Showing posts with label கால்பந்து. Show all posts
Showing posts with label கால்பந்து. Show all posts

Wednesday, July 16, 2025

என்றைக்கும் இதுதான் டாப்

 


முகநூலில்  ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில் பார்த்த காணொளி இது. 


1986 லிருந்து நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் சிறந்த ஒரு கோலை தேர்வு செய்து வழங்கியுள்ளார்கள்.

எத்தனை வருடம் ஆனால் என்ன, எத்தனை வீரர்கள் புதிதாய் தோன்றினால் என்ன, 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு  எதிரான போட்டியில் மாரடோனா அடித்த கோலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதுதான் என்றும் டாப்.

பிகு: ஒரு மாறுதலுக்காக அரசியல் இல்லாத பதிவு இது.

Friday, December 30, 2022

முன்னோடி நாயகனுக்கு . . .

 


கால்பந்து விளையாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரான பிரேசிலின் பீலேவிற்கு மனமார்ந்த அஞ்சலி.

இரண்டு காணொளிகள் இங்கே.

ஒன்று அவர் ஒரு போட்டியில் கோலடிக்கும் தருணம்.



இரண்டாவது போட்டி "எஸ்கேப் டு விக்டரி" என்ற திரைப்படத்தின் காட்சி. இன்றைய கால்பந்து திரைப்படங்களுக்கும் இக்காட்சிதான் முன்னோடி. 




Monday, December 19, 2022

அந்த சிறுவன் மகிழ்ந்திருப்பான் அல்லவா!

 

நேற்று உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினாவும் பிரான்சும் சம நிலையில் இருந்த போது எனக்கு எட்டு வருடங்கள் முன்பாக பிரேசிலில் அர்ஜெண்டினாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியின் கடைசி நிமிடங்களில் பார்த்த காட்சியும் அப்போது வலைப்பக்கத்தில் எழுதிய பதிவும்தான் நினைவுக்கு வந்தது.

அந்த பதிவும் புகைப்படங்களும் இங்கே.

 

04,ஆகஸ்ட், 2014

 

நெகிழ வைத்தது அந்தச் சிறுவனின் கண்ணீர்

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்தக் காட்சியையும் கண்டிப்பாக கவனித்திருப்பார்கள்.

 








ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனி ஒரு கோல் போட்டதுமே அர்ஜெண்டினா ரசிகர்கள் வருத்தத்தின் எல்லைக்கே சென்று விட்டார்கள். கண்ணீர் கடலில் துயரம் தோய்ந்த  முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் ஒரு சிறுவனும் இருந்தான்.

 

அதிகபட்சம் ஆறிலிருந்து எட்டு வயதிருக்கலாம் அந்த சிறுவனுக்கு. கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்க, அவனுக்கு பின்னே நின்றவர் அவனை இழுத்து ஆறுதல் சொல்ல முயற்சிக்க வேகத்தோடு அந்த கைகளை தட்டி விட்டான். அவன் முகத்தில் இருந்த சோகத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

 

அவன் கண்ணீரும் கைகளைத் தட்டி விட்ட சோகமும் இன்னும் மனதிலேயே நிற்கிறது. 

 

அநேகமாக அந்த சிறுவன் வாலிபனாக நேற்றைய இறுதிப் போட்டியையும் பார்த்திருப்பான். மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான்.

 

யார் கண்டது! அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடக் கூடச் செய்யலாம்!

 

 

இறுதி வரை காத்திரு . . .

 


ஒரு இறுதிப் போட்டி எப்படி இருக்க வேண்டுமோ, அந்த இலக்கணப்படி அமைந்த இறுதிப் போட்டி நேற்றைய போட்டி.

முதல் பாதியிலேயே அர்ஜெண்டினா இரண்டு கோல்களை அடிக்க, பிரான்ஸ் அணியும் அவ்வளவு வேகம் காண்பிக்காததால் போட்டி முடிந்து விட்டது போன்ற தோற்றமே ஏற்பட்டது. கடைசி பதினைந்து நிமிடங்களில் எங்கிருந்துதான் பிரான்ஸ் அணியின் எம்பாம்பேவுக்கு வேகம் வந்ததோ! அவரை தடுக்க தடுப்பாட்டத்திற்கு பதில் தப்பாட்டம் ஆட பெனால்டி கிடைத்து முதல் கோலை அடித்தார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடிக்க ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

கூடுதல் நேரத்தில் பந்து பெரும்பாலும் அர்ஜெண்டினா வசமே இருக்க மூன்றாவது கோலும் அடிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்தவர்களே, அர்ஜெண்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்கிறார்கள் என்று சொல்ல தொடங்கி விட்டார்கள். மீண்டும் ஒரு தவறு, மீண்டும் ஒரு பெனால்டி. இரு அணிகளும் சமமாகியது.

கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டே வெற்றியாளர்களை தீர்மானித்தது. 

2014 ல் பயிற்சியாளராக வெற்றி பெற மாரடோனா ஆசைப்பட்ட கோப்பையை அவரது சீடன் 2022 ல் வெற்றி பெற்றார்.

