Monday, October 31, 2016

அதிகாலை அழகானது

இன்றைய அதிகாலை பயணத்தின் போது எடுத்த படங்கள்.

ஆதவனின் உதயம் எப்போதுமே அழகானது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.



 

Sunday, October 30, 2016

பட்டாசுக்காவது பயப்படட்டும்




நேற்று முழுதும் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. இன்று மாலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு ஏழரை மணிக்கு திரும்பி வந்தேன்.

வழியில் கண்ட முக்கியமான ஒரு மாற்றம்.

நான் செல்லும் வழியில் சாதாரணமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அங்கங்கே கோஷ்டியாகவோ அல்லது தனித்தனியாகவோ பயமுறுத்திக் கொண்டிருக்கும்.

ஆனால் இன்றோ ஒரு நாய் கூட கண்ணில் படவில்லை. 

காரணம் பட்டாசு உருவாக்கிய பயம்.

யாருக்கும் அஞ்சாமல் அனைவரையும் மிரட்டுகிற தெரு நாய்கள் பட்டாசுகளுக்காவது பயப்படுகிறதே!

 

வெறும் பிரமைதான்




சூர்யா நடித்த 24 படத்தில் நேரத்தை அப்படியே ஃப்ரீஸ் செய்வது போல காட்சிகள் வரும். 

இன்று நாளிதழ்கள் எதுவும் வராததால் அப்படி காலம் ஃப்ரீஸ் ஆனது போல தோன்றுகிறது, அது வெறும் பிரமைதான் என்பது தெரிந்தாலும் கூட.

வேறு யாருக்கெல்லாம் அப்படிப்பட்ட உணர்வு ஏற்படுகிறது?

 

Saturday, October 29, 2016

மன்னிப்பாம் . . மண்ணாங்கட்டி




தான் என்றுமே திருந்தாத ஜென்மம் என்பதை  ஆசான் மீண்டும் நிரூபித்து விட்டார். 

நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்கள், மது அடிமைகளாய் இருக்கிற சரி பாதி ஆண்கள் கற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லாதவர்கள் என்றும் அவர்களை பணி நீக்கம் செய்ய விடாமல் தொழிற்சங்கங்கள் பாதுகாக்கின்றன என்ற பெயரில் மீண்டும் தனது வக்கிர சிந்தனையை ஆசான் வாந்தி எடுத்து விட்டார். 

முன்பு விஜயகாந்த் கேட்ட கேள்வியைத்தான் இவரைக் கேட்க வேண்டியிருக்கிறது.

"எத்தனை பேருக்கு இவர் ஊற்றிக் கொடுத்திருக்கிறார்?"

ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்கிற, அதற்காக போராடுகிற தொழிற்சங்க அமைப்புக்களின் மீதான காழ்ப்புணர்வை தானும் தொழிற்சங்கத்தில் இருந்ததாக சொல்லிக் கொண்டே வெளிப்படுத்துகிறார்.

தனிப்பட்ட ஒரு நிகழ்வை பொதுப்பிரச்சினையாக திசை திருப்புகிற சாமர்த்தியம் ஜெய மோகன் போன்ற  அறம் கெட்டவர்களுக்கு கை வந்த கலைதான்.

எத்தனையோ விமர்சனம் வந்த போதும் அதிலிருந்து கற்றுக் கொண்டு தன்னை திருத்திக் கொள்ள தயாராக இல்லாதவர் ஜெய மோகன். ஆணாதிக்க சிந்தனையும் காவி புத்தியும் ஊறிப் போயிருக்கிற  ஆசான்  கேட்டுள்ளது மன்னிப்பல்ல. 

இன்னொரு அவதூறு.

பின் குறிப்பு : இவர் இப்படியே போய்க் கொண்டிருந்தால் ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நொடியுமே வசை வந்து கொண்டுதான் இருக்கும்.

டாட்டா குடும்பத்து குத்து வெட்டு

  
எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

டாடாவின் அதிர் வேட்டு

                                                                           பொருளியல் அரங்கம் 
                                                                                                                            -க.சுவாமிநாதன்

சைரஸ் மிஸ்ட்ரிக்கு டாட்டா வைத்த வெடி கார்ப்பரேட் உலகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. டாட்டா குழுமத்தின் நம்பர் 1 தலைமை நிர்வாகி சைரஸ் மிஸ்டரியை முன்னறிவிப்பு எதுவுமின்றி தூக்கிக் கடாசி இருப்பதே காரணம். 

ஊசலாடும் உறவுகள் 

2016 ன் பெரிய ஜோக் எதுவெனில், இப்படி அறிவிப்பு இல்லாமல் விளக்கம் எதுவும் கோராமல் ஒருவரை நீக்கலாமா என்று சில வணிக இதழ்கள் விவாதிப்பதுதான். இந்தியாவின் கோடிக்கணக்கான தொழிலாளிகளின் பணிப் பாதுகாப்பு பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள், வேலைக்கு எடுப்பதும் வீட்டுக்கு அனுப்புவதுமான (HIRE & FIRE) “சுதந்திரம்” வேண்டுமெனக் கேட்பவர்கள் சைரஸ் மிஸ்திரி விஷயத்தில் நியாயம் பேசுவதற்கு காரணம் என்ன? தானாடாவிட்டாலும் சதையாடுகிற மூலதனத்தின் சென்டிமென்ட் இது. 

