Showing posts with label பத்திரிக்கை. Show all posts
Showing posts with label பத்திரிக்கை. Show all posts

Wednesday, September 23, 2015

அறிவுரை அல்ல, ஆபாசம் மட்டுமே




குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்படக் கட்டுரை கடுமையான கண்டனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெண்கள் மீதான அக்கறையோடு எழுதப் பட்டுள்ளதான தோற்றத்தை தர முயற்சித்தாலும் அக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல என்பதை கட்டுரையைப் படிக்கும்போதே உணர்ந்து கொள்ள முடிகிறது. 

லெக்கின்ஸ் உடை  அணிந்த பெண்கள் பற்றிய வர்ணனையே ஆபாசமாகத்தான் இருக்கிறது.  உண்மையிலேயே பெண்களின் உடல் நலன் குறித்த அக்கறை என்றால் மருத்துவரின் பேட்டியோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே.

பாலியல் கொடுமைகளுக்கு பெண்களின் ஆடைகள்தான் காரணம் என்று அவர்கள் மீதே பழிபோடும் உளுத்துப் போன வாதத்தை மீண்டும் நிறுவுவதற்கான முயற்சிதான் இது.  அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு வாரமும் இவர்கள் வெளியிடுகிற கவர்ச்சிப் படங்கள் என்ன ஆண்களை திருத்தி நல்வழிப் படுத்துவதற்கா?

பெண்களை ரகசியமாக ஒளிந்திருந்து எடுத்த படங்களைத்தான் இவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதுவே தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம். அப்படிப்பட்ட படங்களை வெளியிட்டு விற்பனையைப் பெருக்குகிற கீழ்த்தரமான விளம்பர உத்தியைத் தவிர வேறெதுவும் இல்லை.

எத்தனையோ புலனாய்வு பத்திரிக்கைகள் ஊழல் விவகாரங்களை ரகசியமாக படம் எடுத்து வெளியிடுகின்றன. இவர்களின் தரம் இவ்வளவுதான். 

வெட்கம் கெட்ட செயல்.

 

Wednesday, September 9, 2015

அடுத்தவர் அந்தரங்கத்தின் மீது ஏனிந்த ஆர்வம்?




இந்த விஷயம் தொடர்பாக எழுத வேண்டிய அவசியமில்லை என்பதால் இத்தனை நாளாக மௌனத்தை கடை பிடித்திருந்தேன். ஆனால் நேற்று படித்த, இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் ஒரு நகைச்சுவை என்ற பெயரிலான  பெண்கள் மீதான ஒரு பொதுப்படையான தாக்குதல் என்னையும் அரிவாளைத் தூக்க வைத்து விட்டது.

தேசிய குற்ற ஆவணப் பிரிவின் புள்ளி விபரத்தின் படி கடந்தாண்டு மட்டும் நடந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை  33981. இந்த எண்ணிக்கை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.

இதிலே பதிவான அனைத்து கொலைகளும் ஊடகத்தால் பகிர்ந்து கொள்ளப் படுவதில்லை. கொலை என்பது பரபரப்பான செய்தியாக இருந்தாலும் கூட விவசாயிகளின் வரப்புப் பிரச்சினையால் ஏற்படும் கொலைகளோ, கூலித் தொழிலாளியின் கொலையோ, சொத்துக்கான தகராறால் ஏற்படும் கொலைகளுக்கோ ஊடகத்தால் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. பெரும்பாலான கொலைகள் பற்றி  சில தினசரிகள் மாவட்டப் பக்கங்களில் இரண்டோ அல்லது மூன்று பத்திகளில் செய்தி வெளியிட்டு ஒரு நாளோடு முடித்து விடுவார்கள். அதுவே பாலியல் சார்ந்த பிரச்சினைகளாக இருந்தால் பத்திகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

ஆனால் இந்த இந்திராணி முகர்ஜி விவகாரத்தை அவ்வளவு சீக்கிரமாக விடுவதற்கு தேசிய அளவிலான பத்திரிக்கைகளோ அல்லது தேசிய அளவிலான தொலைக்காட்சி சேனல்களோ தயாராக இல்லை. 

