Sunday, October 16, 2016

Its no humbug (இது ஒன்றும் பித்தலாட்டம் அல்ல....!!)

வாட்ஸப்பில் வந்த அரிய கட்டுரை. அதனை தயாரித்த மருத்துவர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்தும். 
 

 


அறுவை அரங்கிற்கு வெளியே சாதாரணமாக காணக் கிடைக்கும் காட்சி ஒன்றை காண்போம்.அது ஒரு அவசர அறுவை சிகிச்சை(Emergency surgery).நோயாளியின் உறவினர்கள் கவலையோடு சர்ஜனிடம் 'டாக்டர் இந்த ஆபரேஷன் 
 
சக்சஸாக முடியுமா?அவருக்கு ஏற்கனவே அதிக BP,கட்டுப்பாடற்ற Sugar மற்றும் இருதய நோய் வேறு உள்ளதே என கேட்க,அதற்கு 'Dont worry,எல்லாத்தையும் நாங்க பார்த்துப்போம்.We have the best team.பாருங்க நம்ம அனஸ்தெடிஸ்ட் கூட வந்துவிட்டார்' என்று ஸர்ஜன் சொல்லி திரும்புவதற்குள் 'வாம்மா மின்னல்' ஸ்டைலில் அனஸ்தெடிஸ்ட் உடை மாற்றி தயாராய் அறுவை அரங்கினுள் இருப்பார்.
 
உறவினர் 'சார் அனஸ்தெடிஸ்ட் கூட கொஞ்ம் பேசணும்., கூப்பிடறீங்களா? என கூற, 

Why not?sure என்று சர்ஜனின் அழைப்பில் உறவினரை சந்திப்பார் அனஸ்தெடிஸ்ட். 

சார்...பேஷன்ட் கொஞ்சம் வெயிட் அதிகம்(அதிகமில்லை Gentlemen just 100+ kg தான்),கொஞ்சம் அதிக BP மற்றும் சர்க்கரை,தைராய்டு பிராப்பிளம்,சிகரெட்டு மற்றும் தண்ணி அளவோடு(?)எடுத்துக் கொள்வார்.( அனஸ்தெடிஸ்ட் மைன்ட் வாய்ஸ் 'ஏன் Botiல ஒண்ணும் இல்லையா'?ன்னு சொல்லும். Boti என்பது வயிற்றின்  குடல் பகுதிக்கு வடசென்னை தமிழ்ப்பதம்)....பார்த்து குளோரோஃபர்ம்  கொஞ்சம கம்மியா கொடுங்க என்று தன் Internet  மயக்கவியல்  அறிவை காட்டுவார்.
 
(அனஸ்தெடிஸ்ட் பல்லை 'நறநற'ப்பது கேட்காது...நீங்க மட்டும் ஆப்பிள் ஐ7 பயன்படுத்துவீங்க, நாங்க இன்னும்  குளோரோஃபர்ம் தானா? இதுவும் மைன்ட் வாய்ஸ் தான் ). பிறகு நோயாளியின்  உறவினரை சமாதானப்படுத்தி தைரியம் கூறி விட்டு அறுவை அரங்கிற்குள் நுழைவார் அனஸ்தெடிஸ்ட் (நோயாளியின் உறவினர்  அனஸ்தெடிஸ்டை சந்திப்பது அதுவே கடைசி முறையாக கூட  இருக்கும் ). மணிக்கணக்கில் நடக்கும் 
 
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து(நிறைய நேரம் உணவு உட்கொள்ள அறுவை சிகிச்சை டீமில் உள்ள எல்லோரும் மறந்து விடுவார்கள்.டீயும்,பிஸ்கட் மட்டும் காப்பாற்றும்), அதன்பின் நோயாளி பத்திரமாக வார்டுக்கு திரும்பியபின்,சர்ஜன் பாராட்டை வாங்கும் போது மொத்த அறுவை சிகிச்சை டீமில் ஒருவர் மட்டும் காணாமல் போயிருப்பார்.அதை மருத்துவமனையோ,சர்ஜனோ ஏன் நோயாளியின் உறவினரோ கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் ஒருவேளை நோயாளி அறுவை சிகிச்சைக்குப்பின் ICU வில் வைத்திருந்தால் நிச்சயம் அதற்கு இவரையும் ஒரு காரணமாய் காட்டுவார்கள் (குளோரோஃபர்ம் அதிகம் கொடுத்துட்டார்???).

