Saturday, September 7, 2019

தலைமை நீதிபதிக்கே அராஜகமென்றால் . . .


நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் வெடித்த நான்கு நீதிபதிகளில் ஒருவர் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

ஆனால் இப்போது அவர் தலைமையில் அந்த வெளிப்படைத்தன்மை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி தஹீல் ரமானி, மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தரை நர்சரி ஸ்கூல் டீச்சராக்குவது எப்படி ஒரு அபத்தமோ, அராஜகமோ அது போன்றதுதான் சென்னை போன்ற மிகப் பெரிய உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியை ஒரு சுண்டைக்காய் நீதி மன்றத்திற்கு மாற்றுவது.

குஜராத்தில் மோடி ஆட்சியில் நடைபெற்ற இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் கொலைகார சங்கிகளுக்கு தண்டனை கொடுத்ததன் விளைவைத்தான் அவர் இன்று அனுபவிக்கிறார் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

ஆட்சியாளர்களின் விருப்பத்தை உச்ச நீதிமன்ற கொலேஜியம் எப்படி நிறைவேற்றும் என்ற கேள்வி வரலாம்/ அதிலும் தலைமை நீதிபதி நீதி கேட்ட நால்வரில் ஒருவராயிற்றே என்றும் கேள்வி வரலாம். 

உச்சத்தில் உள்ளவரின்  நடவடிக்கைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு முன்பு
அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு பின்பு

இதிலே திருமதி தஹீல் ரமானி பாதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு நிகழ்ந்த அராஜகத்தினால் அவர் பதவி விலக முடிவெடுத்துள்ளார்.

இது மிகவும் துயரமானது.

அவருக்கு நிகழ்ந்தது போன்ற சம்பவங்களை வரலாறு முழுதும் நிறைய காணலாம்.

நேர்மையாளர்களை, அவர்களின் நேர்மையான செயல்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத  சிறு மதியாளர்கள், அவர்களை வெறுப்பேற்றி, அவமானப்படுத்தி அவர்களாகவே பொறுப்பிலிருந்து வெளியேறும் சூழ்நிலையை உருவாக்குவார்கள்.

அவையெல்லாம் அமைப்பை நாசமாக்கி விடும் என்ற கவலையும் அவர்களுக்கு எப்போதும் இருப்பது இல்லை.

No comments:

Post a Comment