இந்த செய்தி வெளிவந்து ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை அனேகமாக அனைத்து நாளிதழ்களும் இக்கொலை பற்றிய செய்தியை அதுவும் முதல் பக்கத்திலோ இல்லை நடுப்பக்கத்திலோ வெளியிடாமல் இருப்பதில்லை. தொலைக்காட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. போதாக்குறைக்கு மும்பை போலீஸ் கமிஷனருக்கு பதவி உயர்வு கொடுத்து இன்னும் இரண்டு நாட்களுக்கு தீனி கொடுத்து விட்டார்கள்.

இதிலே கொலை பற்றிய செய்தியை விட இந்திராணி முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை அகவாழ்ராய்ச்சி செய்வதில்தான் ஊடகங்களுக்கு அளவு கடந்த ஆர்வம். இந்த லட்சணத்தில் முந்தைய யுகத்தில் இந்திரனுக்கு ஏராளமான இந்திராணிகள். இப்போது இந்திராணிக்கு ஏராளமான இந்திரன்கள் என்று ஜோக் வேறு உலா வருகிறது. "இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறமாட்டார்" என்ற புராண மொழி அவர்களுக்கு தெரியாது போலும்.

அடுத்தவரது அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆர்வம் என்பதுதான் இதற்குக் காரணம். பொது மக்களின் ஆர்வத்தால் ஊடகங்கள் இவ்வாறு இருக்கிறார்களா இல்லை ஊடகங்களால் மக்களுக்கு இந்த ஆர்வம் வந்ததா என்று பார்த்தால் இது கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது போல விடை சொல்ல சிரமமான காரணம்.

சமுதாயத்தில் ஏற்பட்ட ஒரு சீரழிவை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று வியாக்யானங்கள் கொடுக்கப்படலாம். ஆனால் இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி ஜாதிய வெறி காரணமாக ஆணவக் கொலைகள் பல நடந்துள்ளன. அந்த கொலைகளைப் பற்றி இந்த ஊடகங்கள் பக்கம் பக்கமாக அன்றாடம் எழுதியுள்ளதா? இல்லை தொலைக்காட்சிகள்தான் விவாதித்துள்ளதா?

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற பெயரில், "இந்தியாவை உருவாக்குவோம்" என்ற பெயரில் இந்திய நலன்கள் பல காவு கொடுக்கப்படுகின்றனவே, அந்த ஒப்பந்தங்களில் உள்ள அம்சங்கள் குறித்தெல்லாம் பக்கம் பக்கமாக எழுத, விவாதிக்க எந்த ஊடகம் தயாராக உள்ளது?

பங்குச்சந்தை சரிவு என்று அலறி செய்தி போடும் ஊடகங்கள் கூட "அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள்" யாரெல்லாம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்? இதற்கு முன்பாக எப்போதெல்லாம் இது மாதிரி சூறையாடிக் கொண்டு சென்றார்கள் என்றெல்லாம் விரிவாக அகழ்வாராய்ச்சி செய்ததுண்டா?

இதே பிரச்சினையில் கூட கொலை செய்யப்பட்டதும் முக்கியக் குற்றவாளி ஆணாக இருந்திருந்தாலும் கூட இப்படி எழுதிக் கொண்டிருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 

அதே போல இக்கொலை தொடர்பாக ஆர்வம் செலுத்துகிற வாசகப் பெருமக்களும் மேலே சொன்ன விஷயங்கள் தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்ள ஆர்வம் செலுத்தியிருப்பார்களா என்பதும் சந்தேகமே. 

ரசிகர்கள் விரும்புவதால்தான் மசாலா படம் தயாரிக்கிறோம் என்று அவர்கள் மீது பழி போடும் சினிமாத்துறையின் வேலையைத்தான் முதலாளித்துவ ஊடகம் செய்து கொண்டிருக்கிறது. பெண்களை வெறும் போகப் பொருளாக பார்க்கிற பிற்போக்குத்தனமும் வெளிப்படுகிறது.

