Wednesday, November 26, 2025

கவுண்டமணி பிடித்த திமிங்கலமும் தவெக ......

 


சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணியின் வலைக்குள் ஏதோ பெரிதாக சிக்கிக் கொள்ளும். அது என்னவென்று தெரியும் முன்பே அது திமிங்கலம் என்றும் பல் பல லட்சம், தோல் ஒரு கோடி, மாமிசம் சில கோடி என்று சக மீனவர்கள் சொல்ல, இவரும் தன் எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்றும் அளப்பார். 

கிட்டத்தட்ட கவுண்டமணி போல தவெக ஆட்கள் கனவு கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக வந்தால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதா இல்லை துணை முதல்வர் பதவி கொடுப்பதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.



கவுண்டமணியின் வலையில் சிக்கியது என்ன?

அவரின் முறைப்பெண் கோவை சரளாவை காதலிக்கும் செந்தில். 

கடைசியில் கவுண்டமணியின் வலைதான் கிழிந்து போகும்.


கள்ளிச்செடியில் மல்லிகை பூக்காது தமிழ் வசை

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முக்கியமான கட்டுரை. 

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ளவராக தமிழிசை இருந்தால் இந்த கட்டுரையை படித்த உடன் தன் நாக்கை பிடுங்கிக் கொண்டு பேச்சற்றவராக மாறி விட வேண்டும்.

ஆனால் அதெல்லாம் இருந்தால் அவர் ஏன் பாஜகவில் இருக்கப் போகிறார்1 கொஞ்சமும் கூசாமல் அடுத்த பொய்யை பேசுவார்.

தோழர் கனகராஜ், அவர்களுடைய பெயரை மிகவும் பொருத்தமாகவே மாற்றி உள்ளீர்கள் "தமிழ் வசை" என்று. . .



