Monday, April 30, 2012

வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.பி ஆகி விட்டீர்கள், நாடாளுமன்றம் நுழையும் முன் கொஞ்சம் பேசுவோமா?




சச்சின் டெண்டுல்கர் அவர்களே, வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்.

நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினரானதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாரத ரத்னா விருது கொடுப்பதற்கு பதிலாக இத்துடன் மத்தியரசு நிறுத்திக் கொண்டதே என்பதில் மகிழ்ச்சிதான்.

நீங்கள் நாடாளுமன்றம் போய் விவாதங்களில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைகள் பற்றியெல்லாம் பேசுவீர்கள் என்ற பிரமை எல்லாம் எனக்கு கிடையாது. அது உங்களுக்கும் கிடையாது, ஏன் யாருக்குமே கிடையாது.

ஆட்ட நாயகன் விருது பெற்று கையில் காசோலையோடு நிற்கும் போதுதான் உங்களுக்கெல்லாம் பேச்சு வரும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அவ்வாறு செய்யாமல் படிகள் மட்டும் பெற்று திரும்பி வருகிறபோது, நீங்கள் நியமன உறுப்பினர்தானே, உங்களுக்கு அந்த கவலையெல்லாம் இருக்க அவசியமில்லை.

எனக்கு சில வேண்டுகோள்கள் உண்டு.

ஐ.பி.எல் தொடங்கி பல சர்வதேச போட்டிகள் இருக்கும் காலத்தில் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை. அது நியாயம்தான். ஆனால் குறைந்த பட்சம் விளம்பரப் படப்பிடிப்புக்கள் முக்கியம் என்று அந்த தினங்களில் செல்லாமல் இருந்து விடாதீர்கள். ஏனென்றால் இப்போது அவை கூடும் நாட்களே மிகவும் குறைந்து விட்டது.

மக்கள் பிரச்சினைகள் குறித்து இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். அவற்றை மட்டும் சற்று உன்னிப்பாக கவனியுங்கள். மக்கள் படும் துயரம் பற்றி புரிந்தால்தான், வரி ஏய்ப்பு செய்வது, சொகுசுக் காருக்கு வரி விலக்கு கேட்பது ஆகியவை எல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்பதை உண்ர்வீர்கள். அப்படி உணர்ந்தாலே நீங்கள் வெற்றிகரமான ஒரு எம்.பி தான்.

நியமன எம்.பி க்களுக்கும் தொகுதி வளர்ச்சி நிதி உண்டா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த நிதியை தயவு செய்து கிரிக்கெட்டிற்காக பயன்படுத்தாதீர்கள். கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கனவே செல்வச் செழிப்பில்தான் திளைத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆதரவில்லாமல் நலிந்து போயிருக்கிற மற்ற விளையாட்டுக்களுக்கு உபயோகப் படுத்தி இந்தியா ஒலிம்பிக்கில் சில பதக்கங்கள் வெல்ல உதவுங்களேன்.

நீங்கள் நூறு முறை நூறு அடித்தது போல ஒலிம்பிக் பதக்கங்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதுதானே.

மீண்டும் வாழ்த்துக்கள் சச்சின்....

Saturday, April 28, 2012

மதுரை ஆதீனமாக நித்தி - தவறே கிடையாது. பொருத்தமான நபர்தான்



மதுரை ஆதீனத்தின் புதிய ஆதினகர்த்தராக ரஞ்சிதா புகழ்
நித்தி சுவாமிகள் பதவி  ஏற்றது  அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியுள்ளது. 


இதிலே அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை.


மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது என்று
சொல்கிறார்கள். யார் ஞான சம்பந்தர்?


பார்வதியிடம் ஞானப்பால் குடித்து இளம் வயதில் 
இறைவனோடு ஐக்கியமானவர், கூன் பாண்டியனை
சைவ சமயத்தில் மீண்டும் கொண்டு வந்தவர் என்ற
பெருமையெல்லாம் இருக்கட்டும்.


அனல் வாதம், புனல் வாதம் என்று வாது என்ற சூது
செய்து எட்டாயிரம் சமணர்களை கழுமரம் ஏற்றி
கொடூரமாக கொலை செய்த ரத்த சரித்திரம் கொண்டவர்
ஞான சம்பந்தர்.             


இவர் துவக்கிய ஆதினத்தில் நித்தி இருப்பது ஒன்றும்
தவறில்லை. இப்போதைய ஆதினமும் ஒரு காமெடி
பீஸ்தான். 


ஆகவே சரியான இடத்திற்குத்தான் நித்தி வந்துள்ளார்.


நித்திக்கு மட்டும் மூன்று கேள்விகள்.


உங்கள் மடம் தலைமை பீடமா இல்லை மதுரை 
ஆதீனமா? எது தலைமை அலுவலகம் ? எது கிளை?


மதுரை ஆதீனத்தில் வீடியோ காமெராக்கள் இல்லை
என்பதை உறுதி செய்து விடடீர்களா?


மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதாவிற்கு என்ன பொறுப்பு?

Monday, April 23, 2012

நல்லாதான் சிந்திக்கிறீங்கப்பா?

இதுவும் என் மகன் முகநூலில் இருந்து 
எடுத்துக் கொடுத்த படம்.

நல்லாதான் சிந்திக்கிறாங்க.....































Saturday, April 21, 2012

இறுதியில் வென்றது சோனியாவின் இத்தாலி

இந்திய கடல் எல்லையில் கேரள முதலாளிக்கு சொந்தமான
படகில் தமிழ் மீனவர்களை திமிரெடுத்துக் கொன்ற இத்தாலி
கப்பலை விடுவிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு
விட்டது. 

