்பவர்களை பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லி விட்டால் தேச பக்தர் என ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா?

தேசத்தின் எல்லைகளை பாதுகாக்கிற ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டிகளில் காசு பார்த்த பரம்பரையில் வந்த நீங்களோ அவர்களை வெறும் கூலிப் பட்டாளமாக மாற்றி சாமியார் பஜனைக்கு பாலம் கட்ட அனுப்பி விட்டீர்கள்.  ஆனாலும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லி விட்டால் உங்களின் கறைகள் நீங்கி களங்கம் அகன்று நீங்கள் எல்லாம் உத்தமர்களாக உங்களை நீங்களே சொல்லிக் கொள்வீர்கள். 

இந்தியாவின் தேச விரோத சக்திகளே, வெற்று முழக்கத்தில் இல்லை தேச பக்தி என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் இருப்பது அது மட்டும்தானே.

 

Wednesday, January 13, 2016

ஜனாதிபதியாக முடியும். கவுன்சிலராக ??????????





ஹரியானா மாநில உள்ளாட்சி சட்டம் பற்றியும் அது நியாயமே என்று சொல்லியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள அபத்தங்கள் குறித்தும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு கே.சந்துரு அவர்கள் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையினை கீழே அளித்துள்ளேன்.






முழுமையான கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.

படிக்காதவர்களுக்காக சிறு துளிகள்.

பத்தாவது படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் பஞ்சாயத்து வார்டு மெம்பராக முடியும் என்று ஹரியானா மாநிலச் சட்டம் சொல்கிறது. வீட்டில் கழிவறை இல்லாவிட்டாலோ மின் கட்டணத்தை செலுத்தாவிட்டாலோ கூட அவர்களால் போட்டியிட முடியாது என்றும் அச்சட்டம் சொல்கிறது.  அது சட்டபூர்வமானது என்று உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்கிறது.

இச்சட்டத்தின் மூலம் ஹரியானா மாநிலத்தில் உள்ள 96 லட்சம் வாக்காளர்களில் 42 லட்சம் பேர் போட்டியிட தகுதியிழப்பார்கள். பட்டியல் இனத்தவர்களில் ஆண்களில் 41 % மும் பெண்களில் 68 % மும் தகுதி இழப்பார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

பல மாநிலங்களில் சட்ட மேலவை உண்டு. அவற்றில் பட்டதாரி தொகுதிகளும் உண்டு. பட்டதாரிகள் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அத்தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தாங்கள் தேர்ந்தெடுப்பவர் மேலவை உறுப்பினராக செயல்படுவதற்கான ஞானமும் அனுபவமும் உள்ளவரா என்பதை வாக்களிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று 1972 ல் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.

கடந்த எழுபது வருட தமிழக வரலாற்றைப் பார்த்தால் பத்தாவது வரை படிக்காத ஏழு பேர்தான் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

மத்தியரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீடே இல்லாதவர்களிடம் கழிப்பறையை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்? அதை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு உள்ளாட்சிகளுடையதுதானே?

மிக முக்கியமாக சட்டங்களை இயற்றும் இடங்களான சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்த ஒரு கல்வித் தொகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் நான் மனதில் கொள்ள வேண்டும்.

கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட கல்வித்தகுதி வேண்டும் என்று சொல்கிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறவர், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறவர் இந்திய ஜனாதிபதி.

ஜனாதிபதியாக எந்த ஒரு கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை.

ஆக மொத்தத்தில் பாஜக மாநில அரசு, பஞ்சாயத்துக்களை சாமானிய மனிதர்களுக்குப் பதிலாக மீண்டும் பண்ணையார்களிடம் ஒப்படைக்கவே விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் ஒத்துழைக்கிறது.