Thursday, October 10, 2019

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் விஷப் பேச்சு.





ஆம்.

விஷம் என்பதை விட வேறு பொருத்தமான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.

விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் தன் தொ(கு)ண்டர்களுக்கு உரையாற்றுவார்.

நேற்று முன் தினம் பேசுகிற போது அவர் கும்பல் படுகொலைகள் பற்றி பேசியுள்ளார்.

Mob Lynching என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற கும்பல் படுகொலைகள் என்ற வார்த்தைக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமே கிடையாதாம். அது அன்னிய நாட்டு இறக்குமதியாம். யேசுநாதர் வாழ்க்கை தொடர்பானதாம். இந்தியாவுக்கு தொடர்பில்லாத அந்த வார்த்தை கொண்டு இந்தியாவை யாரும் இழிவு படுத்தக்கூடாதாம்.

Mob Lynching வேண்டுமானால் அன்னிய வார்த்தையாக இருக்கலாம். அந்த அன்னிய வழக்கத்தை இந்தியாவில் கடை பிடிப்பது யார்? இவரால் உசுப்பேத்தப்பட்ட வெறி பிடித்த கூட்டம்தானே! யேசுவின் பெயரைச் சொல்ல சொல்லியோ அல்லது அல்லாவின் பெயரைச் சொல்லச் சொல்லியோ இந்தியாவில் கும்பல் படுகொலைகள் நிகழ்கிறதா என்ன?

“ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்லச் சொல்லியும் பசுவின் பெயராலும்தானே இந்தியாவில் கும்பல் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது? அதனை காவிக்கயவர்கள்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்.

மத வெறியை தூண்டி விட்டு நீங்கள் நடத்தும் கொலைகளாலும் கொடூரக் கலவரங்களாலும் அழிவு வேலைகளாலும் இந்தியாவுக்கு ஏற்படாத இழிவு Mob Lynching என்ற அன்னிய வார்த்தையை பயன்படுத்துவதால் வந்து விடுமா என்ன?

அன்னிய நாட்டு சித்தாந்தமாகவே இருக்கட்டும். அதைச் செய்வது இந்த கூட்டம்தானே!

இதில் யாரும் அது போன்ற கொலைகளை செய்வதோ அப்படி செய்பவர்களை ஆதரிப்பதோ கூடாது என்று கடைசியாக “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” வேறு பேசியுள்ளார்.

இவர்களின் முதல் கும்பல் கொலைக்கு பலியானவர் முகமது அக்லக். அந்த கொலையாளிகளின் தலைவன் இப்போதும் எம்.எல்.ஏ. அந்த கொலையாளிகள் அனைவருக்கும் என்.டி.பி.சி யில் வேலை கொடுத்தது மொட்டைச் சாமியார்.

இந்த லட்சணத்தில் அன்னியத் தத்துவம், அன்னிய வார்த்தை என்றெல்லாம் திசை திருப்புவதை அயோக்கியத்தனம் என்றும் விஷம் என்றும் சொல்லாமல் வேறென்ன சொல்வது?

No comments:

Post a Comment