Friday, July 24, 2020

தீர்ப்பும் நெகிழ்ந்த நினைவும்


தியாகி தோழர். வேலுச்சாமி கொலையாளிகளுக்கு 34 ஆண்டு சிறை!
******************************************
கந்துவட்டிக்காக இளம்பெண்ணைக் கடத்தி
பாலியல் வல்லுறவு செய்து வீடியோ எடுத்த
விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிக்கு 34 ஆண்டு சிறை
பள்ளிப்பாளையம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நாமக்கல், ஜூலை 23-
பள்ளிப்பாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாவட்ட இணை அமைப்பாளர் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்து வட்டிக் கும்பல் வட்டியைக் கட்ட முடியாத ஏழை இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வல்லுறவு செய்தனர். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு ரசித்தனர். இந்த கொடூரத்தைத் தட்டி கேட்ட சிபிஎம் பள்ளிப்பாளையம் கிளைச்செயலாளர் வேலுச்சாமியை இந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு வழக்கை விசாரித்து வந்த பள்ளிப்பாளையம் நீதிமன்றம் விஷ்வ ஹிந்து பரிசத் நிர்வாகி தலசிவா உள்ளிட்ட கும்பலுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்தது. பல குடும்பங்கள் இந்த கந்துவட்டி கும்பலின் கொடூரத்தால் சீரழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு கடன் பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைத் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்துவட்டி கும்பல் கடத்திச் சென்றது. அதன் பின்னர் பணத்தைக் கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறது. அதன்பின் தனது பைனான்ஸ் கம்பெனியில் வட்டி வசூலிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த ஒருவரைக் கட்டாய பாலியல் வல்லுறவில் ஈடுபடச் செய்து தலசிவா ரசித்து இருக்கிறான்.

தொடர்ந்து அந்த அலங்கோலங்களை வீடியோவில் பதிவு செய்து, அதனை ஒரு இணையதளத்திற்கு விலைபேசி விற்றிருக்கின்றனர். இணையதளத்திலும், செல்போன்களிலும் இந்த காட்சி பரவியதை அறிந்து அந்த குடும்பத்தினர் இந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். ஆனாலும் கந்துவட்டி கும்பலின் செல்வாக்கின் காரணமாக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து கந்துவட்டி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்கு ஆளான குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை நாடி முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியின் சிபிஎம் கிளைச்செயலாளரான வேலுச்சாமி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு உரிய நீதி வேண்டியும், அந்த கும்பலைக் கைது செய்து சட்டப்படி தண்டிக்கவும் காவல்நிலையத்திற்குச் சென்று வழக்கு பதிவு செய்யுமாறு பெரும் முயற்சி மேற்கொண்டார். இதனால் பெரும் ஆத்திரமடைந்த அந்த கந்துவட்டி கும்பல் வேலுச்சாமிக்குத் தொடர் மிரட்டல் விடுத்து. அதோடு நிற்காமல் வெலுச்சாமியின் வீட்டிற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டல் தொடர்பாகவும் வேலுச்சாமி மீண்டும் காவல்நிலையம் சென்று புகார் அளித்தார். புகார் அளித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில் வழிமறித்த தலசிவா தலைமையிலான கந்துவட்டி கும்பல் வேலுச்சாமியைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகள் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்ட வழக்கில் இன்றும் பள்ளிப்பாளையம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அந்த தீர்ப்பில் தலசிவா உள்ளிட்ட கும்பல் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. குற்றத்திற்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடத்தல், பாலியல் வல்லுறவு, இணையதளத்தில் பாலியல் வீடியோவை பதிவேற்றிய குற்றத்திற்காக தனித்தனியா 3 பத்தாண்டுகள் மற்றும் 3 ஆணடு மற்றும் ஒரு ஆண்டு சிறை என்ற வகையில் மொத்தம் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி இன்னும் பத்தாண்டுகள் குற்றவாளிகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குக் குற்றவாளிகள் ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


இத்தீர்ப்பு எட்டு வருடத்திற்கு முந்தைய நெகிழ்ந்து போன நினைவுகளை கிளறி விட்டது. 

28.12.2012 அன்று எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.


அவன் சிரித்தான், நாங்கள் அழுதோம்.

நாகையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் அமர்வில்  நெகிழ்ச்சியூட்டிய இரு நிகழ்வுகள்  பற்றி பகிர்ந்து கொள்ளவே  இப்பதிவு.

கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு  எதிராக போராடியதால் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  தோழர் நாவலன்  வெட்டிக் கொல்லப்பட்டார். மாநாடு அவரது குடும்பத்தினரை கௌரவித்தது. நாவலனின்  தந்தை தோழர் ஜகன்னாதனும்  ஒரு கட்சி உறுப்பினர்தான் என்றும்  என் மகன் இப்போது கொல்லப்பட்டாலும் எங்கள் குடும்பம் எப்போதும் போல் கட்சியில் உறுதியாக நிற்போம் என அவர் கூறினார் என்று  தோழர்  ஜி.ஆர்  சொன்ன போது உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.

தோழர் பிரகாஷ் காரத் அவர்களுக்கு சால்வை போர்த்துகையில் உடைந்து போய் கதறத் தொடங்கினார்கள். அப்போது அவையிலிருந்து “தோழர் நாவலனுக்கு வீர வணக்கம், வீண் போகாது, வீண் போகாது நீங்கள் செய்த தியாகம்  வீண் போகாது” என்ற முழக்கங்கள் இயல்பாகவே ஒலிக்கத் தொடங்கியது. அந்த முழக்கங்களைக் கேட்ட தோழர் நாவலனின் மனைவி கண்ணில் வழியும் நீரோடு கையை உயர்த்தி செங்கொடிக்கு ஜே என்ற போது அந்த முழக்கத்திலே முதிய தாயும் தந்தையும் இணைந்து கொண்ட போது எழுந்த உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.




அதே போல நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டி அராஜகக் கும்பலை எதிர்த்து போராடியதற்காக படுகொலை செய்யப்பட்ட தோழர் வேலுச்சாமியின் சகோதரனும் மகனும் மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர். அந்த ஐந்து வயது பச்சிளம் பாலகன்  அனைவரையும் பார்த்து புன்னகைச் சிரிப்பை உதிர்த்த போது அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஒரு கணம் கலங்கித்தான் போனார்கள்.


மனதை இளக வைத்தது இவ்விரு நிகழ்வுகளும்.


No comments:

Post a Comment