Thursday, February 10, 2022

ஓநாய்கள், வேங்கை,ஆபத்தான லிபரல்கள்

 


அவர்களே மேலும் ஆபத்தானவர்கள்.

காணொளியை பார்த்த உடன் தோன்றிய கருத்துக்கள்.

காவிக் கயவர்கள் கூட்டம் மாணவர்கள் என்ற போர்வையில் துரத்தினாலும் அதற்கு கொஞ்சமும் அஞ்சாமல் உறுதியோடு அத்தனை பேரையும் தன்னந்தனியாக ஒற்றை ஆளாக சமாளித்து தக்கதொரு எதிர்வினை ஆற்றிய அந்த வீரப் பெண்ணின் தைரியத்தைத்தான் பாராட்ட வேண்டும் என்பதுதான் மனதில் தோன்றிய முதல் சிந்தனை.

படிக்க வேண்டிய மாணவர்களை இப்படி ரௌடிகளாக, தற்குறிகளாக, வெறியர்களாக, மூடர்களாக, பொறுக்கிகளாக பாஜக கூட்டம் மாற்றி வருகிறதே என்று கோபம் அடுத்து வந்தது. படித்த பலரே முட்டாள்களாக மாறியுள்ளார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. பாஜகவுக்கு தேவைப்படும் குண்டர் படையாகத்தான் இந்த மாணவர்கள் மாறப் போகிறார்கள். அவர்களின் எதிர்காலம் இருண்ட காலம்தான். நாளை இவர்கள் கூட்டுப் பாலியல் குற்றவாளிகளாகக் கூட மாறுவார்கள்.

நேற்றிலிருந்து முக நூலில் வலம் வருகையில் லிபரல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலர் சொல்லி வரும் கருத்துக்கள் மிகவும் எரிச்சலைத் தருகின்றன.

ஹிஜாப் அணிவதே அவசியமில்லாத ஆணிதானே! இதற்கு ஒரு பிரச்சினையா என்றொரு கேள்வி.

அதற்கு என்னுடைய பதில் தெளிவானது. அந்த உடையை அணிய வேண்டுமா, இல்லையா என்பது பெண்களின் விருப்பம். அணிந்து கொள்ள வேண்டும் என்று திணிக்கவோ, அணியக் கூடாது என்று மிரட்டவோ யாருக்கும், எந்த மத அடிப்படைவாதிக்கும் அருகதை இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் அணியக்கூடாது என்று மிரட்டுகிறவர்கள் ஒன்றும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக பெண்களை வெறும் போகப்பொருளாக, அடிமையாக பார்ப்பவர்கள்.  அவர்கள் செய்யும் கலவரத்தை நியாயப்படுத்துவதாக இருக்கிறது இந்த லிபரல்களின் பேச்சு. கபாலி படத்தில் வரும் வசனம் போல “நான் கோட் சூட் போட்டு கால் மேல கால் போட்டு உட்கார்ந்தா உனக்கு பிடிக்காதுனா நான் அப்படித்தாண்டா போடுவேன், அப்படித்தாண்டா உட்காருவேன்” என்று சொல்ல வேண்டிய தருணம்தான் இது.

அடுத்து “அல்லா ஹூ அக்பர்” என்று சொல்வது கூட மத அடிப்படைவாதம் என்றொரு பிதற்றல்.

நூறு ஓநாய்கள் துரத்திக் கொண்டு வருகையில் கலவர முழக்கமாக “ஜெய்ஸ்ரீராம்” என்று அவர்கள் முழங்குகையில் அந்தப் பெண்ணின் உடனடி எதிர்வினை “அல்லா ஹூ அக்பர்”. அந்த வீர வேங்கையின் முழக்கம்தான் அந்த ஓநாய்களை நிலை குலைய வைத்தது.

அந்த ஓநாய்களுக்கு அஞ்சி அவர் தன் ஹிஜாபை அகற்ற வேண்டுமென்று எதிர்பார்த்தார்களோ என்னவோ!

நான் மதிக்கும் ஒரு தோழரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் “அவர்கள் இருவரும் CROSS செய்தார்கள், CORNER செய்யவில்லை, அவரவர்கள் மத முழக்கத்தைச் சொல்லிக் கொண்டார்கள்” என்று அது ஏதோ சாதாரணமான விஷயமாக கடந்து போனது மிகவும் கடுப்பாகவே இருந்தது. தோழர் உயிரோடு இருந்திருந்தால் அவரே எதிர்வினையாற்றி இருப்பார்.

சங்கிகள் ஆபத்தானவர்கள். இந்த லிபரல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சங்கிகளை விட மேலும் ஆபத்தானவர்கள்.

பிகு 1 : மேலே உள்ள ஓவியத்தை தீட்டியது தோழர் ரவி பாலேட்

பிகு 2 : பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான சர்வதேச தினமாக 25 நவம்பர் அனுசரிக்கப்படுகிறது. ஆரஞ்சு தினம் என்றும் ஐ.நா பெயரிட்டுள்ளது. அனுசரிப்பதற்கும் கொண்டாட்டத்திற்கும் வித்தியாசம் புரியாமல் ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்த கொண்டாட்டம் எனும் கூத்தெல்லாம் கூட நடக்கும். ஆனால் இந்தியாவில் சங்கிகளின் அடையாளமான ஆரஞ்சு மற்றும் காவி நிறம்தான் பெண்கள் மீதான வன்முறைக்கு மூல காரணம். தோழர் ரவி பாலேட்டின் ஓவியம் அதை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. 

No comments:

Post a Comment