யார் இவர்?யாரிந்த மர்ம யோகி? என்று தோன்றுமே...!?
 
இவர்தான் அனஸ்தடிஸ்ட் என்கிற மயக்கவியல் நிபுணர். 

இவரின் பணி என்னவென்பது பொதுஜனத்திற்கு சரியாக தெரியாது என்பதால் இவரைப்பற்றி சற்று விலாவாரியாக கூறனால்தான் புரியும்.

ஏன் சிலர் பிறந்தநாளையோ அல்லது மறைந்த நாளையோ அல்லது செயற்கரிய செயலை செய்த தினத்தயோ வருடாவருடம் நினைவு கூற வேண்டியுள்ளது என்று நினைப்பேன்.ஏதற்கு இந்த தேவையற்ற ஆரவாரம்?வீண் செலவு என்றுகூட தோன்றும்.ஆனால் 16-10-1846 என்ற நாளுக்கும் நவீன அறுவை சிகிச்சைக்கும் உள்ள தொடர்பு என்ன?ஏன் இந்த நாளை மயக்கவியல் நிபுணர்கள் மட்டும் வருடாவருடம் நினைவு கூறுகிறார்கள்?
 
அதை அறிய ஒரு சிறிய பிளாஷ்பேக்.
 
நவீன மருத்துவத்தின் முக்கிய பிரிவான மயக்கவியல் பிரிவின் பிறப்பை காண  19ம் நூற்றாண்டை நோக்கி பயனிக்கலாம் வாருங்கள்.

எளிய மொழியில் கூறவேண்டுமென்றால்
 
நவீன மருத்துவத்தில் நோயாளிக்கு பயனளிக்கும் இரு சிகிச்சை முறைகள் மிக முக்கியமானதாகும்.ஒன்று
 
 மருந்துகள் மூலம் குணப்படுத்துவது(Medical line of management) மற்றது 

அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துவது(Surgical line of management). 

சில/பல நேரங்களில் இரு வழிகளும் கைகோர்க்க வேண்டி இருக்கும்.19ம் நூற்றாண்டில் மருந்துகள் மூலம் குணப்படுத்தும் மு(து)றையில் பலத்த முன்னேற்றம்  ஏற்ப்பட்டிருந்தாலும்,அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தும் மு(து)றையின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடைகல் இருந்தது.அந்த தடையின்  பெயர் 'வலி'.
 
இதை மேலும் புரிந்து கொள்ள 19ம் நூற்றாண்டின் மையம் வரை நிலவிய அறுவை சிகிச்சை முறை பற்றி ஒரு சிறு உதாரணத்தை (உண்மை சம்பவம்) கூறுகிறேன்.இளகிய மனம் கொண்டவர் படிக்க வேண்டாம்.ஒரு சிறுவனின் கால் முட்டிக்கு கீழ் தொற்றநோயால் அழுகியதால் அந்த காலை முட்டிக்கு மேல் உடனடியாக வெட்டி (Amputation) அப்புறப்படுத்தாவிடில் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டானது.எனவே அவன் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டான்.
அவனுக்கு சாராயம் கொடுக்கப்பட்டு(அதுவே அப்போதய அதிகபட்ச மயக்க மருந்து.மேலும் அதுகூட இல்லா விட்டால் நிச்சயம்  அவன் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ள மாட்டான்),அவன் நினைவு சிறிது அடங்கிய பின் மேலே இருவர் அவனை தோளருகே அழுத்தி பிடித்துக்கொள்ள கீழே இருவர் அதே போல் கால்களை பிடித்துக்கொள்ள....அறுவை சிகிச்சை நிபுணர் கூரிய ரம்பம் போன்ற கத்தியால் பரபரவென்று முட்டிக்குமேல் தொடையை வெகுவேகமாக அறுத்து விட வேண்டும்.படிப்பதற்கு நெஞ்சம் பதைக்க வைப்பது போல் கொடூரமாக இருந்தாலும் அந்த காலத்தில் கிடைத்த அறுவை சிகிச்சை இப்படிப்பட்டதே. 

இச்சிகிச்சைக்குப்பின் 

முக்கால்வாசிநேரம் கடுமையான வலியிலும் கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கிலும் நோயாளி இறந்து விடுவார்.ஒருவேளை இதையும் தாண்டி பிழைத்தால் அடுத்து தொற்று நோய் தாக்காமல் இருக்க வேண்டும்(ஆன்டிபயாடிக் அறிமுகம் ஆகாத காலமது).

