Monday, July 1, 2013

துண்டுக்கடியில் அம்பானி, மன்மோகன் விரல் பிடித்து பேரம்



பெட்ரோலியத்துறையின் பெயர் மாற்றப்பட்டது.
அது இனி அம்பானித்துறை

அம்பானி குடும்பத்திற்கு சேவகம் செய்வதற்கென்றே காங்கிரஸ் கட்சி பிறப்பெடுத்துள்ளது போலும். இயற்கை எரிவாயுவின் விலையை ரிலையன்ஸ் கம்பெனியின் கட்டளைப்படி இரு மடங்காக உயர்த்தியுள்ளது.

கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் இயற்கை வாயுவை முகேஷ் அம்பானி வகையறாக்களிடம் ஒப்படைத்தது மிகப் பெரிய துரோகம். அரசின் எண்ணெய் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணி அது. அதற்கான திறமையும் கட்டமைப்பு வசதிகளும் அதற்கு உள்ளது. ஆனால் அடிமாட்டு விலையை விட கேவலமான விலைக்கு குத்தகை கொடுத்தது.

கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகை எரிவாயுவை எடுப்பதில் மோசடிகள் செய்து முகேஷ் அம்பானி மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எழுப்பியவர் வேறு யாருமில்லை, அவரது தம்பி அனில் அம்பானிதான். இயற்கை எரிவாயுவை எதற்கு தனியாரிடம் அளிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களிடம் அளிக்கலாமே என்று உச்சநீதி மன்றம் கேட்டதற்கு இது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது என்று அரசு பதில் சொல்லி விட்டது.

இப்பிரச்சினையில் அண்ணன் தம்பிக்கு மத்தியில் பஞ்சாயத்து செய்து வைத்து இருவருமே கூட்டாக கொள்ளையடியுங்கள் என்று சமாதானம் செய்து வைத்தது. முகேஷ் அம்பானி ஒப்பந்தப்படி எரிவாயு எடுக்கவில்லை என்பதற்காக அபராதம் கட்ட வேண்டும் என்ற ஜெய்ப்பால் ரெட்டியையும் தூக்கி அடித்தது மன்மோகன்சிங் அரசு.

இப்போது அம்பானி கட்டளைப்படி விலையை இரு மடங்காக உயர்த்தி விட்டார்கள். இத்தனை நாள் எரிவாயு சொன்னபடி உற்பத்தி செய்யாமல் ஏமாற்றி வந்தது ரிலையன்ஸ் கம்பெனி. தொழில்நுட்ப காரணம் என்று அதற்கு விளக்கம் வேறு அளித்தார்கள். விலை உயர்ந்த பின்பு அடுத்த நொடியே அந்த தொழில் நுட்பக் கோளாறு மறைந்து விட்டது.

விலையை உயர்த்தாவிட்டால் உற்பத்தி செய்ய மாட்டேன் என்ற பிளாக் மெயிலுக்கு அடிபணிந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. தொழில்நுட்ப கோளாறு என்று ஏமாற்றினால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று அரசு  சொல்லியிருந்தால்  அது உறுதியான அரசு, மக்களுக்கான அரசு. ஆனால் இவர்கள்தான் அம்பானிகளுக்கான அரசாயிற்றே! இதில் எவ்வளவு தொகை மாட்டு வியாபாரம் போல துண்டுக்கடியில் மாறியிருக்குமோ? 

இதனால் இனி மீண்டும் விலைவாசி கடுமையாக உயரப் போகிறது. உயர்ந்தால் என்ன, முகேஷ் அம்பானிக்கு இன்னொரு இருபத்தி ஏழு மாடி குடிசை கட்ட பணம் கிடைக்கப் போகிறதே! அது போதாதா?

No comments:

Post a Comment