2011 ல் ரத்தன் டாட்டா தனது ஒன்றுவிட்ட பங்காளி நோயல் டாட்டாவை தெரிவு செய்யாமல் சைரஸ் மிஸ்திரியை டிக் செய்தார். சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆலு, நோயல் டாட்டாவின் மனைவி. புரிகிறதா ? எல்லாம் ஒன்னுக்குள் ஒன்னு. இதனால்தான் கார்ப்பரேட் உறவுகள் ஊசலாடுகின்றன. அப்போதே இந்தப் பதவிக்கு பெப்சி சி.இ.ஓ இந்திரா நூயி போன்ற பலர் போட்டியிட்டனர்.சண்டை வந்தவுடன் சைரஸ் மிஸ்திரி, டாட்டா பாரம்பரியத்தில் வராதவர் என்று ரத்தன் டாட்டா தரப்பு கைகழுவுகிறது. டாட்டா குழும வரலாற்றில் இரண்டு முறைதான் வெளியாள் தலைமை இருந்துள்ளதாம். 1932 லிருந்து 1938 வரை இருந்த சர் நௌரோஜி சக்லத்வாலா. அதற்குப் பிறகு மிஸ்திரிதான்.

இது தேசப் பிரச்சனையா?

ஆர்.பி.ஜி குழும சி.இ.ஓ ஹர்ஷ் கோயங்காவின் கமெண்ட் இது.“ சைரஸ் மிஸ்திரியின் வெளியேற்றம் கார்ப்பரேட் உலகத்தின் வேர்களையே அசைத்திருக்கிறது. ரத்தன் டாட்டா இந்தக் கவிழ்ப்பை செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்கும். ஆனாலும் மதிப்புமிக்க ஓர் தொழில் குழுமத்தின் இந்நிகழ்வுகள் தேசத்திற்கு நல்லதல்ல”. இந்தியத் தொழிலதிபர்களுக்கு ஆபத்து என்றால் அவர்கள் தேசத்திற்கு ஆபத்து என்று கூவ ஆரம்பித்து விடுவார்கள். உண்மையில் தேசத்திற்கா ஆபத்து? இவர்களை நம்பி டாட்டா குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பவர்களின் கதி என்ன? என்றுதானே ஹர்ஷ் கோயங்கா கண்ணீர் சிந்தியிருக்கவேண்டும்.

டாட்டா குழுமத்தின் இன்றைய சந்தை மூலதனம் எட்டரை லட்சம் கோடி ரூபாய். இதில் முதலீடு செய்திருப்பவர்கள் 41 லட்சம் பேராம். என்ன ஜனநாயகம் பாருங்கள் ? இவ்வளவு லட்சம் பேர் பணத்தை வைத்து தொழில் பண்ணிவிட்டு இவ்வளவு பெரிய முடிவை இவ்வளவு சாதாரணமாக எடுக்கிறார்கள். கேட்டால் இயக்குநரவை ஒப்புதல் கொடுத்தது என்பார்கள். ஆனால் முதலீட்டாளர்களின் மனநிலையை பங்குச் சந்தை காட்டிக் கொடுத்துவிட்டது. டாட்டா மோட்டார்ஸ், டாட்டா காபி, டாட்டா ஸ்டீல் , டாட்டா பீவரேஜஸ், டாட்டா ஸ்பான்ஜ் அயர்ன் ... என டாட்டா குழுமத்தின் எல்லா நிறுவனங்களின் பங்கு விலைகளும் மூன்று நாட்களாக விழுந்தவண்ணம் உள்ளன.

மிஸ்திரி போட்ட டபிள் ஷாட் 

மிஸ்திரி போட்ட பதில் குண்டுதான் பங்குச் சந்தை சரிவுக்கு காரணம். அது டாட்டாவின் நம்பகத் தன்மைக்கு ஒரு வேட்டு , பங்குச் சந்தை மதிப்பிற்கு இன்னொரு வேட்டு என்று முதலீட்டாளர்களின் செவிப்பறையில் எதிரொலித்துவிட்டது. ரூ.1,08,000 கோடி மதிப்புள்ள தொகையை சில காலங்களுக்குள்ளாக ஈடுகட்ட வேண்டிய நெருக்கடி டாட்டா குழுமத்தின் ஐந்து நிறுவனங்களுக்கு ஏற்படும் என்று அவர் வெளியிட்ட தகவலே அது. எவ்வளவு தொகை பாருங்கள்! லட்சம் லட்சம் கோடிகள் எப்படி கணக்குகளுக்குள் பதுங்குகின்றன என்பது இப்படி உள்குத்து வரும்போதுதான் கொஞ்சமாவது வெளியே வருகிறது. 

இதற்குள் இரண்டு கட்சிகளாக நிறுவன உலகம் பிரிந்து யார் திறமையானவர் என்று பட்டிமன்றம் நடத்துகின்றன. 1991 லிருந்து 2012 வரை ரத்தன் டாட்டா தலைவராக இருந்தார். அவர் பதவி ஏற்கும் போது ரூ. 8000 கோடிகளாக இருந்த டாட்டா குழுமத்தின் சந்தை மூலதனம் 2012 ல் ரூ. 4.62 லட்சம் கோடிகளாக உயர்ந்தது. இது 57 மடங்குகளாம். மிஸ்திரி காலத்தில் (2012- 2016) 4.62 லட்சத்தில் இருந்து 8.5 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. இது இரண்டு மடங்குதானாம். இவர்கள் தரும் தகவல்கள் எல்லாம் யார் திறமையானவர்கள் என்று நமக்கு நிரூபிக்கிறதோ இல்லையோ எவ்வளவு லாபம் இவர்களுக்கு கொழிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காண்பிக்கிறது. 

இது எங்க டயலாக்குடா !

