Friday, August 6, 2021

கால்டாக்ஸிகளும் கம்யூனிஸ்டுகளும்






 



சு.வெங்கடேசன் எம் பி
இன்று காலை தமிழகத்திலிருந்து டில்லி வந்த விவசாயிகளை ரயில் நிலையத்தில் வரவேற்க சிபிஎம் மாநிலச்செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினர் தோழர் பி.ஆர் நடராஜன் ஆகியோரோடு நானும் புறப்பட்டேன்.

தோழர் பி.ஆர் நடராஜனும் நானும் ரயில் நிலைய வரவேற்பினை முடித்துவிட்டு 11 மணிக்குள் நாடாளுமன்றம் வந்து சேர வேண்டியிருந்தது. தோழர் பாலகிருஷ்ணன் அவர்களோ விவசாயிகளை வரவேற்று அவர்களுடன் சிங்கு எல்லைக்குப் போய் மாலை வரை அவர்களுடன் இருந்து விட்டு இரவு சென்னை செல்ல திட்டமிட்டிருந்தார்.

தோழர் பாலகிருஷ்ணன் சிங்கு எல்லை வரை போய் திரும்ப வசதியாக முழு நாளுக்கு ஒரு வாடகைக் கார் அமர்த்திக்கொள்ளலாமா என கேட்டோம். அவரோ “வேண்டாம் தோழர், ரயில் நிலையம் வரை கால் டாக்ஸியில் போய் விடுவோம், அங்கிருந்து டில்லி போலீஸ் தமிழக விவசாயிகளை சிங்கு எல்லைக்கு அவர்களின் வாகனத்தில் அழைத்து செல்லும் போது, அதே வாகனத்தில் நானும் சென்று விடுகிறேன்” என்றார்.

சரி என்று ரயில் நிலையம் செல்ல, கால்டாக்ஸி பதிவு செய்துவிட்டு காத்திருந்த போது, அதே அடுக்ககத்தில் குடியிருக்கும் சி பி ஐ யின் பொதுச்செயலாளர்
தோழர் D.ராஜாவும் காத்திருப்பு பகுதிக்கு வந்தார்.

தற்செயலாக அமைந்த நல்லதொரு சந்திப்பு. கால்டாக்ஸி வந்து சேர்வதற்குள் டில்லியின் ஆறு முனைகளில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம், ஜந்தர் மந்தர் பகுதியில் நடக்கும் விவசாயிகள் நாடாளுமன்றம், தமிழகத்திலிருந்து வந்துள்ள மீனவர்களை டில்லி போலீஸ் ரயில் நிலையத்திலேயே கைது செய்துள்ள விவகாரம், போராட்டகாரர்கள் ஒருவர் கூட தனது பார்வையில் இருந்து தப்பி டில்லியின் மத்திய பகுதிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக டில்லி போலீஸ் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயல் என அனைத்தும் பேசப்பட்டுவிட்டது.
கால்டாக்ஸி வந்ததும் நாங்கள் மூவரும் புறப்பட்டோம், சிறிது தூரம் போன பின் யோசித்தேன், “தோழர் ராஜா எதில் போவார் என்று நாம் கேட்க மறந்து விட்டோமே!”
பின்னர் தோன்றியது, அவரும் ஒரு OTP நம்பரோடுதான் காத்திருப்பார் இந்நேரம் கால் டாக்ஸி வந்திருக்கும்.
நாங்கள் ரயில் நிலையத்தை அடைந்தோம், டில்லி போலீஸ் தீவிரவாதிகளை வளையமிட்டிருப்பதைப் போல தமிழக விவசாயிகளை வளையமிட்டிருந்தது.
விவசாய சங்கத் தலைவர்கள் டில்லி போலீசோடு நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தை நேரடியாகவும் பார்த்தோம்.

253 நாட்கள் நடந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தின் நாயகர்கள் ஹன்னன் முல்லா, அசோக் தாவ்லே, விஜு கிருஷ்ணன் ஆகியோரோடு உரையாற்றிவிட்டு, போராட்டத்தை வாழ்த்திப் பேசினோம், சிறிது தூரம் ஊர்வலத்தில் பங்கெடுத்தோம். அனுமதிக்கப்பட்ட தூரத்தை ஏற்க மறுத்து திமிறிக்கொண்டிருந்தனர் எம் தோழர்கள்.
தோழர் பி ஆர் என் அவர்களுக்கும் எனக்கும் நாடாளுமன்றம் செல்வதற்கான நேரமாகிவிட்டது. எனவே பேரணியின் முகப்பில் இருந்து, காவல்துறையின் தடுப்புகளை கடந்து வர வேண்டியிருந்தது.

