Monday, August 27, 2018

பார் வசதி கிடையாதா யுவர் ஹானர்!


இந்திய வங்கிகளை மோசடி செய்த திருடன் விஜய் மல்லய்யாவை மும்பை சிறையில் அடைப்பதற்காக இங்கிலாந்து நீதி மன்றம் போட்ட நிபந்தனைகளுக்கு சி.பி.ஐ அளித்துள்ள பதில் கீழே உள்ளது.


அதை முதலில் படியுங்கள். கடைசியில் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.

3 பேன்... வெஸ்டர்ன் டாய்லெட்... 40 இன்ச் எல்சிடி டிவி...
மல்லையாவுக்கு தயாராகும் சொகுசு சிறை!




மும்பை, ஆக. 25 -

மும்பைச் சிறையில், மல்லையாவுக்காக, 3 மின்விசிறிகள், பளீச்சென்ற வெஸ்டர்ன் டாய்லெட், 40 இன்ச் எல்சிடி டிவி ஆகியவற்றுடன் சொகுசான அறையை சிபிஐ ஒதுக்கியுள் ளது. மேலும், நூலகம் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு தப்பினார். தற்போது அவரை இந்தியாவுக்கு கொண்டுவர, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

ஆனால், தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்றும், இந்தியச் சிறைகளில் தான் சித்ரவதை செய்யப்படலாம்; தனக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் கூறிவருகிறார். குறிப்பாக, இந்திய சிறைகளில் சூரிய வெளிச்சம் கூட இருக்காது, சுத்தமான அறைகள் இருக்காது என்றும் அவர் புகார் கூறிவருகிறார்.லண்டன் நீதிமன்றமும் இதனை ஏற்றுக் கொண்டு, மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும் பட்சத்தில், அங்கு அவர் பாதுகாப்பாக நடத்தப்படுவாரா? என்ற கேள்வியை அண்மையில் எழுப்பியது. மல்லையா அடைக்கப்படும் சிறையில் உள்ள வசதிகளையும் கேட்டது.

இதையடுத்து மும்பை ஆர்தர் சாலை சிறையில் 12-ஆம் எண் அறையில்தான் மல்லையா அடைக்கப்படுவார் என்றும், இந்த சிறை அறைஎப்படி இருக்கும், என்னென்ன வசதிகள் உள்ளனஎன்பது குறித்துமான வீடியோவை ஒன்றை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.

“ஆர்தர் சாலை சிறையின் 12-ஆம் எண் அறையில், நவீனமான வெஸ்டர்ன் டாய்லெட், 6 மின்விளக்குகள், 3 மின்விசிறிகள், சுவற்றில் வெள்ளை நிற பெயிண்ட், 40 இஞ்ச் எல்சிடி டிவிஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன; மருத்துவவசதிகளும் இருக்கின்றன; மேலும், மல்லையாதங்க வைக்கப்பட்டுள்ள சிறை கிழக்கு பார்த்ததாகும்; எனவே அங்கு சூரிய வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை; மல்லையா விரும்பினால் அவருக்கு அறையில் நூலகமும் அமைத்து கொடுக்கப்படும்” என்று வசதிகளை சிபிஐ அடுக்கியுள்ளது. இதனை லண்டன் நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 

மக்களுக்கான போராட்டங்களில் கைதாகி சிறை செல்வோரெல்லாம் சித்ரவதை செய்யப்படும் நிலையில், மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபருக்கு சொகுசு வசதிகள் செய்துதரப்படுவது பெரும் வெட்கக்கேடாக அமைந்துள்ளது.

இந்த வசதி எல்லாம் போதுமா யுவர் ஹானர்? சாராயக் கம்பெனி நடத்திய விஜய் மல்லய்யாவின் அறையில்  பார் வசதி இல்லையென்றால் எப்படி? அதையும் செய்து தர வேண்டுமென்றும் அந்த பாரில் என்னென்ன சரக்குகள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடுவீர்களா யுவர் ஹானர்?

நீங்களும் சொல்லலாம். உத்தரவு போடலாம். அதை எங்கள் இந்திய அரசும் ஏற்று அவருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கலாம்.

ஆமாம்.

கதவில்லாத, தண்ணீரில்லாத கழிப்பறை, புழுக்கள் நிரம்பிய உணவு என்றெல்லாம் ஒடுக்குவதற்கு விஜய் மல்லய்யா ஒன்றும் மக்களின் கோரிக்கைகளுக்கான உரிமைப் போராட்டத்தில் ஒன்றும் பங்கேற்கவில்லையே, !!!

இந்திய மக்களின் பணத்தை கொள்ளையடித்தவருக்கு ஒரு கூட்டாளி இது கூட செய்யவில்லையென்றால் எப்படி!!!

2 comments:

  1. பார் மட்டும்தானா? காலண்டர் அழகிகள் கிடையாதா?

    ReplyDelete
    Replies
    1. அந்த கருமத்தை எழுத வேண்டுமா என்று நினைத்திருந்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள். செய்தாலும் செய்வார்கள். இந்த அரசு அடிப்படையில் ஒரு தரகு அரசுதானே?

      Delete