Thursday, December 22, 2011

அரியாகுஞ்சூர் அராஜகம் - இருளர் இன மக்களின் குடிசைகள் தீ வைத்து இடிக்கப்பட்டது.

 இந்திய வரைபடத்தில்  சிறு புள்ளியில் ஆயிரத்தில் ஒரு பங்கு
இருக்கும் ஒரு சிறு கிராமம் அரியாகுஞ்சூர். திருவண்ணாமலை
மாவட்டம், செங்கம் தாலுகாவில் ஒரு குக்கிராமம். சாத்தனூர்
அணை  செல்லும் வழியில் பிரிந்து சென்றால்  பத்து கிலோ 
மீட்டருக்கு பிறகு வரும் ஊர் இது.


அந்த ஊரில் வாழும் பத்து இருளர் குடும்பத்து மக்களுக்கு
உள்ளாட்சி தேர்தலில் வந்தது சோதனை.


ஆளும் கட்சிக்கு வேண்டிய வேட்பாளர் ஊராட்சித் தலைவர்
பதவிக்கு மூன்று வோட்டுக்களில் தோற்றுப் போகின்றார்.
பழங்குடி இருளர் மக்கள் ஓட்டுப் போடாததால் தோற்றுப்
போனோம் என்ற வெறியில்  அவர்களின் குடிசைகளை
தீ வைத்து கொளுத்தி புல்டோசர் வைத்து தரை மட்டமாக்கி
விட்டார். 


ஆளும் கட்சியை சேர்ந்தவர், அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்,
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அந்த ஊரில் உள்ள நிலங்களைப்
பார்த்துக் கொள்பவர்  என்ற அடிப்படையில்  காவல்துறை
பாதிக்கப்பட்டவர்களின் புகாரை பதிவு செய்யாமல் அடித்து
துரத்தி விட்டது. 


செங்கம் ஊரில் திரிந்து கொண்டிருந்த அந்த மக்களைப்
பார்த்த  மார்க்சிஸ்ட்  கட்சிப்  பொறுப்பாளர்கள்   அவர்களைப் 
பார்த்து   விசாரித்து பிரச்சினையை  கையிலெடுத்தனர் .


காவல்துறை  முதல்  தகவல் அறிக்கை பதிவு  செய்தது .
ஒரு முற்றுகைப் போராட்டத்திற்குப்  பின்பு   குற்றவாளிகளை 
கைது  செய்வதாக   உறுதியளித்தாலும்  சம்பவம் நடந்து
இருபது நாட்களாகிய பின்பும்  எவ்வித நடவடிக்கையும்
இல்லை. 


அந்த மக்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்  என 
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் 
தலைவர் தோழர் பெ.சண்முகம்  கூறியதன் அடிப்படையில்
எங்கள் கோட்டத் தோழர்களுக்கு  வேண்டுகோள் 
விடுத்தோம். 




ஒரு வார காலத்தில் இருபத்தி ஐயாயிரம் ரூபாய்
எங்கள் தோழர்கள் அளித்தனர். அந்த நிதி கொண்டு
அந்த பத்து குடும்பங்களுக்கு அரிசி, துணி, பாத்திரம்,
பணம் என்று வழங்கினோம். 


எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த 
துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்த
அந்த மக்களுக்கு இப்படி ஒரு கொடுமை செய்ய
அந்த பாவிக்கு எப்படி மனம் வந்ததோ?


மாற்று இடத்தில் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம்
ஒப்புக்கொண்டாலும் தாமதித்து வருகின்றது. 
அம்மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும்
தவறிழைத்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும்
மார்க்சிஸ்ட் கட்சியும்  மலைவாழ் மக்கள் சங்கமும்
உறுதியாக உள்ளது.


அந்த உறுதி நிச்சயம் நியாயத்தைப் பெற்றுத்தரும் 
என்ற நம்பிக்கையில் வேலூர் புறப்பட்டோம். 


நிகழ்ந்த கொடுமையை கீழே உள்ள படங்களில்
பாருங்கள். 


உடைக்கப்பட்ட மின் கம்பம் 


 துண்டிக்கப்பட்ட குடி தண்ணீர் இணைப்பு 



இந்த இடத்தில் குடிசைகள் இருந்த சுவடு தெரிகிறதா?




இந்த கல்லுரல்கள்தான்  இங்கே மக்கள் வாழ்ந்தார்கள் 
என்பதற்கான ஒரே சாட்சி!

அம்மக்கள் பயன்படுத்திய பாதை வெட்டப்பட்ட கொடுமை 
     

உதவிகள் வழங்கிய போது































       

6 comments:

  1. A. I. I. E. A. Long live! வேரென்ன சொல்ல தோழர்---காஸ்யபன்

    ReplyDelete
  2. எல்லாம் உங்களைப் போன்ற முன்னோர் வகுத்துத் தந்த பாதைதானே தோழரே,

    ReplyDelete
  3. நல்லவனும் கெட்டவனும் ஒரு சேர.இருக்கும்போது ஒரு. சில.நேரங்களில் கெட்டவனின். ஆதிக்கம் அதிகமாகும்போது இவ்வாறு. நடக்கும் தோழர்களே

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. வாழ்க. பண நாயகம். உங்கள் முயற்சிக்கும். ஒரு நாள்.விடியல் உண்டு

    ReplyDelete
  6. வாழ்க பண நாயகம் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் இயக்க பணி

    ReplyDelete