Thursday, July 14, 2016

மாதவன் நடித்த படக்காட்சி போலவே ஓர் அராஜகம்




வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்தியை நானும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

மாதவன் நடித்த ஆர்யா என்ற ஒரு திரைப்படத்தில் வில்லன் பிரகாஷ்ராஜின் தங்கை எம்.பி.பி.எஸ் சேர வேண்டும் என்பதற்காக அதே பெயர் கொண்ட ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பெண் கொல்லப்படுவாள். அது போலவே இருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

ஒளிமயமான எதிர்காலம் காண வேண்டிய ஒரு இளைஞனின் மர்ம மரணத்திற்கு பின்னே உள்ள தீய சக்திகள் யாரென்று கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்னே நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப் பட வேண்டும். அதனை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கே உண்டு.

செய்யுமா ஜெ அரசு?




புழுதியில் வீழ்ந்ததோ நல்லதோர் வீணை?

இறப்புக்குப் பின்புதான் தெரியும் - இவர் நாளைய மருத்துவ உலகில் ஒரு நட்சத்திரமாகப் பிரகாசிக்க முடிந்திருக்கும் என்று!

அந்தோ கொடுமை, இன்று இல்லை இவர்!

ஒரு சாதாரண பனியன் தொழிலாளியின் மகனாகப் பிறந்து 24 வயது பூர்த்தியடைந்து இரண்டு மாதங்களே ஆகிறது. எளிய குடும்பத்துப் பிள்ளை எட்டிப் பிடித்தது இந்திய மருத்துவ நிறுவனத்தின் உயரத்தை!

மதுரையில் எம்பிபிஎஸ் முடித்தவர், அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் எம்.டி. (பொது மருந்தியல்) சேர்ந்து 15 நாட்களே ஆனது.

ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு திருப்பூரில் இருக்கும் அப்பாவுக்குத் தகவல் வந்தது, உங்கள் மகன் இறந்துவிட்டாரென்று!

இடிந்துபோன இதயத்துடன் பறந்து சென்றனர் டில்லிக்கு!

எய்ம்ஸ் சவக்கிடங்கில் சடலமாக சரவணன்!

என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை, அவர் தங்கியிருந்த அறையில் விஷ ஊசி செலுத்தப்பட்டு பிணமாகக் கிடந்தாராம்!

தற்கொலை செய்து கொள்ளக்கூடியவரில்லை என்பது குடும்பத்தார், நண்பர்களின் ஆணித்தரமான நம்பிக்கை!

ஆயிரக்கணக்கான மருத்துவர்களின் இலட்சியக் கனவாக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. படிப்பை எட்டிப் பிடித்து இலட்சியத்தை நிஜமாக்கியவர், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவையென்ன? என்பது புறந்தள்ள முடியாத வாதம்!

வலது கை முக்கிய நரம்பில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. வலது கைப் பழக்கம் கொண்டவர் வலது கையில் ஊசியை செலுத்தியிருக்க முடியாது என்பது டாக்டர்கள் வாதம், அப்படியானால் இடது கை மூலம் செலுத்தியிருப்பாரோ என்றால், அதுவும் முடியாதாம்! எவ்வளவு தேர்ந்த மருத்துவராக இருந்தாலும் உதவியாளர் இன்றி நரம்பைத் தேடி ஊசியைச் செலுத்த முடியாதாம்! அப்படியென்றால்?

யாரோ இவரை குறி வைத்துக் கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

இதர தீய பழக்கம் இல்லை, காதலும் இல்லை, கள்ளத் தொடர்பும் இல்லை, உடலும், மனமும் உறுதி மிக்கவராம்! எனவே முன் விரோதம், பின்புற சூழ்ச்சிக்கும் இங்கிருந்து யாரும் போயிருக்க வாய்ப்பில்லையாம்!

எஞ்சி நிற்பது கோபுர உயரத்தில் ஜொலித்த மாணிக்கத்தை எட்டி உதைத்து குப்பைக்கு வீசியிருக்க முடியுமென்பதுதான்!