டாட்டா மிஸ்திரி திரியில் வைக்கிற நெருப்பு வெடிக்காது... அது புஸ் ஆகிவிடும் என்று ரத்தன் டாட்டா தரப்பு சொல்கிறது. டாட்டா மோட்டார்ஸ் உள்பட 5 நிறுவனங்களின் கணக்குகள் ஸ்கேனருக்குள் வரலாம் என்ற செய்திகள் மிஸ்திரி தரப்பில் உலவவிடப்படுகின்றன. டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகள் மட்டுமே மிஸ்திரிக்கு இருப்பதால் சமாளித்துவிடுவோம் என்கிறது முதல் தரப்பு. பிரச்சனையை கிளப்ப அவ்வளவு பங்குகள் போதாதா என்று தொடையைத் தட்டுகிறது இரண்டாவது தரப்பு. நாங்கள் சட்டப் போராட்டத்திற்கு தயாராகிவிட்டோம், கரஞ்சன்வாலா & கோ மற்றும் சர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் சட்ட நிறுவனங்களை அமர்த்திவிட்டோம் என்று கொக்கரிக்கிறது ரத்தன் முகாம். 

ஆனால் நிறுவன விதிகளின் அமலாக்கம் சட்டத்தின் முன் செல்லுபடியாகாது என்கிறது மிஸ்திரி முகாம். இதில் யார் கடைசியில் ஏமாறப்போகிறார்கள் ? என்று வணிக ஊடகங்கள் பரபரப்பான திரைக்கதையை நகர்த்த ஆரம்பித்து விட்டன. வழக்கம் போல உயர் நடுத்தர வர்க்கமும் நிறுவன ஒழுங்கு பற்றிய நளினமான விவாதங்களை நுனி நாக்கு ஆங்கிலத்தில் குளு குளு ஓட்டல் அறைகளின் நுரை பொங்கும் பானங்களின் மயக்கத்தோடு பேசிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் லாபத்திற்கு இரையான கோடானு கோடி நுகர்வோரும், அப்பாவி முதலீட்டாளர்களும் “இது எங்க டயலாக்குடா!” என்று சொல்வது காதில் விழவா போகிறது?

நன்றி தீக்கதிர் 29.10.2016

Thursday, October 27, 2016

இவன்தான்யா கலைஞன் . . .




கீழே உள்ள காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

பதிவின் தலைப்பை  நீங்களும் சொல்வீர்கள். 

வாட்சப்பில் அனுப்பியவருக்கு நன்றி. 



அழித்தால் மட்டும் விட்டுவிட முடியாது ஜெமோ






நேற்று போட்ட அவதூறு பதிவை ஆசான் கமுக்கமாக அழித்து விட்டார். அப்படி ஒன்று அவர் எழுதவேயில்லை என்று அவரது அடிப்பொடிகள் சாதித்தாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அந்த பெண் ஊழியர் பற்றிய விபரங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் அது இந்தியன் வங்கி அல்ல. பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பூனா கிளை.

அந்த ஊழியர் அடுத்த வருடம் பிப்ரவரியில் ஓய்வு பெறப் போகிறார். ஐம்பத்தி ஒன்பது வயதான அவர் இரண்டு முறை மாரடைப்பு வந்தவர். பக்கவாதம் வந்து அதிலிருந்து குணமானவர். ஓய்வுக்காலம் வரை வீட்டிலேயே இருக்கும் அளவிற்கு விடுப்பு இருந்த போதிலும் அதை தவிர்த்து விட்டு ஓய்வு பெறும் நாள் வரை பணி செய்ய வேண்டும் என்று அலுவலகம் வருகிறவர்.

அவருடைய உடல் நலன் கருதி அவரை ஒரு கூடுதல் கவுண்டரில் அமர்த்தி உள்ளார்கள். இது தெரியாத ஒரு விவரம் கெட்டவன் வீடியோ எடுத்து பதிவு செய்ய, இதுதான் சாக்கு என்று இந்த மனிதனும் பெண் ஊழியர்களை இழிவு படுத்த பயன்படுத்திக் கொண்டு விட்டார். செந்தில் ராஜா என்று ஒரு ஆள் இருப்பானா என்பது கூட சந்தேகமாக இருக்கிறது.

அத்தனை பேரும் காரி உமிழ்ந்த பின்பு அந்த பதிவை நீக்கி நல்ல பிள்ளையாக ஒளிந்து கொண்டு விட்டார். தான் இழைத்த தவறுக்காக கொஞ்சமும் வருத்தமும் இல்லாமல் அவர் புகழ் பாடும் அடிப்பொடிகளின் கடிதங்களையும் புகைப்படங்களையும் போட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.

பதிவை அகற்றினாலும் அதன் ஸ்க்ரீன் ஷாட் நிறைய பேரிடம் உண்டு. என்னிடமும் கூட.

பெண் ஊழியர்களை இழிவு படுத்திய இந்த பதிவிற்காக அவரை மன்னிக்கப் போவதில்லை.

வார்டன்னா மட்டுமில்லை, ஜெமோன்னாலும் அடிதான்.

Wednesday, October 26, 2016

திருந்தாத ஜென்மம் ஜெய மோகன்




எத்தனை முறை எத்தனை பேர் தலையில் தட்டி பிய்ந்து போன காலணியால் அடித்தாலும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் பெண்கள் மீது விஷத்தை கக்குகிற நச்சு மிருகம் என்பதை ஜெயமோகன் மீண்டும் நிரூபித்துள்ளார்.

வங்கியில் காசாளராக பணி பார்க்கிற ஒரு பெண்மணி பற்றி இழிவாக வாந்தி எடுத்துள்ளார்.

தேவாங்கு, கிழவி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும், கீரையாவது ஒழுங்காக ஆய்வார்கள் போல என்று மனதில் தோன்றிய வக்கிரத்தையெல்லாம் பிதற்றியுள்ளார்.

