Saturday, September 28, 2013

திருவாளர் பரிசுத்தத்தின் பரிசுத்த மகன் ராகுல் காந்தி – நல்லாதான் ப்ளான் பண்றாய்ங்கய்யா





தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் பதவி பறிப்பை தடுப்பதற்கான அவசரச் சட்டத்தின் நியாயத்தை விளக்குவதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிரடியாக நுழைந்து ஆவேசமாக பொங்கியிருக்கிறார் இளைய தளபதி ( ! )  ராகுல் காந்தி.

இந்த அவசரச்சட்டம் முட்டாள்தனமானது. கிழித்தெறிய வேண்டிய காகிதம் இது என்று ஆத்திரப்பட்டுள்ளார். ஊழலோடு இது போன்ற சிறிய சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கொள்கை வீரராக கொதித்துள்ளார்.

இவரைப் போல நேர்மையாளர் யாராவது உண்டா? என்று இனி காங்கிரஸ்காரர்கள் தம்பட்டம் அடிக்கத் தொடங்கி விடுவார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராகுல் காந்தி?

இந்த பிரச்சாரத்திற்காகத்தானே இந்த நாடகம்?

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இவர் அக்கட்சியின் துணைத்தலைவர். இவரது அம்மா அக்கட்சியின் தலைவி. இவர்களுக்கு தெரியாமல் இவர்கள் கட்சியின் ஆட்சி ஒரு அவசரச் சட்டம் கொண்டு வருமாம். அதை இவர் கண்டிப்பாராம். அதன் பின்பு இவர் நேர்மையாளர் என்று எல்லோரும் சொல்வார்களாம்.

குடிசைகளை கொளுத்தி விட்டு பிறகு நிவாரணப் பொருட்களை வழங்கும் குட்டி அரசியல்வாதிகளின் நாடகம் கூட கொஞ்சம் நேர்த்தியாகவும் நம்பும்படியும் இருக்கும். ஆனால் ராகுல் காந்தியின் நாடகம் மிகுந்த அமெச்சூர்தனமாக இருக்கிறது.

இப்படித்தான் ராஜீவ் காந்தி பிரதமரானபோதும் அவரை திருவாளர் பரிசுத்தம் என்று வர்ணித்தார்கள். ஆனால் அந்த பரிசுத்த வேடத்தை போபோர்ஸ் பீரங்கி தகர்த்து விட்டது. குடிசைகளுக்குள் நுழைந்து கூழ் வாங்கிச் சாப்பிட்ட ராஜீவ் காந்தியின் ஏழைப்பங்காளன் வேடத்தை ராகுல் காந்தி தொடர்ந்து அரங்கேற்றினாலும் அது எடுபடவே இல்லை.
அதனால் இப்போது திருவாளர் பரிசுத்தம் வேடத்தை புனைய ஆசைப்பட்டுள்ளார். ராஜீவ் காந்திக்காவது சில நாட்களுக்குப் பின்பே வேடம் களைந்தது.

ஆனால் ராகுல் காந்திக்கு?

ஒரு பழைய பத்திரிக்கைச் செய்தியை மட்டும் நினைவு படுத்துகிறேன்.

போபோர்ஸ் ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஓட்டோவியா குட்ரேஷி  06.02.2006 ல் அர்ஜெண்டினாவில் கைது செய்யப்படுகிறார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் வழக்கில் சி.பி.ஐ சொதப்பியது. ஓட்டோவியா குட்ரேஷியை கைது செய்ய இந்தியாவில் பிறப்பித்த ஆணையின் நகலைக் கூட சி.பி.ஐ  அர்ஜெண்டினா தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. ஆகவே ஓட்டோவியா குட்ரேஷி   26.02.2006 ல் அர்ஜெண்டினாவில் விடுவிக்கப்படுகிறார். – இது ஒரு செய்தி

ஓட்டோவியா குட்ரேஷி  யின் மகன் மாசிமோ  குட்ரேஷி 17.02.2006 ல் புது டெல்லியில் ஒரு விருந்தில் பங்கேற்கிறார். அந்த விருந்தில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் ஜோக்கர் திக்விஜய் சிங் ஆகியோரும் பங்கேற்கிறார். ராகுல் காந்தியின் நிர்ப்பந்தத்தாலேயே திக்விஜய்சிங் பங்கேற்கிறார்.   ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாசிமோ  குட்ரேஷி மூவரும் ஒரே குடும்பமாக வளர்ந்தவர்கள். மாசிமோ  குட்ரேஷி 23.02.2006 அன்று இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். சி.பி.ஐ வழக்கில் சொதப்புகிறது. ஓட்டோவியா குட்ரேஷி   26.02.2006 ல்  விடுவிக்கப்படுகிறார்.

ஆக ராகுல் காந்தி ஏற்கனவே கறை படிந்தவர். எத்தனை கிலோ சர்ப் போட்டாலும் இனி உங்களால் திருவாளர் பரிசுத்தம் ஆக முடியாது.

அப்படி நம்ப இந்தியர்களும் கேணையர்கள் கிடையாது.

1 comment:

  1. இன்றைய நடிகர்களுக்கு சிவாஜியின் நடிப்பு பாலபாடம். ஆனால் இவர் அவர்களுக்கே அல்வா தருவார் போல.

    ReplyDelete