Sunday, September 29, 2024

இந்திரா போல் முடியுமா மோடி?

 


பழைய சம்பவம் பற்றியதுதான். சொல்லப்போனால் போன வாரம் எழுதியதுதான். 

தோழர் யெச்சூரி பற்றிய ஒரு கட்டுரையை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஜேஎன்யு பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து இந்திரா அம்மையார் விலக வலியுறுத்தியது தொடர்பாக தோழர் யெச்சூரியே எழுதியது கீழே உள்ளது.

“இந்திரா அவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற பின்னும் ஜேஎன்யு வேந்தர் பதவியில் தொடர்ந்தார். அவசர நிலைக் காலம் கொண்டு வந்ததாலும் அப்போது நிகழ்ந்த அநீதிகளாலும் அவர் அந்த பதவியில் தொடரக்கூடாது என நாங்கள் கூறினோம். நான்கு பக்க குற்றப்பத்திரிக்கை ஒன்றை எழுதி அனைத்து மாணவர்களும் வெலிங்டன் க்ரெஸெண்டில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். அவசர நிலைக்காலத்தின் போது தலை மறைவாக இருந்த மாணவர்களின் கைது வாரண்டுகளை ஜேஎன்யு விடுதியில் உள்ள அவர்களின் அறைக்கதவுகளில் ஒட்டி விட்டுச் செல்வார்கள். நாங்கள் எங்கள் மனுவை அவர் வீட்டுக் கதவில் ஒட்ட நினைத்தோம்.

 நாங்கள் அங்கே சென்ற போது வி.சி.சுக்லா எங்களிடம் என்னவென்று வினவினார். நாங்கள் இந்த மனுவை அவர்களிடம் தர வந்துள்ளோம் என்று சொன்னேன்.அவர் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். ஐந்து பேர் மட்டும் உள்ளே வரலாம் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன்.  அனைத்து மாணவர்களும்தான் வருவோம் என்று சொன்னேன். அவர் மீண்டும் உள்ளே சென்றார்,  இம்முறை இந்திரா அம்மையாரே கதவுக்கருகில் வந்தார்.  அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். என்ன இதெல்லாம் என்று அவர் கேட்டார். நான் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த மனுவை உங்களிடம் அளிக்க வந்துள்ளோம் என்று அவரிடம் சொன்னேன். அங்கே போலீஸ் காவல் எதுவும் இல்லை. நீங்கள் வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னேன். நீங்கள்  அப்பதவியில் தொடர்வது சரியல்ல என்றேன். அவர் அந்த மனுவை வாசிக்குமாறு என்னிடம் சொன்னார்.  நாங்கள் சற்று தயங்கினோம். ஏனென்றால் அதில் ஏராளமான வசைகள் இருந்தன. நான் படித்தேன். முகத்தில் ஒரு நிரந்தரமான புன்னகையுடன் அவர் அதனை முழுமையாகக் கேட்டார்.

 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடன் விலகி விட்டார். 

இது போல யாராவது மோடியிடம் குறை சொல்ல வந்தால் அவர்களை பார்க்கவோ அல்லது அவர்கள் குற்றச்சாட்டுக்களை (வசைகள் அடங்கிய) முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு மோடியால் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? குற்றச்சாட்டின் நியாயம் உணர்ந்து பதவியைத்தான் துறக்க முடியுமா?

பதில் சொல்லுங்க சங்கிகளா?

No comments:

Post a Comment