அவரது இணையத்திற்கான இணைப்பு இங்கே

முதலில் அந்த வீடியோவே ஸ்லோ மோஷன் செய்யப்பட்டது போலத்தான் இருக்கிறது. 

சரி, அப்படி அந்த பெண்மணி மெதுவாக வேலை செய்வதாகவே இருக்கட்டும், அந்த வீடியோவை பகிர்ந்து கொள்வது அநாகரீகம் இல்லையா? 

திருட்டுத்தனமாக யாரோ வீடியோ எடுப்பார்கள், அதை இவரது எடுபிடிகள் இவருக்கு அனுப்பி கடிதம் அனுப்புவார்கள். இவரும் இதுதான் சாக்கு என்று ஒட்டுமொத்தமாக வங்கிகளில் பணி புரியும் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்.

அறம், அறம் என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கும் மனிதம் அறம் இதுதான். 

வங்கிகளின் பணிச்சுமை பற்றி இவருக்குத் தெரியுமா? 

பணி நேரத்திற்கு மேல் கூடுதலாக எவ்வளவு நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும் என்பது தெரியுமா?

தனியார் கணினி நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற கம்ப்யூட்டர்களும் அவர்கள் எழுதித்தருகிற மென் பொருள்களும் பல சமயம் உயிரை வாங்கும் என்பது பற்றி தெரியுமா?

அவசரம் அவசரமாக பணத்தை வாங்கிப் போட்டு அதிலே கள்ள நோட்டு இருந்தால் இவர் இழப்பீடு தருவாரா?

கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்து புதிதாக பதவி உயர்வு பெற்றவராகவோ, அல்லது அன்றைய தினம் உடல் உபாதையால் பாதிக்கப் பட்டு விடுப்பு மறுக்கப்பட்டவராகக் கூட அவர் இருக்கலாம். 

அவரது மனைவி கூட தொலைபேசி ஊழியர் என்றுதான் நினைக்கிறேன். பெண்களுக்கான உடல் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

இதுதான் அரசு வங்கிகளின் நிலைமை என்றால் என்ன எழவிற்கு அங்கே கணக்கு வைத்திருக்கிறீர்கள்? தனியார் வங்கிக்கு அவரோ, அவரது எடுபிடியோ மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே! 

கடைசியில்  சோஷலிசம் என்று கொண்டு வந்து முடிக்கிறாரே, அங்கேதான் காவி வேட்டி கட்டிய ஆசான் நிற்கிறார்.

தொலைபேசித்துறையில் ஓசிச்சம்பளம் வாங்கிக் கொண்டு கதைகள், கட்டுரைகள் எழுதிய ஜெயமோகனுக்கு அடுத்தவரைப் பற்றியெல்லாம் குறை கூறுவதுதான் அறம் போல.

திருந்தாத ஜென்மம் என்று ஒதுங்கிப் போய் விடக்கூடாது. 

வங்கி ஊழியர் இயக்கங்கள், மகளிர் அமைப்புக்கள் எல்லோரும் இவருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். எதிர்வினை கடுமையாக இருக்க வேண்டும். 

 


 

இவனுக்கு வெறும் ஆயுள் தண்டனைதான்




நேற்று தோழர் சம்சுதீன் ஹீராவின் பதிவை பகிர்ந்து கொண்டேன். அதிலே கௌசர் பானுவின் கொடூரக் கொலை பற்றி அவர் எழுதி இருந்தார். அக்கொலை தொடர்பாக இணையத்தில் தேடியபோது அக்கொலையை நிகழ்த்திய பாபு பஜ்ரங்கியோடு டெஹல்கா எடுத்த பேட்டியின் காணொளியை பார்க்க முடிந்தது.  



மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் பாபு பஜ்ரங்கி.

கௌசர் பானுவை கொன்ற சாதனையை டெஹல்காவிடம் அவன் பீற்றிக் கொண்டான்.  அவன் பேசிய வேறு சில விஷயங்களை கீழே கொடுத்துள்ளேன். 

We didn't spare a single Muslim shop, we set everything on fire … we hacked, burned, set on fire … we believe in setting them on fire because these bastards don't want to be cremated, they're afraid of it … I have just one last wish … let me be sentenced to death … I don't care if I'm hanged ... just give me two days before my hanging and I will go and have a field day in Juhapura where seven or eight lakhs [seven or eight hundred thousand] of these people stay ... I will finish them off … let a few more of them die ... at least 25,000 to 50,000 should die.

நாங்கள் ஒரு முஸ்லீம் கடையைக் கூட விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் கொளுத்தினோம்.  வெட்டினோம், எரித்தோம், தீயிட்டு கொளுத்தினோம், அந்த தே.... மகன்கள் இறந்து போனதற்குப் பிறகு எரியூட்டுவதை விரும்ப மாட்டார்கள், அஞ்சுவார்கள் என்பதாலாயே அவர்களை தீயிலிட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். எனக்கு ஒரு இறுதி ஆசை உண்டு. எனக்கு மரண தண்டனை அளியுங்கள். தூக்கில் போடுவது பற்றி எனக்கு கவலையில்லை. தூக்கில் போடும் முன் எனக்கு இரண்டு நாட்கள் கொடுங்கள். அவர்கள் ஏழு அல்லது எட்டு லட்சம் பேர் இருக்கும் ஜுஹாபுரா விற்குச் சென்று என் வேலையைக் காண்பிப்பேன். அவர்களில் இன்னும் பல பேர் சாகட்டும். குறைந்த பட்சம் 25,000 லிருந்து 50,000 பேர் வரையாவது கொல்லப்பட வேண்டும். 

