Thursday, October 17, 2013

ஏமாற்றி விட்டாரே சொய் சொய் பாடலாசிரியர்


 

தற்போதைய திரைப்பாடல்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு கிடையாது.
வயது அதிகமாகி வருவது கூட காரணமாக இருக்கலாம். ஆனால்
சமீபத்தில் நான் ரசித்த ஒரு பாடல் கும்கி படத்தில் வரும்
சொய் சொய் பாடல்.

கச்சிதமான தாளம், இயல்பான குரல் இவையோடு என்னை
மிகவும் ரசிக்க வைத்தது அந்த பாடலின் முதல் வரிகள்தான்.

" கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆசை வச்சான் "

பரவாயில்லடா, இப்ப வர பாட்டுல கூட அழகா எழுதியிருக்கான்
என்று என் மகனிடம் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இப்போது மிகுந்த அதிர்ச்சியில் உள்ளேன்.

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் பற்றிய ஒரு ஆய்வு நூலை
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்தேன். படிக்க
காத்திருக்கும் நூல்களில் அதுவும் ஒன்று. இன்று கவியரசு
நினைவு நாள் என்பதால் அவரைப் பற்றி எழுத ஏதாவது
புதிய செய்தி கிடைக்கிறதா என்று பார்க்க அந்த புத்தகத்தை
புரட்டினேன்.

அப்போதுதான் தெரிந்தது.

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி

என்ற பாடலிலே 

கையளவு உள்ளம் வைத்துக்
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி

என்ற வரிகள் வருகிறது. 
சே! நாம் ரசித்த ஒரே ஒரு புதுப் பாடலும்
இப்படி ஆகி விட்டதே என்று புலம்பிய போது
என் மனைவி ஒரு தகவல் சொன்னார்கள்.

அது கே.பாலசந்தரின் தொலைக்காட்சி தொடரான

கையளவு மனசு தொடரின் முகப்புப் பாடல்

"கையளவு கையளவு மனசு
அதில் கடலளவு கடலளவு கனவு"

என்றுதான் தொடங்கும் என்றார்கள்.

ஆனால் இப்போதைய பாடலாசிரியர்களையும் 
குறை சொல்ல முடியாது.

கண்ணதாசன் எழுதாத பாடல்கள் கிடையாது,
பயன்படுத்தாத வார்த்தைகள் கிடையாது,
அவர் சொல்லாத உவமைகள் கிடையாது.
அவருக்கு உதிக்காத கற்பனைகள் கிடையாது.

சிவாஜி கணேசனின் தாக்கம் இல்லாத நடிகன் கிடையாது.
கண்ணதாசனின்  தாக்கம் இல்லாத கவிஞன் கிடையாது.

நீ நிரந்தரமானவன், அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.



                                                                                             

4 comments:

  1. பிறவிக் கவிஞ்சன் கண்ணதாசனிடம் ஒருவர் கேட்டார் தாங்கள் சுயசரிதை எழுதுவது தேவையா என்று. இவர் சொன்னார் "ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை குறிப்பது சுயசரிதை. ஆனால் ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாது என்பதை சொல்லும் என் சுயசரிதை" என்றாராம். தன் வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி சொன்னவர் கண்ணதாசன்.

    ReplyDelete
  2. \\சிவாஜி கணேசனின் தாக்கம் இல்லாத நடிகன் கிடையாது.
    கண்ணதாசனின் தாக்கம் இல்லாத கவிஞன் கிடையாது.//

    அப்பட்டமான உண்மை.

    ReplyDelete
  3. naan avanillai . avan nallavanumillai

    ReplyDelete
  4. தோழர் சிவசக்தி , உங்கள் கமெண்டிற்கு கீழே உங்கள் பெயரையும் எழுதி விடுங்கள். நீங்கள் அவனில்லை என்பதை புரிந்து கொள்வேன்

    ReplyDelete