எந்த சூழலிலும் பதற்றத்தை காண்பித்துக் கொள்ளாத மெஸ்ஸிக்கே இந்த உலகக் கோப்பை சொந்தம்.

அதிக கோல்களை அடித்தமைக்கான தங்கக் காலணி கிடைத்தும் கோப்பையை கோட்டை விட்டதால் கொண்டாட முடியாத நிலை எம்பாம்பே விற்கு . . .



எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்  இறுதி நிமிடம் வரை காத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொடுத்தது கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள். 



2022 உலகக் கோப்பை முடிந்து விட்டது. 2024 தேர்தல் கோப்பை காத்திருக்கிறது. மெஸ்ஸியின் அணியாய் ஒன்று திரண்டால் இந்தியா வெற்றி பெறும், பாசிஸ சக்திகளிடமிருந்து விடுதலை பெறும், இறுதித் தருணம் வரை முயற்சி செய்வோம். . .

Saturday, December 10, 2022

என்னா மேட்சு! என்னா ட்விஸ்டு!

 


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நேற்றுதான் முழுமையாக பார்த்தேன். கால்பந்து விளையாடியவனோ அல்லது அதன் நுணுக்கங்களை அறிந்தவனோ கிடையாது. 1986 ல் மாரடோனாவின் விளையாட்டில் மயங்கி அதன் பின்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை மட்டும் பார்ப்பவன்.

நேற்றைய இரு காலிறுதிப் போட்டிகளும் கடைசி நொடி வரை பதற்றம் அளித்த போட்டிகள்.

பிரேசில் – க்ரோஷியா போட்டியில் பிரேசில் கை ஓங்கியிருந்தது போல தோன்றினாலும் ஆட்ட நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. கூடுதல் நேரத்தில் 15 வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மர் ஒரு கோல் அடித்தார். அந்த அணிதான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்த போது ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் இருக்கையில் க்ரோஷியா ஒரு கோல் அடிக்க நிலைமை முற்றிலுமாக மாறியது.

பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசிலின் கோல் கீப்பரை விட க்ரோஷியாவின் கோல் கீப்பர் சிறப்பு. அதனால் பிரேசில் வெளியேற க்ரோஷியா அரை இறுதி ஆட்டத்திற்கு சென்றது.

இன்னொரு காலிறுதி ஆட்டமான அர்ஜெண்டினா-நெதர்லாந்து போட்டியில் அர்ஜெண்டினா கை ஓங்கியிருந்தது, தாக்குதலிலும், அதாவது எதிர் அணி வீரர்களை உடல் ரீதியாக தாக்குவதிலும்.

இரண்டு கோல்களோடு முன்னணியில் இருந்த அர்ஜெண்டினா எதிர்பாராத தருணத்தில் நெதர்லாந்து முதல் கோலை அடித்தது. அர்ஜெண்டினாவின் முரட்டு ஆட்டம் நெதர்லாந்துக்கு இரண்டாவது கோலையும் பெற்றுத் தந்தது.

கடைசியாக பெனால்டி ஷூட் அவுட்டிலும் கடைசி கிக் வரை யார் அடுத்த சுற்றுக்கு போவார்கள் என்ற பதற்றம் இருந்தது. தப்பி பிழைத்தது அர்ஜெண்டினா.

நேற்றைய போட்டிகள் சொல்லும் செய்தி ஒன்றுதான்.

வெல்ல முடியாதவர்கள், வலுவானவர்கள் என்று யாரும் கிடையாது. இறுதி நேரத்தில் கூட எதுவும் மாறலாம்.

அதனால் குஜராத் முடிவுக்காக சோர்வடைய வேண்டாம். மாற்றம் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு செயல்படுவோம்.

Thursday, November 26, 2020

மாரடோனாவிற்காக உடைக்கப்பட்ட கதவு

 


கதவை உடை, கால்பந்து பார்ப்போம் (மீள் பதிவு)

 

தொண்ணூறாம்   ஆண்டு  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நேரம் நான் எல்.ஐ.சி நெய்வேலி கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் நான்கு பேர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது. ஒருவர் கிளை மேலாளர்.  அவர் வீட்டிற்குச் சென்று டி.வி   பார்ப்பதில்  சில  சங்கடங்கள் உண்டு.  அடுத்து ஒரு மூத்த பெண் தோழர் வீடு. இன்னொரு தோழர் அப்போதுதான் திருமணமானவர். அங்கே செல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது.

 

எஞ்சியது என் வீடு மட்டும்தான். அப்போது என் பெற்றோரும் டெல்லி, ஹரித்வார், காசி என வெளியூர் சென்றிருந்தால் விளையாட்டு  ரசிகர்களுக்கு என் வீடுதான் சரணாலயம். தோழர்களோடு   நேரத்தை செலவிடுவதை விட ஒரு கிளைச்செயலாளருக்கும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

 

அன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே இரண்டாம்   சுற்றுப்போட்டி. அனைவருக்குமே மாரடோனாதான் நாயகன். ஒன்பது  மணிக்குப் போட்டி. அனைவரும் வேகவேகமாக சாப்பிட்டு போட்டியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 

அந்த ஊழியர் குடியிருப்புக்களுக்கு ஆட்டோமேடிக் பூட்டுக்களை   அமைத்திருந்தார்கள்.  சாவியை  கையில்  வைத்துக்  கொள்ளாமல் கதவு மூடிக்கொன்டால்  உள்ளே  ஆட்கள்  இருந்தால்  தப்பிக்கலாம்.  இல்லையென்றால்  சிக்கல்தான். காற்று வேகமாக அடித்தால்  கதவு மூடிக்கொள்ளும் அபாயம் எப்போதும் உண்டு.