இவ்வளவு கொடூரமானவனுக்கு வெறும் ஆயுள் தண்டனைதான் கொடுக்கப்பட்டது என்பது இன்னும் ஒரு கொடுமை.

தொடர்கிறது . . . .

மார்க்சிஸ்ட் இதழிற்காக மார்க்சிய அறிஞர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களது நேர்காணலின் நிறைவுப் பகுதி.


இப்போது நேர்காணல் தொடர்கிறது.



மார்க்சிஸ்ட் : திராவிட இயக்கங்களின் தேசியம் பற்றிய புரிதல், பற்றி….

எஸ்.வி.ஆர் : தமிழருக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மொழிக்கென்று நீண்ட வரலாறு இருக்கிறது. தமிழருக்கு என்று பரந்த நிலத்துடன் கூடிய கலாச்சாரம் இருக்கிறது. இவற்றையெல்லாம் தனது அரசியலுக்கு திமுக பயன்படுத்திக் கொண்டது.

தமிழ் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உணர்ந்து வானமாமலை போன்றவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை, அதன் வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய துவங்கினார். ஜீவா கம்பராமாயணத்தில் சோசலிச கருத்துக்கள் இருக்கிறது என்று சொல்லும் அந்த நிலைக்கு கூட போனார். ஆரம்பத்தில் திமுக வட மாநில முதலாளிகளின் மீதான எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்தனர். அப்போது அதில் நியாயமும் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது இருந்த முதல் நிலை 50 பெரு நிறுவனங்களில் ஒன்று மட்டும் பிரிட்டிஷாருடையது. மற்றவை எல்லாம் வட மாநில முதலாளிகளுடையது. “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறதுஎன்ற அவர்கள் கோஷம் எழுப்பிய போது அதில் கொஞ்சம் உண்மையுமிருந்தது.

திமுக. ஆட்சிக்கு வந்த காலத்தில் மாநிலங்களின் உரிமை, மாநில சுயாட்சி என்றெல்லாம் பேசியது. காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாடு நடத்தக் கூட முயற்சி செய்தார்கள். ஆனால் இப்போது அது பற்றி பேசுவதில்லை. நாங்கள் தான் உண்மையான கம்யூனிட்டுகள் என்றெல்லாம் கூட பேசி வந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் முதலாளிகளுக்காக தொழில் அமைதி நிலவ வேண்டும். உற்பத்தி பெருக வேண்டும் என பேச ஆரம்பித்தனர். திமுகவின் முதல் ஆட்சி காலத்திலேயே தொழிற்சங்கங்களை கடுமையாக ஒடுக்க துவங்கினார். ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் போன்ற இடங்களில் செயல்பட்ட தொழிற்சங்கங்கள் அடக்கு முறைகள் சந்தித்தன. சென்னையில் வி.பி. சிந்தன் தலைமையில் செயல்பட்ட தொழிற்சங்கம் மீது ஏவி விடப்பட்ட அடக்கமுறைகளெல்லாம் நமக்கு தெரியும். எம்.ஜி.ஆர். காலத்திலும் இது தொடர்ந்தது.

காலனி ஆதிக்க எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு பொறுத்த வரையில் காங்கிரஸ்காரர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் கிடையாது. அவாகள் வரலாறு நெடுக சமரச வாதிகளாகவே தான் இருந்துவந்து உள்ளனர். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட சேதம், கப்பற்படை எழுச்சி, நேதாஜி விவகாரம், இந்திய விமானப்படையிலேயே ஏற்பட்ட கிளர்ச்சி இதெல்லாம்தான் அவர்களுக்கு பெரிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. ராணுவத்திலேயே கலகம் பிறக்கும் சூழல் ஏற்பட்டதால், நம்பகமான கூட்டாளியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்ற அடிப்படையிலேயே விடுதலை கிடைத்தது.

இன்னும் பிரிட்டிஷ் மூலதனத்தின் தாக்கம் இருந்து கொண்டுதானே இருக்கிறது. காமன்வெல்த்திலிருந்து வெளியேறி விட்டார்களா? ஒரு நாட்டு ஏகாதிபத்திய மூலதனத்திற்கு பதிலாக இன்று பல நாட்டு ஏகாதிபத்திய மூலதனம் வருகின்றது.

மார்க்சிஸ்ட் : பெரியார் ஆகஸ்ட் 15 நூலின் முன்னுரையில், அம்பேத்கர்,பெரியார், சிங்காரவேலர் ஆகியோரின் மரபுகளை ஆக்கபூர்வமான காலத்துக்கு ஏற்ற ஒரு கூட்டிணைவாக (synthesis) ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென தாங்கள் குறிப்பிட்டது வரவேற்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், இதற்கு ஸ்தூலமான வடிவம் கொடுப்பது எப்படி? திராவிட கட்சிகள் பிரதேச முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்டவை என்பது கம்யூனிஸ்ட்களின் நிலை. இது போன்ற பல முரண்பாடுகள் உள்ள நிலையில் கூட்டிணைவு சாத்தியமாகுமா?

எஸ்.வி.ஆர் : சிங்காரவேலர், அம்பேத்கர், பெரியார் கூட்டிணைவு எனும் போது அவர்களின் சிந்தனைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் பேசியது போன்ற நடைமுறை திட்டத்தை இன்று வகுத்தளிக்க முடியாது. ஆனால் அவர்களை அடையாளமாக எடுத்துக்கொள்ள முடியும்.

அத்பேத்கரும், பெரியாரும் சாதி எதிர்ப்பாளர்கள். அவர்களுடைய கூற்றுப்படி இந்தியாவில் சாதி உணர்வை நிர்மூலம் ஆக்காமல் வர்க்க உணர்வை உருவாக்க முடியாது.