அரசு வழக்கறிஞரின் குளறுபடிதான் இதற்குக் காரணம்.

அன்று போபோர்ஸ் வழக்கில் ஆயுதத் தரகர் இத்தாலிய
தரகர் ஓட்டோவியோ  கொட்ரோச்சியை  தப்பிக்க வைத்தார்கள்.

இன்று கொலைகாரக் கப்பலை தப்பிக்க வைத்துள்ளார்கள்.

நாளை யாரோ?

இத்தாலிய அன்னை சோனியாவின் கருணை இருந்தால்
எதுவும் செய்யலாம் போல!

சாவிற்கு ஏன் இந்த ஆரவாரம்?

நான் வேலூர் வந்த நாள் முதல்  பார்க்கிற, ஏன் சற்று
வெறுப்போடு கூட கவனிக்கிற ஒரு விஷயம் இறப்பின்
போது நிகழ்கிற ஆரவாரங்கள்.

மரணம் என்பது ஒரு வருத்தமான விஷயம். அது யாராக
இருந்தாலும். அந்த மரணம் அதற்குரிய சோகத்துடன்
அனுசரிக்கப்படுகின்றதா என்ற கேள்வியை பல முறை
எழுப்பும்படி  சம்பவங்கள் நடக்கின்றன.

இறுதிச்செலவுக்கு பணம் இருக்குமா, இல்லையா என்ற
நிலையில் கூட கண்டிப்பாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்
வந்து விடும். நீங்கள் காலை வீட்டை விட்டு வெளியே
வந்தால் அன்று யார் இறந்து போயுள்ளார்கள் என்பதை
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சொல்லி விடும்.

இப்போது புதிய வரவு கண்ணீர் அஞ்சலி ப்ளெக்ஸ் 
போர்டுகள். இதுவும் இப்போது கட்டாயமாகி விட்டது.

இறந்தவருக்கு அஞ்சலி செலுத்த மாலையோடு 
வருவது என்பது மரபு. மாலையோடு ஆரவாரத்தோடு,
ஆட்டம் பாட்டத்தோடு, சிலம்பு சுற்றிக் கொண்டு வருவது
பட்டாசு வெடித்துக் கொண்டு வருவது, ஏதோ அந்த
மரணத்தைக் கொண்டாடுவது போலவே தோன்றுகிறது.

இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளுக்கு
ஏதோ உள் நோக்கம் உள்ளது போலவே இருக்கிறது.
சாலையில் வரும் வாகனங்களைக் கொஞ்சம் கூட
சட்டை செய்யாமல் அவர்களையும் இறந்தவருக்கு
துணையாக அனுப்பும் திட்டமோ என்று தோன்றுகிறது.

இறந்து போனவரை அமைதியாக அடக்கமோ
தகனம் செய்யலாமே! இத்தனை ஆரவாரம் தேவையா?

வேலூரில் மட்டும்தான் இந்த நிலையா அல்லது
எல்லா ஊர்களிலும் இப்படித்தானா? 

Friday, April 20, 2012

ஜெயலலிதா ஆட்சியில் ஜெயலலிதா கட்சித் தலைவருக்கு ஒரு தாக்குதல்.

 இது முன்பே போட்ட பதிவுதான். இருப்பினும்
வேறு புதிய தலைப்பும், இறுதியில் ஒரு புதிய
பத்தியும் அவசியம் என்பதால் மீண்டும் 
பதிவிட்டுள்ளேன்.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்காவில் செஞ்சி என்று
ஒரு கிராமம். அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் முருகன்
என்பவர் ஆளும் அதிமுக கட்சிக்காரர். தலித் இனத்தைச்
சேர்ந்தவர். அவரை செயல்பட விடாமல் அதே கிராமத்தைச்
சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த
வெங்கடேசன் என்பவர் தடுத்து வருகிறார். எல்லா பணிகளிலும்
லஞ்சம் தர வேண்டும். இவர் சொல்லும் வேலையைத்தான்
செய்ய வேண்டும் என்று மிரட்டுகின்றார்.

மறுத்த போது ஜாதியைச் சொல்லி, ஆபாசமாக திட்டுகின்றார்.
உன்னை கொலை செய்வேன், உன் மனைவியை பாலியல்
வன் கொடுமை செய்வேன் என்றெல்லாம் பேசுகின்றார்.
அரசியல் தரகரான இந்த வெங்கடேசன் ஜெயலலிதா பேரவையின்
மாவட்ட துணைச்செயலாளர். அந்த ஹோதாவில்தான் இந்த
ஆட்டம்.

காவல்துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதற்குப்
பதிலாக கட்டப் பஞ்சாயத்து செய்கின்றது. முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யவே தயாராக இல்லை.

பிரச்சினை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கு வர
அந்த கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள லத்தேரி என்ற ஊரில்
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்படுகின்றது. ஆனால்
அனுமதி வழங்க காவல்துறை மறுத்து விட்டது.

அந்த வெங்கடேசன் அயோக்கியன்தான், ஆனாலும் அனுமதி
கிடையாது என்று மறுக்கிறார் காட்பாடி டி.எஸ்.பி.

ஆனாலும் தோழர்கள் குழுமினர். உறுதியாய் ஆர்ப்பாட்டம்
நடந்தது. காவல்துறை அனுமதி இல்லாததால் ஒலி பெருக்கி
பயன்படுத்த முடியவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் கைது செய்யப்படுவார்கள்
என்று அந்த ஊர் மக்களை வேறு மிரட்டி அந்த கிராமத்தை விட்டே
வெளியேற்றி விட்டது. கைது மிரட்டலுக்கு அஞ்சாமல் இன்று
ஆர்ப்பாட்டத்தை துவக்கிய போது காவல்துறை படையாக
அணி திரண்டிருந்த போதும் அப்போது எந்த மிரட்டலும்
செய்யவில்லை.