எய்ம்ஸில் சேர கோடிகளைக் கொட்டிக் கொடுக்கவும் காத்திருக்கிறது பெருங்கூட்டம். ஆனால் நயா பைசா செலவின்றி நாணயமாகப் படித்து, தனது திறமையினால், உயர்ந்த மதிப்பெண்ணால் அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் டாக்டர் சரவணன்.

மூன்று கட்ட கலந்தாய்வு நடக்குமாம் எய்ம்ஸில். சரவணன் இரண்டாவது கட்ட கலந்தாய்வில் அங்கு சேர்ந்தவர். மூன்றாவது கட்ட கலந்தாய்வு ஜூலை 24 ஆம் தேதியாம். ஜூலை 19 ஆம் தேதி நிலவரத்தில் காலியிடமும் கணக்கில் சேர்க்கப்பட்டு அந்த கலந்தாய்வில் இடம் ஒதுக்கப்படும்!

இப்போது சரவணன் இல்லை! இறந்த தேதி ஜூலை 11.

எனவே அவரது இடம் காலி எனக் கணக்கிட்டு, 24 ஆம் தேதி கலந்தாய்வில் நிரப்பப்படும்!

யாரோ ஒருவர் அந்த இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில்.......

சரவணனுக்கு விஷ ஊசி செலுத்தி விசயத்தை தற்கொலை என திசை திருப்பவும்  முயன்றிருக்கலாம் என்பது வலுவான சந்தேகம்!

மற்றுமொரு மரண வழக்காக இதை முடித்திடக் கூடாது என்பது தமிழகத்து இளம் மருத்துவர்கள் பலரின் மனசாட்சிக் குமுறல்!

இன்றும் எய்ம்ஸ் மருத்துவமனை குறிப்பிட்ட சமூக அதிகார மையத்தின் குறியீடாகவே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மறுத்துப் போராடிய "புனிதர்கள்" அங்குதான் இருக்கின்றனர் என்பது அண்மை கால, மறக்க முடியாத, மறுக்க முடியாத வரலாறு!

அவ்வப்போது எய்ம்ஸில் தற்கொலைகள் என்பதும் புள்ளிவிபரமாய், ஆவணங்களின் சில துளி மைகளாய் மறைந்து போகின்றன.

இந்த பின்புலத்தோடு இணைத்துப் பார்த்தால் டாக்டர் சரவணன் மறைவை ஒற்றை நிகழ்வாய் ஒதுக்கிவிட முடியாது!

காலங்காலமாக அதிகாரம் செலுத்தும் சிறு சமூகக் கும்பலின் தன் ஆதிக்க இருப்பை அடை காக்கும் தொடர் முயற்சியின் ஒரு துளியாகவும் சரவணன் மரணம் இருக்கக்கூடும்!

உண்மையான, நேர்மையான விசாரணையின் மூலம்தான் இதை அறிய முடியும்!

டாக்டர் சரவணன் மரணம் அந்த அதிகாரக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்தும் ஒரு திறப்பாக இருக்க வேண்டும் என்பதே சாமானிய, நடுத்தரக் குடும்பங்களில் இருந்து உயரத்தை எட்டிப் பிடிக்கும் ஏராளமான இளைஞர்களின் விருப்பம்!

அதற்குத் தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல் துறையும், சட்ட வல்லுநர்களும் இந்த விசயத்தில் உண்மையைக் கண்டறிய டில்லிக்கு நேரடியாகச் சென்று உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்!

3 comments:

  1. very painful news.
    but in india like this anything possible. example in TN the education and exam systems are 95% genuine but if take north india from exam to train ticket they never bother. but we have to fight with that fake and original and the end fake people become ias and ips and well settled in south. what the fuck country administration....

    ReplyDelete
  2. that is why many oppose NEET.

    ReplyDelete
  3. It's very sad to read this news. His dream was buried. His family has been bleed lively. Tamil Nadu government must to something to bring the justice to his family. Vada India government will not do anything.

    ReplyDelete