அம்பேத்கரை பொறுத்தவரை அவருக்கு கம்யூனிசம் மீது நாட்டமும் இருந்தது. விமர்சனமும் இருந்தது. “அயல்நாட்டவருக்கு ஒரு விண்ணப்பம்என்ற பெரிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுகிறார். இந்தியாவின் கருத்து என்று உங்களுக்கு சொல்லப்படுபவை முழுவதும் இங்குள்ள காங்கிரஸ் தேசிய வாதிகளின் கருத்தே. இந்திய மக்கள் என்பதில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ளனர். அவர்களின் உணர்வுகளை இங்கு யாருமே பேசுவதில்லை. எனவே, எங்களுடைய குரல்களையும் கவனியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் அவர் ‘1871 கம்யூன்பற்றி குறிப்பிடுகின்றார். அடித்தட்டு மக்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழிய அவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்காது என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். “காந்தியும், காங்கிரஸும் தீண்டாதோருக்கு செய்தது என்ன?” என்ற நூலில் கூட அமெரிக்க மார்க்சிஸ்ட் ஆன எட்பர்க் ஹார்ட்டேகரின் மேற்கோள்களை நிறைய இடங்களில் குறிப்பிடுகின்றார். அவருக்கு சோசலிச உணர்வு இருந்து வந்து உள்ளது.

சிங்காரவேலர் இறுதிவரை சாதி எதிர்ப்பு, சோசலிசம் ஆகிய இரண்டையும் இணைத்தே கொண்டு போகின்றார். பல நேரங்களில் காங்கிரஸ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சக்தியாகிரகம் நடைபெறுகின்ற சமயத்தில் பெரியார் அதை இரண்டு ஜமீன்தார்களுக்கு இடையே நடைபெறும் மோதல் என எழுதுகிறார். காங்கிரஸையும், பிரிட்டிஷாரரையும் அப்படி குறிப்பிடுகின்றார். பகத்சிங்கை தூக்கிலிட்ட சமயத்தில் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை மேற்கொள்காட்டி, ‘வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை; ஆனாலும் பகத்சிங் போன்ற நேர்மையாளர்களை மிகவும் மதிக்கின்றோம்என்று சொல்லும் பெரியார் மாகாணத்திற்கு நான்கு இளைஞர்களை இது போன்று தூக்கிலிடுங்கள் என்று கோபத்துடன் எழுதுகிறார்.

காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை குறிப்பிடும் போது பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கம் சார்பாக இர்வினும், இந்திய முதலாளிகள் சங்கம் (Indian Chamber of commerce) சார்பாக காந்தியும் கையெழுத்து இடுகின்றனர் என்று சொல்கிறார்.

காங்கிரஸில் இருந்த தலைவர்களும் சாஸ்திரங்களை, சாதிய அமைப்பு முறையை நியாயப்படுத்துபவர்களாகவே இருந்தனர். மதன் மோகன் மாளவியா என்ற காங்கிரஸ் தலைவர் பிராமணர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்வதால், வெளிநாட்டு செல்லும் போது பரிகாரத்திற்காக களிமண்ணை எடுத்துச் சென்றார். ‘குத்தூசி குருசாமிஅவரைமண்ணுருண்டை மாளவியாஎன்றுதான் குறிப்பிடுவார். அவர்தான் பின்னாட்களில் இந்துத்துவா சக்திகள் வளர காரணமாக இருந்தார்.

மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றும் முறையினை ஒழிப்பதற்காக ஏழு வருஷம் மகர் சத்தியாக்கிரகத்தை அம்பேத்கர் நடத்துகின்றார். ஏழு வருஷம் தொடர் வேலை நிறுத்தம். யாருமே நடத்தாதது. “இந்திய தொழிலாளர் கட்சிமூலமாக அது நடத்தப்பட்டது. அம்பேத்கர் அடிமூலத்திலிருந்து வரும் மாற்றங்களை சீர்திருத்தம் என்றுதான் சொல்கிறார். வன்முறை மூலம் நடைபெறும் செயல்களை குறிக்கவே புரட்சி என்ற சொல்லை கையாளுகின்றார். கிராம்ஷிகண்ணுக்கு புலனாகாத மாற்றங்கள் என்று குறிப்பிடுவார்நாம் அரசு கட்டமைப்பை தகர்க்கின்றோம். மாற்றம் நிகழ்வது நமக்கு தெரிகிறது. அதனால் அதை புரட்சி என்று குறிப்பிடுகின்றோம். ஆனால் காலம் காலமாக இருப்பவற்றை மாற்றி அமைப்பதை எப்படி குறிப்பிடுவது? திராவிட இயக்கங்களை விமர்சிக்கின்றோம். இன்றைக்கு நான்கு வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுகின்ற சூழலே உள்ளதே. முன்பு அப்படி பேச முடியாது. இரண்டு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் கூட நண்பர்களாக பழக முடியாது. நல்ல உடைகள் கூட இடைநிலை சாதியை சார்ந்தவர்கள் உடுத்த முடியாமல் இருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளதற்கு திராவிட இயக்கமும் ஒரு காரணம். அதற்காக, திமுக, அதிமுக-வை திராவிட இயக்கங்கள் என்று குறிப்பிட முடியுமா?

