Sunday, April 5, 2020

ஒன்பது மணிக்கு ஒன்பது கிரகங்கள் ஒன்றாகவா?

"விளக்கேற்று" வைபவத்திற்கு அறிவியல் சாயம் பூசும் மோசடியை தகர்க்கிறது தோழர் அறிவுக்கடல் அவர்களின் பதிவு. அவர் எங்கள் தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளர்.

அவரது பதிவை முழுமையாக படியுங்கள். மோடி வகையறாக்களின் புரட்டு வேலை புரியும்.


'9 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது...' என்று தொடங்கி, கோமாளித்தனத்தை அறிவியலாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். 

மூன்று வான் பொருட்கள், அதாவது கோள்கள் மட்டுமின்றி, கதிரவனும் சேர்த்து, ஒரே நேர்க்கோட்டில் வருவதை, சிசிஜி(Syzygy) என்று அழைக்கிறார்கள். கிரகணங்கள் சிசிஜி வரையறைக்குள்தான் வருகின்றன.

ஆனால், 9 கோள்களும் - அதாவது, புளூட்டோ ஒரு கோளாக ஏற்கப்பட்டிருந்த காலத்தில் - ஒரே கோட்டில் வருவது பெரும் சிசிஜி(Grand Syzygy) என்று அழைக்கப்படுகிறது. 1894 மார்ச் 21 அன்று அவ்வாறு நிகழ்ந்துள்ளது.

ஆனால், ஒரே நேர்க்கோட்டில் வருவது அரிதினும் அரிது என்பதால், 1982 மார்ச் 10 அன்று, ஓரளவு - அதாவது 98 பாகை அளவுக்குள் - எல்லாக் கோள்களும் வந்ததையும் பெரும் சிசிஜி என்று வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், அவ்வாறான நிகழ்வின்போது ஏற்படும் விளைவுகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. அதற்காக, அடுத்த பெரும் சிசிஜி நடைபெறப்போகும் 2161 மே 19க்காக காத்திருக்கிறார்கள்.

ஆனால், ஏதோ இவர்கள் நினைத்தபோதெல்லாம் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்துவிடுவதுபோல, வாயில் வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கவர்ச்சி அறிவிப்புகளையும், பிற சமயங்களை சாக்கு சொல்வதையும் நிறுத்திவிட்டு, வைரஸ் குறித்த அறிவியல் தகவல்களை அறிந்துகொண்டு, அறிஞர்கள் கூறும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான், இந்திய மக்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்கும்!

சிசிஜி குறித்த கூடுதல் விபரங்கள்




1982 - பெரும் சிசிஜி என்றழைக்கப்படும் நிகழ்வு வானில் தோன்றியது. ப்ளூட்டோவும் ஒரு கோளாகக் கொள்ளப்பட்டிருந்த அக்காலத்தில், அனைத்து 9 கோள்களும் சூரியனின் ஒரே பக்கத்தில் அணிவகுத்தன. சிசிஜி என்ற சொல் சுசுகோஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு பிணைக்கப்பட்ட என்று பொருள். 

சிசிஜி(Syzygy) உயிரெழுத்து இல்லாத பெரிய ஆங்கிலச் சொற்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, மூன்று Y கொண்ட ஒரே சொல்லும் இதுதான். வானியலில், இது மூன்று வான் பொருட்கள் (கோள்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) ஒரே நேர்க்கோட்டில் வருவதைக் குறிக்கிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் இந்த சிசிஜி வரையறைக்குள்தான் வருகின்றன. இந்த நிகழ்வில் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசைகளும் புவிமீது பாதிப்பை ஏற்படுத்துவதாலேயே, பேரலைகள் எழுகின்றன. 

சூரியக் குடும்பத்தின் அனைத்து 9 கோள்களும், ஒரே நேர்க்கோட்டில் இல்லாவிட்டாலும், சூரியனின் ஒரே பக்கமாக, 98 பாகை இடைவெளிக்குள் வந்த இந்நிகழ்வு, பெரும் சிசிஜி என்று பெயரிடப்பட்டது. மேலும், பெரிய கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய நான்கும் 73 பாகை இடைவெளிக்குள் அணிவகுத்தன. இது நிகழ்வதற்கு முன்பே, இதுதான் பல்வேறு மதங்களும் குறிப்பிடும் இறுதித் தீர்ப்பு நாள் என்றும், உலகம் அழிந்துவிடும் என்றும் புரளிகள் கிளப்பப்பட்டன. 

புவி தன் துணைக்கோளான சந்திரனுடன், நேர்க்கோட்டில் சூரியனைச் சந்திக்கும்போதே பேரலைகள் எழுதல் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படுவதால், ஒன்பது கோள்களும் ஒரே புறமாகத் திரளும்போது பாதிப்புக்கள் இருக்குமென்றாலும், இவை வீண் புரளிகள் என்று வானியலாளர்கள் விளக்கினர். அவ்வாறே, எதுவும் நிகழவில்லை என்பதுடன், புவியில் பெரிய மாற்றங்களும் உணரப்படவில்லை. எனவே, அடுத்து இவ்வாறு நிகழும்போது இன்னும் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்றாலும் அடுத்த பெரும் சிசிஜி 2161 மே 19 அன்றுதான் நிகழும்!

3 comments:

  1. ஏன் தோழர் இவ்வளவு ஆராய்ச்சி. விளக்கு இலக்கு வெற்றி

    ReplyDelete
    Replies
    1. மூடர்கள் எண்ணிக்கை பெருகுவது நாட்டிற்கு கேடு

      Delete
  2. சிறப்பான அலசல்
    சிந்திப்போம்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete