Saturday, March 19, 2016

பாரத மாதாவில் யாரெல்லாம் உண்டு?



ஜெய் ஹிந்த் என்று சொல்வதிலோ ஜெய் ஹிந்துஸ்தான் என்று சொல்வதிலோ எனக்கு தயக்கமில்லை. பாரத் மாதா கீ ஜெய் என்றுதான் சொல்ல மாட்டேன் என்பதால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரத மாதா என்ற வடிவத்திற்குள் யாரெல்லாம் வருவார்கள் என்பதை மோடியோ இல்லை மோகன் பகவத்தோ விளக்கம் சொன்னால் நாமும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்வதா, வேண்டாமா என்று முடிவு செய்து விடலாம்.

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றினால் அவர்களுக்கு மோட்சம் உண்டு, சொர்க்கத்திற்குப் போகலாம் என்று மோடி சொன்னாரா, அந்த மக்களும் சேர்ந்ததுதான் பாரத மாதாவா?

பழைய சோறோ இல்லை பால் பாயசமோ, மாட்டுக் கறியோ இல்லை பன்றியின் மாமிசமோ, எனக்கான உணவை முடிவு செய்ய வேண்டிய உரிமை என்னுடையது, கடவுளுக்கோ இல்லை கடவுளின் பெயரால் அற்ப அரசியல் நடத்துபவர்களோ, எனது உணவு உரிமையில் தலையிட முடியாது என்பவர்களுக்கு பாரத மாதாவின் இதயத்தில் இடம் உண்டா?

விமானத்தில் பறந்து போன மல்லய்யாக்கள் மட்டும் புத்திரர்களா இல்லை தூக்குக் கயிற்றை நாடிய அழகர் போன்ற விவசாயிகளும் பாரத மாதாவின் புத்திரர்கள்தானா?

பாலியல் வன் கொடுமைக்கு நீதான் காரணமே தவிர வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் அல்ல என்று மூன்று வயதுக் குழந்தை தொடங்கி மூதாட்டிகள் வரைக்கும் உபதேசம் செய்கிற தாயா இந்த பாரத மாதா?

துர்க்கையின் வடிவத்தை பாரத மாதாவிற்கு அளித்துள்ளீர்கள். மேரி மாதாவையோ அல்லது வடிவமற்ற ஆண்டவனையோ வழிபடுகிற, ஆண்டவனே இல்லை என்று அறிவியலாய் சொல்கிறவர்களுக்கும் பாரத மாதா எனும் சிந்தனையில் இடமுண்டா?

துர்க்கையின் வாகனமான சிங்கம்தான் உங்களின் பம்மாத்து மோசடித் திட்டமான மேக் இன் இந்தியாவிற்கு சின்னம். இந்தியாவை விற்கிற தேச விரோதி நீங்கள் என்று சொல்பவர்களை பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லி விட்டால் தேச பக்தர் என ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா?

தேசத்தின் எல்லைகளை பாதுகாக்கிற ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டிகளில் காசு பார்த்த பரம்பரையில் வந்த நீங்களோ அவர்களை வெறும் கூலிப் பட்டாளமாக மாற்றி சாமியார் பஜனைக்கு பாலம் கட்ட அனுப்பி விட்டீர்கள்.  ஆனாலும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லி விட்டால் உங்களின் கறைகள் நீங்கி களங்கம் அகன்று நீங்கள் எல்லாம் உத்தமர்களாக உங்களை நீங்களே சொல்லிக் கொள்வீர்கள். 

இந்தியாவின் தேச விரோத சக்திகளே, வெற்று முழக்கத்தில் இல்லை தேச பக்தி என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் இருப்பது அது மட்டும்தானே.

 

No comments:

Post a Comment