லாபத்திற்காக, சர்குலேஷனுக்காக, டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக எதையும் செய்ய தயங்காத ஊடகங்கள், நாளை பரபரப்பான செய்தி எதுவும் இல்லை என்றால்?

கல்லூரி காலத்தில் படித்த ஒரு இர்விங் வாலஸ் நாவலின் (பெயர் நினைவுக்கு வரவில்லை) நாளிதழ் ஆசிரியர் போல அவர்களே கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமை ஆகியவற்றை ஏற்பாடு செய்யக் கூட தயங்க மாட்டார்கள்.




Thursday, April 10, 2014

ஜூனியர் விகடன் அணைக்கிறது, ஆனந்த விகடனோ???

விகடன் குழுமத்தின் இரு பத்திரிக்கைகளுக்குள் ஏன் இந்த
முரண்பாடு?


நரேந்திர மோடியின் நற்குணங்கள் என்று  பெயர் கொடுக்காமல்
போனாலும் அவரின் திறமைகளை(?????) தமிழர்களுக்குச் 
சொல்லுவதற்காகவே குஜராத் சென்று வாராவாரம், இல்லையில்லை,
வாரம் இருமுறையாக பல வாரங்களாக மோடி பஜனையில் தன்னை
இணைத்துக் கொண்டிருக்கிறது ஜூனியர் விகடன். போனால் போகிறது
என்று வெள்ளெழுத்துக் கண்ணாடிக்குக் கூட தெரியாத பொடி 
எழுத்துக்களில் இரண்டு பெட்டிச் செய்திகளும் விமர்சனம் செய்து
தங்களின் நடுநிலையை நிரூபித்துக் கொள்ளும் ஜூனியர் விகடன்.

இன்று வெளி வந்த ஆனந்த விகடனில் உள்ள மோடியும் முகமுடியும்
கட்டுரையோ நரேந்திர மோடியை தோலுரித்துக் காட்டுகிறது. 
நரேந்திர மோடி பிரதமரானால் விபரீதம் என்று எச்சரிக்கை செய்கிறது.
அந்த மனிதனின் அத்தனை மோசமான அம்சங்களையும் அக்கட்டுரை
மிகத் தெளிவாக ஆணித்தரமாக சொல்கிறது.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் ஆனந்த விகடனில்
கட்டுரை எழுதியுள்ள ப.திருமாவேலன்தான் ஜூனியர் விகடன்
இதழின் ஆசிரியர்.

இப்போது விகடனிடம் நாம் கேட்க வேண்டியது ஒரே கேள்விதான்.

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இரண்டில்
உங்கள் முகம் எது> முகமூடி எது?

 

Tuesday, October 8, 2013

தவறை நியாயப்படுத்தும் “மனசாட்சி”யற்ற தர்க்கங்கள்




ஏற்கனவே இரண்டு முறை எழுதிய பிரச்சினையின் தொடர்ச்சிதான் இது. புதுவையிலிருந்து  வெளியாகும் நமது மனசாட்சியின் ஆசிரியர் நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவைப் பிரதேசச் செயலாளர் தோழர் பெருமாள் மூலம் வேறு ஒருவரை தொடர்பு கொண்டு என் தொலைபேசி எண்ணை பெற்றதாகவும் கூறினார்.

யாரோ ஒருவர் நான் எழுதியதை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் அதை தான் அப்படியே பிரசுரித்ததாகவும் கூறி விட்டு, நீங்கள் எழுதியது என்று தெரியாதபோது உங்கள் பெயரை எப்படி குறிப்பிட முடியும் என்று என்னை எதிர்க் கேள்வி வேறு கேட்டார்.

எனக்கு வந்த செய்திதான் முக்கியம். அதை நீங்கள்தான் எழுதியதா அல்லது வேறு யாராவது எழுதியதா என்று கேட்டுக் கொண்டெல்லாம் இருக்க முடியாது என்பது அவருடைய இன்னொரு வாதம். எனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரவே அவர் தயாராக இல்லை. இதில் பத்திரிக்கை தர்மம் எல்லாம் பாதிக்கப்படவில்லையாம்.