ஒரு தலித் ஊராட்சி தலைவர் செயல்பட முடியாமல் தடை
வருகிற போது அவருக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டிய
அரசு நிர்வாகம், தரகனுக்கு துணையாய் நிற்பதன் மர்மம்
என்ன?

பிரதமருக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்காத காவல்துறை
ஒரு மூன்றாம்தர மனிதனுக்கு ஆதரவாக நிற்கிறது.

அனுமதி மறுப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை
நெறிக்கும் ஈனச்செயல். ஆனாலும் அஞ்சாமல் தீண்டாமை
ஒழிப்பு முன்னணியின் குரல் ஒலித்தது.

அனுமதி அளித்திருந்தால் பிரச்சினை பற்றி மட்டும்
பேசியிருப்போம். தங்களை தோலுரிக்க காவல்துறையே
வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்பது ஒரு யதார்த்தமான
உண்மை. 


ஜெயலலிதா ஆட்சியில் அவர் கட்சித் தலைவருக்கே
அவரது கட்சிக்காரர்களால் இந்த மோசமான நிலை 
என்றால், மற்ற பஞ்சாயத்து தலைவர்களின் கதி
என்ன ஆகும்?

குரல்வளை நெறிபட்ட போதும்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்காவில் செஞ்சி என்று 
ஒரு கிராமம். அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் முருகன்
என்பவர் ஆளும் அதிமுக கட்சிக்காரர். தலித் இனத்தைச்
சேர்ந்தவர். அவரை செயல்பட விடாமல் அதே கிராமத்தைச்
சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த
வெங்கடேசன் என்பவர் தடுத்து வருகிறார். எல்லா பணிகளிலும்
லஞ்சம் தர வேண்டும். இவர் சொல்லும் வேலையைத்தான்
செய்ய வேண்டும் என்று மிரட்டுகின்றார்.

மறுத்த போது ஜாதியைச் சொல்லி, ஆபாசமாக திட்டுகின்றார்.
உன்னை கொலை செய்வேன், உன் மனைவியை பாலியல்
வன் கொடுமை செய்வேன் என்றெல்லாம் பேசுகின்றார்.
அரசியல் தரகரான இந்த வெங்கடேசன் ஜெயலலிதா பேரவையின்
மாவட்ட துணைச்செயலாளர். அந்த ஹோதாவில்தான் இந்த
ஆட்டம். 

காவல்துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதற்குப்
பதிலாக கட்டப் பஞ்சாயத்து செய்கின்றது. முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யவே தயாராக இல்லை.

பிரச்சினை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கு வர
அந்த கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள லத்தேரி என்ற ஊரில்
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்படுகின்றது. ஆனால் 
அனுமதி வழங்க காவல்துறை மறுத்து விட்டது.

அந்த வெங்கடேசன் அயோக்கியன்தான், ஆனாலும் அனுமதி
கிடையாது என்று மறுக்கிறார் காட்பாடி டி.எஸ்.பி. 

ஆனாலும் தோழர்கள் குழுமினர். உறுதியாய் ஆர்ப்பாட்டம்
நடந்தது. காவல்துறை அனுமதி இல்லாததால் ஒலி பெருக்கி
பயன்படுத்த முடியவில்லை. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் கைது செய்யப்படுவார்கள்
என்று அந்த ஊர் மக்களை வேறு மிரட்டி அந்த கிராமத்தை விட்டே
வெளியேற்றி விட்டது. கைது மிரட்டலுக்கு அஞ்சாமல் இன்று
ஆர்ப்பாட்டத்தை துவக்கிய போது காவல்துறை படையாக
அணி திரண்டிருந்த போதும் அப்போது எந்த மிரட்டலும் 
செய்யவில்லை.

ஒரு தலித் ஊராட்சி தலைவர் செயல்பட முடியாமல் தடை
வருகிற போது அவருக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டிய
அரசு நிர்வாகம், தரகனுக்கு துணையாய் நிற்பதன் மர்மம்
என்ன?

பிரதமருக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ 
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்காத காவல்துறை
ஒரு மூன்றாம்தர மனிதனுக்கு ஆதரவாக நிற்கிறது.

அனுமதி மறுப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை
நெறிக்கும் ஈனச்செயல். ஆனாலும் அஞ்சாமல் தீண்டாமை
ஒழிப்பு முன்னணியின் குரல் ஒலித்தது. 

அனுமதி அளித்திருந்தால் பிரச்சினை பற்றி மட்டும்
பேசியிருப்போம். தங்களை தோலுரிக்க காவல்துறையே
வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்பது ஒரு யதார்த்தமான
உண்மை. 

Thursday, April 19, 2012

நான் மிகவும் பெருமையாய் உணர்ந்த தருணம்.