 

எட்டரை மணிக்கு அந்த விபரீதம் என் வீட்டிலும் நிகழ்ந்தே விட்டது. கதவை திறந்து  வைத்து  விட்டு  யாருடனோ  வெளியே  நின்று  பேசிக்  கொண்டிருக்கையில் காற்று அடிக்க கதவு மூடிக்கொண்டது. ஒரு பெரிய குச்சி கொண்டு ஜன்னல் வழியாக சாவியை எடுக்க முயல  அது இன்னும் அதிக தூரத்திற்குச்சென்று விட்டது.

 

பூட்டு ரிப்பேர் செய்பவரை அழைத்து வரலாமா என்ற என் குரல்  எனக்கே கேட்பதற்கு முன்பு எங்கிருந்தோ சுத்தியலும் மற்ற உபகரணங்களும் வந்து சேர்ந்தது.பூட்டு உடைக்கப்பட்டது, கதவும்  கூட கொஞ்சம் உடைந்து போனது. எல்லாம் நாளைக்கு சரி செய்து கொள்ளலாம் என்று உள்ளே நுழைந்தார்கள். தொலைக்காட்சியைப் போட்டார்கள். மாரடோனா முகம் திரையில் தோன்றியது. விசில் அடிக்காத குறை மட்டும்தான். மற்றபடி எந்த  ஆரவாரத்திற்கும் குறைவில்லை.

 

அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருந்ததும் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதும் ஒரு சின்ன ஆறுதல். ( கடைசியில் அந்தக்  கதவை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது.)

 

 

மாரடோனா - மனங்கவர்ந்த வீரன்

 


டிஜியோ மாரடோனா - 2020 அளித்த இன்னொரு பெருந்துயரம் மாரடோனாவின் மரணம்.

உலகின் தலை சிறந்த கால் பந்து வீரர். லட்சக்கணக்கான ரசிகர்களை  உலகெங்கும் கொண்டவர். குள்ளமான உருவம், கொஞ்சம் குண்டு என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் வேகமும் எதிரணி வீரர்களை சமாளித்து பந்தை கடத்திக் கொண்டு செல்லும் லாவகமும் அவரை என்றுமே ரசிகர்களின் கண்மணியாகவே வைத்திருந்தது.

அவரது விளையாட்டை முதன் முதலில் தொலைக்காட்சியில் பார்த்தது என்பது 1986ம் வருடம் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போதுதான். அது கூட நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பார்த்ததுதான்.

நள்ளிரவில் நடைபெற்ற அந்த போட்டியைக் காண என் இரண்டாவது அக்காவின் கணவர் சென்னையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு நெய்வேலி வந்தார். ஒரு விளையாட்டுப் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் பெருங்கடலின் பெரும் ஓசையையும் தாண்டியதாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டதும் அப்போதுதான். 

சரி, எப்படியும் தூங்க முடியாது. போட்டியையாவது பார்ப்போம் என்று சலிப்போடுதான் பார்க்கத்துவங்கினேன். மாரடோனா எனும் காந்தம் மனதில் ஒட்டிக் கொண்டது. உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற பின்பு, அவர்கள் கடந்து வந்த பாதையை பின்னொரு நாள் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய போதுதான் "இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கோல்" என்று அழைக்கப்படுகிற இந்த பரபரப்பான கோலை பார்த்தேன். 

நீங்களும் பாருங்கள்










ஒரு வேளை காணொளி திறக்காவிடில் இந்த யூட்யூப் இணைப்பு மூலம் அதை ரசியுங்கள். 


மைதானத்தின் பாதியிலிருந்து கிட்டத்தட்ட ஆறு பேரை சமாளித்து அவர் கோலடித்த அந்த திறமை, மாரடோனாவின் மகத்தான தருணம். இங்கிலாந்திற்கு எதிரான அதே போட்டியில்தான் "கடவுளின் கை (Hand of God)" என்ற சர்ச்சைக்குரிய கோலும் இடம் பெற்றது என்பது ஒரு முரண்.

1990 உலகக் கோப்பை போட்டியும் அவரது ஆதிக்கத்தில்தான் இருந்தது. மேற்கு ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரை நகர விடாமல் மூன்று வீரர்களை சுற்றி வளைத்து இருந்தார்கள் என்பதே அவர் மீதான அச்சத்திற்கு சான்று. ஒரு சர்ச்சைக்குரிய பெனால்டி முடிவால் உலகக் கோப்பையை அர்ஜெண்டினா இழந்தது உலகெங்கிலும் இருந்த மாரடோனா ரசிகர்களுக்கு துயரமளித்தது. (1990 போட்டிகளின் போது எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து பிறகு மீள் பதிவு செய்கிறேன்) 

1994 உலகக் கோப்பை போட்டியிலிருந்து அவர் போதைப் பொருளை உட்கொண்ட குற்றச்சாட்டினால் வெளியேற நேரிட்டது. ஆனாலும் அவர் ரசிகர்களின் இதயத்திலிருந்து வெளியேறவில்லை.