மார்க்சிஸ்ட்: ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து

எஸ். வி. ஆர்: ஏகாதிபத்தியம் என்பது இன்று நேரிடையாக இல்லை. கண்ணுக்கு புலனாக விதத்தில் ஏகாதிபத்திய முறைகள் நிலவுகின்றது. அமெரிக்கா தான் இன்று முக்கிய ஏகாதிபத்திய நாடு, அதற்கு சில ஐரோப்பிய நாடுகள் துணை போகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் காலனி நாடுகள் என்று எதுவும் கிடையாது, அதனால் காலனி எதிர்ப்பு போராட்டங்கள் கிடையாது. நேரடியாக ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது என்பது இன்று கிடையாது. ஆனால் மறைமுகமான சுரண்டல் என்பது நிலவுகிறது. ஏகாதிபத்தியம் என்பது மக்கள் கண்ணுக்கு புலனாகாமலேயே தனது சுரண்டல் பணியை செய்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியும், அதன் அடாவடித்தனமான சுரண்டல் பற்றியும் மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்வது? ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா போன்ற நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் நேட்டோ படைகள் பற்றியும், அவர்கள் நடவடிக்கைகள் பற்றியும் தெரியும்.

ஆனால் நமது நாட்டில் நேரிடையாக ஏகாதிபத்தியம் பற்றி தெரியாது. மறைமுகமாக அனைத்திலும் ஏகாதிபத்திய சுரண்டல் உண்டு. நாம் அணியக்கூடிய உடை, உண்ணக் கூடிய உணவு எல்லாவற்றையும் யார் தீர்மானிக்கிறார்கள்?

லெனின் அவர்கள் எழுதியஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்என்ற நூலில் முதலாளித்துவ காலத்திற்கு முந்தைய ஏகாதிபத்தியங்கள் பற்றி பேசுகிறார். ரோமப் பேரரசு பற்றியும் அந்த கால கட்ட பேரரசுகள் பற்றியும் பேசுகிறார். அப்போதைய ஏகாதிபத்தியங்கள் தன்மை அடிப்படையில் வேறுபட்டவை. அதற்குப் பிறகு, தொழிற்சாலைகள் உருவானபின், மூலதனம் வளர்ந்தபின் உருவான காலகட்டத்தில் சந்தையை பங்கிட்டுக் கொள்வதில் ஏகாதிபத்தியங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு போர்கள் நடந்தன. ஆனால், இப்போது ஏகாதிபத்தியங்கள் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலைதான் நிலவுகின்றது. அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளால் போர்கள் நடைபெறும் நிலை இல்லை. மாறாக, அவர்களுக்கு வெளியே உள்ள நாடுகள் மீதுதான் போர் தொடுக்கிறார்கள். சிரியா, ஈராக், அதையடுத்து ரஷ்யாவை சுற்றிலும் நேட்டோ படைகளை நிறுத்தியுள்ளார்கள். யூகோஸ்லோவியாவை உடைத்தனர். தங்களுக்கு அடிமையாக இருக்க விரும்பாத நாடுகளை ஒன்று சேர்ந்து தாக்குகின்றனர்.

மார்க்சிஸ்ட்: பாசிசம் என்று மரபு ரீதியாக ஒரு வரைவிலக்கணம் சொல்லி வருகிறோம். இப்போது இருக்கும் சூழலை பாசிசம் என்று சொல்வது சரியானதா?

எஸ்.வி.ஆர் : அளவுக்கு மிறிய சர்வாதிகாரத்தை பாசிச அடக்குமுறை என்று சொல்லுகிறோம். அறிவியல் ரீதியாக அது சரியல்ல. நிதி மூலதனத்தின் கை ஓங்கி உள்ள இடத்தில்தான் பாசிசம் வரும் என்ற வரைவிலக்கணத்தை அப்படியே இங்கு பொருத்திப் பார்க்க முடியாது. போர்ச்சுக்ல்லில் ஷைலாசர் ஆட்சியில் பாசிசம் இருந்தது. அங்கு, அப்போது நிதி மூலதன குவிப்பு இல்லை. இத்தாலியில் பாசிசம் இருந்தது. ஹிட்லருடன் இருந்ததால் சில இடங்களில் மட்டும் யூதர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ஜெர்மனியில் இருந்ததைப் போல அழித்தொழிப்பு முகாம்கள் போன்ற கொடும் அடக்குமுறைகள் அங்கு இருக்கவில்லை. பாசிசத்தை வரையறுப்பது ஒரே மாதிரி எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்பது அல்ல. இங்கு ஜனநாயகத்தை முற்றிலும் மறுக்கக்கூடிய, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யக்கூடிய, ஒற்றை அடையாளத்தை திணிக்கக்கூடியதாக உள்ளது.

மார்க்சிஸ்ட் : இந்துத்துவா கருத்து நிலை சார்ந்து வேகவேகமாக மக்கள் திரட்டல் நடந்து வரும் நிலையில் இந்த அபாயத்தை எதிர் கொள்ள திராவிட கருத்து நிலையின் பல கூறுகள் பயன்படக்கூடும். பொதுவாகஇடது சாரிகள் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி

எஸ்.வி.ஆர் : இன்றைக்கு ஆட்சியிலுள்ள பாஜக சாதியை நிலை நிறுத்த விரும்புகிறது. சாதி வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கொள்கை. கையிலுள்ள ஐந்து விரல்களை போல சாதி அமைப்பு உள்ளது. பிரிந்திருந்தாலும் அவை ஒன்றாகவே இயங்குகின்றன. இது கடவுளால் அருளப்பட்டது என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லுகிறது. ஆனால் அவர்களிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டை விரலுக்குரிய இடத்தை கொடுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் ஒத்துக்கொள்வார்களா? சாதி என்ற பிரிவினை இருப்பதால்தான் பாசிச சக்திகள் செயல்பட முடிகிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் துவக்க காலத்திலும் அதற்கு பிறகும் போர்க்குணமிக்க போராட்டங்களை நாம் நடத்தியுள்ளோம். நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக உள்ளது. போராடும் இயக்கங்களை ஆயுதம் கொண்டு ஒடுக்க எளிதில் முடிகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அரபு புரட்சி, வால் ஸ்டீரிட் முற்றுகை போன்றவற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போக முடியவில்லை. தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு எளிதில் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக போராடுபவர்களை அடையாளம் காணவும், பின் தொடரவும் முடியும். மாவோயிஸ்டுகள் ஒருபுறம் ஆயுதப் போராட்டங்களை நடத்தி வந்தாலும் இன்றைய சூழலில் அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெகு மக்களை திரட்டுவதுதான் நமக்குள்ள ஒரே வழி. அதை வலிமையாக நாம் செய்ய வேண்டும்.

