Wednesday, August 2, 2017

ஒரு மைண்ட் வாய்ஸும் நானும்





கடந்த வாரம் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காவிகள் கலவரங்களில் ஈடுபட்டார்கள்.

காரணம்.

திருவனந்தபுரத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கொல்லப்பட்டு விட்டார். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பந்த் அறிவித்தார்கள். அந்த பந்தின் போதுதான் கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டார்கள்.

அவர்கள் ஆட்கள் கொல்லப்பட்டால் கோபம் வருவது நியாயம்,தானே என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கத்தான் செய்கிறது.

கொலைகாரர்களை கைது செய்து விட்டார்களா? கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்தானே? ஆளும் கட்சிக்காரர்கள் என்றால் என்ன வேண்டுமானால் செய்யலாமா? 

என்று நீங்கள் சத்தமாக கேட்கிறதும் காதில் விழுந்து விட்டது.

ஆம் கொலைகாரர்களை கைது செய்து விட்டார்கள். கொலையுண்டவரே மரண வாக்குமூலம் கொடுத்து விட்டார்.

அப்படியா அந்த செய்தியை எந்த தொலைக்காட்சியும் சொல்லவே இல்லையே. ஆளும்கட்சி என்பதால் அடக்கி வாசித்து விட்டார்கள் போல 

என்று நீங்கள் வெறுப்போடு மெல்லமாய் முனகினாலும் அதுவும் எனக்கு கேட்டு விட்டது.

ஐயா, கொலை செய்தவர்கள் ஒன்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இல்லை. கைது செய்யப்பட்டவர்களும் அவர்கள் இல்லை.

பின்னே யார்  
என்று உங்கள் முகத்திலே ஒரு குழப்பம் தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் காரரை கொலை செய்தவர்களும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்தான். சொந்தப் பிரச்சினைக்காக கொலை செய்துள்ளார்கள். அவர்களே கொலை செய்து விட்டு அவர்களே நியாய்ம் வேண்டும் என்ற போர்வையில் கலவரமும் செய்துள்ளார்கள். 

"அடப்பாவிகளா! இப்படியும் கூட செய்வார்களா? " 
என்பதையாவது கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன். ஏன் உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறீர்கள்.  

இது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல. காலம்காலமாக இப்படித்தான் அயோக்கியத்தனம் செய்து வருகிறார்கள்.

சரி சரி போவதற்கு முன்பு இதையும் கேட்டு விட்டு போய் விடுங்கள். நீங்கள் வாய் திறந்து கேட்காவிட்டாலும் நானே சொல்லி விடுகிறேன்.

கேரள மாநில ஆளுனரே முதல்வரை அழைத்து இக்கொலை பற்றியும் சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசினாரே 
என்பதுதானே உங்கள் மனதில் உள்ள குழப்பம்?

பாஜக தலைவர் அமித் ஷாவை போலி எண்கவுண்டர் வழக்கில் விடுவித்த அடுத்த வாரமே கேரள மாநிலத்தின் ஆளுனராக பதவி பெற்றாரே அவர்தான் இப்போதும் பொறுப்பில் இருக்கிறார் என்பதையும் பாஜக ஆளாத மாநிலங்களின் ஆளுனர்கள் எல்லாம் இப்போது அந்த அரசுகளுக்கு எப்படியாவது சிக்கல்களை உருவாக்குவதையே வேலையாக வைத்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு குழப்பமே வராது.  

இன்னும் ஒன்றே ஒன்று

நீங்கள் கேட்காவிட்டாலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் கேட்பது நல்லது.

ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் எச்சரிக்கையாக இருப்பது. உடனிருக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளே உங்களை எப்போது வேண்டுமானாலும் போட்டுத் தள்ளி விடுவார்கள்.

 

1 comment:

  1. ரொம்ப பயாமுறுத்தறீங்க

    ReplyDelete