ஒரு சாமானிய குடும்பத்திலிருந்து வந்தாலும் திறமை மூலம் சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு உதாரணமானவர் அவர்.

சோஷலிச நாயகர்களை மதிப்பவர் அவர்.

தன் கையில் "சே" வை பச்சை குத்திக் கொண்டவர்.



க்யூப நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் மீது மதிப்பு கொண்டவர்.



பொலிவாரிய புரட்சி நாயகன் ஹ்யூகோ சாவேஸிற்கும் நெருக்கமானவர்.



இந்தியா வந்திருந்த போது தோழர் ஜோதி பாசுவை அவர் வீட்டில் சந்தித்தவர். பிடல் காஸ்ட்ரோவின் இந்தியப் பயணத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை தோழர் ஜோதி பாசு, மாரடோனாவிற்கு அளித்துள்ளார்.



நான் மிகவும் மதிக்கும் பிடல் காஸ்ட்ரோவிற்கு மிகவும் நெருக்கமான உங்களையும் நான் மதிக்கிறேன் என்று அப்போது தோழர் ஜோதிபாசுவிடம் சொல்லியுள்ளார்.


மாரடோனாவிற்கு அவரது ரசிகனின் மனமார்ந்த அஞ்சலி. 

Friday, June 22, 2018

அர்ஜெண்டினா பிரேசிலை வென்ற அந்த இரவில் . . .

கதவை உடை, கால்பந்து பார்ப்போம்



தொண்ணூறாம்   ஆண்டு  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நேரம் நான் எல்.ஐ.சி நெய்வேலி கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் நான்கு பேர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது. ஒருவர் கிளை மேலாளர்.  அவர் வீட்டிற்குச் சென்று டி.வி   பார்ப்பதில்   சில சங்கடங்கள் உண்டு. என்னதான் நல்ல அதிகாரியாக இருந்தால் கூட அவர்களோடு பழகுவதில் ஒரு வரையறையும் கட்டுப்பாடும் தேவை என்ற பாரம்பரியம் எங்கள் நெய்வேலிக் கிளைக்கு உண்டு.  

அடுத்து ஒரு மூத்த பெண் தோழர் வீடு. அவர்களை தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. இன்னொரு தோழர் அப்போதுதான் திருமணமானவர். அங்கே செல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது.

எஞ்சியது என் வீடு மட்டும்தான். அப்போது என் பெற்றோரும் டெல்லி, ஹரித்வார், காசி என வெளியூர் சென்றிருந்தால் விளையாட்டு  ரசிகர்களுக்கு என் வீடுதான் சரணாலயம். தோழர்களோடு   நேரத்தை செலவிடுவதை விட ஒரு கிளைச்செயலாளருக்கும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

அன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே இரண்டாம் சுற்றுப்போட்டி. அனைவருக்குமே மாரடோனாதான் நாயகன். ஒன்பது மணிக்குப் போட்டி. அனைவரும் வேகவேகமாக சாப்பிட்டு போட்டியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊழியர் குடியிருப்புக்களுக்கு ஆட்டோமேடிக் பூட்டுக்களை அமைத்திருந்தார்கள். சாவியை கையில் வைத்துக் கொள்ளாமல் கதவு மூடிக்கொன்டால் உள்ளே ஆட்கள் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் சிக்கல்தான். காற்று வேகமாக அடித்தால் கதவு மூடிக்கொள்ளும் அபாயம் எப்போதும் உண்டு.

எட்டரை மணிக்கு அந்த விபரீதம் என் வீட்டிலும் நிகழ்ந்தே விட்டது. கதவை திறந்து வைத்து விட்டு யாருடனோ வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கையில் காற்று அடிக்க கதவு மூடிக்கொண்டது. ஒரு பெரிய குச்சி கொண்டு ஜன்னல் வழியாக சாவியை எடுக்க முயல அது இன்னும் அதிக தூரத்திற்குச்சென்று விட்டது.

பூட்டு ரிப்பேர் செய்பவரை அழைத்து வரலாமா என்ற என் குரல்
எனக்கே கேட்பதற்கு முன்பு எங்கிருந்தோ சுத்தியலும் மற்ற உபகரணங்களும் வந்து சேர்ந்தது.பூட்டு உடைக்கப்பட்டது, கதவும் கூட கொஞ்சம் உடைந்து போனது. எல்லாம் நாளைக்கு சரி செய்து கொள்ளலாம் என்று உள்ளே நுழைந்தார்கள். தொலைக்காட்சியைப் போட்டார்கள். மாரடோனா முகம் திரையில் தோன்றியது. விசில் அடிக்காத குறை மட்டும்தான். மற்றபடி எந்த  ஆரவாரத்திற்கும் குறைவில்லை.

அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருந்ததும் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதும் ஒரு சின்ன ஆறுதல். 

( கடைசியில் அந்தக் கதவை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது.)

இது ஒரு மீள் பதிவு. தற்போதைய உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா சொதப்புவதைப் பார்த்து நொந்து போன போது நினைவுக்கு வந்தது . . .

Wednesday, October 14, 2015

இவிய்ங்களும் ஊழல் ஆளுங்கதானா?

 

இந்திய கிரிக்கெட் வாரியமும் சர்வதேச கிரிக்கெட் குழுவும்தான் ஊழல் நிரம்பிய அமைப்புக்கள் என்று பார்த்தால் சர்வதேச கால்பந்து அமைப்பிலும் ஊழல் முடை நாற்றம் அடிப்பதை, அதுவும் அந்த ஊழல் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் புட்டு புட்டு வைக்கிறது இக்கட்டுரை. 

அவசியம் படியுங்கள்.



 மீண்டு எழுமா சர்வதேச கால்பந்து அமைப்பு?
 


ஊழல் ஒரு சர்வதேச நிகழ்வு என்று ஊழல் பேர்வழிகளின் ஆதரவாளர்கள் கூறுவார்கள். ஆனால் அதுஉண்மை என்பதை சர்வதேச கால்பந்து(பிபா) அமைப்பில் நடந்துவரும் நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. இந்த அமைப்பில் சர்வம்ஊழல் மயம் என்பதை இணையதளங்களில் இருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பிபா தலைவர் செப் பிளாட்டரும், ஐக்கிய ஐரோப்பா கால்பந்து அமைப்பின் தலைவர் மைக்கேல் பிளாட்டினியும் மற்றும் ஓரு பிபா அதிகாரியும் அமைப்பின் நன்னடத்தைக் குழுவால் 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுஅண்மைச் செய்தியாகும். இவர்கள் மீது லஞ்சம் மற்றும் கையூட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்விஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருவதை யடுத்து இக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுத்த பின் இக்குழு எடுத்த முடிவு அதுவரை பிளாட்டரின் கைப்பெட்டிக்குள் மட்டும் செயல்பட்டு வந்த குழுவாக இது இருந்தது என்று கூறப்படுவதை உறுதி செய்கிறது.முந்தைய வரலாறுஇங்கிலாந்து கால்பந்து அமைப்பின் முன்னாள் தலைவர் டிரைஸ்மேன் பிரபு பிபா ஒரு மாபியா குடும்பம் போல் செயல்படுகிறது என்று பிபிசி யின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சி ஒன்றில்வர்ணித்துள்ளார். இந்த நிகழ்ச்சி 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 

அதில் பல பத்தாண்டுகளாக லஞ்சம் கொடுப்பதும், கையூட்டுபெறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் ஆற்றாமையுடன் வருத்தப்பட்டுள்ளார்.இதே நிகழ்ச்சியில் புலனாய்வாளர் ஜென்னிங்ஸூம், தயாரிப்பாளர் ரோஜர் கோர்க்கும் பிபா அதிகாரிகள் லஞ்சமாகப் பெற்ற சுமார் ஒரு லட்சம் ஈரோக்களை திருப்பித் தருவது குறித்து ஒரு ரகசிய ஒப்பந்தத்தை செப் பிளாட்டர் செய்து கொண்டது குறித்து ஸ்விஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்கள்.பிபாவில் ஊழல் ஒன்றும் திடீரென்று தொடங்கி விடவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டான்லி ரௌஸ் காலம் முதல் தொடங்கிவிட்டது என்று அன்அப்போலாஜிஸ்ட் என்ற இதழ் கூறுகிறது. அன்றைய சோவியத் ரஷ்யா உலகக்கோப்பையில் பங்கேற்காவிட்டால், அந்த வாய்ப்பு இங்கிலாந்துக்குக் கிடைக்கும் என்று கருதியரௌஸ், சிலிக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்க வேண்டிய போட்டியை சிலியில் நடத்த உத்தரவிட்டார்.

சிலியின் சர்வாதிகாரி பினோச்செட் அங்கு கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்றுக் குவித்துக் கொண்டிருந்த காலம் அது. போட்டியை ஒரு நடுநிலை நாட்டில் நடத்த அவர் தயாராயில்லை. சோவியத் ரஷ்யா போட்டியைப் புறக்கணித்தது. ஆளில்லா மைதானத்தில் எதிரணி இல்லாத களத்தில் சிலி வீரர் ஒருவர் கோல் அடித்து சிலியின் பங்கேற்பைஉறுதிப்படுத்தினார். ரஷ்யா தோற்றதன் மூலம் புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது. பினோசெட்டிடம் ரௌஸ் பணம் பெற்றுக்கொண்டார் என்று புகார் கூறப்பட்டது.ரௌஸை அடுத்து பிபா தலைவரான ஜோ ஹேவ்லாங்கே 24 ஆண்டுகள் பிபா அமைப்பை தன் கைகளில் வைத்திருந்தார். பிரேசில் நாட்டவரான இவர் மீதும் லஞ்சப்புகார்கள் கூறப்பட்டன. சர்வாதிகாரத்தின் கீழிருந்த அர்ஜெண்டினாவின் இடைக்கால துணைத்தலைவராக இருந்த கார்லோஸ் லாகோஸ்டேயை இவர் பிபா துணைத்தலைவராக நியமித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் லாகோஸ்டே லஞ்சப் புகாரின் கீழ் கைது செய்யப்பட்டார். இவரும், இவருடைய மருமகன் ரிகார்டோ டெக்ஸாரியோவும் பிபா செயற்குழுவில் இருந்த போது 4.1 கோடி யுஎஸ் டாலர்களை லஞ்சமாகப் பெற்றனர் என்ற புகார் எழுந்தது. 

