Wednesday, April 13, 2016

கொல்லம் தீ விபத்தும் பொறுப்பற்றவர்களும்






கொல்லம் கோயில் திருவிழா தீ விபத்து நிகழ்ந்திருக்காது.

ஆம் விதிகளை முறையாக அமலாக்கியிருந்தால்.

போட்டி வாண வேடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.

ஆனால்

நாங்கள் கோயில் நிர்வாகம். கடவுளின் பிரதிநிதிகள். நீ என்ன அனுமதி தருவது என்று ஆணவமாக நிகழ்ச்சியை நடத்திய கோயில் நிர்வாகிகள் முதல் குற்றவாளிகள்.

வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து விட்டோமே, அதனை அமலாக்குகிறார்களா இல்லை மீறுகிறார்களா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது. அதனைச் செய்யத் தவறிய அரசு இரண்டாவது குற்றவாளி.

விபத்திற்குக் காரணமாக இருந்தது சூர்யகாந்திப் பூ வடிவில் வானில் காட்சி அளிக்கும் வெடி அது. முதல் வெடியை பற்ற வைக்கிறார்கள். விபத்து ஏற்படுகிறது. அந்த வெடியை இயக்கியவர் காயமடைகிறார். நிகழ்ச்சி தடைபடுகிறது. ஆம்புலன்ஸ் வருகிறது. காயமடைந்தவரை எடுத்துச் சென்றதும் மீண்டும் நிகழ்ச்சி தொடர்கிறது.

இரண்டாவது வெடி வெடிக்கப்படுகிறது. பழைய கதைதான். ஒருவருக்குப் பதில் மூவருக்கு அடிபடுகிறது. மூன்றாவது வெடியில் பிரச்சினை இல்லை. நான்காவது வெடிதான் அந்த கொடிய விபத்திற்குக் காரணமாக அமைந்தது.

இரண்டு முறை விபத்து ஏற்பட்டும் அதிலிருந்தும் பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் அதே வெடியை முயற்சித்த அந்த போட்டியாளர் மிக முக்கியமான குற்றவாளி. அபாயம் இருக்கிறது என்று தெரிந்தும் அதை அனுமதித்த பொது மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

அந்த பட்டாசுக்காரர் இன்னும் சுய நினைவில்லாமல் மருத்துவமனையில் உள்ளார். கண் விழித்தால் “அது கடவுளின் செயல் என்று கொல்கத்தாகாரர் போல அவரும் சொல்லக்கூடும்!

ஆனால் இதோடு மட்டும் பிரச்சினை முடிந்து விடவில்லை.

எரிகிற வீட்டில் கிடைக்கிறவரை ஆதாயம் என்று பிண அரசியல் நடத்துகிற காவிக் கூட்டம், விபத்திற்குக் காரணம் இடதுசாரிகளும் இஸ்லாமியர்களும் செய்த சதி என்று வழக்கமான வதந்தியைப் பரப்பியது.

“கோயில் வளாகம் அருகே வெடி பொருள் வைக்கப்பட்ட இரண்டு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டது” என்று மட்டும் மொட்டையாக செய்தி வெளியிட்டு சில ஊடகங்கள் சதிப்பின்னணி வதந்தி பற்றி எரிய நெய் ஊற்றியது.

அந்த கார்கள் பட்டாசுக்காரருக்கு சொந்தமானது என்றும் அடுத்து வெடிக்க வேண்டிய பட்டாசுகள்தான் அந்த காரில் இருந்தது என்று விளக்கம் சொல்கின்றன.

பொறுப்பற்றவர்கள் காரணமாக விபத்து நடந்தது ஒரு கொடுமை என்றால் அதன் பின்பு காவிக்கூட்டமும் ஊடகங்களும் செய்த பொறுப்பற்ற வேலைகள் இன்னும் கொடுமை.

1 comment:

  1. பொறுப்பற்றவர்கள் காரணமாக விபத்து நடந்தது ஒருபக்கம் இருக்க,
    கடவுளை வணங்க தரிசிக்க போன பக்தர்கள் எதற்காக வாண வேடிக்கைகளை விரும்பினார்கள்?
    ஹஜ் புனித பயணம் போனவர்கள் எதற்காக சாத்தானுக்கு கல் எறிய தொடங்கினார்கள்?
    எதற்காக தமிழகத்தில் அப்பாவி மாட்டுடன் சண்டை பிடித்து வீரம் காண்பிக்கிறார்கள்?
    உண்மையில் மக்களுக்கோ பொழுது போகவில்லை.
    தற்போதுள்ள நவீன விளையாட்டுகளின் மீதான ஆர்வத்தை மக்களுக்கு அரசு கொண்டுவரவேண்டும்.
    அனால் இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி மதவவாதிகள் பிற்போக்குவாதிகளின் வழிகாட்டல்கள் மட்டுமே நாட்டில் தாராளமாக இருக்கிறது.தற்போது மக்களிடம் பொழுது போக்கற்ற நிலையை மதவாதிகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள்.

    ReplyDelete