தமிழ்வீதி வலைப்பக்கத்தில் வெளியான தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நேர்காணலின் ஒரு கேள்விக்கான பதில். கடைசி பத்தியை படிக்கையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர் என்ற முறையில் மிகவும் பெருமையாக உணர்ந்தேன். நன்றி தோழர் தமிழ்ச்செல்வன். இந்த வார்த்தைகள் மிகவும் உற்சாகம் அளிக்கிறது. வேகமும் கூட


இனிய உதயம் ஏப்ரல் 2012 இதழில் வெளியான  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் நேர்காணலிலிருந்து 

9.ஒரு படைப்பாளி என்பதையும் தாண்டி தொழிற்சங்க இயக்க அனுபவம் உள்ளவர் நீங்கள். இன்றைய தொழிற்சங்கங்களின் நிலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்றைய தொழில் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தொழிற்சங்க நிலையும் இருக்கும்.இன்று நிரந்தரத் தொழிலாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகக் குறைந்து விட்ட்து.எல்லாம் தற்காலிக ஊழியர்,காண்ட்ராக்ட் ஊழியர்,அவுட்சோர்சிங் முறை என்று வந்துவிட்டது.ஆகவே பழையபாணியிலேயே தொழிர்சங்க இயக்கத்தை நட்த்திச் செல்ல முடியாது என்கிர புதிய நிலை உருவாகியுள்ளது.பன்னாட்டுக் கம்பெனிகளுக்குள் இந்திய தொழிற்சங்க மற்றும் தொழிற்தகராறு சட்டமெல்லாம் செல்லாது என்று நாம் தேர்ந்தெடுத்த அரசுகளே அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துள்ளன.அதை மீறி அக்கெம்பெனிகளுக்குள் சி..டி.யு சங்கம் துவக்கப்பட்ட்தும், போராட்டங்கள் நடைபெற்றதும் தோழர் .சவுந்திரராசன் கைவிலங்கு பூட்டிக் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட்தும் சமீபத்திய வரலாறு.பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக தமிழ்நாடு சிஐடியு நட்த்திவரும் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் உடையவை.சமூக ஆய்வாளர்கள்கூட அதை இன்னும் சரியாக கவனிக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது.திருப்பூரில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் ஒரு மில்லை முற்றுகையிட்டு உடைத்து நொறுக்கியது அதை விடச் சமீபத்திய செய்தி. போலீஸ் அனுமதிபெற்ற உண்ணாவிரதம்,தர்ணா போன்ற வடிவங்களும் தொடர்கின்றன.அவை போதாது என்கிற யதார்த்த நிலையும் வளர்ந்து வருகிறது.ஆள் நடமாட்டமிலாத சந்து பொந்துகளில்தான் ஆர்ப்பாட்டங்கள் நட்த்த போலீஸ் அனுமதி தருகிறது.இது காலப்போக்கில் காவல்துறையை போடா என்று சொல்லிவிட்டு தொழிலாளி வர்க்கம் தெருவில் இறங்கும் சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகிறேன்.

மிக அதிகமான தொழிலாளர் இயக்கங்கள் தேவைப்படுகிற இக்காலத்தில் தொழிலாளிகள் அந்த அளவுக்கு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாத மனநிலைக்குத் தயாரிக்கப்பட்டு வருவது ஆபத்து.பண்பாட்டுத் தளத்தில் தொழிலாளி தனக்கே எதிராகத் தயாரிக்கப்படுகிறான்.அதை தொழிலாளர் இயக்கம் போதிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கிருக்கிறது.

 மத்தியதர வர்க்க தொழிற்சங்க இயக்கங்களில் ஒரு முன்னுதாரணமான இயக்கமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்கிறது. ஒரு சமூகப் பார்வையோடு தன் ஊழியர்களை அது வளர்க்கப் போராடுகிறது.

Monday, April 16, 2012

கிரிக்கெட் ரசிகர்களின் சிந்தனைக்கு - போலி தேசியவாதிகளின் வியாபாரத்தில் நீங்கள் விரயமாகாதீர்கள்.

எனது மகன் முக நூலில் இருந்து எடுத்து கொடுத்த
படம் இது. ஐ.பி.எல் லில் பாகிஸ்தான் வீரர்களை
ஏலம் எடுக்காதது மிகப் பெரிய வீரச்செயலாக,
தேச பக்த அடையாளமாகத்தான் போற்றப்பட்டது.

இந்த உணர்வு இலங்கை வீரர்களை ஏலம் எடுக்கும்
போது ஏன் வரவில்லை என்ற கேள்வி சவுக்கடியாக
விழுகின்றது.


ஆகவே கிரிக்கெட் ரசிகர்களே, சிந்தியுங்கள்.


கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் கோடிகளை
பெருக்கிக் கொள்ள நீங்கள் உதவ வேண்டுமா?


உங்கள் பணம்தான் அவர்களை கொழுக்க
வைக்கிறது  என்பதை நினைவில் கொண்டு
ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணியுங்கள்



Sunday, April 15, 2012

இது நாம் எதிர்பார்த்ததுதான்.பாவம், மேற்கு வங்க மக்கள்தான் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்



மாற்றம் என்ற முழக்கத்தை நம்பி  அமெரிக்க மக்கள் மட்டுமல்ல,
பாவம் மேற்கு வங்க மக்களும் கூட ஏமாந்து  போனார்கள்.

அமெரிக்க மக்களுக்காவது வேறு வழியில்லை, இருக்கிற 
இரண்டு கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்று பார்க்க
வேண்டும். 

ஆனால் மேற்கு வங்க மக்களுக்கோ " அரசனை நம்பி நல்ல
புருஷனை கைவிட்ட " கதைதான்.

மம்தா தீதிக்கு ஆதரவாக பேசிய நாளிதழ்கள், அறிவு ஜீவிகள்,
எல்லோருமே இன்று தங்கள் தவறுக்காக நொந்து போய்
நிற்கின்றனர். 

சகிப்புத்தன்மையும் முதிர்ச்சியும் இல்லாதவர் என்பதன்
அடையாளமாகத்தான் அவர் தொடர்ந்து பல அராஜகங்களை
நிகழ்த்தி வருகின்றார். பட்டியலிட முடியாத அளவிற்கு
அது நீண்டு கொண்டே போகின்றது.

மீண்டும் அங்கே பாசிஸ ஆட்சி நடக்கிறது. முன்பு சித்தார்த்த
சங்கர் ரேவின் ஆட்சியினை வீழ்த்திய மேற்கு வங்க மக்கள்
நாளை மம்தாவையும் வீழ்த்துவார்கள். 