கள்ளிச் செடியில் மல்லிகை பூக்காது தமிழிசை அவர்களே

மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழி லாளர் விரோத சட்டத் தொகுப்புகளை விமர்சித்ததற்காக - கம்யூனிஸ்ட் களை பாய்ந்து பிராண்டுவதாக கற்பனை செய்து கொண்டு - தன்னைத்தானே பிராண்டிக் கொண்டு நிற்கிறார் ‘தமிழிசை’ என்கிற ‘தமிழ் வசை’. “உண்டியலிலிருந்து பெட்டிக்கு மாறிய கம்யூ னிஸ்ட்கள்” என்று கம்யூனிஸ்ட்களை வசை பாடுவ தாக நினைத்துக் கொண்டு, ‘உத்தம வேடம்’ போட முயற்சித்திருக்கிறார் தமிழிசை. உண்டியல்தான் கம்யூனிஸ்ட்களின் நிரந்தரமான நிதி திரட்டலுக்கு வழி. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அர சாங்கம் ஏழை மக்களின் வரிப் பணத்தை எடுத்து, தனியாருக்குக் கொடுத்து அதில் பங்கு வாங்கிக் கொள்ளும் இழிவான நடவடிக்கையில் ஈடுபட்டதைப் பற்றி அவருக்கு கவலையில்லை.
125 கோடி ரூபாயை விழுங்கியவர்கள்
தமிழ்நாட்டைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு குழுமத்திற்கு செமிகண்டக்டர் நிறு வனம் நடத்த அனுமதி வழங்கிவிட்டு, அதற்கு 70 சதவீதம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் கஜானாவி லிருந்து பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, அதற்காக 125 கோடி ரூபாய் தமிழ்நாடு பாஜகவின் கணக்கிற்கு மாற்ற வைத்த ‘பெருமைமிக்க’ கட்சியில் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச அருவருப்பு கூட இல்லாமல் தமிழிசை பேசியிருப்பது, சாக்கடை யிலேயே உழல்பவர்களுக்கு அதன் நாற்றம் தெரியாது என்பதற்கான சிறந்த உதாரணம். அப்பனே!
முருகா!!
பிஎம்கேர்ஸ் பிக்பாக்கெட்
கொரோனாவைக் காரணம் காட்டி, இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகளிடமும், ஒன்றிய அரசுப் பணியாளர்களிடமும், மத்திய பொதுத்துறை நிறுவன பணியாளர்களிடமும் பணத்தை வசூலித்து, அதற்கு கணக்கு காட்ட மாட்டேன்; அது தனியார் நிதி என்று சண்டித்தனம் செய்து கொண்டிருப்பது மோடிதான் என்பதை உலகறியும். பி.எம்.கேர்ஸ் என்று பெயர் வைத்துவிட்டு, அது ஏதோ அரசின் நிதி என்ற தோற்றம் காட்டி அதிகாரி களிடமும் தொழிலாளிகளிடமும் பிக்பாக்கெட் அடித்த ஒரு கூட்டத்தின் ஓர் அங்கம்தான் தான் என்பதையும், அதன் தலைவர்தான் மோடி என்பதையும் மறந்துவிட்டுப் பேசுகிறார் தமிழ் வசை. அதானியைச் சுமக்கும் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு மோடி, பொதுச் சொத்தையும் மக்களின் உரிமையையும் தன் நண்பர் அதானிக்கு அள்ளிக் கொடுத்ததை தமிழிசை மறந்துவிட்டார். சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில், டோரன் பவர் நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டரை ரூபாய் 6000-க்கு கொடுத்ததும், தன் நண்பர் அதானிக்கு ஒரு சதுர மீட்டர் நிலத்தை வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுத்ததை யும்,
அதற்கு பரிகாரமாக 2016 தேர்தல் செலவுகளை அதானி பார்த்துக் கொண்டதும், அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி பயன்படுத்திய விமானம் அதானியின் தனி விமானம் என்பதும் ஊர் அறிந்த அவமானம். தமிழ் வசைக்கு அது மணக்கிறது என்பதால், சூடிக்கொண்டு சுற்றட்டும். மாறாக, எந்த அழுக்கும் அண்டாத கம்யூனிஸ்ட் நெருப்புகளைப் பார்த்து, அவதூறுச் சேற்றை அள்ளி எறிய வேண்டிய அவசியம் இல்லை. சற்று வாசித்தாவது அறிய முயற்சியுங்கள் அடுத்ததாக, கம்யூனிஸ்ட்கள் மில்களை எல்லாவற்றையும் மூடிவிட்டார்களாம். சமீபத்திய மூடல் நோக்கியாவாம். சொந்த அறிவை பயன் படுத்த வாய்ப்பில்லாத போது, சற்று வாசித்தாவது விவ ரங்களை தெரிந்து கொள்ள தமிழ் வசை முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஒன்றிய அரசு, ஆண்டு தோறும் எந்தெந்தப் பிரச்சனைகளால் ஆலைகள் மூடப்பட்டிருக்கின்றன என்பது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் பொறுப்பில் இருந்தவருக்கு, அடுத்தவரிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற குறைந்தபட்ச நேர்மைகூட இல்லை. எந்த முதலாளி யும் லாபம் வரும் என்றால், தொழில் தகராறுக்காக ஆலையை மூடமாட்டார்கள்.
நட்டம் ஏற்படுகிறது என்றால், காலில் விழுந்து கும்பிட்டாலும் கண நேரம்கூட தாமதிக்காமல் மூடிவிட்டு ஓடிவிடுவார்கள். நோக்கியா மூடலுக்கு தொழிற்சங்கம்தான் காரணம் என்று எந்த சாக்கடையில் ஆதாரம் எடுத்தார் என்று தமிழிசை சொல்ல வேண்டும். ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை யை மூடியபோதே, குஜராத்தில் உள்ள சனத் என்ற இடத்திலிருந்த ஆலையையும் மூடிவிட்டுச் சென்றது. அங்கு சிஐடியு சங்கமா இருந்தது? தமிழ்நாட்டில் மூடியதற்கு தொழிற்சங்கம் காரணம் என்று ஃபோர்டு நிறுவனம் எந்த இடத்திலும் சொல்ல வில்லை. முதலாளிகளின் கால் நக்கிப் பிழைக்கும் சிலர் வழக்கமாக, கம்யூனிஸ்ட்களை சாடுவதற்காக சொல்கிற, அதே அரைத்த மாவை மீண்டும் அரைத் திருக்கிறார் தமிழிசை. திராணி இருந்தால், ஒன்றிய அரசின் ஆவணங்களிலிருந்து தமிழிசை பட்டிய லிடட்டும், மோடி அரசின் கொள்கைகளால் மூடப்பட்ட ஆலைகள் எத்தனை; தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் மூடப்பட்ட ஆலைகள் எத்தனை என்று சொல்லட்டும். ஒருவர் அறியாமையில் இருப்பதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த அறியாமையை ஏதோ அறிவாளித்தனம் என்று அலட்டிக் கொள்வதுதான் நகைப்புக்குரிய அசிங்கம். மோடி விழுங்கிச் செரித்தது எத்தனை?
தொழிலாளிகளுக்கு நன்மை செய்வதற்காகவே மோடி அவதாரம் எடுத்ததாக தமிழிசை பீற்றிக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப் பேற்ற போது, ஒன்றிய பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றிய நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 31, 2015 நாள்படி, 12,91,174 பேர். 2024-இல் இது 8.10 லட்சம்பேர். ஒன்பது ஆண்டு களில் மோடி விழுங்கிச் செரித்த பொதுத்துறை நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் 4.81 லட்சம். அதாவது மூன்றில் ஒரு பங்கு. ஒன்றிய அரசுப் பணிகளிலும் பல லட்சம் நிரப்பப்படாமல் உள்ளது. இந்தியாவின் இளைஞர்கள்
வேலைக்காக ஏங்கித் தவிக்கும் போது, ரயில்வே துறையில் 3 லட்சத்து 20 ஆயிரம் காலிப் பணியிடங்களை, காலி யாகவே வைத்துக் கொண்டு கபட நாடகம் ஆடுபவர் மோடி. அதில், தினம் ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டிருக்கும் போதும், சுமார் 1.70 லட்சம் பாது காப்புப் பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது தமிழ் வசைக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. ரூ.16.35 லட்சம் -
உங்கள் பாரம்பரியச்சொத்தா?
இவையெல்லாம் போகட்டும். இப்போது அவர்களை வெற்றி பெற வைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மூலம் பீகாருக்குச் சென்று வாக்களித்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்குமாக குழந்தைகளோடும், வயதான பெற்றோர்களோடும் மூட்டை முடிச்சுகளோடு, கோவிட் காலத்தில் நடந்து கொண்டிருந்த போது, நரேந்திர மோடி அரசாங்கம் நயா பைசா பாக்கி இல்லாமல் அவர்களிடம் கட்டணம் வசூலித்து ‘கருணை’ காட்டியதை நாடே கண்டது. ஆனால், தனது பெருமுதலாளி நண்பர்களுக்கு இந்தக் காலத்தில் 10 ஆண்டுகளில், சுமார் 16.35 லட்சம் கோடி ரூபாயை தன் பாரம்பரியச் சொத்து போல தள்ளுபடி செய்திருக்கிறார். நரேந்திர மோடி, ராகுல் காந்தியை விமர்சித்த வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், இது ஒன்றும் நரேந்திர மோடியின் தாய்மாமா வீட்டுச் சொத்து அல்ல.
