Sunday, July 3, 2016

ஏ மாதர் சங்கமே - எதிரொலி கேளுங்கள்




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன்னணிப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஓவியர் தோழர் வெண்புறா சரவணன் தனது முக நூல் பக்கத்தில் எழுதிய  அருமையான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். அவர் எழுதியதை சம்பந்தப்பட்ட ஆட்கள் புரிந்து கொள்வார்களா என்பதுதான் சந்தேகம்.



 சமீப காலமாக - குறிப்பாக 'சிம்பு என்ற திரைத் தியாகியின் சிறந்த தேசபக்தி பாடலான பீப்'பாட்டுக்கு பிறகு - அடிக்கடி இணையப் பொறுக்கிகளின் தரம் தாழ்ந்த தாக்குதலுக்கு உள்ளாகும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பணி என்பது, பெண்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும்  ஆண் பெண் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் இயங்குவதுதான்  பிரதானம் என்றாலும், மக்களைப் பாதிக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்காகவும் இடதுசாரி கண்ணோட்டத்துடன் போராடுகின்ற ஒரு ஜனநாயக அமைப்பு.
பெண்களுக்கு எதிராக எங்கு அநியாயம் நடந்தாலும், அது கவனத்திற்கு வந்தவுடன் நேரடியாகவோ, நிர்வாகத் தலையீடாகவோ, நீதிமன்றத் வழக்காகவோ உடனடியாக களத்துக்கு வருவதில் மாதர் சங்கத்தின் பங்கு மகத்தானது.

பிறகு ஏன், ஒரு பெண் கொடுமைக்கு உள்ளாகும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மாதர் சங்கத்தின் மீது பல கழிசடைகள் மூர்க்கமாகவும், அநாகரிகமாகவும் பாய்கிறார்கள்? அவர்கள் உளவியல்தான் என்ன? என்ற காரணங்களுக்குள் போவதற்கு முன்... 

இப்போது ஒரு காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள். 

சொறிப்புடிச்ச கொரங்குக்கு செரங்கு வந்தது போல் என்னேரமும் 'டச்'சையோ 'மவுஸ்'சையோ நோண்டிக் கொண்டிருக்கும் ஒருவன் கண்ணில், ஒரு பெண் பாலியல் படுகொலை செய்யப்பட்ட செய்தியும் படமும் இணையத்தின் வழியே வந்து கண்ணில் படுகிறது. (அதுவரை அவன் பெண்கள் பற்றிய ஏதாவது ஒரு பாலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்பது உபரிக் காட்சி!) உடனே அவனது பக்கத்திற்கு திரும்பி வந்து, இப்படியொரு நிலைத் தகவலை பதிகிறான்... 

"ஏ, மாதர் சங்கமே பீப் பாட்டுக்கு பொங்குனீங்க, இப்ப எங்கடி போனீங்க"
(இது சாதாரண வார்த்தை! பின்னூட்டங்களுக்குச் சென்று பார்த்தால் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகள் ஏராளம்) 

கட்... 

இணையத்திற்கு வெளியே ஒரு சமூகம் இருக்கிறது என்பதும், அந்த சமூகத்தில் என்னதான் விரைவாக தகவல் பரிமாற்றம் நடந்தாலும் சம்பவங்கள், கொடுமைகள் ஒரு அமைப்பைச் சென்றடைய சிலமணி நேரங்களாவது ஆகலாம். பிறகு அதில் சரியாகவும் வலுவாகவும் தலையிட வேண்டும் என்றால், காரணங்கள், விவரங்கள் அவசியம் தேவை. அதற்குப் பலமணி நேரங்கள் ஏன் ஓரிரு நாட்கள்கூட தேவைப்படலாம். இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நிகழ்விட பகுதியில் மாதர் சங்கக் கிளை இருந்து, அவர்கள் உடனடியாக அந்தப் பகுதி மக்களைத் திரட்டிச் சென்று போராடினால் ஊடகங்கள் அதிகார மையத்தின் வாய் அசைவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, போராடும் அமைப்புகளுக்குக் கொடுப்பதில்லை. 

இப்படி ஏராளமான சிரமங்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையில்தான் அனைத்துப் பிரச்சனைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது மாதர் சங்கம். 

இப்படியான ஒரு உலகத்தைப் பற்றிய எந்தவொரு அனுபவமோ அறிவோ இல்லாத இ.பொ.கள் மட்டும்தான் மாதர் சங்கத்தை தூற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதல்ல... 

காவிக் கும்பல், சாதி வெறியர்கள், மேலாதிக்க அம்பிகள், சில அரசியல் கட்சிகளின் அபிமான இலக்கியவாதிகள் மற்றும் அரசியல் சாரா அறிவுசீவிகள் இதில் அடக்கம்! 

இவர்கள்தான் பிரச்சனையின் மையத்தை சிதறடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

மாதர் சங்கம் ஏன் இவர்களின் இலக்காக இருக்கிறது என்பதற்கு முக்கியமான மூன்று காரணங்கள்... 

1. நுகர்வு வெறி.
2. ஆணாதிக்க சிந்தனை.
3. இடதுசாரி எதிர்ப்பு நிலை. 

சரி போகட்டும், 

இவர்கள் மீது நமக்கு சில கேள்விகள்... 

இணையத்தில் எழுதிக் குவிப்பதைத் தவிர இதில் பலரும் எதைக் கிழித்தார்கள்?