யோசித்து பாருங்கள் நண்பர்களே....இன்று இது போல சிகிச்சை முறைகள் கேட்டதுண்டா?நவீன மருத்துவம் கடந்து வந்த கடினமான பாதை புரிகிறதா?
 
 
யாரிந்த W.T.G Morton?ஏன் 16-10-1846 ஆம் நாள் முக்கியத்துவம் வாய்ந்தது?மயக்க மருந்து நிபுணர்கள் மட்டும் ஏன் இவரை கொண்டாடுகிறார்கள்? 

ஈதர் என்கிற மருந்தின் ஆதியந்தம்தான் என்ன? 

'ஈதர் டே' என்றால் என்ன? 

இத்துனை கேள்விகளுக்கான பதில் ஹாலிவுட் படத்திற்கு ஈடான சாகசம்,நட்பு,துரோகம்,சோகம்,பிரபலப்படுத்தும் உத்தி(Marketing strategy) அனைத்தும் அடங்கிய   சுவையான ஒரு வரலாற்று கதை. 

ஈதர் என்னும் மருந்து 1549 ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது கேளிக்கை விருந்துகளில் பயன்படுத்தும் கிளர்ச்சியூட்டும் போதை வஸ்தாகவே பயன்பாட்டில் இருந்தது.இதனுடன் நைட்ரஸ் ஆக்ஸைட் என்கிற சிரிக்க வைக்கும் வாயு(Laughing gas) இதே காரணங்களுக்காக கேளிக்கை விருந்துகளில்  பயன்பட்டது. 

எதோச்சையாக இந்த வஸ்துகளின் வலி நீக்கும் திறமையை கண்ட ஹொரஸ் வெல்ஸ் (Horace wells) என்ற பல் மருத்துவர் (Dentist) நைட்ரஸ் ஆக்ஸைட் பயன்படுத்தி வலி இல்லா அறுவை சிகிச்சையை தேர்ந்த மருத்துவர்கள் முன் செய்மாதிரி(Demo) செய்ய முயற்சித்து தோல்வியடைந்தார்(1845).
 
அம்முயற்சி ஒரு 'பித்தலாட்டம்' (HUMBUG-பித்தலாட்டம்)  என மருத்துவ உலகத்தால்    கேலி செய்யப்பட்டதால் மனமுடைந்த ஹொரஸ் வெல்ஸ் சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.
 
ஹொரஸ் வெல்ஸிடம் பல் மருத்துவம் பயின்று (?) வந்த நம் கதாநாயகன் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன்(W.T.G.Morton) ஈதரின் வலி நீக்கும் வித்தையும் கற்றுக்கொண்டு அதை செயல்பாட்டில் பிரபலப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்.ஈதரின் செயல்பாட்டை காண அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட் பொது மருத்துவமனையின் வல்லுனர் குழுவினர் முன் செய்மாதிரி(Demo) ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நாள் 16-10-1846.

அந்த நாள்
 
நவீன மருத்துவத்தின் அறுவை சிகிச்சை பிரிவிலிருந்து மயக்கவியல் என்ற புது பிரிவு பிறக்க வழிகோலிய நாள். 
 
அறுவை சிகிச்சை என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமல்ல,உடலின் சிக்கலான பகுதிக்கும் செய்யலாம், மனிதனின் சராசரி வாழ்நாளை அறுவை சிகிச்சை மூலம் நீட்டிக்கலாம் என்ற நடப்புகால நிகழ்விற்கு கட்டியம் கூறிய நாள். 

வலி என்ற கொடிய அரக்கனை கட்டுக்குள் கொண்டு வந்த நாள்.

ஆம் 16-10-2016 அன்று  ஈதர் மயக்க மருந்து மூலம் நோயாளி ஒருவருக்கு பல் ஒன்று வலியில்லாமல் அகற்றப்பட்டு முழு நினைவோடு எழுப்பி W.T.G.Morton பார்வையாளர்கள் முன் சாதனை புரிந்தார்.அப்போது ஒரு பார்வையாளர் அதிசயப்பட்டு எழுப்பிய குரலே 'Its no humbug ( இது பித்தலாட்டமல்ல)' என்ற புகழ் பெற்ற மருத்துவ வசனம்.

