Sunday, January 31, 2016

மோடி அரசின் நாய்ப் பாசம்



குரங்கிலிருந்து உருவானவன் மனிதன் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம விதி.

ஆனால் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் நாயிலிருந்து உருவானவர்கள் போல!

ஏனென்றால் அவர்கள் நாய்களோடு அவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளார்கள்.

நாய்கள் இல்லாமல் அவர்களால் எந்த உதாரணமும் சொல்ல முடிவதில்லை.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நாயின் மகனாக வர்ணித்தவர் மோடி.

ஹரியானாவில் எரித்துக் கொல்லப்பட்ட இரண்டு இளம் தளிர்களை நாய்கள் என சொன்னார் வி.கே.சிங் என்ற அநாகரீக மனிதர். 

பாதுகாப்புத்துறையை "டாபர்மேன்" நாய் என்று சொல்லியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகர். அவ்வளவு சிறப்பாக காவல் காப்பவர்கள் என்ற அர்த்தத்தில் சொன்னால் கூட பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால் அது நம்மை கடித்து விடும் என்றுதான் சொல்கிறார். 

இப்படி எல்லாவற்றையும் நாயோடு ஒப்பிடுவதால்தான் பாஜக காரர்கள் நாய்களிலிருந்து உருவானவர்களோ என்று சந்தேகம் வருகிறது.


 

Saturday, January 30, 2016

யார் முதல் பலி?



மகாத்மா -
சகிப்பின்மை
சாய்த்த
முதல் பலி.

செய்வது என்னவென்று
அறியாமல் சிலர்
சிவப்புக் கம்பளம்
விரித்ததாலே
ரத்த ருசி
கண்ட கூட்டம்
தினம் தினம்
கேட்கிறது
ஒற்றுமையையும்
நல்லிணத்தையும்
தனக்கான பலியாய்.

அண்ணலின் ரத்தம்
இன்னும் ஒளிர்கிறது
நம் நிஜமான
பகைவர் யாரென
இனம் காண
அபாய விளக்காய்



Friday, January 29, 2016

குப்பை வண்டியிலும் “அம்மா” படம்







இன்று செய்யாறு சென்றிருந்தேன். அப்போது சில இடங்களில் புத்தம்புதிதாக பச்சை நிறத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டிகள் கண்ணைக் கவர்ந்தன. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலிருந்து வாங்கப்பட்ட குப்பை வண்டிகள் என்று எழுதப்பட்டது மட்டுமல்லாமல் தமிழக முதல்வரின் படமும் அவற்றில் ஒட்டப் பட்டிருந்தது.

குப்பை வண்டியாக இருந்தாலும் கூட அதிலே தங்கள் தலைவியின் படத்தை போட வேண்டும் என்ற அடிமை மனோபாவத்திற்கு அதிமுக ஆட்கள் வந்து விட்டார்கள் போல. எதுவாக இருந்தாலும் அதிலே தனது படம் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் ஏதாவது உத்தரவு போட்டிருப்பாரோ?

இந்த ஆட்சியை மக்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடம் அதுதான்.

பின் குறிப்பு 1 : அந்த சட்டமன்ற உறுப்பினர் யாரென்று சொல்லவில்லை அல்லவா? ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றபோது அமைச்சராக பதவியேற்கையில் ஓவர் அழுகாச்சி சீன் போட்டாரே முக்கூர் சுப்ரமணியம் அவர்தான் அந்த அம்மா விசுவாசி!



பின் குறிப்பு 2 : பேருந்தில் சென்று கொண்டிருந்ததால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் குப்பைத் தொட்டியில் ஜெ ஸ்டிக்கர் ஒட்ட விரும்பவில்லை. ஆகவே இரண்டு படங்கள் உள்ளது. 

Thursday, January 28, 2016

இப்படியோர் குடியரசு தின கொண்டாட்டம்????





இரண்டு நாட்களாக சமூக வலைத் தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் படம் இது.

இந்தியக் குடியரசின் நிலை எவ்வளவு மோசமாகி விட்டது என்பது இந்தப் படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் இறையாண்மை பன்னாட்டுக் கம்பெனிகளின் கைவசம்தான் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

அரசியல் சாசனத்தின் முகப்பில் உள்ள “இந்தியா ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிச, ஜனநாயக, மதச்சார்பற்ற, குடியரசு நாடு” என்பதை பன்னாட்டுக் கம்பெனிகளின் பானங்களை அடுக்கி வைத்து கிண்டல் செய்கின்றார்கள்.

அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டவற்றை அர்த்தமில்லாமல் செய்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டென்றால் அரசியல் சாசனத்தையே அகற்றும் திசை வழியில் மோடி அரசு செல்கிறது.

ஆனாலும் இவர்கள் எல்லாம் கொடியேற்றி, மிட்டாய் கொடுத்து குடியரசு தினத்தை கொண்டாடிக்கிறார்கள்.

கொடுமை சார் இது!

Wednesday, January 27, 2016

அன்று எம்.ஜி.ஆர், இன்று ரஜனிகாந்த்




ரஜனிகாந்திற்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்ட செய்தியை படித்த போது அந்தக் காலத்தில் இந்திரா காந்தி அரசு ரிக்சாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான “பாரத்” விருதை எம்.ஜி.ஆருக்கு அளித்ததுதான் நினைவிற்கு வந்தது. சிறந்த நடிகர் விருதுக்கு “பாரத்” என்றும் சிறந்த நடிகை விருதுக்கு “ஊர்வசி”  என்றும் பெயர் வைக்கப் பட்டிருந்த காலம் அது.

அந்த திரைப்படத்தை பார்த்த நிஜமான திரைப்பட ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது எவ்வளவு பெரிய அபத்தம் என்பது தெரியும். அரசியல் நோக்கர்களுக்கு திமுக வை உடைப்பதற்காக கொடுக்கப்பட்ட அரசியல் ஊக்கப் பரிசு அந்த விருது என்பது புரியும்.

இப்போது ரஜனிகாந்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பத்ம விபூஷனுக்கும் அரசியல் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

யாருமே கண்டுகொள்ளாத பாஜகவை சட்டமன்றத் தேர்தலில் கரை சேர்க்க ரஜனிகாந்தாவது துடுப்பாக மாறுவாரா என்ற ஏக்கத்தில் விருது அளித்து தூண்டில் போட்டுள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி வீட்டிற்கே வந்தும் கூட வழுக்கிக் கொண்ட போன ரஜனியை இப்போதாவது சிக்க வைக்க முடியுமா என்று முயற்சிக்கிறார்கள்.

தன்னுடைய புதிய படம் வெளியாகும் நேரத்தில் அப்போது பரபரப்பை உருவாக்க மட்டுமே ரஜனி வாய் திறப்பார் என்று மோடிக்கு பொன்னார், தமிழிசை ஆகியோர் சொல்லவில்லை போலும்!

இவருக்கு பதிலாக “தல” மற்றும் “தளபதி” ஆகியோருக்கு “பத்மஸ்ரீ” விருது கொடுத்திருந்தால் ஒரு வேளை கொஞ்சமாவது பலன் கிட்டியிருக்குமோ?

Monday, January 25, 2016

வித்தியாசமான “சின்ன சின்ன ஆசை”



வயலினில் கேட்டிருப்பீர்கள்,
கிடாரில் கேட்டிருப்பீர்கள்,
பாடிக் கேட்டிருப்பீர்கள்,
பியானாவில் கூட கேட்டிருப்பீர்கள்,
இப்படி ஒரு வாத்தியத்தில் கேட்டுள்ளீர்களா?

நான் ரசித்தது உங்களுக்காகவும்.


Friday, January 22, 2016

வாழ்த்துக்கள், நம்பிக்கையோடு



இன்று அறுபதாவது குடியரசு தினம்.

அனைவரும் சமம் என்று உறுதிமொழியளிக்கிற இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த தினம்.

இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற, சோஷலிச, இறையாண்மை உள்ள குடியரசு நாடு என்று சொல்கிறது அரசியல் சாசனம்.

ஆனால் இவை இன்று நடைமுறையில் இல்லை என்ற யதார்த்தமும், இந்த உயரிய கோட்பாட்டுக்களுக்கு எதிரானவர்களே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற சோகமும் மனதில் வலியைத் தந்தாலும் 

மக்கள் ஒரு நல்லதொரு மாற்றத்தை உருவாக்குவார்கள், அதற்கான ஜனநாயக உரிமையை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு 

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

 

குற்ற உணர்வை உருவாக்கிய அறிமுகம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதி தீக்கதிர் நாளிதழில் வெளியான இந்த நூல் அறிமுகம் “புத்தகத்தை வாங்கி பத்து நாட்களாகியும் இன்னும் படிக்காமல் வைத்துள்ளோமே” என்ற குற்ற உணர்வை உருவாக்கியது.

