டி.டி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிற எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மறைவுச்செய்தி இன்றைய நாளை துயரமாக்கியது.
1993 ல் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த தோழர் அவர். எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த தோழர் சங்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது அலுவலக வாசலில் அமர்ந்து அலுவலகம் வருபவர்களை "இன்று வேலை நிறுத்தம்" என்று சொல்லி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஒருவர் அவரை நக்கலாக "நீ என்ன வாட்ச்மேனா" என்று கேட்க, "ஆமாம். எல்.ஐ.சி யை பொதுத்துறையாய் பாதுகாக்கும் வாட்ச்மேன்" என்று தோழர் தேவராஜ் சூடாக திருப்பி பதியளிக்க கேள்வி கேட்டவர் உள்ளே ஓடிவிட்டார்.
கோட்ட அலுவலகக் கிளையின் உதவி செயலாளர், செயலாளர் என்று பணியாற்றிய தோழர் தேவராஜ், 2011 ல் சிதம்பரத்தில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் கோட்ட துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் தேவராஜ் கடந்த 2024 ம் வருடம் வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.
தோழர் தேவராஜ் சிறந்த செயல் வீரர். அவரிடம் கொடுக்கப்படும் பணி எதுவானாலும் செம்மையாக செய்து முடிப்பார். பயணங்களில் உடன் இருப்பார். கொரோனா காலம் வரை தவறாமல் ஒவ்வொரு வருடமும் வெண்மணி பயணத்தில் கலந்து கொண்டவர். இடதுசாரி சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். இளம் வயதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
2022 ல் தென் மண்டல மாநாட்டை வேலூரில் நடத்திய போது விளம்பரக் குழு அமைப்பாளராக அவர் ஆற்றிய பணி மனதில் நிலைத்துள்ளது. காவல் நிலையத்துக்கு அனுமதிகளுக்காக சளைக்காமல் சென்று வந்தார். பேரவைக் கூட்டங்களில் பேச எப்போதுமே தன்னை தயார்ப்படுத்திக் கொள்வார்.
வெளிப்படையாகும் பேசும் குணம் கொண்டவர், கடின உழைப்பாளி. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவரை கேன்ஸர் எனும் கொடிய நோய் தாக்கியது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல தயாராகும் வேளையில் அவரது மன உறுதியை பாதிக்கக்கூடிய விதத்தில் ஒரு ஜென்மம் பேசிய பேச்சு அவரது செவிகளையும் எட்டியது. ஆனால் அது அவரது மன வலிமையை அதிகரித்தது. நான் மீண்டு வருவேன் என்ற மன உறுதியோடு சிகிச்சைக்கு சென்றார்.
மூன்று நான்கு மாதங்களிலேயே மீண்டு மீண்டும் அலுவலகம் வந்தார். அவரது பணிகளை வழக்கம் போல செய்யத் தொடங்கினார். 2023 ல் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் இரண்டு நாட்களும் முழுமையாக கலந்து கொண்டார். இனி அவர் எப்போதும் போல செயல்படுவார் என்று நம்பிய போது நோய் மீண்டும் அவரை தாக்கி மருந்துகளின் பக்க விளைவுகள் அவரை மிகவும் படுத்த இந்த முறை அவரை நோய் வென்று விட்டது.உங்கள் பணிகளால், சங்கத்தின் மீதான உங்கள் பற்றுதலால், உங்கள் இனிய அணுகுமுறையால் எப்போதும் எங்களோடு இருப்பீர்கள்.
செவ்வணக்கம் தோழர் டி.டி