இன்றைய சூழலில் சூழலியல் பிரச்சனைகளையும் நாம் கையிலெடுக்க வேண்டும். பல பிரச்சனைகளில் ஒன்றாக இவற்றைப் பார்க்கக் கூடாது. ஏகாதிபத்திய இலாப வெறியால் உலகில் உள்ள மனிதர்கள் வாழும் ஒரே கிரகமான புவிக்கோளம் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது. மனித குலத்தை பாதுகாக்க, மற்ற எல்லோரையும் விட நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. சோவியத் யூனியன் கால கட்டத்தில் போல்ஷ்விக் கட்சி சூழலியல் விஷயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தியது. வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தப்பட்டன. புகாரின் அவர்களின் எழுத்துக்களில் சூழலியல் விஷயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரஷ்னொவ் காலத்தில் கூட சூழலியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய மகாராஷ்டிராவில் தண்ணீர் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் குடிநீர் பிரச்சனை உள்ளது. இஸ்ரேல் சிரியாவுடனான போருக்கு பிறகு திருப்பித்தரப்பட்ட பகுதிகளில் கோலான் குன்றுகள் இல்லை. அதை அவர்களே வைத்துக் கொண்டனர். ஏனென்றால் அவர்களின் நீர் ஆதாரம் அங்குதான் உள்ளது. அதைப் பாதுகாத்து தங்களிடமே வைத்துக் கொள்ள வேண்டும்என்று நினைக்கின்றனர்.

இனி அடுத்து நாடுகளிடையேயான சண்டை, பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீருக்காக நடக்கக் கூட வாய்ப்புள்ளது. புவி அவ்வளவு மாசுப்பட்டுள்ளது. எனவே சூழலியல் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும். அணு மின்சாரம் உண்மையிலேயே மிகப் பெரிய செலவு பிடிக்கக்கூடியது. அனல், புனல் மின் திட்டங்களை விட பல மடங்கு செலவு பிடிக்க கூடியது.

நியூட்ரினோ திட்டத்தை பொறுத்தவரையில் அது அவசியமான ஆராய்ச்சி ஆகும். அத்திட்டத்திற்கு எதிரான வாதங்களை நாம் அறிவியல் ரீதியாக முறியடிக்க வேண்டும். அறிவியலை மிக உயர்ந்த கட்டத்திற்கு கொண்டு போக நியூட்ரினோ திட்டம் மிகவும் அவசியம் ஆகும்.
மின் உற்பத்தித்திட்டங்களில் இன்று மரபு சாரா திட்டங்கள் முன்னுக்கு வந்து விட்டன. பல நாடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் பிரபலமாகி வருகின்றன. உலக நாடுகளில் பெருகும் குப்பைகளை சமாளிப்பது இன்றைக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. நாம் இவற்றுக்கெல்லாம் மாற்று முறைகளை முன் வைக்க வேண்டும்.

நம்மாழ்வார் இயற்கை விவசாயம் என்ற மாற்றை முன் வைத்தார். நிலச்சீர்திருத்தம் குறித்து அவர் எதுவுமே பேசவில்லை. இருப்பினும் ஒரு மாற்றை முன் வைத்து நிலைப்படுத்தினார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நிலம் சார்ந்த உறவுகள் பற்றிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும். மிகப் பெரிய அளவு நிலங்களை உடைமையாக வைத்து இருப்பவர்கள் இன்று இல்லை. அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கோவில் நில உடைமைகளில்கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அது சார்ந்த ஸ்தூலமான ஆய்வுகள் நமக்கு தேவை. இல்லையென்றால் நாம் பழைய விவரங்களை வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்போம்.

இன்னும் தமிழகத்தில் உள்ள சில மார்க்சிய அறிவு ஜீவிகள் பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நமக்கு இன்றைய தேவை, இன்றுள்ள சூழல் குறித்து விரிவான ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின் இன்றைய செயல்பாடு, நிதி மூலதனத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுகள் தேவை. தமிழகத்திலுள்ள இடதுசாரி அறிவு ஜீவிகள் எல்லோரும் ஒன்றிணைந்து இத்தகை ஆய்வுகளை செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அது இன்றைய காலத்தின் தேவையும் கூட. பழமை வாதம் பற்றி பேசுவது எரிச்சலையே உண்டு பண்ணுகிறது. அதனால்தான் நான் தேசிய வாதிகள் பற்றி பேசுவது கிடையாது. நாம் சர்வ தேசிய வாதிகள். நமக்கு சர்வ தேசிய உணர்வுதான் இருக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி இறந்தால், நமது சொந்தக்காரர் இறந்ததைப் போல நமக்கு உணர்வு வர வேண்டும். மக்கள் மத்தியில் சர்வ தேசிய உணர்வினை வளர்க்க நாம் பாடுபட வேண்டும்.