வேலை கொடுக்கவும் வக்கில்லாமல், வேறு மாநிலத்திற்குச் செல்வதை தடுக்கவும் துப்பில்லாமல்; நோய்களிலிருந்து தப்பிக்க முடியா விட்டாலும் சொந்த ஊர் போயாவது செத்துவிடலாம் என்று கிளம்பியவர்களிடம் கந்துவட்டிக்காரரைப் போல் கறந்த மோடியைத் தலைவராக வைத்துக் கொண்டு, தொழிலாளர் நலனுக்காக மோடி நிற்ப தாய் தம்பட்டம் அடிப்பது - ஒன்று, அறியாமையில் இருக்க வேண்டும். அல்லது ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு செய்கிற மோசடியாக இருக்க வேண்டும்.
கேரளாவைப் பற்றி என்ன தெரியும்?
குறைந்தபட்சக் கூலி அதிகபட்சமாக இருப்பது கேரளத்தில்தான் என்பதை தமிழ் வசை யாரிட மாவது கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். அன்றாடம் உழைத்து அதில் வரும் காசில் பசியைப் போக்கும் நிலையில் இருக்கக் கூடிய, தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்ட தொழிலாளிகளுக்கு ரூ.2999 கோடியை தமிழ்நாட்டிற்கு ஏழு மாதங்களாக பாக்கி வைத்திருந்த நரேந்திர மோடி மிகப்பெரிய புண்ணியவாளராம்! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, அறிவற்றவர்களின் கண்ணுக்கு கருணையற்றவர்களே காருண்யவான்களாய் தெரிவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. உங்கள் சங்கமே சொல்லும் உண்மை தெரியுமா? அடுத்ததாக, 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தொழிலாளிகளுக்கு மிகப்பெரிய நன்மையை கொண்டு வரப் போகிறது என்று கூவி யிருக்கிறார் தமிழ் வசை.
ஆர்எஸ்எஸ்சின் வார்ப்பான - தொழிலாளர்களுக்காக இருப்பதாக பம்மாத்து செய்து கொண்டிருக்கிற - பாரதிய மஸ்தூர் சங்கம் நவம்பர் 21 ஆம் தேதி ஒன்றிய தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார்கள். அதாவது, இந்திய தொழிலாளர் பாராளுமன்றம் என்று இதர தொழிற்சங்க அமைப்பினரால் அழைக்கப்படுகிற, இந்திய தொழிலாளர் கான்ஃபரன்ஸ் என்னும் அரசு - முதலாளிகளின் பிரதிநிதிகள் - தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டத்தை, இந்த தொழிலாளர் பங்காளன் மோடி ஆட்சியில் கடந்த 10 வருடங்களாக கூட்டப்படவே இல்லை என்று அவர்களே அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள். இது வேறெந்த பத்திரிகையிலும் வந்த செய்தி யல்ல. ‘ஆர்கனைசர்’ என்கிற ஆர்எஸ்எஸ் பத்திரிகை நவம்பர் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பிரசுரித்துள்ள செய்தி இது. அதே செய்தியில், அதே பிஎம்எஸ் சங்கம் தொழிலுறவு சட்டத் தொகுப்பு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சம்பள சட்டத்தொகுப்பு ஆகிய வற்றில் அவர்கள் கூற்றுப்படியே, சில பிரிவுகள் தொழிலாளர் விரோதமாக சொல்லியிருப்பதை, ‘தற்குறி’கள் பார்க்காமல் இருக்கட்டும்; தமிழ் வசை ஏன் பார்க்காமல் இருக்கிறார்? தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள வரம்பை 15 ஆயிரம் ரூபாயிலேயே வைத்திருப்பது அநியாயம்; அதை 30 ஆயிரம் ரூபாயாக மாற்றுங்கள். இஎஸ்ஐ தகுதிக்கான சம்பள வரம்பை 21 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு மடங்காக்கி, 42 ஆயிரமாக மாற்ற வேண்டும். போனஸ் கணக்கிடு வதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரம் என்பதை,
14 ஆயிரம் ரூபாயாக மாற்ற வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூபாய் ஆயிரத்திலிருந்து 7,500 ரூபாயாக மாற்ற வேண்டும். அதை நுகர்வோர் குறியீட்டு எண்ணுடன் இணைக்க வேண்டும். திட்டப் பணியாளர்களான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், ஆஷா ஊழியர்கள், மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் ஆகியோருக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றெல்லாம் பிஎம்எஸ் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கண் இருப்பவர்கள் பார்த்திருப்பார்கள். காதிருப்ப வர்கள் கேட்டிருப்பார்கள். அறிவு இருப்போர் அறிந்திருப்பார்கள். தமிழிசை அவர்களுக்கு இது எப்படி வசப்படாமல் போனது? திட்டப் பணியாளர்களுக்கு நீண்ட காலமாக ஒன்றிய அரசின் பங்கை உரிய நேரத்தில் கொடுக்காமல், உதாசீனம் செய்து வரும் மோடி அரசாங்கத்தை தமிழ் வசை கேள்வி கேட்டிருக்க வேண்டும். இந்தியாவில் பாஜக ஆளும் அத்தனை மாநிலங்களிலும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அப்படியொரு மசோதா தாக்கல் செய்து, அதை நிறைவேற்றிய பிறகும் - அவர் சொல்வது போல, மதிய உணவுக்கு அறிவாலயத்து க்குப் போன கம்யூனிஸ்ட்கள், இரண்டே இரண்டு எம்எல்ஏ-க்களோடு இருந்த போதும் எதிர்த்தோம். அதை, திரும்பப் பெற வைத்தோம். எதை, எங்கு சாப்பிட்டதால், பாஜக எம்எல்ஏ-க்கள் அல்லது தமிழ் வசை இதைப் பற்றி எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள் என்பதைச் சொல்லட்டும்.
கள்ளிச் செடியில் மல்லிகை பூக்குமா?
29 சட்டங்கள் மூலம் நீண்ட நெடுங்காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை காவு வாங்குவதற்காக 4 தொகுப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் முதல் இப்போது இருக்கும் அந்நிய நிறுவனங்கள், அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக சேவகம் செய்வதற்காகவே பிறப்பெடுத்த கூட்டம் அதை தொழிலாளர்களுக்கான உரிமை என்று கொண்டாட வேண்டும் என்கிறது. கள்ளிச் செடியில் மல்லிகை பூப்பதாக கற்பனை செய்து கொண்டு பேசுவதற்கு, தமிழிசைக்கு நாம் ஒன்றும் தடை சொல்லப் போவதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களையும் நம்பச் சொல்கிறார் அவர். தமிழ் வசையே சொல்வது போல, பெரிய நிறுவனங்களுக்கு ஆட்குறைப்பு செய்வது எளிதாக இருக்காது என்றால் சிறிய நிறுவனங்களில் ஆட்கு றைப்பை அரசின் அனுமதியில்லாமல் செய்து கொள்ளலாம் என்பது தானே பொருள். 300 பேர் வரை பணி செய்யும் இடங்களுக்கு அனுமதியின்றி ஆட்குறைப்பு செய்யலாம் என்கிறார்கள். இந்தியா வில் 90 சதவீத பணியாளர்கள், 300 மற்றும் அதற்கும் குறைவானவர்களை வைத்து உற்பத்தி
செய்யும் நிறு வனங்களிலேயே வேலை செய்கிறார்கள். சரி, தொழில் தகராறு எழுப்பினால், உடனடியாக தீர்வு கிடைக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. இந்தி யாவின் தற்போதைய நிலவரப்படி, 12 லட்சம் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. புதிய சட்டத் தொகுப்புக் களால், இந்த நிலைமை இன்னும் மோசமாகும். இது என்ன அதானியின் மோசடி வழக்கா, அதற்காக, இந்திய மக்களின் நலனை காவு கொடுத்து, டிரம்ப்பிடம் மோடி பேசுவதற்கு? சாதாரண ஏழை-எளிய மக்களின் உரிமைகள்தானே! மோடி எகத்தாளமாய் சிரித்துக் கொண்டிருப்பார். எனவே இதையெல்லாம் சேர்த்து வைத்துப் பார்த்தால் தமிழ் வசைக்கே புரியும், தாம் நடத்துவது அபஸ்வர கச்சேரி என்று.
அறியாமையில் இருப்போர் வாயைத் திறந்தால், அவர்கள்தான் அசிங்கப்படுவார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் தமிழ் வசைதான்.

