Friday, September 20, 2024

தலைமை நீதிபதி தவிர்த்திருக்க வேண்டும்.

 


தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் நடந்த வினாயகர் சதுர்த்தி விழாவில் மோடி கலந்து கொண்டது சர்ச்சையாகி உள்ளது.

 


தலைமை நீதிபதி வினாயகர் சதுர்த்தி கொண்டாடியதை யாரும் குறை சொல்ல முடியாது. அது விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையின் படி வினாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான உரிமை அவருக்கு உண்டு.

 சர்ச்சை மோடியின் பங்கேற்புதான்.

 மோடி அங்கே சென்றதும்  சட்டப்பேரவை  தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்கள் பயன்படுத்துகிற தொப்பியை அங்கே அணிந்து கொண்டதும் அரசியல் உள் நோக்கமுடையது.

 இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையின் உச்சபட்ச பொறுப்பில் உள்ள ஒருவர், தன் வீட்டில் நடைபெறும் மத வழிபாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒருவர் பங்கேற்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

 சந்திரசூட்டின் அழைப்பில் மோடி சென்றாரா இல்லை அழையா விருந்தாளியாக சென்றாரா?

 சர்ச்சை எழுந்த போதும் இருவரும் இது பற்றி பேசவே இல்லை. சந்திரசூட் அழைத்திருந்தார், அதனால்தான் சென்றேன் என்று மோடி சொல்லி இருப்பார். அப்படி அழைத்திருந்தால் என் அழைப்பின் பேரில்தான் மோடி வந்தார் என்று சந்திரசூடாவது சொல்லியிருப்பார். ஆனால் இருவருமே மௌனமாக இருப்பதால் மோடி அழையா விருந்தாளியாகத்தான் சென்றிருப்பார் என்று தோன்றுகிறது.

 தலைமை நீதிபதி வீட்டில் மோடி கலந்து கொண்ட புகைப்படங்களை சங்கிகள் வெளியிட்டு மத நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கும்  தலைமை நீதிபதி என்று செய்தியை பரப்பினார்கள்.  அது தலைமை நீதிபதிக்கு ஒரு களங்கம்தான்.

 சர்ச்சை உருவானதும் “நான் வினாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியதை பிரச்சினை செய்கிறார்கள், குறை கூறுகிறார்கள்” என்று மோடி எதிர்க்கட்சிகள் மீது கீழ்த்தரமான தாக்குதலை தொடங்கினார்.

 “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில்” என்று மட்டும் சொல்லவில்லை. பிரச்சினையை திசை திருப்பும் கீழ்த்தரமான உத்தி அஇது.

 இப்படிப்பட்ட சர்ச்சைகள் உருவாவதை தலைமை நீதிபதி தவிர்த்திருக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment