Wednesday, July 8, 2020

சங்கிக் கரடியே காரித் துப்பிடுச்சே



 சங்கிகள் சார்பாக ஊடகங்களில் பல அவதாரங்கள் எடுக்கிற ராமசுப்ரமணியனே மாரிதாஸை கடித்து விட்டார்.

நல்லவர் போல வேடம் போடுகிறாரோ என்று ஒரு சந்தேகம் மனதில் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

ஏனென்றால் அத்வானி கொடிய முகம்  காட்டிய வேளையில் மென்மை முகம் காட்டியவர் வாஜ்பாய். ஆனாலும் இருவரும் ஒன்றுதான்.  குஜ்ராத்  படுகொலைக்குப் பின்பு “நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன்?” என்று புலம்பிய வாஜ்பாய்  மோடிக்கு ராஜ நீதி பற்றி உபதேசித்தாரே தவிர அவர் மீது இம்மியளவு கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

கவனத்தை திசை திருப்பும் உத்தியோ என்று அதனால்தான் ராமசுப்பு மீது சந்தேகம் எழுந்தது.

அதே நேரம், மோடியின் பொருளாதாரக் கொள்கையை இவரே விமர்சித்த காரணத்தால்தான் பாஜக்விலிருந்து நீக்கப்பட்டார் என்பதும் நினைவுக்கு வந்தது.

அதனால்தான் முதலில் தயக்கம் இருந்தாலும் பிறகு அவரது பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

கொரோனா பிரச்சனை பற்றி மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்றவற்றை செய்து கொண்டிருக்கின்றன. இது உலகின் மேல் இறைவன் கொண்ட கோபம். யார் என்ன செய்ய இயலும்

அதேபோல பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின்  அப்பா, அம்மா விடுதலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தேவையும் இல்லை.

சாத்தான் குளம் விவகாரத்திலும் என் அறிவு குறைவு.

ஆகவே இவைகளைப் பற்றி பேச விருப்பமில்லை என்று தொலைக்காட்சிகளுக்கு சொல்லிவிட்டேன்.

ஆகவே நிம்மதியாய் காலம் கழிக்கிறேன்.

ஆனால் பல தொலைக்காட்சியில் வேலை செய்பவர்கள் மீது கடுமையான தனி மனிதத் தாக்குதல்களை Character Assassination ஆகியவற்றை  சமூக வலையமைப்பு, யூடியூப் மூலம் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவில் இல்லாமல் தனியாக செய்வதாகச் சொல்லிக் கொண்டு இப்படிப்பட்ட மோசமான வேலைகளைச் செய்வது தமிழக பாஜகவிற்கு மேலும் சங்கடங்களையும், சரிவையும் ஏற்படுத்துகிறது.

நான் பாஜகவில் இல்லையெனினும் அதன் நலம் விரும்பி தான்.

இப்படிப்பட்ட தாக்குதல்களை புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன், கார்த்திகேயன் போன்றோர்கள் மீது தொடங்கி, நியூஸ் 7 நெல்சன், சுகிதா போன்றவர்களின் மீது நீண்டு, நியூஸ் 18 குணசேகரன், செந்தில், ஜீவா போன்றோர்கள் மீது கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது மிகத் தவறான போக்கு. மிகவும் கண்டிக்கத் தக்கது.

எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கொள்கை, கட்சி மீது ஈடுபாடு இருக்கத்தான் செய்யும்.

ஆனால் மேற்குறிப்பிட்ட நபர்கள் திமுக, திக, கம்யூனிச ஆதரவு கொண்டவர்கள், அவர்கள் தனிப்பட்ட செயல்பாடுகளை வெளிக் கொண்டு வந்து, அவர்கள் எதிர்காலத்தை ஒழித்துவிடுவேன் என்று சவால் விடுவது மிக மிகத் தவறானது.

எல்லோரும் பாஜக சார்பாகவே செயல்பட வேண்டும், இல்லையெனில் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என்பது ஆணவம், எதேச்சாதிகாரத்தின் உச்சநிலை. அதிகார பலம் துணை உள்ளது என்று இப்படி மூன்றாம் தரத் தாக்குதலை நடத்துவது மிகப்பெரிய ஆபத்தில் தான் முடியும்.

தமிழகத்தில் பாஜகவிற்குக் கிடைக்கும் மிகச் சிறிய ஆதரவும் இல்லாமல் போகும்.

முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பல் ஆனார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.

நானும் சங்கப் பிரமுகர்கள், பாஜக முக்கியப் பொறுப்பில் உள்ள நண்பர்களிடம் இப்படிப்பட்ட ஆட்களை ஊக்குவிப்பது  தமிழக பாஜகவிற்கு மேலும் சரிவைத் தான் ஏற்படுத்தும் என்று சொல்லியிருக்கிறேன்.

பாஜக, ஹிந்து முன்னணி, ஆர் எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளுக்கு என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் துளியளவு கூட இல்லாமல் தீவிர சங்கப் பற்று கொண்டவனாகவே இத்தனை வருடங்கள் செயல்பட்டு வருகிறேன். ஆகவே என் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள் எனக் கருதுகிறேன்.

இப்படிப்பட்ட திடீர் time servers களை ஊக்குவிப்பது பாஜக, சங்கம் போன்ற அமைப்புகளுக்கு கெட்ட பெயரைத் தான் ஏற்படுத்தும். ஏற்படுத்திவருகிறது.

ஒரு வீடியோ ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் போட்டால், ஆயிரம் எதிர்வினை ஆற்றும் வீடியோக்கள் வரும். அவைதான் பொது மக்களிடையே சென்று அடைந்து தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே இந்த அனுகூலச் சத்துருக்களை ஒதுக்கி வைப்பது நல்லது.

ஆனாலும் பாவம்! இவர் பேச்சை பாஜக மதிக்கது என்று இவருக்கு தெரியவில்லை..

எது எப்படியோ ஒரு வரி நச்சென்று இருந்தது.

முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பல் ஆனார்கள்

இந்த வரி மாரிதாஸுக்கு மட்டுமல்ல மோடிக்கும் பொருந்தும்.
சொல்லப்போனால் மோடிக்குத்தான் வெகு கச்சிதமாக பொருந்துகிறது.

No comments:

Post a Comment