 

Saturday, April 14, 2012

செல்வந்தர்களிடம் கனிவாகவும், தொழிலாளிகளிடம் கொடூரமாகவும்

எனது 500 வது பதிவு. 
ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி



செல்வந்தர்களிடம் கனிவாகவும், தொழிலாளிகளிடம் கொடூரமாகவும்

அமானுல்லாகான்,
தலைவர்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.





2012-2013 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தான் கனிவாக இருப்பதற்காக கொடூரமாக உள்ளதாக குறிப்பிட்டார். அவர் யாரிடம் கனிவாக உள்ளார், யாரிடம் கொடூரத்தை வெளிப்படுத்தினார் என்பதை கண்டறிய வெகு நேரம் தேவைப்படவில்லை. பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடிக்கும்போதே அவர் தனது வர்க்கக் கடமையை நிறைவேற்றி விட்டார் என்பது மிகவும் தெளிவாகி விட்டது. அவரது பட்ஜெட் முன்மொழிவுகள் தொழிலாளர்களிடம் கொடூரமாகவும் செல்வந்தர்களிடமும் நிதி மூலதனத்திடமும் கனிவாக இருந்தன.

மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாகவும் கவலையளிக்கும்விதத்தில் இருந்த ஒரு யதார்த்தமான சூழலில்தான் நிதியமைச்சர் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை இந்த யதார்த்த நிலையை சுட்டிக்காட்டியிருந்தது. மனிதவள மேம்பாட்டில் இந்தியா பின் தங்கியுள்ளது என்பதை இவ்வறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது. மனித வள மேம்பாட்டு குறீயீடுகளின் அடிப்படையில் பார்த்தால், அதிலும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா இன்னும் வெகு தூரம் செல்லவேண்டியுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி இருந்த போதிலும் மனித வள மேம்பாட்டு குறீயீடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கியே உள்ளது. சில நாட்கள் முன்பு வெளியான மக்கட்தொகை கணக்கெடுப்பு பற்றிய விபரங்கள் இந்த யதார்த்தங்களை உறுதிப்படுத்துகின்றன. இந்திய மக்களில் பெரும்பகுதியினருக்கு மிகவும் அடிப்படைத் தேவைகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இன்னமும் கூட கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள வீடுகளில் கிட்டத்தட்ட 54 % வீடுகளில் கழிவறைகள் கிடையாது, மனிதர்கள் கைகளின் மூலம் கழிவுகளை அகற்றுவது என்பது ஒழிக்கப்பட்டு விட்டதாக பல ஆண்டுகள் முன்பே அறிவிக்கப்பட்டாலும் அந்த அவலம் இன்னும் தொடர்கின்றது. வறுமையைக் கட்டுப்படுத்தி, மக்கள் கௌரவத்தோடு வாழ உரிய நடவடிக்கைகளை வேகமாக எடுப்பது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாண்டு வளர்ச்சி இலக்கினை அடைவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதிலும் இந்தியா பின் தங்கியுள்ளது என்பதை தெளிவாக இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றது.

ஏழ்மையை ஒழிப்பதற்காக இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ஏழ்மை நிலையில்தான் உள்ளது. பட்டினியில் வாடும் அதிகமான மக்கள் உள்ள நாடு என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சத்துக்குறைவாக உள்ளது ஒரு தேசிய அவமானம் என்று பிரதமரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முகத்தில் அறையும் இந்த உண்மைகள், நவீன தாராளமயமாக்கல் சாமானிய மக்களின் வாழ்வில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நிரூபிக்கிறது. மிகவும் பீற்றிக் கொள்ளப்படுகின்ற வளர்ச்சி சமமாக பகிர்ந்து கொள்ளப் படாததால் இந்தியாவை ஒரு ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயமாக்கியுள்ளது.

நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, உழைக்கும் மக்கள் மீதான அழுத்தத்தை போக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக் கூடிய விதத்திலான கொள்கை முடிவுகளை நிதியமைச்சர் மேற்கொள்வார் என உழைக்கும் மக்கள் நம்பினார்கள். ஆனால் பட்ஜெட் 2012-2013 சாமானிய மக்களின் கவலைகளைப் போக்குவதற்குப் பதிலாக நவீன தாராளமயமாக்கல் மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து எந்த ஒரு பாடத்தையும் கற்காத நிதியமைச்சர், நிதித்துறை சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வேன் என வலியுறுத்தியுள்ளார். இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா, வங்கிகள் சட்ட திருத்த மசோதா, பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணைய மசோதா ஆகியவற்றில் அரசுத் தரப்பு திருத்தங்களை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்போவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்திற்கு உருவாக உள்ள அளவிட முடியாத சேதங்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இம்மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை இது காண்பிக்கிறது.

விமானப் போக்குவரத்துத்துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது பற்றி அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதிலும் அரசு மிகவும் முனைப்பாக உள்ளது. அன்னிய மூலதனத்தை வரவேற்கவும் அதனை மகிழ்விக்கவும் மத்தியரசு எந்த அளவிற்கும் செல்ல தயாராகவுள்ளது. இந்திய நாட்டின் வளர்ச்சியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அன்னிய மூலதனத்திடம் பணயக் கைதியாக ஒப்படைத்து விட்டது.

பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது என்பது அரசின் ஒட்டு மொத்த கொள்கைகளில் மிக முக்கியமான அங்கமாகி விட்டது. பொதுத்துறை பங்குகளை விற்பது மூலம் முப்பதாயிரம் கோடி ரூபாய்களை திரட்டப் போவதாக நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். பொது சேவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அரசு-தனியார் கூட்டணியில் கல்வித்துறையை கொண்டு வரப்போவதாக நிதியமைச்சர் கூறி உள்ளார். இது அரசு தனது பொறுப்பை கை கழுவுவது ஆகும். ஏழை மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகும்.

கட்டமைப்பு வளர்ச்சிக்கும் ஐம்பது லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று கணித்துள்ள நிதியமைச்சர், இந்த நிதித்தேவையில் ஐம்பது சதவிகிதம் தனியார் துறை வழங்கும் என்று எதிர்பார்க்கிறார். தங்களுக்கு  மிகுந்த ஆதாயம் கிடைக்கும் என்ற  அர்சின் உத்தரவாதம் இல்லாமல் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தனியார்துறை பங்களிக்கும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனமானது.

உள்நாட்டு சேமிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலையளிக்கும் ஒன்றாகும். 2006 – 2007ல் 34.06 % ஆக இருந்த உள்நாட்டு சேமிப்பு 2010-2011 ல் 32.3% ஆக குறைந்து விட்டது. அதிலும் குடும்ப சேமிப்பு 2009-2010 ல் 25.4% ஆக இருந்தது 2010-2011 ல் 22.8% ஆக குறைந்து விட்டது. நிதித்துறை சேமிப்பிலும் சரிவு உள்ளது என்பது முந்தைய ஆண்டில் 12.9% ஆக இருந்தது தற்போது 10% ஆக குறைந்துள்ளது என்பதிலிருந்து அறியலாம். இது எப்படி பிரதிபலிக்கிறது என்பதை நடப்பாண்டு ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் நிலவும் எதிர் மறை வளர்ச்சியிலிருந்து உணரலாம். 

இந்த நிலைமையை சரி செய்வதற்குப் பதிலாக சேவை வரி உயர்வின் மூலமாக பட்ஜெட் ஆயுள் காப்பீட்டை மேலும் விலை உயர்த்தியுள்ளது. வரி விலக்கு பெறுவதற்கான ஆயுள் காப்பீட்டு பாலிசியின் குறைந்த பட்ச காப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. அதே போல வருமான வரிச்சட்டம்,  பிரிவு 80 C மற்றும் 10 (10 D ) படி வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்புகளை முந்தைய காப்பீட்டுத்தொகையிலிருந்து பிரிமியத் தொகையாக ஐந்திலிருந்து பத்து மடங்காக உயர்த்தியுள்ளது. நீண்ட கால ஒப்பந்தங்களையும் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகளில் கூடுதல் காப்பீட்டு தொகையின் அளவை அதிகரிப்பதையும் ஊக்குவிக்கவே இவ்வாறு செய்யப் பட்டுள்ளதாக நியாயம் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் ஆயுள் காப்பீட்டுத்துறை கடினமான காலத்தில் உள்ள சூழலில், இந்த கொள்கை முடிவுகள் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

மூலதனப் பெருக்கத்திற்கு உள்நாட்டு சேமிப்பு முக்கிய பங்காற்றுகின்றது. அது அன்னிய மூதலீடுகளை விட எவ்வளவோ மேன்மையானது. சேமிப்பினை ஊக்குவிக்க எந்த முன்மொழிவும் பட்ஜெட்டில் அளிக்காததன் மூலம் சேமிப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கட்டுப்படுத்த நிதியமைச்சர் தவறிவிட்டார்.

பங்குச்சந்தை மீது கொண்டுள்ள அபரித மோகம், பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கிலிருந்து தெரிய வருகின்றது. மேலும் பங்குச்சந்தையில் செய்யப்படும் பறிமாற்றங்களுக்கான வரியை வேறு குறைத்துள்ளனர். நவீன தாராளமயத்தில் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாக பங்குச்சந்தை குறியீடுகளே பார்க்கப்படுவதால் விளைகின்ற மோகம் இது. மத்தியரசு அமுலாக்கத் துடிக்கிற, மிகவும் உறுதியாக உள்ள நிதித்துறை சீர்திருத்தம் உள்நாட்டு சேமிப்பையும் அன்னிய மூலதனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதையே ஊக்குவிக்கும்.

இந்திய விவசாயம் மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 60 % மக்களுக்கு வாழ்வளிப்பது விவசாயம்தான். தேசத்தின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 1990-91 ல் 29.6 % ஆக இருந்த விவசாயத்தின் பங்கு 2011-12 ல் வெறும் 13.9 % ஆக குறைந்து விட்டது. விவசாயத்தின் கடினமான நிலையையும் விவசாயிகளின் தற்கொலையையும் இதுவே விளக்குகின்றது. அரசு மற்றும் பொது முதலீடுகள் இல்லாததும், அதனை நிறுவனமயமாக்க முயற்சிப்பதுமே விவசாயத்துறையின் முக்கியமான பிரச்சினைகள். அறைகுறை மனதோடு பட்ஜெட்டில் சொல்லப்பட்டவையெல்லாம் துயரத்தைப் போக்கவோ, விவசாயத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தவோ உதவாது.