Tuesday, November 25, 2025

கோர்ட்டால் அசிங்கப்படுத்தப்பட்ட தவெக நிர்வாகி

 


கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிறகு ஓடி ஒளிந்து கொண்ட விஜய் கட்சியின் கொ.ப.செ ஆதவ் அர்ஜூனா, உசுப்பேத்தும்படி ஒரு ட்வீட் போட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அதை பயந்து நடுங்கி நீக்கியது நினைவில் உள்ளதல்லவா?

அந்த ட்வீட்டிற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

என்ன காரணம் தெரியுமா?



எஸ்,வி.சேகர் பல வருட அனுபவம் கொண்ட, மாநிலம் முழுதும் அறியப் பட்ட ஒரு கலைஞர். அவரது பதிவுகள் தாக்கத்தை உருவாக்கும்.

ஆனால் இந்த ஆதவ் அர்ஜூனா அரசியலுக்கு புதியவர். அவர் சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே வழக்கெல்லாம் தொடுக்க (வேண்டிய அளவு வொர்த்தில்லாத டம்மி பீஸ்) வேண்டாம் என்று காரணமும் சொல்லி விட்டார். (அடைப்புக்குள் இருந்தது மட்டும் என் வார்த்தைகள்). 

"ஆதவ் அர்ஜூனா ஒரு கத்துக்குட்டி, அந்தாள் பேச்சையெல்லாம் எவனும் மதிக்க மாட்டான்"  என்பதுதான் நீதிபதி சொன்னது.

Monday, November 24, 2025

விஜய் செல்லம் அது என் டயலாக் -பிரகாஷ்ராஜ்

 


நேற்று விஜய் காஞ்சிபுரத்தில் பேசிய வஜனம் அவருடைய பூத எழுத்தாளர் GHOST WRITER , சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசியதை காப்பி அடித்து எழுதிக் கொடுத்தது. சந்தேகமாக இருக்கிறதா? 