இந்த புகார் விசாரணைக்கு வந்தது. அதில் இவர்கள் இருவருக்கும் லஞ்சத்தில் தொடர்பு இருந்தது என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் இருவரும் லஞ்சமாகப் பெற்ற தொகைகளில் பெரும்பாலானவற்றைத் திருப்பி அளித்து விட்டதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.2013ம் ஆண்டில் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. 1998ம் ஆண்டில் பிபாவின் ஆயுட்கால கௌரவத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹேவ்லாங்கே தன்னுடைய கௌரவப் பதவியை விட்டு விலகினார்.

இன்றைய நிகழ்வு

ஹேவ்லாங்கே தலைமையில் பிபா செயலாளர் நாயகமாக இருந்த ஜோசப் பிளாட்டர் பிபா அமைப்பின் எட்டாவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் நெருக்கமான போட்டியில் இவர் ஸ்விஸ் நாட்டவரான லானார்ட் ஜோஹான்சனைத் தோற்கடித்து தலைவாரானார். ஹேவ்லாங்கேயின் ஊழலை நன்கு தெரிந்து வைத்திருந்த இவரும் தனது பதவியை வருமானம் சேர்க்கப் பயன்படுத்திக் கொண்டார். பிபா அமைப்பின் சர்வாதிகாரி போல் செயல்பட்ட இவர் பிபா நிதியை கால்பந்து கற்றுக்குட்டி நாடுகளுக்கு பிரித்துக்கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வாக்குகளைத் தனக்குச் சாதகமாக நிரந்தரமாக வைத்துக் கொண்டார். இந்த நாடுகளும், பிளாட்டர் உள்ளிட்ட பிபா அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்த போதும் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் 2015ம் ஆண்டிலும் இவரையே தேர்வு செய்தன.

2001ம் ஆண்டில் பிபாவின் விற்பனைக் கூட்டாளியான இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் அண்ட் லீசர் நிறுவனம் சுமார் 10 கோடி டாலர்களுக்கும் மேல் கடன் வைத்திருந்ததால் திவாலானது. பிளாட்டரின் முதல் பதவிக்காலத்தின் இறுதியில் பிபா நிறுவனம் மூழ்கி விடும் என்ற நிலை ஏற்பட்டது. ஸ்விஸ் அதிகாரிகள் பிபாவின் கூட்டாளி நிறுவனம் திவாலானதை அடுத்து அதுபற்றி விசாரணை நடத்தினர். பிபா அதிகாரிகளுக்கு கையூட்டு அளித்தே அந்த நிறுவனம் திவாலானது என்று விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் பிளாட்டர் மீது குற்றம் சாட்டப்படவில்லை.பிபா நடத்திய விசாரணை அறிக்கை பிளாட்டரின் ஈடுபாடு குழப்பமாக இருந்தது என்றும், அவர் குற்றவியல் ரீதியாகவோ, நன்னடத்தை ரீதியாகவோ தவறுகளில் ஈடுபடவில்லை என்று கூறிவிட்டது.

2002ம் ஆண்டில் பிபா செயற்குழு உறுப்பினர்களே பிளாட்டர் மீது ஸ்விஸ் காவல்துறையிடம் புகார் செய்தனர். பிளாட்டரின் செயலாளர் நாயகமான மைக்கேல் ஸென் - ருபினென் மற்ற செயற்குழு உறுப்பினர்கள் சார்பாக அளித்த ஆவணமிடப்பட்ட புகாரில் பிளாட்டரின் மோசமான நிதி நிர்வாகம், நலன் முரண்பாடு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல் ஆகியவை பட்டியலிடப்பட்டிருந்தன. பிளாட்டர் இந்தப் புகாரை ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பினார். புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த உறுப்பினர்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இந்த விசாரணையை முடித்துக் கொள்ள விரும்புவதாக அறிவித்தார். அதிகாரப்போட்டியில் பிளாட்டருக்கு ஈடு கொடுக்க முடியாத ருபினென் பிபாவை விட்டு வெளியேறினார். தன்னுடைய சகநிர்வாகிகளிடம் இருந்தே எழுந்த புகாருக்கு மத்தியில் பிளாட்டர் இரண்டாவதுமுறையாக பிபா தலைவராகத் தேர்வானார். கேமரூன் கால்பந்து அமைப்பு மற்றும் ஆப்பிரிக்கா கால்பந்து அமைப்பின் தலைவரான இஸ்ஸா ஹயாடோவ் இவரிடம் தோற்றார். ஆனால் இவரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத பிளாட்டர் இவரை பிபா துணைத் தலைவராக நியமித்தார்.

