Thursday, March 17, 2016

ஐந்து வருடங்களுக்கு முன்பு... தேர்தலின் போது




சட்டப் பேரவைத் தேர்தல் இன்னும் சூடு பிடிக்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு நுண் பார்வையாளராக போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன். கொடுமையான அந்த அனுபவத்தை மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

மூன்று பதிவுகளில் இரண்டு பதிவுகளை இன்று பகிர்ந்து கொண்டுள்ளேன்.  பொறுமையாகப் படியுங்கள். சுவாரஸ்யமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.  இன்னொரு பதிவை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்றைய அவஸ்தை இன்று சுவையாகவே உள்ளது.

 

பள்ள இடையம்பட்டி தேர்தல் அனுபவங்கள்

தமிழக  சட்ட மன்றத் தேர்தலில்  அணைக்கட்டு  தொகுதிக்கு  உட்பட்ட பள்ள இடையம்பட்டி  கிராமத்து  வாக்குச்சாவடிக்கு நுண் பார்வையாளராகபணிக்கு சென்றிருந்தேன். வேலூர் நகருக்கு மிக அருகாமையில் உள்ள கிராமம்தான்.   காலை ஐந்தரை மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆறே கால் மணிக்கெல்லாம்  சென்று விட்டேன்.  அடுத்த கிராமமான மேட்டு இடையம்பட்டியாக  இருந்தால் வண்டியில்  செல்வதுசிரமமாக இருக்கும் என்றார்கள். நான் வசதியாகவே போய் விட்டேன்.   

வாக்குச்சாவடிக்கு உள்ளே இருக்கும் அனுபவம் வேண்டும் என்பதால் இப்பணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தேன். வாக்குப்பதிவு  தொடங்கும் நேரத்திற்கு  முன்பாகவே  மக்கள்  வாக்களிக்க  திரண்டு வந்து விட்டனர். நான் பணியில் இருந்த வாக்குச்சாவடி அமைந்திருந்த பள்ளியிலேயே இன்னும் ஒரு வாக்குச்சாவடியும்  அமைந்திருந்தது. அங்கே இன்னும் அதிகக் கூட்டம். 

மாதிரி வாக்குப்பதிவு, பெட்டிக்கு சீல் வைத்தல்  போன்ற சடங்குகள் எல்லாம்  முடிந்து  எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் எட்டு மணிக்கெல்லாம்  தேர்தல்  வாக்குப்பதிவு  தொடங்கியது. வரிசையில்நிற்பதற்கோ அல்லது வரிசை மெதுவாக நகர்ந்தாலோ   ஒரு சின்ன முணுமுணுப்பு  கூட  இல்லாமல்  அமைதியாய்  இருந்தனர். வயதானவர்கள்,  கைக்குழந்தைகளோடு வந்தவர்களை  முன்னதாக வாக்களிக்க அனுமதித்ததை  ஒருவர் கூட ஆட்சேபிக்கவில்லை. நகரங்களில்  இது சாத்தியமில்லை  என்றே கருதுகிறேன். 

தேர்தல் தொடர்பாக  நாங்கள் கண்காணிக்க வேண்டியவை  என்று  ஒரு 
படிவம் முப்பத்தி ஒன்பது கேள்விகளாக  தரப்பட்டிருந்தது.  அதைத்தவிர 
எனது பார்வையில்  நான் கண்ட சில காட்சிகள். 

என்பத்தி ஐந்து சதவிகித வாக்குப்பதிவு  நடைபெற்றிருந்தது. 638  வாக்காளர்களில்  540  பேர் வாக்களித்திருந்தனர். இதில் பெண்கள்தான் 
அதிகம். 279 பெண்கள், 261  ஆண்கள்.  

பெண்களில் பெரும்பாலானவர்கள்  சுகாதாரமான, சத்தான உணவு கிடைக்காதவர்கள். வறுமையின் பிடியில்  தவிப்பவர்கள். மஞ்சள் கயிற்றைத்தவிர  வேறு நகைகள்  எதுவும்  அணியாதவர்கள்.  ஆனால் வாக்களிக்க ஆர்வம் காண்பித்தார்கள்.

