Sunday, May 1, 2016

இறுதியில் தெரியும் வெற்றி யாருக்கென்று?

ஒரு பணக்கார மனிதர் ஒரு உணவு விடுதிக்குள் நுழைகிறார். 

சுற்றி முற்றும் பார்க்கும் அந்த மனிதர் கண்ணிலே, அந்த விடுதியின் ஒரு மூலையில் வேட்டி சட்டை அணிந்த ஒரு எளிய மனிதர் கண்ணில் படுகிறார். அந்த மனிதரை பார்த்ததுமே இவருக்கு எரிச்சல் வந்து விடுகிறது. அந்த மனிதரை வெறுப்பேற்ற நினைத்து 

ஒரு சர்வரைக் கூப்பிட்டு

"இங்கே சாப்பிடும் அனைவருக்கும் ஒரு சிக்கன் பிரியாணி கொடு, அந்த வேட்டி கட்டிய மனிதனைத் தவிர. எல்லாருக்கும் நான் பணம் தருகிறேன்" 

என்று சத்தமாக சொல்கிறார். அப்படியே அந்த வேட்டி மனிதரையும் பார்க்கிறார். அவரது முகத்திலோ ஒரு மலர்ச்சி. அங்கிருந்தபடியே "நன்றி"  என்று சொல்கிறார்.

இவருக்கு எரிச்சல் அதிகமாகிறது.

"அந்தாளத் தவிர எல்லோருக்கும் ஒரு சிக்கன் க்ரேவியும் கொடு" 

என்று அடுத்து சொல்கிறார்.

இப்போதாவது அந்த மனிதர் அவமானத்தில் கூனிக் குறுகிப் போவாரா என்று பார்த்தால் இப்போதும் அதே சிரிப்புதான். 

இவருக்கு கோபம் வந்து விட்டது.

"அந்த வேட்டிக்காரரைத் தவிர எல்லோருக்கும் ஒரு ஐஸ் கிரீம் கொடு " என்று அடுத்த ஆர்டரைச் சொல்லுகிறார்.

வேட்டிக்காரரின் முகத்தில் புறக்கணிப்புக்கான சாயல் கொஞ்சமும் இல்லை. மாறாக மகிழ்ச்சியே தென்படுகிறது. இவரது பக்கத்தில் வந்து கை கொடுத்து நன்றி என்று சொல்கிறார்.

பணக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. சர்வரைக் கூப்பிட்டு பணத்தை கொடுத்தபடியே 

"என்னய்யா, அந்த ஆள் என்ன மெண்டலா? நான் எவ்வளவு அசிங்கப் படுத்தியும் நன்றி சொல்றான்" 

என்று கேட்க

சர்வர் நிதானமாக பதில் சொல்கிறார்.

"இல்லை. அவர்தான் இந்த ஹோட்டல் உரிமையாளர்".


அந்த பணக்காரர் போலத்தான் முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தொழிலாளர்களை தாக்குகிறார்கள். வேலைகளைப் பறித்து இழிவு படுத்துகிறார்கள். போராடுகையில் அரசையும் போலீசையும் பயன்படுத்தி சிறை வைக்கிறார்கள். குண்டாந்தடித் தாக்குதலையும் தோட்டாக்களையும் பரிசாக அளிக்கிறார்கள்.  ஆனால் என்றும் ஆணவம் வெல்லாது. இறுதி வெற்றி என்றும் உழைக்கும் மக்களுக்கே.

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்

 

1 comment:

  1. நன்றி நண்பரே
    மே தின வாழ்த்துக்கள்

    ReplyDelete