தோழர்களுக்கும் காவல்துறைக்கும் வழக்கம் போலான தள்ளுமுள்ளுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த பிரச்சனைக்கு நடுவில் டில்லியை சேர்ந்த தோழர் ஒருவர் “இவர்கள் இருவரும் எம் பி க்கள் இவர்களை தடுப்புகளை தாண்டிச்செல்ல அனுமதியுங்கள்” என்று காவல் உயர் அதிகாரியிடம் ஹிந்தியில் பேசினார். அந்த கடுமையான நேரத்தில் டில்லியின் மத்தியபகுதி துணை ஆணையர் எங்களை தடுப்புகளை சற்றே விலக்கி வெளியில் அழைத்து வந்தார்.
காவலர்கள் சூழ வெளியில் வந்ததும் “உங்கள் வாகனம் எங்கே இருக்கிறது?” எனக்கேட்டார்.

அப்பொழுது தான் டாக்ஸி பதிவு செய்ததால் OTP தான் வந்திருந்தது, டாக்ஸி வர 10 நிமிடம் என்று ஓலாவின் வரைபடம் காட்டியது. அது வரை தோழர் பி ஆர் என் அவர்களும் நானும் பேசிய படி நின்றோம். அந்த காவல் அதிகாரி, “வாகனம் எங்கே நிற்கிறது?” என்று மீண்டும் கேட்டார், “ டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டு நிற்கிறது, சிறிது நேரத்தில் வந்துவிடும்” என்றேன்.

“ஏன், நீங்கள் இங்கேயே நிறுத்தியிருக்கலாமே?” என்றார் அவர்.
“அது சொந்த வாகனமல்ல,வாடகை டாக்ஸி என்றேன்”

அதன் பிறகு அவர் எங்களுடன் பேசவேயில்லை, காவல்துறையின் வெவ்வேறு அதிகாரிகளுடன் ஏதேதோ ஹிந்தியில் பேசிக்கொண்டே இருந்தார்.

தடுப்புக்கு பின்புறம் தோழர்களின் முழக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

டாக்ஸி வர தாமதமாகிக் கொண்டிருந்ததால், தோழர் பி ஆர் நடராஜன் “ வெங்கடேசன், ரெம்ப நேரமாகுது, நாம 11 மணிக்குள்ள அவைக்குள் போய் ஆகணும், ஒரு ஆட்டோ பிடுச்சு போயிருவோம்” என்றார்.

நான் சொன்னேன் “தோழர், கால் டாக்ஸி புக் பண்ணிருக்கோம்னு சொன்னதில் இருந்து அந்த காவல்துறை அதிகாரி, நாம் ரெண்டு பேரும் எம் பி தானான்னு சந்தேகப்பட்டு சுத்தி சுத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கான், இப்போ ஆட்டோ பிடுச்சோம் உறுதியா முடிவுக்கு போயிருவான், நம்மலோட கன்டிசன மீறி இங்க இருந்து ஜந்தர் மந்தர் போராட்டத்துல போய் கலந்துகிறதுக்காக இப்படி சொல்றானுக அப்படீன்னு நெனச்சு நம்ம ரெண்டு பேரையும் விவசாயிகளுக்காக காத்திருக்கிற அந்த பஸ்லயே ஏத்தி சிங்குவிற்கு கொண்டு போயிருவான்.

உங்களுக்கு எது வசதி, சிங்குவிற்குப் போவோமா அல்லது பார்லிமெண்டுக்கு போவோமா? எனக்கேட்டேன்.

“எங்க போனாலும் போராடத்தான் போறோம், நமக்கு கொடுத்திருக்கிற எடத்துல போய் போராடுவோம்” என்றார்.

“ பஸ்சுல பாலகிருஷ்ணன் வேற உக்காந்திருப்பாரு, உங்களுக்கு என்ன வேலை கொடுத்தா என்ன வேலைய செஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு கேப்பாரு தோழர்” என்றேன்.

“பத்து நிமிடம் காத்திருந்தாலும் பரவாயில்ல கால்டாக்ஸியிலே போயிருவோமப்பா” என்றார் தோழர்.

No comments:

Post a Comment