Tuesday, February 4, 2020

இன்று முதல் மீண்டும் . . .



எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ஆபத்துக்கள் புதியதல்ல.

ஆனால் அத்தனை ஆபத்துக்களையும் முறியடித்து அதனை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்து முதன்மை நிறுவனமாக மாற்றி அமைத்தது ஒன்றுபட்ட போராட்டமே.

அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301, இந்தியாவின் சேவைத்துறையை திறந்து விடச் சொல்லி 1989 லேயே இந்தியாவிற்கு உத்தரவிட்டது. கார்லா ஹில்ஸ் என்ற அம்மையார் அளித்த நெருக்கடிகள் நினைவுக்கு வருகிறதா?

1994 ல் இன்சூரன்ஸ் துறை  சீர்திருத்தங்கள் என்ற பெயரில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ஆர்.என்.மல்கோத்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு எல்.ஐ.சி யின் ஐம்பது சதவிகித பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்குமாறு பரிந்துரைத்தது.

மிகக் கடுமையான போராட்டங்களே அதனை தடுத்து நிறுத்தியது.

2011 ல் எல்.ஐ.சி திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது இந்திய அரசியலின் அதிசயமாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் 

"எல்.ஐ.சி நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும். ஒரு வேளை எல்.ஐ.சி நிறுவனத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்பட்டால் அது அரசு கஜானாவிலிருந்து நாடாளுமன்ற அனுமதியோடுதான் வழங்கப்பட வேண்டும். எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மை கொஞ்சமும் நீர்த்துப் போக அனுமதிக்கப் படக் கூடாது"

என்று கூறினார்கள்.

அந்த முடிவு இப்போது மீறப்படுகிறது.

நேற்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தென் மண்டலத் துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சில கேள்விகளை எழுப்பினார். 

 1956ல் 5 கோடி ரூபாய் மூல தனத்துடன் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 32 லட்சம் கோடி ரூபாய். கடந்தாண்டு மத்திய அரசுக்கு எல்ஐசி ஈவுத் தொகையாக 2 ஆயிரத்து 611 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
தனியாருக்கு கொடுப்பது ஏன்?
ஜிஎஸ்டி வசூல், மறைமுக வரிவசூலில் போன்றவற்றில் நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு எட்ட முடியாத நிலையில், அரசு நிர்ணயிக்கும் இலக்கையும் தாண்டி அனைத்து சேவைகளையும் எல்ஐசி வழங்கி வருகிறது. அத்தகைய நிறு வனத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?
98.4விழுக்காடு முதிர்வுத்தொகை
முகவர்களுக்கு சேர வேண்டிய முதிர்வுத்தொகையை 98.4 விழுக்காடு எல்ஐசி கொடுக்கிறது. 100 நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர், இதுபோன்ற இலக்கை எட்டிய ஒரு காப்பீட்டு நிறுவனத்தை காட்ட முடி யுமா? அமெரிக்காவின் ஏஐஜி,  ஆஸ்திரேலியாவின் ஏஎம்பி போன்ற நிறுவனங்கள் இந்தியா வில் 10 ஆண்டுகள் கூட நிலைக்க முடியவில்லை. ஆனால், 63 வரு டங்களாக ஆலமரம் போல் வளர்ந்து மக்களுக்கும், தேச வளர்ச்சிக்கும் எல்ஐசி சேவையாற்றுகிறது.
லாபகரமான நிறுவனத்தை கூறுபோடுவதா?
இக்கேள்விகளுக்கு நிர்மலா அம்மையார் பதில் சொல்ல மாட்டார்.
ஏனென்றால் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்.ஐ.சி யை அளிக்கும் தரகு வேலை பார்ப்பவர் அல்லவா அவர்!
எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கும் புதிய போராட்டம் இன்றைய வெளி நடப்பு வேலை நிறுத்தம் மூலமாக தொடங்குகிறது.
இம்முறையும் வெற்றி மக்களுக்கே, தேசத்திற்கே . . .


No comments:

Post a Comment