Thursday, September 26, 2019

திண்டுக்கல்லும் திப்புவின் கோட்டையடா !



சங்கிகள் அவர்களின் நாசகர வேலையை திண்டுக்கல்லில் காண்பித்துள்ளனர். 

கார்த்தி நடிக்கும் "சுல்தான்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக் கோட்டையில் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறைக்கு வைப்புத் தொகை, கட்டணமெல்லாம் கட்டி உரிய அனுமதியோடுதான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

"சுல்தான்" என்பது படத்தின் பெயர் என்பதால் அது திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு என்று நினைத்து திப்பு சுல்தான் பற்றிய படமெல்லாம் திண்டுக்கல்லில் எடுக்கக் கூடாது என்று படப்பிடிப்பில் புகுந்து கலவரம் செய்துள்ளனர் சங்கிகள்.

"சுல்தான்" படம் திப்பு சுல்தான் பற்றியதல்ல என்று விளக்கம் கொடுத்து , தேசியத் தலைவர்களுக்கு ஜாதி, மத அடையாளம் அளிக்காதீர்கள் என்று தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ள சூடான அறிக்கை கீழே உள்ளது.



"சுல்தான்"  திப்பு சுல்தான படமாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் திப்பு சுல்தான் பற்றிய திரைப்படத்தை திண்டுக்கல்லில் எடுத்தால் அதில் என்ன தவறு?

அப்படி எடுத்தால் அது சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

ஆம்.

திண்டுக்கல் திப்பு வாழ்ந்த இடம். 
திண்டுக்கல் திப்பு ஆண்ட இடம்.

மைசூர் மன்னர் காலத்தில் திண்டுக்கல் பகுதியின் ஆட்சி உரிமையை அவர்களின் தளபதியான ஹைதர் அலிக்கு அளிக்கிறார்கள். அவரது ஆட்சி தொடங்கியது திண்டுக்கல் கோட்டையில்தான்.

பிறகுதான் அவர் மைசூரின் ஆட்சியை கைப்பற்றுகிறார்.

திப்பு சுல்தான் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் திண்டுக்கல்லில்தான். 

அங்கிருந்துதான் அவர் வெள்ளையர்களை எதிர்க்கிறார்.

வெள்ளையர்களுக்கு எதிரான போராட்ட மையமாக திண்டுக்கல் ஹைதர் மற்றும் திப்புவின் காலத்தில் இருந்தது.

வெள்ளையர்களுக்கு எதிரான போருக்கு முன்பாக வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி அடைக்கலம் கொடுத்தது, பயிற்சி அளித்து படை திரட்டியது எல்லாமே திண்டுக்கல் கோட்டையில்தான்.




வெள்ளை ஏகாதிபத்தியத்தை அஞ்சி நடுங்க வைத்த திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு

மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கோழை சவர்க்கரின்,
வெள்ளையனே வெளியேறு இயக்க போராளிகளை 
காட்டிக் கொடுத்த வாஜ்பாயின்

வாரிசுகளுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.

திண்டுக்கல்லின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவர் திப்பு சுல்தான். 

அவர் பற்றி அங்கே படமெடுக்காமல் வேறு எங்கு எடுப்பது?

திப்பு சுல்தான் படத்தில் நடிக்கக் கூடாது என்று கலவரத் துறவி ராம கோபாலன் மிரட்டியதற்கு ரஜனிகாந்த் பயந்திருக்கலாம்.

எல்லோரையும் அப்படி கோழைகளாக சங்கிகள் நினைத்திடக் கூடாது.

இன்று படப்பிடிப்புக் குழுவினரிடம் வீரம் காண்பிக்கும் சங்கிகள் 

அதே திண்டுக்கல்லில் 

ஹைதர் அலிக்கும் திப்பு சுல்தானுக்கும்

மணி மண்டபம் கட்டுவதாக ஜெயலலிதா அறிவித்த போதும்

அதனை இவர்களின் இன்றைய அடிமை எடப்பாடி திறந்து வைத்த போதும் 



வாயை மூடிக்கொண்டும் வாலைச் சுருட்டிக் கொண்டும்தான்
இருந்தார்கள் என்பது ஒரு செய்தி. . . .

பிகு

இதனை எழுதி முடிக்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 

மதுரையில் கல்லூரி படிக்கையில் சில விடுதி நண்பர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள். ஒரு வார காலம் அவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. காரணம் கேட்ட போது சொன்னார்கள். ஜெய் சங்கர் நடித்து கர்ணன் இயக்கிய ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் கோட்டையில் நடந்ததால் அதைப் பார்க்க சென்று விட்டதால் வரவில்லை என்றார்கள்.

ஜெய்சங்கர் நடித்த கர்ணன் படங்கள் எப்படி இருக்கும் என்று நான் தனியாக எழுத வேண்டியதில்லை.

அந்த மாதிரி படங்களை திண்டுக்கல்லில் எடுக்கலாம். ஆனால் அந்த மண்ணின் மன்னனாக இருந்தவனின் படத்தை எடுக்கக் கூடாதாம்.

இதெல்லாம் என்ன நியாயம்? 

2 comments:

  1. who is karnan? what are his films?

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு சீரியஸா எழுதி இருக்கேன், அதையெல்லாம் விட்டுட்டு கர்ணன் யாரு, அவரு படம் என்ன என்று கேட்பதெல்லாம் கூட நியாயமில்லை

      Delete