அதே போல ஒட்டு மொத்த வளர்ச்சியில்  இந்திய தொழில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 1990-91 ல் 27.7% என இருந்தது இப்போதும் ஒரு தேக்க நிலையில் 27% என்றே உள்ளது. தொழில் உற்பத்தித்துறையை மறு சீரமைக்க பட்ஜெட் தவறி விட்டது. எனவே இந்த பட்ஜெட்டில்  விவசாயத்துறையையோ அல்லது தொழில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் திசைவழியே தென்படவில்லை. எனவே வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் வழியும் அடைபட்டு விட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரத்தாண்டு இலக்குகளை அடைய சமூக நலத்துறையில் அரசு புதிய கொள்கைகளை வகுத்தாக வேண்டும் என்று பரவலான எதிர்பார்ப்பு உள்ளது. சமூக நலத்துறையில் ஒதுக்கீட்டில் சற்றே கூடுதலான ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் இந்த இலக்கை அடைவதற்கான வழி எதுவும் காணப்படவில்லை. கல்விக்கான அரசு ஒதுக்கீடு ஒட்டு மொத்த உற்பத்தியில் 6 % ஆக உயர்த்தப்படும் என்று நீண்ட காலம் முன்பே முடிவு செய்யப்பட்ட பின்பும் இன்னமும் 3 % லியே சுழன்று கொண்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டில் மிகச் சிறிய முன்னேற்றம் இருந்தபோதும், நிலைமையின் தீவிரத்தைப் பார்க்கிற போது இது போதுமானதே அல்ல. இன்று இந்தியாவின் மருத்துவத்துறை பெருமளவு தனியார்வசம் சென்று விட்ட சூழலில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை என்பது அடைய முடியாத கனவாகி விட்டது. இப்படிப்பட்ட சூழலில் மத்தியரசு பொதுநல சேவைகளை மேலும் மேலும் தனியார் பக்கமே தள்ளி விடுகின்றது.


மானியங்கள் தொடர்பாக அதிகமான கவலை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உற்பத்தியில் மானியத்தின் அளவை 2 % என குறைப்பது என்ற நிதியமைச்சரின் முடிவு யதார்த்தத்திற்கு பொருந்தாதது, ஏழை மக்களை வெகுவாக பாதிக்கும். இதிலே இன்னும் மூன்றாண்டுகளின் மானிய அளவை 1.75 % என்று குறைக்கப்போவதாக வேறு சொல்லியுள்ளார். மானிய அளவை 1.5 % என குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வேறு எழுந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை குறிப்பிட்ட வரம்பிற்குள்  சமாளிக்க மானிய அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நியாயம் கற்பிக்கப்படுகின்றது.

2011-12 நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டு மொத்த உற்பத்தியில் 5.9 % ஆக  5,21,980 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.இதே காலக்கட்டத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு  5,29,432 கோடி ரூபாய், அதிலே பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் 50,000 கோடி ரூபாய் என்கிற போது அது அரசின் போலித்தனத்தை  அம்பலப்படுத்துகின்றது. ஏழைகளுக்கு மானியம் அளிப்பது கெட்டது, பணக்காரர்களுக்கு அளிக்கும் சலுகைகள் தேசத்தின் பொருளாதாரத்திற்கு நல்லது என்ற அபத்தமான வாதத்தை தோலுரிக்கிறது. 2012-13 ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையினை 5.1 % க்குள் கட்டுப்படுத்துவது என்ற இலக்கு எட்டுவதற்கு சாத்தியமே இல்லாதது.

மறைமுக வரிகள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தி மக்கள் மீது கூடுதல் சுமையை நிதியமைச்சர் சுமத்தியுள்ளார். 46,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகளை உயர்த்தியுள்ளதன் மூலம் வாழ்க்கைத்தரம் மேலும் பாதிக்கப்படும். கடந்த பல வருடங்களாகவே அதிகமான பணவீக்கத்தினால் உழைக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வரி விதிப்பு பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கும். எண்ணெய் மீதான மானிய வெட்டு பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை விரைவிலேயே இன்னும் கடுமையாக உயர்த்தப் போகின்றது. பணவீக்கம் மேலும் மேலும் அதிகரித்து சாமானிய மக்களின் தலையில் பாறாங்கல்லாய் விழப்போகின்றது.

பட்ஜெட்டிற்கு சற்று முன்னதாக, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 9.5% லிருந்து 8.25% ஆக குறைத்துள்ளது மத்தியரசு. நான்கு கோடி தொழிலாளர்களின் அரிய சேமிப்பு இதனால் மோசமாக பாதிக்கப்படும். பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் சலுகைகளை வாரி வழங்குகின்ற மத்தியரசிற்கு தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, வட்டி விகிதத்தை அதே அளவில் நிலை நிறுத்த சொற்ப தொகையை ஒதுக்க மட்டும் மனமில்லை.

மொத்ததில் இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் தோற்றுப் போயுள்ளது. விவசாய நெருக்கடியை தீர்க்க நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. சமூக நலத்துறை சந்திக்கும் சவால்களுக்கேற்ப நிதி ஒதுக்கப்படவில்லை. பட்ஜெட் விலைவாசியை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. சேமிப்பை அதிகரிக்க, உற்சாகப் படுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நுகர்வுகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையும் இல்லை. 2012-13 ம் ஆண்டின் வளர்ச்சி இலக்காக  பட்ஜெட்  திட்டமிட்டுள்ள 7.6 % ஐ அடைவது என்பது ஐயமே.

இந்த பட்ஜெட்டின் கொடூரத்தை உழைக்கும் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அரசின் பொருளாதார திசை வழியை அனுமதிக்க முடியாது, மாற்றிட வேண்டும். அரசியல் நிலைகளுக்கு அப்பாற்பட்டு  தொழிற்சங்கங்கள் நாடெங்கும் மேற்கொண்ட, மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற   பிப்ரவரி  28 வேலை நிறுத்தத்தின் மாபெரும் வெற்றி, மத்தியரசு தனது நவீன தாராளமயக் கொள்கைகளிலிருந்து பின் வாங்க வேண்டும் என்று மேலும் மகத்தான போராட்டங்கள் நடத்துவதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது. அதே உற்சாகத்துடன் போராட்டங்களை தொடர்வோம்.