2013ம் ஆண்டில் பிபா முதல் முறையாக நன்னடத்தை விதிகளை வெளியிட்டது. ஹேவ்லாங்கே விசா ரணையின் போது இந்த விதிகள் இல்லை.2006 உலகக்கோப்பை போட்டிகள் ஜெர்மனியில் நடந்தன.பிபா துணைத்தலைவரும், டிரினிடாட்- டொபாக்கோ நாட்டின் கால்பந்து அமைப்பின் தலைவருமான ஜேக் வார்னர் உலகக்கோப்பை போட்டிக்கான அனுமதிச்சீட்டுகளை தனது குடும்பத்துக்குச் சொந்தமான சுற்றுலா நிறுவனத்தின் மூலமாக மறு விற்பனை செய்தார் என்ற புகார் எழுந்தது. இதில் இவர் 10லட்சம் டாலர்கள் லாபம் அடைந்தார். ஆனால் இவருடைய நடவடிக்கைக்கு பிபா வெறும்அதிருப்தி மட்டும் தெரிவித்தது. ஜேக் வார்னர் பிளாட்டரின் நிரந்தரவிசுவாசியானார்.2007ம் ஆண்டில் பிளாட்டர் மூன்றாவது முறையாக பிபா தலைவரானார். இவரை எதிர்க்கத் தயாரானவர்களை எல்லாம் இவர் ஓரங்கட்டினார். ஆண்டு தோறும் உலகின் மூலைமுடுக்கில் உள்ள சின்னஞ்சிறு நாடுகளுக்கு பயணம் செய்து அங்கு கால்பந்து மேம்பாட்டுக்கு பிபா நிதியை வாரி வழங்கியதன் மூலம் அந்த நாடுகளின் வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டார்.பிளாட்டரின் ஆளுமைக்கு முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் போன்றவை இவருடைய காலத்தில் அன்றாடச் செயல்களாக மாறிவிட்டன. 2008ம் ஆண்டில் 2018, 2022 உலகக்கோப்பை போட்டி நடக்கும் நாடுகள் குறித்த தேர்வு ஒரே வேளையில் முடிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. வாக்குகளுக்கான குதிரை பேரம் நடைபெற்றது. போட்டியில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. 

வாக்கு நடக்கும் முன்னரே நைஜீரியாவின் ஆமோஸ் அடாமு, டாஹிட்டியின் ரெனால்ட் டெமாரி ஆகிய இருவரும் வாக்குக்குப் பணம் கேட்டதாக எழுந்தபுகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சண்டே டைம்ஸ் நடத்திய ரகசிய குரல் பதிவில் இருவரும் வாக்குக்கு பணம் கேட்டது நிரூபணமானது. இங்கிலாந்தும் போட்டியில் இருந்தது. இங்கிலாந்து குழுவின் தலைவர், ஒரு செயற்குழு உறுப்பினர் இரண்டரைக் கோடி டாலர் கேட்டார் என்றும், ஒரு உறுப்பினர் தனக்கு சர் பட்டம் அளிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார்.இந்தப் புகார் மீது பிபா நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தியது. 2018 போட்டிகள் ரஷ்யாவுக்கும், 2022 போட்டிகள் கத்தாருக்கும் ஒதுக்கப்பட்டன. இதில் நன்னடத்தை விதிகள் மீறப்பட்ட போதிலும் வாக்குகள் நம்பிக்கையுடன், கண்ணியத்துடன் அளிக்கப்பட்டன என்று நன்னடத்தைக் குழு அறிக்கை கூறுகிறது என்று பிபா தெரிவித்தது. நன்னடத்தைக் குழுவின் புலனாய்வாளராக இருந்த அமெரிக்க சட்ட வல்லுநர் மைக்கேல் ஜே. கார்சியா பிபா முடிவை எதிர்த்து பதவி விலகினார். 2011ம் ஆண்டில் பிளாட்டர் நான்காவது முறையாக பிபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்ற தேர்தலின் போது அவருக்கு ஆதரவாக இருந்த கத்தாரின் முகமது பின் ஹம்மாம் அவரை எதிர்த்து போட்டியிடுவதாக இருந்தது. ஜேக் வார்னர் மத்திய அமெரிக்க, கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர்களை ஹம்மாமைச் சந்திக்க அழைத்திருந்தார்.போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ஆதரவு தேடும் கூட்டத்தில் பஹாமாஸ் தலைவருக்கு அளிக்கப்பட்ட உறையில் 40 ஆயிரம் டாலர்கள் இருந்தன. அவர் டாலர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டுபணைத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். புகைப்படத்துடன் அவர் பிபாவில் புகார் செய்தார். இதுவும் பிளாட்டரின் ஏற்பாடுதான். 