ஆண்கள்   ரொம்ப யதார்த்தமாகத்தான்  இருந்தார்கள். மடித்துக் கட்டிய வேட்டியையோ, கைலியையோ  கீழே இறக்கி விடாமல்தான் நின்றார்கள்,  வந்தார்கள், வாக்களித்தார்கள், சென்றார்கள். குறைந்த பட்சம்  ஐம்பது சதவிகித ஆண்கள்  குடித்து விட்டுத்தான்  ஒட்டு போடவே 
வந்திருந்தார்கள்.  விடுப்பில் இருந்த  ஒரு போலீஸ்காரர் மட்டும்தான் போதையில் தகராறு  செய்தாரே தவிர மற்ற குடிமக்கள் அமைதியாகவே 
வந்து போனார்கள். பல இளைஞர்கள்  வாக்களித்த பிறகுதான் பாட்டிலை 
தொட வேண்டும் என்று வாக்களிப்பதை  ஏதோ  விரதம் இருப்பது போல பேசிக்கொண்டிருந்தார்கள்.  டாஸ்மாக் விடுமுறைக்கெல்லாம்  எந்த மரியாதையும் இல்லை  என்று புரிந்தது. 
 
வெப் காமரா மூலம் ஒவ்வொருவரும் படம் பிடிக்கப்பட்டனர். அதன் விளைவு என்னவானது என்றால் பலரும் கையில் மையிட்டு, கையெழுத்தோ,  கைநாட்டோ  போட்ட பின் வெப் காமரா பக்கம் போனார்களே  தவிர, வாக்களிக்கும்  இடத்திற்கு செல்லவில்லை. வோட்டு போட வேண்டாமா என்று சொல்லி சொல்லி அனுப்ப வேண்டியிருந்தது. 

குறைந்தது அறுபதிலிருந்து  எழுவது  பேராவது  அடையாள மையை அழித்து விட்டார்கள். அவர்களை திட்டி மீண்டும்  ஒரு முறை மை வைக்க வேண்டியிருந்தது.  

பாமக, தேமுதிக ஆகியோர் போட்டியிட்ட தொகுதி அணைக்கட்டு தொகுதி.  இரு கட்சிகளின் முகவர்களும்  வாக்கு பதிவு தொடங்கும் போது அக்னி நட்சத்திரம் பிறப்பு கார்த்திக் போல உர் உர்  என்று முறைத்துக் கொண்டே இருந்தாலும் போக போக நெருக்கமாகி விட்டனர்.

ஒரே ஒரு கல்லூரி மாணவன் மட்டும் வாக்களிக்க விருப்பமில்லை, 49 ஒ 
பயன்படுத்தப் போகின்றேன்  என்றான். தேர்தல் அலுவலர் ஒருவர் அம்மாணவனை  சமாதானப்படுத்தி   வாக்களிக்க வைத்து விட்டார். ஏன்  அப்படி செய்தீர்கள்  என்பதற்கு அவர் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?  49  ஒ போட்டால்  ஏராளமான பணி இருக்கிறது. இரண்டு மூன்று ரிஜிஸ்தர் எழுத வேண்டும், பல புள்ளி விபரம் தர வேண்டும். இந்த சனியனேல்லாம்  எதுக்கு ? என ஒரே போடாக  போட்டார். 

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான் வாக்களிப்பதில்  ஆர்வமாக உள்ளனர்  என்பதுதான்  எனது அனுபவம்  சொல்லும் உண்மை. 

நுண் பார்வையாளராக நான் பட்ட அவஸ்தைகள் உள்ளதே  அவற்றை தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன்.
 
 

மைக்ரோ அப்சர்வரா? ஆளை விடுங்கப்பா சாமி! உங்க சங்காத்தமே வேண்டாம்...

சட்டமன்ற தேர்தலில் நுண் பார்வையாளராக பணியாற்றச சென்ற பலரும் இப்படித்தான் புலம்பினார்கள். பாவம் ஒவ்வொருவரும் பட்ட அவஸ்தை அப்படி. ஏப்ரல் மாதம் முதல் நாள் முதல் பயிற்சி வகுப்பு. நம்மை முட்டாளாக்குவதற்கான  முதல் கட்டம் அது என்பது பலருக்கும் புரியவில்லை. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியாக பத்து மணிக்கு வகுப்பு என்றார்கள். அடித்து பிடித்து லிப்ட் கிடைக்காமல் படியேறி மூச்சு வாங்க ஐந்தாவது மாடிக்குப்போனால்  தமிழக அரசு அதிகாரிகள் ஈ காக்காய் கூட  அங்கே இல்லை. நானூறு பேரை வரச்சொல்லி இருந்தார்கள். ஆனால் இருந்ததோ நூற்றி ஐம்பது நாற்காலிகள்தான். ஆகவே   அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் கதைதான். மியுசிகல்  சேர் போல இடம் பிடிக்க கடும் போட்டிதான். அடுத்தது புகைப்படம் பிடிக்கும் படலம். முன்னர் நாங்கள் அனுப்பிய புகைப்படங்கள் ஆட்சியர் அலுவலக குப்பைத்தொட்டிக்கு போய் விட்டது போல. எங்கள் தோழர் ஒருவர் புத்திசாலித்தனமாக எல்.ஐ.சி  ஊழியர்கள் முதலில் புகைப்படம்  எடுக்கும் படி பார்த்துக்கொண்டார். எல்.ஐ.சி, எல்.ஐ.சி என்று சத்தம் போட்டு எங்களையெல்லாம்  புகைப்படம் எடுக்கும் அறைக்கு வரவைத்து விட்டார். 