நீங்கள் நூல் அறிமுகத்தையும் படியுங்கள், அதை விட முக்கியமாக நூலையும்.

இன்னும் ஓரிரு நாட்களில் முடித்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு.

 நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல் ஜி.ராமகிருஷ்ணன்


இடதுதிருப்பம் எளிதல்ல - இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் என்ற ஆங்கில நூல் 2015 மே மாதம் வெளியானது . இந்தநூல் வெளியான காலத்திற்கு முக்கியத் துவம் இருக்கிறது. காரணம் 2014ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் பெரிய பின்னடைவைச் சந்தித்தன. இந்த பின்னடைவுக்கு என்ன காரணம்? இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது.?
என்னசெய்ய வேண்டும்? என்பது பற்றி விரிவாக ஆய்வுசெய்து 351 பக்கங்களைக் கொண்ட இந்த நூலைஅமெரிக்காவில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதியுள்ளார். ஆங்கிலத் தில் வெளியான இந்நூலை ச.சுப்பாராவ் சிறப்பாக தமிழாக்கம் செய் துள்ளார். தமிழில் எழுதப்பட்ட நூலை படிப்பது போன்றுஇவரது மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. பல அரிய நூல்களை வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயம் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது.

நான் இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தோடு தொடர்புடை யவன். இக்காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகளை பேட்டி கண்டுள்ளேன். கட்சி ஆவணங்களை ஆயிரக்கணக்கான பக்கங்களில்படித்தவன். கம்யூனிச நடவடிக்கை களில் பங்கேற்கவும், பார்வையிடவும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித் தவன். இத்தனை ஆண்டுகளில் கம்யூனிச இயக்கத்தோடு எனது நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் விளைவே இந்நூல் என தனது முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்தது இடதுசாரிகளுக்கு மிக அற்புதமான வாய்ப்புகள். மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணி ஆட்சியில் இருந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நிலச்சீர்திருத்தம், குத்தகைதாரர் உரிமைகள், உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பரவலாக்கம், மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல் என பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமான மாற்றுக் கொள்கைகளை இடதுசாரி அரசாங்கம் அமலாக்கியுள்ளது. தலித் மக்களுக்கும், பழங்குடி மக்களுக் கும் இந்த அரசுகள் ஆதரவாக இருந் தன. இருப்பினும் மேற்குவங்கத்தில் 2011ல் இடதுமுன்னணி ஆட்சியை இழந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் பலமும் குறைந்தது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1952 தேர்தலுக்குப் பிறகு குறைவான எண்ணிக்கையிலேயே இடதுசாரிகள் வெற்றி பெற முடிந்தது. (திரிபுரா இதற்கு விதிவிலக்கு)இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று விஜய் பிரசாத் நூலின் பல பகுதி களில் விளக்கியுள்ளார். 

சர்வதேசஅளவில் சோவியத் பின்ன டைவுக்குப் பிறகு அமெரிக்க ஆதிக்கத்திலான ஒரு துருவஉலக நிலைமை உருவானதும், இந்தி யாவில் 90களில் இருந்து நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டதும், இந்துத்வ வகுப்புவாத சக்திகள் தலைதூக்கியதும் ஒரே காலத்தில் நடந்தன. மேலும் மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராமம் பிரச்சனைகளில் இடதுமுன்னணி அரசினுடைய தவறான அணுகுமுறை ஆகிய பல அம்சங்கள்மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி யினுடைய பின்னடைவுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன எனலாம்.

குறிப்பாக, நவீன தாராளமயக் கொள்கை மக்கள் மத்தியில் உருவாக்கிய தாக்கமும், இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஒரு காரணம். நவீன தாராளமயக் கொள்கை அசமத் துவத்தை நோக்கி மட்டும் இட்டுச் செல்ல வில்லை. அது ஆசைகளையும் உருவாக்கியது. நகரங்களில் சில ஊர்களில் கட்டப்பட்ட மால்களில் பளபளப்பான புதிய பொருட் கள் நிறைந்திருந்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப் படங்களும் நுகர்வுக்கலாச்சாரத்தை உருவாக்கின. பளபளப்பான வீடுகள், வங்கிக்கணக்கில் பணத்தைக்கொட்டும் வேலைவாய்ப்பு கள். இந்த வங்கிக் கணக்குகள் இந்த மால்களில் பார்க்கும் எந்தப்பொருளையும் வாங்குவதற்கு கிரெடிட் கார்டைத் தந்தன. சில குறிப் பிட்ட பொருட்களை வாங்கு வதுதான் சமூகஅந்தஸ்தை காட்டும் குறி யீடு என்று இன்றும் தொழிலாளர்கள் நம்புவதை சமூகவியலாளர்கள் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்திய ஆளும் வர்க்கம் தனது இந்த கருத்துக்களை இந்தியாவின் கருத்து என்பதாகக் கூறி ஏமாற்றி வருகிறது. எனநவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் மீது உழைக்கும் மக்கள்உள்ளிட்டு அனைத்துப் பகுதி மக்களுக் கும் மாயை ஏற்பட்டுள்ளதை நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார்.

