Tuesday, March 29, 2016

கடவுளைத் தாண்டியும் வாழ்க்கை





சில தினங்கள் முன்பாக இணையத்தில் பார்த்த புகைப்படங்கள் இவை.

தாஜ்மஹால் பார்க்க ஆக்ரா செல்கையில் உங்களுக்கான பேக்கேஜ் டூரில் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலும் பிருந்தாவனமும் இடம் பெற்றிருக்கும்.

இரு முறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிருந்தாவனம் என்றதும் நான் கூட மைசூரில் உள்ள பிருந்தாவனம் பூங்கா போன்ற ஒரு பூங்கா என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளே நுழைந்ததுதாம் மிகப் பெரிய அதிர்ச்சி கிடைத்தது.

வாச மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா அல்ல அது. இனி வாழ்க்கையே கூடாது என்று சபிக்கப்பட்டவர்களின் முகாம் அது. கணவனை இழந்தவர்கள் அங்கே குடும்பத்தால் கொண்டு தள்ளப்படுகிறார்கள். பஜனை பாடிக் கொண்டுதான் அவர்கள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை கழிக்கப்பட வேண்டும் என்பது  அந்தப் பெண்கள் மீது சமூகம் திணித்த சோகம்.

வயதான மூதாட்டிகள் முதல் இளம் பெண்கள் வரை அங்கே இருந்தார்கள். வாய்கள் பாடல்களை உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கைகள் தாளமிட்டுக் கொண்டிருந்தாலும் முகத்தில் என்னமோ துயரமும் விரக்தியும் நிரந்தரமாய் குடி கொண்டிருந்தது. நமக்கு புரியாத மொழியில் பாடல் அமைந்திருந்தாலும் அது அளித்த உணர்வு என்னமோ வருத்தம்தான். 

இரண்டாவது முறை உள்ளே செல்ல மனதில் துணிவு இல்லாமல் வெளியே நின்று விட்டாலும் சோக கீதம் வெளியே வந்தும் தாக்கியது.

எல்லோரையும் போல் குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்ததோ  இல்லையோ என்று நமக்கு தெரியாது. ஆனால் கணவனை இழந்தவர்கள்  கடவுளை மட்டும் நினைத்தால் போதும் என்ற சிந்தனையுடையவர்கள்தான் அந்த பெண்களை இங்கே தள்ளி இருக்க வேண்டும்.

வசந்தத்தை தொலைத்த அந்த பெண்களுக்கும் உணர்வு உண்டு என்பதை ப்ரிந்து கொண்ட  யாரோ ஒரு  நல்ல மனிதர் கடந்த இரண்டு வருடங்களாக ஹோலி பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார். 

மீண்டும் அந்த புகைப்படங்களை பாருங்கள். 

அந்த பெண்களின் முகங்களில் எத்தனை மலர்ச்சி! எவ்வளவு மகிழ்ச்சி!
இத்தனை நாட்களாய் ஒளிந்திருந்த உற்சாகம் எப்படி பீறிட்டு கிளம்புகிறது என்பதை கவனியுங்கள்.

இது ஒரு நாள் உற்சாகமாக, ஒரு நாள் உற்சவமாக இல்லாமல் என்றென்றும் தொடரட்டும்.  அவர்கள் வாழ்க்கை என்றென்றும் வண்ணமயமாய்  ஒளிரட்டும். 

கணவனை இழப்பதால் வாழ்க்கையையே இழக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுளை வணங்குவது மட்டுமல்ல வாழ்க்கை  என்பதையும்  இந்த சமூகமும் உணர்ந்து கொள்ளட்டும்.

 

4 comments:

  1. ஏன் என்று கேள்விக்கு சொற்கணைகள் தான்பாயும்
    எதிர்கேள்வி கேட்டுவிடில் ஓட்டம் பிடிக்கும்
    நான் என்ற அகம்பாவம் பித்தம் ஏறும்

    ReplyDelete
  2. அப்துல் கலாமுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  3. தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் சோகமான தகவல்.
    கடவுளை உருவாக்கியவர்கள் பெரிய திட்டங்களுடன் தான் உருவாக்கியுள்ளார்கள்!

    ReplyDelete