புகைப்படம் எடுக்கும் அந்தப்பையனுக்கு  அதுதான் முதல் அனுபவம் போல. சலங்கை ஒளி சிறுவன் போல எங்களின் நிழல் மட்டும்  தெரியக்கூடிய படத்துடனான அடையாள அட்டை பின்பு கிடைத்தது. அடுத்த நிறுவனத்தினர் படம் பிடிக்க சென்ற போது முதல் வரிசையில் உட்கார்ந்து இடம் பிடித்து விட்டோம். என் எதிரில் மைக் வேறு. பத்து மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் பனிரெண்டு மணிக்கு தொடங்கியது. புதிய மாவட்ட ஆட்சியர் பழனிகுமார்  மைக்ரோ அப்சர்வர்  பணி  குறித்து விவரித்தார். கோவை பெரியார் நகர் தீண்டாமைச்சுவரை  அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தவர் என்ற மரியாதையோடு  கவனிக்கத் தொடங்கினேன். 
 
யதார்த்தமாகவே  இருந்தது அவரது உரை. அங்கங்கே சில தவறுகள் 
நடக்கிறது, மக்கள்தான் முக்கியம், அவர்களது வாக்கினைப் பெற்றால் 
மட்டுமே யாராலும் ஆட்சிக்கு வர முடியும். இதை அனைவரும்  புரிந்து கொண்டால்  தவறுகள் நடக்காது. ஆனால் நடக்கிறது.   அதனால்தான்
மைக்ரோ அப்சர்வருக்கான தேவை உள்ளது. தவறுகள் நடக்காமல்
பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். 

இன்று உங்களுக்கு  எந்த தொகுதி என்று மட்டும் ஆணை அளிக்கப்படும், எந்த வாக்குச்சாவடி என்பதை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணைய 
பார்வையாளர் அளிப்பார் என்று சொன்னார். முதல் நாளே எங்களுக்கு
வழங்கப்பட்ட ஆணையை படித்துப் பார்த்தேன். வேலூர் தொகுதி, கஸ்பாவில் உள்ள மாசிலாமணி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி என்று  தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். ஆட்சியரின் கையெழுத்துதான் இருந்தது. 

வேறு பல சந்தேகங்களுக்கு விளக்கமளித்த பின்பும் சரி, கூட்டத்தை முடிக்கும் முன்பும் சரி மூன்றாவது முறையாக வாக்குச்சாவடி எது என்பது தேர்தலுக்கு முதல் நாள்தான் தெரியும் என்று சொன்ன பின் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மைக் வேறு முன்பாகவே இருந்தது. 

வாக்குச்சாவடியோடு  ஏற்கனவே ஆணை கொடுத்து விட்டார்களே என்று  சொன்னதும் ஒரு வினாடி குழப்பமாக இருந்து ஆணையை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த மாவட்ட திட்ட அலுவலரை நெருப்புப் பார்வையால் முறைத்தார். இது தவறு. இதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை. வேறு ஆணை தருகிறோம் என்று சொல்லி 
கூட்டத்தை முடித்து வைத்தார். 

மாலை வாருங்கள், வேறு ஆணை தருகின்றோம் என்றார்  மாவட்ட  திட்ட அலுவலர். 

அப்போதுதான் தொடங்கியது  உண்மையான அவஸ்தை. 

அவஸ்தை நாளை தொடரும் 

 
 

 

2 comments:

  1. Replies
    1. இனிமேதான் மெயின் பிக்சரே வரப் போகுது

      Delete