“இன்சூரன்ஸ் வொர்க்கர்” ஏப்ரல் 2012 மாத இதழில் வெளியான
கட்டுரையின் தமிழாக்கம்.




Friday, April 13, 2012

.ஓடிப் போன அமெரிக்க இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தியாவிற்கு அல்வா 430 கோடி ரூபாய்

இந்தியாவில் இன்சூரன்ஸ் தொழில் செய்து வந்த நியூயார்க்
இன்சூரன்ஸ் கம்பெனி, தன்னுடைய பங்குகளை விற்று விட்டு
மூட்டை முடிச்சுக்களோடு அமெரிக்கா கிளம்புகின்றது.

இந்தியாவின் மாக்ஸ் நிறுவனத்தோடு அமெரிக்காவின் 
நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டணி சேர்ந்து 
மேக்ஸ் நியூயார்க்  இன்சூரன்ஸ்  என்ற பெயரில் இந்தியாவில்
ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார்கள்.


இப்போது நியூயார்க் இன்சூரன்ஸ் கம்பெனி, மாக்ஸ் நியூயார்க்
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள தனது  பங்குகளை 
மிட்சி சுமிடோமோ என்ற ஜப்பான் நிறுவனத்திடம் விற்று
விட்டு ஓடவுள்ளது.

இதிலே நியூயார்க் இன்சூரன்ஸ் தன் கைவசமுள்ள 26 %
பங்குகளில் 16.63 % ஐ மிட்சி சுமிடோவிற்கு விற்கும்.
9.37 % பங்குகளை மாக்ஸ் இந்தியாவிற்கு விற்கும்.
அந்த 9.37 % பங்குகளை மாக்ஸ் இந்தியா மிட்சி 
சுமிடோவிற்கு விற்கும். இந்த தலை சுற்றல் வேலைகள்
இந்திய அரசை ஏய்ப்பதற்கு.


தன் கைவசம் உள்ள பங்குகளை விற்பதால் கிடைக்கும்
பணத்திற்கு நியூயார்க் நிறுவனம் இந்திய அரசிற்கு
வரி கட்ட வேண்டும். ஆனால் அப்படி எதுவும் கட்ட வேண்டிய
அவசியம் இல்லை என்று நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனம்
சொல்லி விட்டது.


காரணம் என்ன தெரியுமா ?


அமெரிக்க நிறுவனமாக, நியூயார்க்கை தலைமையிடமாக
கொண்டிருந்தாலும், நியூயார்க் இன்சூரன்ஸ் கம்பெனி
மொரீஷியஸ் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்திய மொரீஷியஸ் உடன்பாட்டின்படி
வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று
சொல்லியுள்ளது.


இதனால் இந்தியாவிற்கு ஏற்படவுள்ள இழப்பு எவ்வளவு
தெரியுமா?


அதிகமில்லை ஜென்டில்மேன்,


வெறும் 430 கோடி ரூபாய்தான்.


என்ன செய்யப் போகின்றார் பிரணாப் முகர்ஜி?


இந்தியாவை உய்விக்க வந்த அவதார புருஷன்
அன்னா ஹசாரே இது பற்றியெல்லாம் பேசுவாரா?





வேலூரில் ஒரு இனிய உதயம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வேலைவாய்ப்பு நுழைவுத்தேர்வுகளை தலித், ஏழை மாணவர்கள் வெற்றிகரமாக சந்திக்க உதவுகின்ற 

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவக்க விழா

நாள் : 14.04.2012, சனிக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : சரோஜ் இல்லம், எல்.ஐ.சி ஊழியர் சங்க அலுவலகம்,
கிரவுன் தியேட்டர் பின்புறம், வேலூர் -4.

தலைமை
தோழர் எஸ்.ராமன்,
பொதுச்செயலாளர், AIIEA, வேலூர் கோட்டம்

வரவேற்புரை
தோழர் வி.குபேந்திரன்,

மாவட்ட அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மையத்தை துவக்கி வைத்து சிறப்புரை
தோழர் கே.சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர், SZIEF, மாநிலச் செயலாளர், TNUEF

வாழ்த்துரை
தோழர் கே.கணேஷ்    ,                     தோழர் ஜி.லதா
அமைப்பாளர்,                         மாநில துணைத்தலைவர்
டாக்டர் அம்பேத்கார்                                          TNUEF
கல்வி மையம், கோவை

                         தோழர் ஏ.நாராயணன்
                         மாவட்டச்செயலாளர், CPI(M)     
 
            தோழர் பி.சக்திவேல்        தோழர் தா.வெங்கடேசன் 
             மாவட்டச்செயலாளர்        மாவட்ட செயற்குழு
                  AIKS                                           CPI (M)   
 
        தோழர் எம்.சண்முகம்        தோழர் என்.காசிநாதன்
         மாநிலச்செயலாளர்          மாவட்டச்செயலாளர்
                     UBIEU (BEFI)                               CITU 

         தோழர் எம்.சிலுப்பன்,       தோழர் சி.சரவணன்
         மாவட்டத்தலைவர்          மாவட்டச்செயலாளர்
                           TNGEA                                   TNPTF
                 
                 மற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள்

நன்றியுரை
தோழர் சி.ஞானசேகரன்,
மாவட்டச்செயலாளர், BSNLEU

அனைவரும் பங்கேற்பீர், வெற்றி பெறச் செய்வீர் . . .

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, 
வேலூர் மாவட்டம்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், 
வேலூர் கோட்டம்
வகுப்புக்களில் பங்கேற்க தொடர்பு கொள்வீர்
9442315088, 9443358950, 9443813046,
9442878299, 9442539919, 9994548951