காங்கிரசும், பாஜகவும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை ஆதரித்து அமலாக்கியதுபோல், மற்ற மாநில முத லாளித்துவ கட்சிகளும் இதே பாதையில் சென்றன. பெரியாரும், ராம் மனோகர் லோகியாவும் கூறிய கருத்துக்களை இக்கட்சிகளுடைய பிற்கால வாரிசுகள் கைவிட்டுவிட்டனர். நாடு முழுவதும் பொருளாதாரக் கொள்கையில் பெரும் வலதுபுற சாய்மானம் ஏற்பட்ட நிலையில், இடதுசாரிகளுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியது.இந்திய சோசலிசத்தின் வீழ்ச்சி என்ற தலைப்பில் மூன்றாவது அத்தியாயத்தில் சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதற்குப் பிறகும் இடதுசாரி இயக்கம் ஏன் பிரதான இயக்கமாக மலரவில்லை என்பதை ஆய்வு செய்கிறார். 1917ல் நடைபெற்ற ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டு காந்திய பாரம்பரியத் திற்கு ஒரு மாற்றுப் பாதையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்தது, 1921ஆம் ஆண்டு சிங்காரவேலர் இந்து நாளேட்டின் மூலமாக காந்திஜிக்கு ஒரு திறந்த மடல் எழுதினார். “தற்போதைய நிலைமை பற்றி எனது கருத்துக்களைச் சொல்லி நான்உங்களை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை. சுயராஜ்ஜியத்திற்கான உங்கள் போராட்டத்தில் நான் ஒரு எளிய தொண்டன்... தற்போதைய அந்நிய அதிகாரவர்க்கத்திடம் வெற்றி பெறுவது மட்டுமின்றி, நமது சொந்த மக்களால் ஆன எதிர்கால அதிகாரவர்க்த்திடமும் வெற்றி பெற்றால் அன்றி நமது துரதிர்ஷ்டவசமான மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். 

எனவே கம்யூனிசத்தால் மட்டுமே, அதாவது நாட்டின் அனைவரின் நலனுக்காகவும் நிலம் மற்றும் முக்கிய தொழில்களை பொதுப் பயன்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே, நமது மக்களுக்கு உண்மை யான சுதந்திரத்தை, நிம்மதியைத் தரும் என்று நம்புகிறேன்... அரசியல் அதிகாரத்திற்கு எதிராக அகிம்சை வழியில் ஒத்துழையாமையை நம்மால் கடைப்பிடிக்க முடியும் என்றால் ஏன் அதை முதலாளித் துவ அதிகாரத்திற்கு எதிராகப் பயன்படுத் தக்கூடாது என்பது எனக்கு புரிய வில்லை. 

ஒன்றை எதிர்த்துப் போராடாமல் நம்மால் மற்றதை எதிர்த்துப் போராட முடியாது” என குறிப்பிட்டார்.சிங்காரவேலருடைய கருத்துதான் பொது வாக சுதந்திர போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையாக இருந்தது. இருப்பினும், பல காரணங் களினால் இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கெதிரான, சுதந்திரத்திற்கான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் அமையவில்லை. சுதந்திர போராட்டத் தின் தலைமையாக காங்கிரஸ் கட்சியே இருந்தது. ஆனால், வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கெதிரான தேச விடுதலைப்போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. சீனாவிலும், வியட்நாமிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள்ஆட்சிக்கு வந்தன.நூலின் 5வது அத்தியாயம் இடதுசாரி கட்சிகளின் அணுகுமுறை பற்றியது. 