கீழே உள்ள காணொளியை பாருங்கள்



அப்பறம் மேலே உள்ள படத்தில் விஜயைத்தான் சொல்லி உள்ளார்கள் என்று தவெக தற்குறிகள் நியூஸ் 7 சேனலிடம் சண்டைக்கு போக வேண்டாம். அது ?நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா" படத்தில் வரும் காட்சி.

41 பேருடைய மரணத்துக்கு காரணமாக இருந்து கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் ஆளுங்கட்சி மீது பழி போடும் தற்குறிகளின் தலைவனுக்கு அது பொருத்தமாக உள்ளதால் நான்தான் எடுத்துப் போட்டேன். 

வாயில் ரத்தம் வழியும் சங்கி ஓநாய் - கர்னாடக காங்கிரஸே எச்சரிக்கை

 


முன்னொரு காலத்தில் இந்தியாவில் இருந்த பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது கர்னாடகா, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருந்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், கோவா, பஞ்சாப், அஸ்ஸாம், ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கே உரிய மகத்தான சிறப்பான, கோஷ்டி மோதலால் அது ஆட்சியை பறி கொடுத்தது. 

இப்போது கர்னாடகாவில் கோஷ்டிப் பூசல் உச்சத்திற்கு வந்துள்ளது. 

முதலமைச்சர் சித்தராமையாவிற்கும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்குமான மோதல் இப்போது ஊடகங்களில் அடிபட தொடங்கி விட்டது. 

இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை. அடுத்த கட்சியின் உட்கட்சி பிரச்சினைகள் பற்றி எழுத மாட்டேன் என்று கொள்கை வைத்துள்ளதாக சொல்வாயே! இப்போது  அந்த  கொள்கை என்ன ஆனது என்று கேட்கிறீர்களா? அது நியாயமான கேள்விதான்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த பதிவினால் காங்கிரஸாருக்கு அன்புடன் ஒரு எச்சரிக்கை கொடுக்க விரும்பினேன்.


வாயில் ரத்தம் சொட்ட சொட்ட, கர்னாடக ஆட்சியையும் கைப்பற்ற சங்கி ஓநாய்கள் ஆவலுடன் காத்திருப்பதை பார்த்தீர்களா!

இந்த பதிவை காணும் காங்கிரஸ் கட்சியினரே, காத்திருக்கும் அபாயத்தை உங்கள் தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். 

உங்கள் கட்சிக்குள் ஒற்றுமையை பலப்படுத்துங்கள், ஓநாய்களை துரத்தி அடியுங்கள்.

பதவிக்காக மோதிக் கொண்டு இருப்பதையும் இழக்காதீர்கள். ஆட்சியை இழப்பது உங்கள் பலவீனத்தை மேலும் அதிகரிக்கும் என்பதையும் மறக்காதீர்கள், ஜனநாயகத்தையும் பலவீனமாக்கும் . . .

Sunday, November 23, 2025

அவரை நான் எப்படி கூப்பிட?

 


தமிழ்நாட்டின் முக்கியமான இசையமைப்பாளர் அவர். இப்போது நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் இருக்கிறார். 

அவரிடம் அனுமதி வாங்காமல் அவருடைய பாடல்களை, இசை கோர்ப்புகளை பயன்படுத்தியும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்தியும் பலர் பணம் பார்ப்பதால் அவரது பெயரையோ, புகைப்படத்தையோ, வழக்கமாக அவரை அழைக்கப்படும் பட்டங்களான இ..........னி, மே..........ரோ,  ரா........ன்,  ரா...........ர்  ஆகியவற்றையும் யாரும் திரைபடங்களிலோ, தொலைக்காட்சிகளிலோ, யூட்யூப் நிகழ்வுகளிலோ, எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலோ யாரும் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று தடை வாங்கியுள்ளார்.

எங்கள் சங்கத்தின் அச்சுப்பணிகளை செய்யும் அச்சகத்தில் டிசைனராக இருந்தவர் பெயர் இ......ஜா. நல்ல வேளை இப்போது அவர் வேறு ஊரில் சொந்த அச்சகம் துவங்கி விட்டார். இல்லையென்றால் அவரை நான் எப்படி அழைப்பேன்?

உங்கள் பாடல்களை வணிக நோக்கில் அனுமதியின்றி பயன்படுத்த தடை வாங்குவது என்பது ஒரு பிரச்சினை. 

ஆனால் உங்கள் பெயர், புகைப்படம், உங்களுக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள் ஆகியவற்றைக் கூட யாரும் பயன்படுத்தக்கூடாது என்றால்

உங்களிடம் வேறு ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் வக்கீல்கள் காசு பார்க்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே விழித்துக் கொண்டால்  உங்களுக்கு நல்லது. 

ஒன்பது முறை எழுந்தவன்

 


தமிழ்நாட்டின் பெரும் கவி ஈரோடு தமிழன்பவன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். அவரை ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத்தான் முதன் முதலில் அறிந்து கொண்டேன். பின்பு தூர்தர்ஷனில் கலைஞர் தலைமை தாங்கிய ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசித்த போதுதான் அவர் கவிஞர் என்று அறிந்து கொண்டேன். 