அவர் எனக்கு தொலைபேசி செய்ததே அவருடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்குத்தானாம்.

காங்கிரஸ் பத்திரிக்கை என்று நான் எழுதி விட்டேனாம். இருபது பக்க பத்திரிக்கையில் ஆறு பக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் அளித்துள்ள பல வண்ண விளம்பரம், புதுவை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டின் படி புதுவை அரசின் மீதான தாக்குதல், கவர்னருக்கு புகழுரை, என்று பார்க்கும் போது இயல்பாக காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கையாகவே எனக்கு தோன்றியது. நானும் நாற்பது வருடங்களாக தமிழ் பத்திரிக்கைகளை படித்து வருபவன். தமிழக, இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவன். அப்படி குறிப்பிட்டதன் மூலம் அவருக்கு களங்கம் கற்பித்து விட்டேனாம்.

அந்தப் பத்திரிக்கையை முழுமையாக படிக்கும்போது அது பற்றி உருவான அபிப்ராயத்தை இங்கே சொல்லப் போவதில்லை. ஏனென்றால் இந்த பிரச்சினைக்கு பிறகு ஏதாவது சொன்னால் அது காழ்ப்புணர்வின் அடிப்படையில் சொல்லப்பட்டதாக ஒரு தோற்றம் கிடைத்து விடும்.

இதிலே இன்னொன்று வேறு. எனது தொலைபேசி எண்ணை இவருக்கு அளித்தவர், கடந்த சில வருடங்களாக எனக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் கீழ்த்தரமான  பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஒரு நபர். நான் எழுதியது சரியில்லை என்று அவரே சொன்னாராம் வேலிக்கு ஓணான் சாட்சி.

தனது தவறை நியாயப்படுத்த அடுத்தவர்கள் மீது பழி போட நினைக்கும் இது போன்ற நபர்களை என்ன செய்ய முடியும்? ஊடகத்துறையில் இது போன்றவர்கள் அதிகமாகிக்கொண்டு வருகின்றனர் என்பதுதான் வருத்தமான செய்தி.

பின் குறிப்பு : இந்த பதிவை வலையேற்றுவதற்கு முன்பாக அந்தப் பத்திரிக்கையின் இணைய தளத்திற்குச் சென்றால் இன்னொரு அதிர்ச்சி. இதற்கு முந்தைய இதழிலும் “ யூ டூ கிருஷ்ணய்யர் ? “ என்று நான் இங்கே எழுதியிருந்தது வார்த்தை மாறாமல் அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் என்னுடைய பெயரில் வெளியாகவில்லை. இதுவும் யாரோ மின்னஞ்சலில் அனுப்பியது என்று அவர் நியாயப்படுத்தலாம். இன்னும் பழைய இதழ்களுக்கெல்லாம் நான் செல்லவில்லை. சென்றால் அலமாரியிலிருந்து எத்தனை எலும்புக்கூடுகள் வெளி வருமோ? (Skeletons hide in the Cupboard  என்ற ஆங்கில வாசகத்தின் அடிப்படையில் எழுதியுள்ளதைக் கூட களங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு வரலாம்)  


Sunday, October 6, 2013

மாத்தி யோசிச்சா, அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க

தமிழருவி மணியன் பற்றி நான் எழுதியதை "நமது மனசாட்சி" என்ற
பத்திரிக்கை வேறு பெயரில் வெளியிட்டிருந்தது பற்றி நேற்று
எழுதியிருந்தேன்.

மாற்றி யோசித்து பார்த்தால்  அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க   
என்றே  தோன்றுகிறது.

எப்படி தெரியுமா?

என் எழுத்து அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதால்தான்
அதை அவர்கள் தங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்தார்கள்.

அதை என் பெயரில் வெளியிடாதது கூட என் மீது உள்ள
பாசம்தான் தெரியுமா?