மேற்குவங்கம், கேரளா, திரிபுரா, தமிழ்நாடு, ஆந்திரா என நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களின் ஏற்ற,இறக்கம் பற்றியும். அதிகாரத்திலிருந்த மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங் களில் அந்த அரசுகள் பின்பற்றிய அணுகு முறை குறித்தும் ஏராளமான விபரங்களை கொடுத்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆவணங்களிருந்து நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலான காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யிலான மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநில அரசுகள் செயல்பட்ட விதம் பற்றியும், அவைகளுடைய கொள்கை பற்றியும் 6வது அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். நூலாசிரியர் அதோடு நிறுத்தவில்லை. 1957ல் இ.எம்.எஸ். தலைமை யிலான அரசு செய்த அடிப்படையான பணிகளையும் குறிப்பிடுகிறார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற இதர மாநிலங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கட்சி தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்திய இயக்கங்கள் பற்றியும் ஏராளமான விபரங்கள் கொடுக் கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிநடத்திய போராட்டங்களை நூலாசிரி யர் விரிவாக விளக்கியுள்ளார். இத்தகையபோராட்டங்கள் தொடர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில் 90 சதவிகிதம் உழைக்கும் வர்க்கம் முறைசாராத்துறைகளில் உள்ளது. இதில் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேரடியாக வேலைபார்க்காது, உப ஒப்பந்தக்காரரிடம் வேலை பார்க்கும் ஏராளமான தொழிலாளர்களும் அடக்கம். தொழிற்சங்க அரசியல் நடத்துவது மிகவும் கடினமாக இருக்கும் வகையில்தொழில் துறை வடிவமைக்கப்பட்டுள் ளது, ஆனாலும், பல்வேறு கடினமான சூழல்களிலும் தொழிலாளர்கள் வீரத்தோடு போராடுகிறார்கள்.ஒட்டுமொத்த உழைக்கும் மக்களில் 90 சதவிகிதம் பேர் முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதை சுட்டிக்காட்டி இவர் களை திரட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளையும் விளக்கியிருக்கிறார். 

மேலும், தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பேர் காண்ட்ராக்ட் தொழிலாளியாக வேலை செய்யும் புதிய சூழலில் இவர்களை திரட்டுவதற்கு சங்கம் அமைக்க ஆலை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. அடக்கு முறைகளை ஏவி விடுகிறது. குறிப்பாக, ஹரியானாவில் மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்து அங்கு ஏற்பட்டஅசம்பாவிதத்தையொட்டி 2012ல் கைதுசெய்யப்பட்ட 146 பேரில் கடந்த மூன் றாண்டு காலமாக இன்னும் 36 பேர் சிறையில் வாடுகின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் பிரிக்கால் ஆலையில் இதைப்போன்று நடைபெற்ற அசம்பா விதத்திற்கு பிறகு 27 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பில் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மம்தாவின் அடக்குமுறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டத் தை மட்டுமல்ல நாடு முழுவதும் கட்சியும், வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்தி வரும் ஏராளமான போராட்டங்களை ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார். 

பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களை குறிப்பிட்டிருக்கிறார். உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவரை தகர்க்க நடந்த போராட்டம் உள்ளிட்டு ஏராளமான விபரங்களை தருகிறார். இடது திருப்பம் எளிதல்ல என்று அவரு டைய நூலுக்கு தலைப்பு கொடுத்தது எதிர்காலத்தில் இடதுசாரிகள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதைவிளக்குவதற்கே. சவால்களை எதிர்கொண்டு இடதுசாரிகளால் வெற்றி பெறமுடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வி இடது தத்துவத்தின் நிராகரிப்பு அல்ல என வாதிடுகிறார். 

