Thursday, February 27, 2025

கங்கை யமுனை சங்கமத்தில் குளித்த கதை

 


மோடி, மொட்டைச்சாமியார் வகையறாக்கள் பில்ட் அப் கொடுத்த மகா கும்ப்மேளா ஒரு வழியாக நேற்று முடிந்து விட்டது. உபி மாநில அதிகாரிகள் கஜானாவில் சேர்ந்த பணத்தை எண்ணி மாநிலத்தின் ஒட்டு மொத்த கடனை கட்டி புது புது வளர்ச்சித் திட்டங்களுக்கு பணத்தை முதலீடு செய்வார்கள் என்று நம்புவோம்.

கங்கையும் யமுனையும் (சங்கிகளின் கற்பனை நதி சரஸ்வதியை நான் கணக்கிலெடுக்கவில்லை)  சங்கமிக்கும் இடத்தில் நானும் ஒரு முறை குளித்துள்ளேன். 

2002 ம் ஆண்டு உபி மாநிலம் கான்பூரில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் கூட்டமும் அதுதான் கான்பூருக்கு சென்னையிலிருந்து தினசரி ரெயில்கள் அப்போது (இப்போதும் இருப்பதாக தெரியவில்லை)  இல்லை. வாராந்திர ரயில்கள்தான்.

தமிழ்நாட்டிலிருந்து சென்ற அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒன்றரை நாட்களுக்கு முன்பாகவே கான்பூர் சென்று விட்டோம். பயணக் களைப்பில் மாலை வரை ஓய்வு எடுத்துக் கொண்டாகி விட்டது. 1857 சிப்பாய் புரட்சி தொடர்பான ஒரு பூங்கா (அந்த புரட்சியை தொடர்பு படுத்தக்கூடிய விதத்தில் எந்த நினைவுச்சின்னமும் அங்கு இல்லை. இந்திய சிப்பாய்களுக்கு பயந்து வெள்ளையினப் பெண்கள் குதித்து இறந்து போன கிணறு மட்டும் மூடப்பட்டிருந்தது) வுக்கு அழைத்துச் சென்ற கான்பூர் தோழர் ஒருவர் அடுத்து கூட்டிச் சென்ற இடம் ஜேகே கோயில். ராதா சமேத கிருஷ்ணன் கோயில்தான். எப்படி டெல்லியில் ராதாகிருஷ்ணன் கோயிலும் ஹைதராபாத்தில் வெங்கடாசலபதி போயிலும் அதை கட்டிய பிர்லாவின் பெயரில் பிர்லா மந்திர் என்று அழைக்கப்படுகிறதோ, அதே போல கோயிலை கட்டிய ஜே.கே மில்ஸ் முதலாளி பெயரில் அந்த கோயில் அழைக்கப்படுகிறது.

அடுத்து ஒரு முழு நாள் உள்ளதே, என்ன செய்வது என்ற கேள்விக்கும் கான்பூர் தோழர்களே விடை சொன்னார்கள். ஒரு டாடா சுமோ ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  அதிகாலையில் புறப்பட்டோம். சென்னை 2 கோட்டத்தின் சார்பாக தோழர் டி.ஏ.விஸ்வநாதன், சேலம் கோட்டத்தின் சார்பாக தோழர் பாலசுப்ரமணியன், தஞ்சைக் கோட்டத்தின் சார்பாக தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  நெல்லை கோட்டத்தின் சார்பாக தோழர் டி.தேவபிரகாஷ், கோவைக் கோட்டத்தின் சார்பாக தோழர் டி.நீலமேகம், மதுரை கோட்டத்தின் சார்பாக தோழர்கள் பாரதி மற்றும் மீனாட்சி சுந்தரம், வேலூர் கோட்டத்தின் சார்பாக நானும் சிறப்பு அழைப்பாளராக அப்போது பங்கேற்ற இன்றைய அகில இந்திய இணைசெயலாளர் தோழர் எம்.கிரிஜா என இத்தனை பேரையும் அடைத்து சுமோ புறப்பட்டது. சென்னை 1 கோட்டத்தின் சார்பாக யார் வந்தார்கள் என்பது மட்டும் நினைவில் இல்லை. 