உண்மையிலேயே இவர்கள் அந்தக் கொடுமைகளுக்காக துடிப்பவர்கள்தானா? 

கொடுமை நடந்த நேரத்தில் குலம் கோத்திரம் வர்க்கம் பார்க்காமல் அவள் ஒரு சகமனுசி என்ற பார்வையோடு எல்லாவற்றிற்கும் குரல் கொடுப்பவர் இதில் எத்தனை பேர்? 

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க... 

வலதுசாரிகள் மற்றும் அடிப்படைவாதிகள் ஒரு முற்போக்கு இயக்கத்தை தூற்றினால் அந்த இயக்கம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்! எனவே அதுபற்றி பிரச்சனையில்லை. 

அதேபோல்,
இடதுசாரி எதிர்ப்பு நிலையிலிருந்து
தூற்றுபவர்கள், எல்லாம் தெரிந்தும் தங்கள் 'இருப்பை'த் தக்கவைத்துக் கொள்ள இது போன்ற சித்து விளையாட்டுகள் மூலம்   அவ்வப்போது உரசும்போது அதை இடது கையால் தட்டிவிடுவது சுலபம் என்பதால் அதுவும் பிரச்சனையில்லை! 

ஆனால்... 

சிம்புவின் படு கேவலமான பெண்ணிழிவுப் பாட்டை மாதர் சங்கம் தீவிரமாக எதிர்த்த ஒரே காரணத்திற்காக அதன் இதர போராட்டங்கள் குறித்த எந்தத் தகவலையும் தேடிப் பெறாமல்  மாதர் சங்கத்தை இழிவுபடுத்தி அந்தப் பொறுக்கிப் பாடலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வக்காலத்து வாங்கும் கேடுகெட்ட மனநிலைதான் சிக்கலானது! 

சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் இழி சொற்களில் 90 சதவீதம் பெண்களின் உடல் மற்றும் நடத்தை சார்ந்த இழிசொற்கள்தான். அப்படியான இழிசொற்கள்  தெருக்களில், வீடுகளில் பேசப்படுவதை குழந்தைகள் உள்வாங்குகின்றன. பிறகு ஏதாவது ஒரு தருணத்தில் விளையாட்டாகவோ கோபத்துடனோ அதே சொற்களை அவைகளும் பேசுகின்றன. அதன் அர்த்தம் புரியாமல்தான் குழந்தைகள் பேசுகின்றன என நமக்குத் தெரிந்தாலும், பதறிப்போய் குழந்தைகள் வாயில் அடித்து கண்டிக்கும் பண்பாடு கொண்ட தமிழ்ச் சமூகத்தில்... 

தெருவில் திரியும் காவாலிப் பயலின் வசவையொத்த ஒரு இழிபாடலை நவீனம், புதுமை, புண்ணாக்கு என்ற பெயரில் பணத் திமிரை இசையாய் பிழிந்து ஒரு பிரபலன் கொடுக்க, அதை இவர்கள் கொண்டாடுகிறார்கள் அல்லது மிக இயல்பான ஒன்றாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், இது என்னவிதமான உளவியல்? 

அந்தப் பாடலைக் கண்டித்து மாதர் சங்கம் போராடுவது அவர்கள் வீட்டுப் பெண்களுக்காகவும்தான் என்று இந்தக் கூமுட்டைகளுக்கு எப்போது புரியும்? 

"வெட்றா அவள குத்துறா அவள"
போன்ற ரவுடித்தனமான திரைப் பாடல்களுக்கும், 

பெண் உறுப்பையும் காதலையும் கொச்சைப்படுத்தும் பீப் போன்ற பொறுக்கித்தனமான தனிப்பாடலுக்கும்... 

சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலைக்கான காரணங்களுக்கும் தொடர்பிருப்பது இந்த இணையப் பொறுக்கிகளுக்குத் தெரியுமா? 

பெண்கள் உரிமைக்காக சளைக்காமல் போராடும் மாதர் சங்கத் தோழர் ஒருவர் சொன்னார்... 

"களப் போராட்டங்கள் எதுவானாலும் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி ஒரு மனநிறைவைத்தான் கொடுக்கும் தோழர். ஆனால், இதுபோன்ற இணையத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவது பெரும் அயர்ச்சியைக் கொடுக்கிறது" 

இது போராட்டக் களத்தின் விரக்திலிருந்து வந்தது அல்ல...
இணைய தளத்தின் கவலையில் இருந்து வந்தது!

4 comments:

  1. There's one post you must read.

    http://nethajidhasan.blogspot.in/2016/07/02july20160.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன். கண்டனத்தை தெரிவித்தேன். உங்களது பின்னூட்டத்தையும் கண்டேன். ஆனால் அந்த மனிதன் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே மூர்க்கமாக கூறுகிறார்

      Delete
    2. பார்த்தேன்.உங்க கண்டணம் அது பலரது கண்டணம்.

      Delete
  2. மாதர் பெண்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணையதளங்களில் தாக்குதலுக்குள்ளாவதை கண்டித்து வெண்புறா சரவணன் எழுதியது சரியானது. ஆனால் காவிக்கும்பல், சாதி வெறியர்கள் (மேலாதிக்க அம்பிகள்? )என்று சொன்னவர் இவர்களோட சேர்ந்து பெண்கள் அமைப்புகளை தாக்குதல் செய்த கிறிஸ்தவ மதவாதிகள்,பெரியாரிஸ்டுகளை குறிப்பிடாமல் விட்டுள்ளார்!

    ReplyDelete