Sunday, September 8, 2013

பயப்படாமல் இருந்திருந்தால் பரிதவிக்காமல் இருந்திருக்கலாமே!




ரூபாய் மதிப்பு வீழ்வதை சிறிதளவு சமாளிக்க மத்தியரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியால்தான் அன்னிய செலாவணி அதிகம் நாட்டை விட்டு வெளியேறுகிறது. நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு டாலராக தர வேண்டியுள்ளது. இப்போது மத்தியரசு இரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இரானிலிருந்து அதிகம் இறக்குமதி செய்தால் டாலர் செலவாகாதா ?

இந்த கேள்வியை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும்.

இல்லை, இரானிலிருந்து இறக்குமதி செய்யும் தொகைக்கு நாம் டாலர் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ரூபாயாகவே கொடுத்தால் போதும். ஆகவே எவ்வளவு அதிகமாக இரானிலிருந்து இறக்குமதி செய்கிறோமோ, அந்த அளவிற்கு அன்னியச் செலாவணி கையிருப்பு நம்மிடமே இருக்கும்.

அப்ப இந்த படுபாவிகள் ஏன் இரானிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்தார்கள் ?

என்று

நீங்கள் அடுத்த கேள்வியை கேட்க வேண்டும்.

இரான் மீது அமெரிக்காவிற்கு கடுப்பு. இரானின் பெட்ரோலிய வளம் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஷா என்ற பொம்மை அரசர் தூக்கி எறியப்பட்ட பின்பு இன்னும் இரான் அமெரிக்காவிற்கு கட்டுப்படவே இல்லை. ஆகவே இரான் மீது வர்த்தக தடைகளை விதித்தது. அமெரிக்காவின் ஐம்பத்தி ஒன்றாவது மாநிலமல்லவா இந்தியா? அதனால் இந்தியாவும் அமெரிக்க அரசின் உள்ளத்தை குளிர வைக்க இரானிலிருந்து இறக்குமதியை குறைத்தது. குழாய் மூலம் இரானிலிருந்து இயற்கை எரிவாயுவை கொண்டு வரும் திட்டத்தையும் கைவிட்டது. இப்போது வேறு வழியில்லை. இரானிடம் சென்றுள்ளது. அன்றைக்கு இந்திய அரசு அமெரிக்காவிடம் பயப்படாமல் இருந்திருந்தால் பரிதவிக்காமல் இருந்திருக்கலாம்.

சரி அவ்வளவுதானா, வேறு ஏதாவது விஷயம் உண்டா

என்ற கேள்வியை நீங்கள்தானே கேட்டீர்கள்.

இராக் மீது படையெடுத்ததற்கு பெட்ரோலிய வளம் முக்கியக் காரணம் என்றால் இன்னொரு துணைக் காரணமும் உண்டு.

சதாம் உசேன், தான் விற்ற கச்சா எண்ணெய்க்கு டாலராக வாங்குவதற்கு பதில் யூரோ நாணயமாக வாங்க ஆரம்பித்தார். அதனால் டாலரின் மதிப்பு குறைந்தது. ஆகவே பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் இருப்பதாக கதை கட்ட ஆரம்பித்தது அமெரிக்கா.

முடிஞ்சுதா?

இந்தப் பிரச்சினைகள் அவ்வளவு சீக்கிரமாக முடியக்கூடியதா என்ன?

இன்னும் ஒரே ஒரு வரலாற்றுச் செய்தியை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

சோவியத் யூனியன் இருந்த காலத்தில் நம்முடைய பெரும்பாலான வணிகம் அந்த நாட்டோடுதான் இருந்தது. அப்போது சோவியத் யூனியனுக்கும் நாம் ரூபாயாகத் தான் கொடுத்தோம். அப்போது ரூபாயின் மதிப்பு இந்த அளவிற்கு வீழ்ச்சியடையவில்லை என்பதை கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்றை மறந்து விடாதீர்கள்.

கம்யூனிச ரஷ்யா நமக்கு நண்பனாய் இருந்து உதவி செய்தது.

முதலாளித்துவ அமெரிக்கா நம் ரத்தத்தை உறிஞ்சுகிறது.


No comments:

Post a Comment