பயண நேரம் எவ்வளவு என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் வண்டி போனது போனது போய்க் கொண்டே இருந்தது. அலகாபாத் சென்றதும் பலத்த ஏமாற்றம்.  நேரு குடும்ப சொத்தாக இருந்து அருங்காட்சியமாக மாறிய ஆனந்தபவன், பகத்சிங்கின் சகா சந்திரசேகர் ஆசாத் பிரிட்டிஷ் ராணுவத்துடன் போராடி சுட்டுக் கொல்லப்பட்ட பூங்கா அகியவை மூடப்பட்டிருந்தது.

யமுனை நதிக்கரையின் ஓரத்தில் இருந்த கோட்டையை வெளியே இருந்து மட்டும்தான் பார்க்க முடிந்தது. அந்த மொட்டை வெயிலில் யமுனை கரையில் இரண்டு பாம்பாட்டிகளைத் தவிர வேறு யாருமில்லை.  பிறகு படகில் சங்கம் சென்றோம். கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அந்த இடம் சின்னஞ்சிறு தீவு போலவே இருந்தது. கங்கைக்கும் யமுனைக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது, நீரின் நிறம் மற்றும் வேகத்தில் . . .  படகில் சென்ற எல்லோருமே அங்கே தர்ப்பணம் செய்தார்கள், எங்களைத் தவிர. . . ஒரு புரோகிதர் சுத்தமான தமிழில் நீங்க எல்லாம் என்ன கோத்ரம் என்று கேட்க தோழர் டி.தேவபிரகாஷ் ஏ.ஐ.ஐ.இ.ஏ கோத்ரம் என்று சொன்ன போது எனக்கு விசிலடிக்க தோன்றியது. சங்கமத்தில் குளித்த பின்பு மதிய உணவுக்குப் பிறகு கான்பூர் திரும்பினோம்.

மூன்று நாட்கள் செயற்குழு முடிந்த பின்பு மாலை ஆறு மணிக்கு ஏறிய ரயில் மறு நாள் முழுதையும் எடுத்துக் கொண்டு அதற்கும் மறுநாள் காலை பத்து மணியளவில் சென்னையில் கொண்டு சேர்த்தது. இந்த பயணத்தில் நானும் தோழர் டி.ஏ.விஸ்வநாதன், தோழர் சேலம் பாலு என மூவர் மட்டும்தான். தோழர் டி.ஏ,வி யும் நானும் பெரும்பாலும் பேசிக் கொண்டே வர அவ்வப்போது தோழர் பாலு பேசுவார்.

அலகாபாத் பயணம் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்தது. கான்பூர் செல்கையில் கணக்காகத்தான் பணம் எடுத்துச் சென்றிருந்தேன். அலகாபாத் செல்ல மட்டும் ஒருவருக்கு அறநூறு ரூபாய் ஆனதால் கையிருப்பு மிகவும் குறைந்து போனது. ஏ.டி.எம் கார்ட் கூட அப்போது இல்லை.  இரண்டாம் நாள் இரவில் மற்றவர்கள் ஷாப்பிங் போன போது நான் மிகவும் சிக்கனமாக மகனுக்கு மட்டும் ஒரு ஜிப்பா வாங்கினேன். மனைவிக்கு எதுவும் வாங்கவில்லையா என்று கேட்ட கோழிக்கோடு கோட்டத்தோழர் அச்சுதனிடம் உங்கள் வழிகாட்டுதல்தான் என்று சொல்லி சமாளித்தேன். அதென்ன வழிகாட்டுதல் என்பதை இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்

அதற்குப் பிறகுதான் எங்கே பயணம் மேற்கொண்டாலும் ஒரு கணிசமான தொகையை ஒரு கவரில் போட்டு கையிருப்பாக எடுத்துச் செல்வேன், அதற்கான தேவை இல்லாவிட்டாலும் கூட. 


பிகு: மேலே உள்ள படம் இன்றைய ஆங்கில இந்து இதழில் முதல் பக்கத்தில் வெளிவந்திருந்தது. 

No comments:

Post a Comment