W.T.G.Morton ஈதர் கண்டுபிடித்தவரல்ல. ஆனால் சரியான  இடத்தில், சரியான நேரத்தில்,சரியானவர்கள் முன்,சரியான முறையில்,(இததான் நேரம், காலம் கூடி வரனும்னு சொல்லராங்களோ?) பார்வையாளர்கள் முன் ஈதர் மருந்தை வெற்றிகரமாக பயன்படுத்தி காட்டியவர்.ஏற்கனவே தன் குருநாதர் தோற்ற விஷயத்தில் சாதனை புரிய தைரியமும் துணிச்சலும் சாகஸ உணர்வு வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
ஈதர் மயக்க மருந்தை முதலில் பயன் படுத்தியவர் யார்(Crawford long,Charles T jackson ) என்ற விஷயத்தில் இன்றுவரை சர்ச்சை நீடித்தாலும், வெற்றிகரமாக மருத்துவகுழு முன் நிகழ்த்திக்  காட்டிய பெருமை W.T.G.Mortonனையே சேரும்.

அதனாலேயே W.T.G.Morton கல்லரையில் இந்த வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது :

Inventor and Revealer of Inhalation Anesthesia: Before Whom, in All Time, Surgery was Agony; By Whom Pain in Surgery was Averted and Annulled; Since Whom, Science has Control of Pain.”.

(ஆனால் மார்ட்டனின் அந்திமகாலம் சோகமயமானது.தன்னுடைய கண்டுபிடிப்பை பேடன்ட் செய்ய முடியாமல், கைக்காசில்லாமல் வறுமையில் உழன்றார்.
 
அவர் சாதனை நிகழ்த்திய இடம் ,மாசசூசெட் பொது மருத்துவமனையில்  ' ஈதர் டோம் ' என்று  அவர் நினைவாக இன்றும் அழைக்கப்படுகின்றது என்பது ஒரு சிறிய ஆறுதல்).

இதனை தொடர்ந்து 1846 டிசம்பரில் இங்கிலாந்திலும்,1847 மார்ச் மாதம் கல்கட்டாவிலும்(இந்தியா) ஈதர் மயக்க மருந்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 
பிறகு அறுவை சிகிச்சை உலகில் நிகழ்ந்தது புலிப்பாய்ச்சல்  என்றால் மிகையாகாது.

புதிதாக பிறந்த மயக்கவியல் பிரிவிலும் பல முன்னேற்றங்கள் ( Local anaesthetics, pain killers,boyles machine,muscle relaxant,ventilators,monitoring equipments) நிகழ இன்று எந்த வயதினருக்கும்,எந்த நோயிலும் வெற்றிகரமாக மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சைக்குப்பின் வரும்  வலி நீக்குதல் மற்றும் மயக்க மருந்தின் வீரியத்தால் வரும் பின் விளைவுகளை குறைத்தல் என வளர்ந்துள்ளது.

இப்போது கூறுங்கள் மார்ட்டனின்  வெற்றிகரமான செய்முறை நாளான 16-10-1846ஐ, நவீன மருத்துவ உலகின் ஒரு பிரிவினர் மட்டும் காதும் காதும் வைத்தது போல் நினைவு கூறுவது எவ்வகையில் நியாயமாகும்?
 
ஒருவேளை மார்ட்டன் இச்சாதனையை நிகழ்த்தாவிடினும் வேறு ஒருவர் நிச்சயம் நிகழ்த்தியிருப்பார். 

ஆனால் ஈதர் மயக்க மருந்து வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு வந்த பின்பே நவீன மருத்துவத்தின் அறுவை சிகிச்சை பிரிவில் முன்னேற்றம் அடைந்து இன்று உடல் உறுப்பு மாற்றம்,நுண்ணோக்கியால் மூளையின் சிக்கலான பிரிவில் அறுவை சிகிச்சை செய்வது  போன்ற புரட்சிகள் நடந்தது என்பதை மறுக்கவியலுமா?

' ஈதர் நாள் ' என்பது ஒரு பிரிவினருக்கான சொத்தல்ல... மொத்த நவீன மருத்துவ உலகமும் நினைவு கூறி ,நன்றி பாராட்டும் நாளாக இருக்க வேண்டும்.அதுவே மார்ட்டனுக்கு செய்யும் உண்மையான மரியாதை.

                   

மரு.ந.பாஸ்கர்
மயக்கவியல் மருத்துவர்.

1 comment:

  1. yes the role of anasthology doctors in any operation is very important
    the science of
    anastheology is rapidly improving... a good article

    ReplyDelete