1984ல் பாஜக இரண்டே இடங்களில் வென்ற போது இந்திய வாக்காளர்கள் அதன் மொத்த தத்துவத்தையும் நிராகரித்தார்கள் என்று கொள்ளலாமா? அப்படிஇல்லை. ஏனெனில் பாஜக அமைப்புகள்(ஆர்.எஸ்.எஸ் விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள், வனவாசி கல்யாண் கேந்திரா) இந்திய சமூகத்தில் ஆழமாக ஊடுருவி இருப்பது நமக்குத் தெரியும். 1984ல் இந்துத்வா ஒழிந்துவிட்டது என்றுநம்பியது ஒரு வருக்குப் பிடித்ததாக இருந்திருக்கலாம். அதே போன்றுதான் மார்க்சியம் இப்போது வீழ்ந்துவிட்டது என்றுநினைத்துக் கொள்வதும்.மார்க்சியதத்துவம் வெல்லும்; இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்காலத்தில் பலமான இயக்கமாக வளரும் என்பதே அவருடைய அழுத்தமான கருத்து.தம் கொள்கைகளில் உறுதியாய் நிற்க,எதார்த்த, நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ய, ஒட்டுமொத்த அரசியலில் திறமையான ஒரே மாற்றாக உருவாக ஒரு திட்டம் தீட்ட அதற்கு (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு) மிகப்பெரிய உள்வலிமை தேவை என தன்னுடைய முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப் படலாம், பலமுறை தவறான வழியில்சென்றுவிடலாம்.
ஆனால் போராட்டத் தின் மூலமாக, சுய விமர் சனத்தின் மூலமாகமட்டுமே அது புதிய பலம் பெற்று விஸ்வ ரூபமாக மீண்டும் எழும் என மாமேதை காரல் மார்க்சினுடைய கூற்றை விஜய் பிர சாத் தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டியிருக்கிறார். 

இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கத்தை உடைப்பதற்கு, கட்சி எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றிகீழ்கண்டவாறு சரியாக குறிப்பிடுகிறார். நம் காலத்தில் பெருமளவு அறிவுப்பூர்வமான நடைமுறை சார்ந்த முயற்சிகள் இல் லாமல் இடதுசாரிகள் முன்னேற முடியாது என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நூலுக்கு எழுதப்பட்டுள்ள முன்னுரையிலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திற் கும் ஏராளமான நூல் களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களை எடுத்தாண்டுள் ளார் நூலாசிரியர். அவருடைய வாசிப்புப் பரப்பும், உழைப்பும் மெச்சத்தக்கவை. அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டே அவரால் இந்திய கம்யூனிச இயக்கம் குறித்து இவ்வளவு விரிவாக எழுத முடிந்துள்ளது வியப்பளிக்கும் ஒன்றாக உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது கட்சி மாநாடு காங்கிரஸ் முடிவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 27 முதல் 31ஆம் தேதி வரையில் கொல்கத்தாவில் ஸ்தாபன பிளீனம் நடந்தது. 

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு கொண்ட புரட்சிகரமான கட்சியை உருவாக்குவது என்றும், இதற்காக எடுக்க வேண்டிய அரசியல், ஸ்தாபன நடவடிக்கைகள் பற்றியும் பிளீனம் முடிவெடுத்துள்ளது. கொல்கத்தா பிளீனம் காட்டியுள்ள திசைவழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறும் என்பது திண்ணம். இடது திருப்பம் எளிதான ஒன்றல்ல தான் . ஆனால் அது தவிர்க்க முடியாதது.- இடது திருப்பம் எளிதல்ல (இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்)- விஜய் பிரசாத்,


கடைசியில சொதப்பிட்டீங்களேப்பா



 
வாட்ஸப்பில் வந்த காணொளி இது.

அநேகமாக உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள்



தமிழர் திருநாளுக்கான வாழ்த்தைக் கூட தமிழில் சொல்ல முடியாதா என்ற மிக நியாயமான கேள்வியை எழுப்புகிற படம் இது.

சிறப்பாக செய்துள்ளார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆனால் கடைசியில்தான் இதை தயாரித்தது யார் என்பதை ஆங்கிலத்தில் போட்டு விட்டார்கள். இதையும் தமிழில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நாளை முதல் தஞ்சையில்





எங்களது தென் மண்டல் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முப்பத்தி மூன்றாவது பொது மாநாடு நாளை தஞ்சையில் தொடங்கி ஜனவரி மாதம் இருபத்தி ஆறாம் தேதி வரை நடைபெறவுள்ளது. அமைப்பின் ஒற்றுமையும் வலிமையும் பிரம்மாண்டமாய் வெளிப்படும் தருணம் இது. தமிழகம், புதுவை மற்றும் கேரளா வைச் சேர்ந்த தோழர்கள் திரளும் சிறப்பான மாநாடு.

மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற பிரசுரம் கீழே உள்ளது. மனசாட்சியை தட்டி எழுப்பும் இந்த பிரசுரத்தை வடிவமைத்தவர் எங்கள் தென் மண்டலப் பொதுச் செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன்.

இன்று தஞ்சை நோக்கி புறப்படுகிறேன்.

ஆனாலும் தினம் சந்திப்போம்,  ஏற்கனவே டிராப்டில் உள்ள பதிவுகள் மூலமாக