ஹம்மாம் போட்டியில் இருந்து விலகிவிட பிளாட்டர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2010, 2011 ஊழல்கள் குறித்த விசாரணைகள் முடிவுக்கு வர, பிபா அமைப்பின் ஆறு பிரதேச அமைப்பின் தலைவர்கள் வெளியேறினர் அல்லது வெளியேற்றப் பட்டனர்.2015ம் ஆண்டில் பிளாட்டர் மீண்டும் பிபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோர்டான் இளவரசர் அலி பின் ஹோசைன் அவரை எதிர்த்து போட்டியிட்டார். முதல் சுற்றில் ஒருவர் கூட வெற்றிக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறவில்லை. பிளாட்டர் முதல் சுற்றில் ஹோசைனை விட 60 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார். இரண்டாவது சுற்றில் சாதாரணப் பெரும்பான்மை பெற்றவர் வெற்றி பெறுவார் என்பதால் ஹோசைன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.2015 மே 15 அன்று ஸ்விஸ் அதிகாரிகள் பிபா அமைப்பின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்தனர். பல பத்தாண்டுகளாக நடந்த ஊழல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஊழல் விசாரணையை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிளாட்டர் அறிவித்தார். பிப்ரவரி 2016ல் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று பிபா அறிவித்தது.லஞ்சப்புகாரின் அடிப்படையில் அவர் மீது குற்ற விசாரணை நடத்தப்படும் என்று ஸ்விஸ் அதிகாரிகள் கூறினர்.உலகப்போட்டிகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை ஜேக்வார்னருக்கு அளிப்பதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக ஸ்விஸ் அட்டர்னி ஜெனரல் கூறினார். 

இதையடுத்து உலகக்கோப்பை புரவலர்களான விசா/மாஸ்டர் கடன் அட்டை நிறுவனம், கொகோ கோலா, மக்டொனால்ட்ஸ், அன்ஹூசர் புஸ்க் இன்பெவ் ஆகியவை பிளாட்டரை பதவிவிலகுமாறு வற்புறுத்தின.ஸ்விஸ் அரசு நடவடிக்கையை அடுத்துபிளாட்டர், பிளாட்டினி, பிபா துணைத்தலைவர் ஜெரோம் வால்க்கே (ஏற்கனவே இவர் நன்னடத்தை விடுப்பில் உள்ளார்) ஆகிய மூவரையும் 90 நாட்கள் இடைக்கால நீக்கம் செய்துள்ளது.உலகின் முதன்மை விளையாட்டான கால்பந்து பிபாவின் செயல்பாட்டால் களையிழந்து நிற்கிறது. அடுத்து வரும் பொறுப்பாளர்கள் பிபாவின் தூய்மையான செயல்பாட்டுக்கும், கால்பந்தின் முன்னேற்றத்துக்கும், வெளிப்படையான நிர்வாகத்துக்கும், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் இருந்து அமைப்பு விடுபடுவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நன்றி தீக்கதிர் நாளிதழ் 13.10.2015
 



Sunday, July 13, 2014

கால்பந்திற்கு இழப்புதான். ஆனால்




உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடக்கும் இந்நாளில் இத்தகவலை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான் கல்லூரி நாட்களில் மிகச் சிறந்த கால்பந்து வீரராக பெங்களூர் பல்கலைக் கழக கால்பந்து அணியின் தலைவராக இருந்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த கால்பந்து அணியான கல்கத்தா முகமதன் ஸ்போர்ட்டிங் அணியில் விளையாடவும் தேர்வு செய்யப்பட்டார். 

அப்போது எல்.ஐ.சி யிலும் வேலை கிடைக்க அவரது தந்தை எல்.ஐ.சி வேலையில் சேருமாறு ஆலோசனையளிக்க அவரும் அதை ஏற்று எல்.ஐ.சி உதவியாளராக பணியில் சேர்கிறார். தன்னை சங்கத்தில் இணைத்துக் கொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் தொழிற்சங்கப் பணியில் வேகம் காண்பிக்க பெங்களூர் கோட்ட பொதுச்செயலாளர், பிறகு தென் மத்திய மண்டலத் தலைவர், அகில இந்திய இணைச்செயலாளர் பின்பு 2007ல் கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் இப்போதும் தொடர்கிறார்.



தெளிவான சிந்தனை, ஆழ்ந்த ஞானம், உழைப்பாளி மக்கள் மீதான் ஆர்வம், இயக்கம் மீது பற்று, இடதுசாரிக் கொள்கைகள் மீதான நம்பிக்கை என்று நடைபோடும் அற்புதத் தலைவர். அவரது உரையைக் கேட்பதே ஒரு ஆனந்தமான அனுபவம். அதிலும் உருதுக் கவிதைகளைச் சொல்லி அதற்கான அர்த்தத்தை ஆங்கிலத்திலும் சொல்லி அப்படியே நம்மை பரவசத்தில் ஆழ்த்திடுவார்.

கால்பந்து விளையாட்டிற்கு இழப்பானாலும் கூட இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கு கிடைத்த ஒரு நல்முத்து தோழர் அமானுல்லாகான். 


எங்கள் வேலூர் கோட்டத்தின் இருபத்தி ஐந்து ஆண்டு கால வரலாறு பற்றி நான் எழுதிய நூலை அவர் வெளியிட்டார் என்பது எனக்கு வாழ்வில் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு/