Friday, February 4, 2022

இலவசமென்று இழிவு படுத்தும் சங்கிகளே!


*
நாளொரு கேள்வி: 02.02.2022*

தொடர் எண் : *612*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *.சுவாமிநாதன்*

##########################

கேள்வி: பட்ஜெட்டுக்கு ஆதரவாக உலவ விடப்படும் சில வாட்ஸ்அப் செய்திகள் *இலவசம்* இருந்தால்தான் நல்ல பட்ஜெட் என்று மக்கள் நினைப்பார்கள் என்று கிண்டல் செய்து பா.. அரசின் திட்டங்கள் தொலை நோக்கோடு இருப்பதால் சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று கூறுகிறதே

*.சுவாமிநாதன்*

"மோடி அரசு மக்கள் மீது வைத்துள்ள காதல் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல, மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது" என்கிற ரேஞ்சுக்கு சுற்றில் உள்ள வாட்ஸ் அப் செய்திகள் எல்லாம் சங் பரிவாரின் *வலைத் தள தொழிற் சாலை* யில் இருந்து உற்பத்தி ஆகிற செய்திகளாக இருக்கலாம்.

 *இலவசம்* என்ற வார்த்தையே தவறு. யார் வீட்டு சொத்தையும் எடுத்து தரவில்லை. மக்களின் வரிப்பணத்தில் இருந்து தருவதுதான். அதில் ஏழை எளிய மக்களுக்கு உரிமை இருக்கிறது. காரணம் *இந்தியாவில் மொத்தம் வசூல் ஆகும் வரிகளில் (மத்திய மாநில அரசுகளின்)  66% மறைமுக வரிகள்தான்.* 

 மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருள் மீதும், சேவை மீதும் விதிக்கப்படுகிற வரிகளை சாதாரண மக்களும் சுமக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் *கூடுதலாக சுமக்கிறார்கள்.* 

 *மூன்று ஆண்டுகளில் 8 லட்சம் கோடி பெட்ரோல் டீசல் வரிகள் மூலம் அரசுக்கு* கிடைத்திருக்கிறது எனில் அது யார் கொடுத்த பணம்? சாதாரண மக்கள் டூ வீலருக்கு போடுகிற பெட்ரோல் விலை, அவர்கள் வாங்குகிற காய்கறி, பலசரக்குகளை சுமந்து செல்கிற வாகனங்களின் கட்டண உயர்வு போன்ற சுமைகளின் மூலம் கிடைப்பதுதானே. கோவிட் நெருக்கடியில் பல பேருக்கு வேலை போய் விட்டது. சுயவேலை இருந்தும் வருமானம் இல்லை. ஆனாலும் அரசின் மனசு இளகவில்லை. சாதாரண மக்களையே *வச்சு செய்கிற* அரசாக இருக்கிறது

 ஆனால் இதே காலத்தில் *2019ல் கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டதால்* ஒவ்வோர் ஆண்டும் *ஒன்றரை லட்சம் கோடிகளை அரசு இழந்திருக்கிறது.* ஆனாலும் அவர்கள் *பாவம்* என்பதால் அரசு *இரக்கத்தோடு* கொடுத்த சலுகையை திரும்ப பறிக்கவில்லை. 2020 மார்ச் முதல் கோவிட் காலம் துவங்கி விட்டது. ஆனால் *பில்லியனர் எண்ணிக்கை மட்டும் 102 லிருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது.* அவர்களின் செல்வம் 

 *23 லட்சம் கோடியில் இருந்து 56 லட்சம் கோடியாக* உயர்ந்திருக்கிறது. *பாவம் என்னதான் இருந்தாலும் அவர்கள் பில்லியனர்தானே* என்ற அரசின் பரிவு நம்மை வியக்க வைக்கிறது

 இப்ப கூட வரிகளை நாங்க போடல பாருங்க என்கிறார்கள். சுமந்து சுமந்து முதுகு வலி தாங்காம மூச்சுத் திணறி விழுந்தவங்கள இதுக்கு மேல என்ன பண்ணுறது. *கார்ப்பரேட் வரிய உயர்த்தலாம்...* *வாரிசுரிமை வரி போடலாம்...* 

*செல்வ வரி போடலாம்.* 

ஆனா

 அவங்க மேல கை வச்சா *முதலீட்டாளர் நம்பிக்கை* போயிடுமே!

 ஆனால் *இலவசம் கூடாது;* 

 *இதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்!* என்கிறார்கள். அடியும் வாங்க வேண்டும், ஆனாலும் மகாராசா சவுக்கை என்னாமா சொடுக்கிறார், முதுகில் எவ்வளவு அழகாக கோலம் போடுகிறார் என்று ரசித்து பேசுகிற *முதிர்ச்சி* இந்தியாவின் சாதாரண மக்களுக்கு வர வேண்டி இருக்கிறது! என்பது தவிர வேறு என்ன?

 பிரதமர் *பட்ஜெட்டை அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட்* என்கிறார். *குடியரசுத் தலைவர் உரையோ 25 வருசத்துக்கு போடுற அடித்தளம்* என்கிறது. என்ன அர்த்தம்

 இந்த தலைமுறை அல்ல.. இன்னும் ஐந்து தலைமுறை கூட மூச்சு விடக் கூடாது. கல்விக்கு பத்தாது... சுகாதாரத்திற்கு பத்தாது... ரேகா திட்டத்திற்கு பத்தாது... இப்படி எல்லாம் நீங்க கேக்க கூடாது... கொடி பிடிக்க கூடாது. "நீங்க எல்லாம் அதிகமாகவே உரிமைக்கு குரல் கொடுத்து முடிச்சிட்டீங்க... இனிமே கடமைக்கு குரல் கொடுங்க" என்று பிரதமர் அடிச்சார் பாருங்க ஒரு டயலாக்... எல்லாம் கூட்டிச் கழிச்சு பாருங்க. புரியும். புரியாட்டி நீங்க சாதாரண மனிதர்கள். புரிஞ்சுதுன்னா நீங்க அதானிக்கு அடுத்த வீட்டுக் காரங்க

 உங்கள நாங்க நல்லா புரிஞ்சிட்டோம். 15 லட்சம் வங்கி கணக்கில போடுவோம்னு சொன்னா எங்க... எப்பன்னு தொளைச்சு எடுத்தீங்க... விவசாயிக்கு குறைந்த பட்ச விலையா அடக்க விலைய காட்டிலும் 50 % ன்னு சொன்னா ஒரு வருசம் ரோட்டுல உக்காந்து மானத்த வாங்கீட்டிங்க... உஜ்வாலா கேஸ் இலவச அடுப்புன்னா 99 சதவீத உஜ்வாலா அடுப்புகளுக்கு கேஸ் வாங்க முடியலன்னு கணக்க எடுத்து கத்து கத்துன்னு கத்தறீங்க... அதுனாலதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். 100 வருட தொலை நோக்கு அப்படின்னு அடிச்சி இருக்கோம். உங்க கொள்ளுப் பேரன், பேத்தி தான் கேக்க முடியும்.. 

 நாங்க 50, 60 ஆண்டு அடித்தளத்த பொதுத் துறைய சிதைக்கிறோம், உடைக்கிறோம்ன்னு குத்தம் சொல்றீங்க. நாங்க இல்லன்னு சொல்லல பாருங்க. நாங்க பொய் சொல்ல மாட்டோம், உண்மை மாதிரி சொல்வோம், அதுதான் எங்க ஸ்டைல். அதுதான் 25 ஆண்டு அடித்தளத்த போடுறோம்ன்னு சொல்லிட்டோம்

 இத நாங்க எங்க வலைத் தளப் படை கிட்ட சொல்லி இறக்கி விட்டிருக்கோம். படிச்சுட்டு நிறைய லைக் போடுங்க. பார்வர்ட் பண்ணுங்க. யோசிக்க மட்டும் செஞ்சுடாதீங்க. அது நமது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத்திற்கு, தர்மத்திற்கு எதிரானது

 இதுதான் அந்த பரப்பு செய்திகளின் நோக்கம். இலக்கு.  

 *செவ்வானம்*

  

No comments:

Post a Comment