அது எப்படி ஒரு காங்கிரஸ் பத்திரிக்கையில் கம்யூனிஸ்ட் ஒருவர்
எழுதுவது என்று யாரும் எனக்கு பிரச்சினை கொடுக்கக்கூடாது
என்ற நல்லெண்ணம்தான்.

அது மட்டுமா,

என் பெயரில் வெளியிட்டால் லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ள
அந்த பத்திரிக்கை மூலம் அத்தகவல் தமிழருவி மணியனின்
கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் என் மீது தாக்குதல் நடத்தி
விடக் கூடாது என்ற இன்னொரு நல்லெண்ணமும் கூடத்தான்.

ஆகவே யாரும் நமது மனசாட்சி பத்திரிக்கையை திருடர்கள்
என்று சொல்லாதீர்கள்.

 அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க

பின் குறிப்பு : இதற்கு பிறகும் அவர்கள் வருத்தம் தெரிவிக்காவிட்டால்
இருக்கவே இருக்கிறது கச்சேரி

 

 

Saturday, October 5, 2013

மனசாட்சி இல்லாத " நமது மன சாட்சி"

புதுவையைச் சேர்ந்த சாய் ஜெயராமன் என்ற தோழர் முகநூல்
உள் பெட்டியில் " புதுவையிலிருந்து வெளியாகும் பத்திரிக்கையில்
பாமரன் என்ற பெயரில் எழுதுகிறீர்களா" என்று கேட்டார். ஆஹா,
ஏதோ ஒரு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுவதற்கான வாய்ப்பு
என்று நினைத்து கொஞ்சம் கம்பீரமாகவே " எதைப் பற்றி தோழர்
எழுதனும் ? " என்று கேட்டேன்.

இல்லையில்லை, தமிழருவி மணியன் பற்றி நீங்கள் எழுதியது
" நமது மனசாட்சி" என்ற பத்திரிக்கையில் பாமரன் என்ற பெயரில் அப்படியே வந்துள்ளது என்று விபரமும் சொன்னார். 
அப்பத்திரிக்கையின் இணைய தளத்திற்கு
சென்று பார்த்தால் நான் எழுதியது அப்படியே ஒரு வரி கூட
விடாமல் எழூதிவிட்டு பாமரன் என்று வெளியிட்டு விட்டார்கள்.

படிக்காதவர்களுக்கு இங்கே இணைப்பு தந்துள்ளேன்

எனது பெயரோ அல்லது எனது வலைப்பக்கத்தின் பெயரோ
எங்கும் காணவில்லை. என் எழுத்தை போடுவதில் தவறில்லை.
ஆனால் அதற்கு என்னிடம் தகவலாவது சொல்லியிருக்க வேண்டும்,
குறைந்தபட்சம் இது இன்னார் எழுதியது என்றாவது சொல்லி
இருக்க வேண்டும். வேறு பெயரில் வெளியிடுவது என்பது என்ன நாகரீகம்? அறிவுத் திருட்டு அல்லவா இது?

நானும் பலமுறை மற்றவர்கள் படைப்பை பதிவிட்டுள்ளேன்.
ஆனால் அதை எழுதியது யார் என்று எந்நாளும் சொல்லாமல்
இருந்ததில்லை.  இதிலே என்னை தொடர்பு கொள்வது ஒன்றும்
சிரமமே இல்லை. எல்.ஐ.சி ஊழியன் என்றும் ஊழியர் சங்க
வேலூர் கோட்டப் பொதுச்செயலாளர் என்றும் வெளிப்படையாக
சொல்லியுள்ளேன்.புதுவையில்  இரண்டு எல்.ஐ.சி கிளை
அலுவலகங்கள் உண்டு. எங்கு போய் கேட்டிருந்தாலும் என்
தொலைபேசி எண் கிடைத்திருக்கும்.

கொஞ்சம் கூட நேர்மையே இல்லாத, பத்திரிக்கை தர்மத்தை
மதிக்காத பத்திரிக்கை " நமது மனசாட்சி" என்று பெயர்
வைத்துக் கொண்டுள்ளதுதான் கொடுமை