Wednesday, May 4, 2016

மனிதன் - திரையில்தான் சாத்தியமென்பது துயரம்




மே தினத்தன்று காலைக்காட்சியில் பார்த்த படம் மனிதன்.

இன்று மாலைக்காட்சி பார்க்கலாம் வா என்று மகன் கூப்பிட, மே தினக் கொடியேற்றம், பேரணி, பொதுக் கூட்டம் எல்லாம் உள்ளது. ஆகவே முடியாதென்று மறுக்க, கட்சி வேலை, சங்க வேலை இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிற போது என்னோடு மட்டும் வர முடியாதா என்று கோபமாக அவன் கேட்க, எந்த பதிலுமே சொல்ல முடியாமல் சமரச ஏற்பாடாக காலைக் காட்சி சென்றோம்.

பிளாட்பார்மில் படுத்திருந்த ஏழைகள் மீது குடி போதையில் கார் ஏற்றிக் கொன்ற சல்மான் கான் வழக்குதான் கதை.

நீதி எப்படி ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது என்பதையும் அரசு, காவல்துறை, வக்கீல்கள், நீதிபதிகள் ஆகியோர் பணம் படைத்தவர்கள் சார்பாகவே உள்ளனர் என்பதையும் அம்பலப்படுத்துகிற படம்.

ஒரு முறை தாராளமாக பார்க்கலாம். ஆபாசக் காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ, தேவையற்ற வன்முறைக்காட்சிகளோ இல்லாத படம் என்பது பாராட்டுக்குரியது. நிச்சயமாக முகம் சுளிக்காமல் குடும்பத்துடன் பார்க்கலாம் என்பதே இன்றைய நாளில் பெரிய விஷயம்.

பிரகாஷ் ராஜூம் ராதா ரவியுமே படத்தின் மிகப் பெரிய பலம். ஆணவம் மிகுந்த பெரிய வழக்கறிஞராக நமக்கு கோபம் ஏற்படுத்தும்படி நடித்திருப்பதே அவருக்கு மிகப் பெரிய வெற்றி. பெரிய வழக்கறிஞர்கள் வந்தால் நீதிபதிகள் எப்படியெல்லாம் வளைந்து கொடுப்பார்கள் என்பதை தன் நடிப்பில் சித்தரிக்கிற ராதாரவி, கடைசிக் காட்சிகளில் நமது மனம் கவர்கிறார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இது மிகவும் முக்கியமான படமாக இருக்கும். அவரால் முடிந்தவரை நடித்துள்ளார். அவர் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்?

அடுத்து என்ன நடக்கும் என்று பெரும்பாலான காட்சிகளில் யூகிக்க முடிந்தாலும் இரண்டு ட்விஸ்டுகள் எதிர்பாராதவை.

உதயநிதி ஸ்டாலினின் காவலுக்காக வருகிற சிரிப்பு போலீஸ், ஒரு கட்டத்தில் வெகுண்டெழுவதும், இறுதிக் காட்சியில் வரும் சாட்சியும் எதிர்பாராதவை.

இன்னொரு காரை துரத்திக் கொண்டு போகையில்தான் விபத்து ஏற்படும். அந்த காரை அத்தோடு இயக்குனர் மறந்து விட்டார் போல. அந்த காரை ஓட்டிய இன்னொரு பணக்கார வாலிபன் கடைசியில் சாட்சி சொல்ல வரலாம் என்று இடைவேளையில் நானும் என் மகனும் பேசிக் கொண்டோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பிரகாஷ்ராஜ் பெரிய அப்பாடக்கர் வக்கீலாக இருந்தாலும் பெரு முதலாளிகள், அவரையும் தங்களின் கூலியாட்களில் ஒருவராகவே நடத்துவார்கள் என்றும் கோர்ட்டில் வீரம் காண்பித்தாலும் செல்வந்தர்களிடம் அவரும் பம்மித்தான் ஆக வேண்டும் என்பது யதார்த்தம்.

2 ஜி வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றில் ஆஜராகிற வக்கீல்கள், கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் எப்படி மாட்டிக் கொண்டு முழிப்பார்கள் என்பதையும் யூகிக்க முடிகிறது.

“பிளாட்பார்ம் ஒன்றும் படுக்கையறையல்ல” என்ற பிரகாஷ்ராஜ் வசனம் தெனாவெட்டானது. ஆனால் சல்மான் கானுக்காக பாலிவுட் நடிகை ஒருவர் இதைத்தான் சொன்னார் என்பதை அந்த வசனம் நினைவு படுத்தியது.

சல்மான் கான் சுதந்திரப் பறவையாக வெளியே சுற்றிக் கொண்டிருக்க, காரேற்றிக் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி, திரைப்படத்தில் மட்டுமே கிடைத்துள்ளது என்பது துயரமான யதார்த்தம்.



2 comments:

  1. உதயநிதி ஸ்டாலினுக்கு இது மிகவும் முக்கியமான படமாக இருக்கும். அவரால் முடிந்தவரை நடித்துள்ளார். அவர் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்?//

    lollu

    ReplyDelete
  2. //கட்சி வேலை, சங்க வேலை இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிற போது என்னோடு மட்டும் வர முடியாதா// சபாஷ். சரியான கேள்வி

    ReplyDelete