இந்தி திணிப்பை எதிர்த்த "அசோகச் சக்கரத்தை அஜர்பைஜான் விசாரிக்கும்" என்ற கவிதையை சங்கிகள் "அஜர்பைஜான் எரிக்கும்" என்று மாற்றி அவரது செய்தியாளர் பணியை பறித்தார்கள் என்பது நாம் மறக்கக் கூடாத நிகழ்வு.

பாரதியின் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" போல அவரது :ஒன்பது முறை எழுந்தவனல்லாவா நீ" யும் சோர்வைப் போக்கி எழுச்சி தரும்.

அவர் தமிழாக்கம் செய்த பாப்லோ நெரூடாவின் கவிதைகளில் ஒன்றை மூன்றாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தின் காலண்டரில் பயன்படுத்தியுள்ளோம்.

முற்போக்கு சிந்தனையாளரான தோழர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.

அவரது மறைவை ஒட்டி அஞ்சலியாக அவரின் சில கவிதைகள்.

******************************************************************************


அறத்தில்
விழித்தது எதுவோ -
அன்பில்  தழைத்தது எதுவோ
அது தமிழ் உயிர்


இளகிக் 
கனிவது எதுவோ 
இரங்கிக் கரைவது எதுவோ 
அது தமிழ் உளம்


அணுவில் 
விரிவது எதுவோ
அண்டம் இணைப்பது எதுவோ
அது தமிழ் அறிவு

**********************************************************


“பத்து முறை விழுந்தவனைப் பார்த்து
நிலம் சொன்னது -
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ ?”

*****************************************************************************

"மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள்
மணவாளன் அறிவான்
அவர்கள் இருவரையும்விட
மார்வாடியே
அதிகம் அறிவான்"

*****************************************************************************
"கவிதை, தான் கவிதையாவதற்கு
வார்த்தைகளைக் காட்டிலும்,
அர்த்தங்களைக் காட்டிலும்
வாழ்க்கையையே நம்பி இருக்கிறது.
வாழ்க்கைக்கு அர்த்தம்
அனுபவங்களில் புரிந்தும்
புரியாமலும் தெரிந்தும்
தெரியாமலும்
சிதறிக் கிடக்கிறது."
*********************************************************************************
'சிலம்பை உடைத்து என்ன பயன்
அரியணையிலும்
அந்தக் கொல்லன்..'

******************************************************************************
"இமயப்பறவைகள் நாம்
எரிமலையின் உள்மனம்நாம்.
அக்கினிக் காற்றிலே
இதழ்விரிக்கும் அரும்புகள்நாம்.
திக்குகளின் புதல்வர்கள்
தேசவரம்பற்றவர்கள்”


Saturday, November 22, 2025

சங்கிகள் -தமிழ்நாட்டின் துரோகிகள்

 


மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் கிடையாது என்று ஒன்றிய அரசு அனுமதி மறுத்து விட்டது. 2011 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த நகரங்களின் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ செயல்படும் போது மதுரைக்கும் கோவைக்கும் மட்டும் மறுப்பது மோடியின் அப்பட்டமான தமிழ்நாட்டு விரோத அரசியல்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் 2021 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் இருபது லட்சம் கடந்திருக்கும். ஆக இவர்கள் மறுத்த காரணத்திற்கும் இவர்களே பொறுப்பு.

மத்தியரசின் செயலை சங்கிகள் கண்டிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மை இருந்தால் அந்த மூடர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!

முதலில் செய்தி தவறு என்றார்கள்.

அடுத்து விளக்கம்தான் கேட்டுள்ளார்கள் என்றார்கள்.

தமிழ்நாடு அனுப்பிய திட்ட அறிக்கை தவறு என்று வியாக்யானம் கொடுத்தார்கள்.

ஆனால்  இவர்களை மக்கள் எள்ளி நகையாடுவதால்

கோவைக்கும் மதுரைக்கும் எதற்கு மெட்ரோ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் இப்போது அந்த ஒப்பாரியைத்தான் வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எதிரிகள், துரோகிகள். அவர்களை இந்த மாநிலத்திலிருந்தே துரத்த வேண்டும். 


Friday, November 21, 2025

குற்ற உணர்ச்சியா நீதி(அற்ற) அரசர்களே!


 
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனர்களுக்கோ எந்த காலவரையும் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்து ஆரெஸெஸ் ரெவி போன்ற ஆட்டுத்தாடிகள் தங்கள் அயோக்கியத்தனத்தை தொடர ஊக்க டானிக் கொடுத்த தீர்ப்பை எழுதிய நீதியரசர் யார்?

தெரியாது.

யார் எழுதியது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

ஒருவருக்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வென்றால் அத்தீர்ப்பை எழுதிய ஜட்ஜ் யார் என்பது அதிலே குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆனால் ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த இத்தீர்ப்பில் அந்த விபரம் சொல்லப்படவில்லை.

ஏன்?

ஜனநாயகத்திற்கு எதிராக, ஆட்டுத்தாடிகளின் அராஜகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கிறோம் என்ற குற்ற உணர்வா?

இதற்கு முன்பும் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம். மசூதிக்கு கீழே ராமர் கோயில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதியை இடித்த கிரிமினல் குற்றவாளிகளிடமே பாபர் மசூதி நிலத்தை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்படைத்த அந்த ஐவர் அமர்வு தீர்ப்பிலும் யார் எழுதியது என்பது சொல்லப்படவில்லை.

இதுதான் உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படைத்தான்.

"ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யறான்" என்ற ரஜினி பட பஞ்ச் வஜனம் போல கடவுளைக்கேட்டேன், அவர் உத்தரவிட்டதை எழுதினேன் என்று மோடியை வீட்டுக்கு அழைத்து பூஜை செய்ய வைத்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்  பின்னாளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது வேறு கதை. . . .

REASONABLE TIME தான் பிரச்சினை ஜட்ஜய்யா . . .

 


எப்போதாவது நீதித்துறை மீது சின்னதாக மொட்டு விடுவது போல நம்பிக்கை மலர்ந்தால், உடனடியாக நம்மை செருப்பால் அடிப்பது போல "உன்னை எவன்டா எங்களை நம்பச் சொன்னது?" என்று ஒரு தீர்ப்பு கொடுத்து விடுவார்கள் நம்ம ஜட்ஜய்யாக்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு அரசு சட்ட மன்றத்தில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமலோ அல்லது மறுக்காமலோ, திருப்பி அனுப்பாமலோ நிலுவையிலேயே வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் குடியரசுத் தலைவரோ, ஆளுனரோ முடிவெடுத்தே ஆக வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரை நிர்ணயிக்க முடியுமா என்று ஒன்றிய அரசு, ஜனாதிபதி மூலமாக உச்ச நீதிமன்றத்தை அணுக, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

எந்த ஒரு மசோதா மீதும் முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனருக்கோ காலவரை எல்லாம் நிர்ணயிக்க முடியாது என்பதுதான் அத்தீர்ப்பு.

இதன் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மசோதாவை நியமனம் மூலம் பதவிக்கு வரும் ஆளுனர் தன் இஷடத்திற்கு இழுத்தடிக்க ராஜபாட்டை போட்டுக் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். ஜனநாயக முறைப்படி எடுக்கப்பட்ட ஒரு முடிவை ஆளுனர் எச்.ராசாவின் ஹைகோர்ட்டாக கருத வழி வகுக்கப்பட்டுள்ளது.

இதிலே போனா போகுது என்று ஒரு வரி சொல்லப்பட்டுள்ளது.

ஒரு நியாயமான காலவரைக்குள் (REASONABLE TIME) க்குள்  ஆளுனர் முடிவெடுக்க  வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் ஒரு வரையறைக்குள் தலையிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.



ஐய்யா நீதிபதிகளே, நியாயமான காலவரை என்றால் என்ன என்பதையும் நீங்க சொல்லி இருக்கலாமே! மாநில அரசுக்கு நியாயமான காலவரை என்று தோன்றும் காலவரை, ஆளுனருக்கு தோன்றாதே!

மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய பின்பும் அதனை வருடக் கணக்கில் தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி நிலுவையில் வைத்திருந்ததால்தானே, பிரச்சினை உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

முன்பு அரசியலில் ஓய்வு பெற்றவர்கள் ஆளுனர் ஆனார்கள். மோடியின் ஆட்சிக்காலத்திலோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்யவே அயோக்கியர்களை பொறுக்கி எடுத்து ஆளுனர்களாக்குகின்றனர்.

அந்த இடையூறு அரசியலுக்கு உகந்ததாகவே நீங்கள் தீர்ப்பளித்துள்ளீர்கள், என்ன செய்ய? நீங்கள் தீர்ப்பு எழுதவில்லையே, பணி ஓய்வுக்கு பிந்தைய பதவிகளுக்கான விண்ணப்பங்களைத்தானே எழுதுகிறீர்கள்.

பிகு 1 : இது நியாயமான தீர்ப்பில்லை என்று அவர்களுக்கும் தெரிகிறது. அதனால்தான் ?????????? . கேள்விக்குறிகளுக்கான விளக்கத்தை மாலை எழுதுகிறேன்.

பிகு2 : இன்னொரு மோசமான தீர்ப்பும் தரப்பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை . . .

Thursday, November 20, 2025

பத்திரிக்கையாளர் மன்றமா? பாஜக மன்றமா?

 


சில நாட்கள் முன்பாகத்தான் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை பாராட்டியிருந்தேன். திரைக்கலைஞர் கௌரி கிஷனிடம் அநாகரீகமான நடந்து கொண்ட யூட்யூபரை கண்டித்தமைக்காக அந்த பாராட்டு. அந்த யூட்யூபரின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது தவறு என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

பத்திரிக்கையாளர் மன்றத்தின் நேற்றைய நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வந்த போது பு.த பத்திரிக்கையாளர் சுப்பையாவிற்கும் யூட்யூபர் கரிகாலனுக்கும் இடையில் நடந்த சர்ச்சை வைரலானது.

அதிலே ஆணவத்துடன் நடந்து கொண்டது புதிய தலைமுறை சுப்பையாதான் என்பதை காணொளி பார்த்த அனைவருக்கும் தெரியும். கரிகாலன் ஆற்றியது எதிர்வினைதான். நான் சென்னை ப்ரஸ் க்ளப் மெம்பர், நீங்கள் மெம்பரா என்று கேட்டது எத்தனை பேருடைய உறக்கத்தை கெடுத்தது என்று தெரியவில்லை.

அந்த சர்ச்சை பாஜக- தவெக விற்கு இடையிலான ரகசிய கூட்டை அம்பலப்படுத்தியது. அதனுடைய விளைவோ என்னமோ இப்போது கரிகாலனை பத்திரிக்கையாளர் மன்றத்திலிருந்து நீக்கியுள்ளார்கள்.


இப்போதைய பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது முற்போக்காளர்கள் நிறைந்த அவை அது என்று நம்பினேன். 

ஆனால் இப்போதுதான் தெரிகிறது.

புதிய தலைமுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக மன்றம் என்று . . .

Wednesday, November 19, 2025

வாழ்த்துக்கள் டாகடர் புளிச்ச மாவு ஆஜான்

 


புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு தக்சஷீலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளதாம்.


பல்கலைக்கழகத்தின் பெயரைப் பார்த்ததும் நான் ஏதோ பஞ்சாப் தக்சஷீலா வில் உள்ள பழமையான பல்கலைக்கழகமோ என்று நினைத்தேன்.  அப்படியெல்லாம் இல்லை. திண்டிவனம் பக்கத்தில் ஓங்கூர் என்ற கிராமத்தில் 2019 ல் உருவாக்கப்பட்ட தனியார் சுயநிதி பல்கலைக்கழகமாம்.

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் இலக்கியவாதி என்று அவர் குண்டர் படை ஆட்கள் பீற்றிக் கொள்வார்களே, அதை நினைத்தால்தான் அச்சமாக உள்ளது. 

அனுசுயா கல்விக்காக அன்புடன் உதவி

 


சபாஷ், சரியான தீர்ப்பு  என்ற தலைப்பில் நேற்று முன் தினம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைத்தலைவர் தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். படிக்காதவர்கள் மேலே உள்ள இணைப்பின் மூலம் அந்த பதிவை முதலில் படித்து விட்டு கீழே எழுதியுள்ளதை படியுங்கள். 

கடந்தாண்டு மே மாதம் நான்காம்  தேதி  அன்று எங்கள் கோட்டத்தின் இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மகளிர் மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. எங்கள் கோட்டத்தின் பிரத்யேக புவியியல் தன்மை காரணமாக மகளிர் மாநாடு எப்போதுமே இரண்டு பகுதிகளாக நடைபெறும். 

இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மாநாடு என்பதால் ஒரே பகுதியாக திருவண்ணாமலையில் நடத்தினோம். வெள்ளி விழா மாநாடு என்பதால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் பி.சுகந்தி, எங்கள் அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, தென் மண்டல மகளிர் ஒருங்கிணைப்புக்குழு இணை அமைப்பாளர் தோழர் ஆர்.எஸ்.செண்பகம் ஆகியோரை அழைத்திருந்தோம்.

மாநாடு துவங்கும் முன்பாக எங்கள் அனைத்திந்திய இணைச்செயலாளர் தோழர் கிரிஜா, என்னிடமும் அன்றைய தலைவரும் இன்றைய பொதுச்செயலாளருமான தோழர் எஸ்.பழனிராஜிடமும் ஆணவக் கொலையால் கணவரை இழந்த அனுசுயா பற்றி விவாதித்தார். அவர் தன் கல்வியை தொடர விரும்புகிறார். உங்கள் கோட்டத்தால் அவருக்கு உதவ முடியுமா என்று கேட்டார்.

கோட்டச்சங்க பொது நிதியிலிருந்து கொடுப்பதென்றால் அதிகபட்சம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரம்தான் அளிக்க முடியும். தோழர்களிடமிருந்து வசூலித்தால் கூடுதலாக அளிக்க முடியும் என்றோம். மற்ற  கோட்டச்சங்கப் பொறுப்பாளர்களோடும் விவாதித்தோம். மாநாட்டிலேயே அறைகூவல் அளிக்கலாம் என்று திட்டமிட்டோம். இதிலே ஒரு சவாலும் இருந்தது.

சர்வதேச மகளிர் தினத்தன்று அனைத்து கிளைகளிலும் நிதி திரட்டி முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் இல்லம் ஆகியவற்றுக்கு உதவி செய்வோம். 2024 ம் ஆண்டில் சமூக நல உதவியாக எங்கள் தோழர்கள் 1,87,200 ரூபாய் வரை பங்களித்திருந்தார்கள். 

அதற்குள் இன்னொரு நிதி திரட்டல் என்றால் எந்த அளவு வெற்றிகரமாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. தோழர்கள் மீது நம்பிக்கை இருந்தது. 

அனுசுயா சந்தித்த இன்னல்கள் குறித்து தோழர் பி.சுகந்தி பேசிய போது தோழர்கள் உறைந்து போய் அமர்ந்திருந்தார்கள். அதன் பின்பாக நான் தாராளமாக நிதி தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

புதுவை 1, வேலூர் கிளை ஆகிய இரண்டு கிளைச்சங்கங்கள் அவர்களாகவே அனைத்து தோழர்களுக்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்து அவர்கள் பேசும் போது கொடுத்தார்கள். மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் அப்போது உடனடியாக அளித்தது ரூபாய் 30,000. அதன் பின்பு சுற்றறிக்கை விடுத்தோம். அப்போது இன்னும் ரூபாய் 32,000 வசூலானது. எங்கள் தோழர்களின் ஈர இதயத்திற்கு சான்றாய் அவர்கள் அளித்த  அத்தொகையை அனுசுயாவிற்கு அனுப்பி வைத்தோம்.




வாழ்க்கையில் மிகப் பெரிய துயரத்தை சந்தித்தவர் அனுசுயா, கணவரை இழந்தார். அவர் உயிர் பிழைத்ததே அதிசயம். ஏராளமான காயங்களையும் அறுவை சிகிச்சைகளையும் எதிர் கொண்டவர். அவருக்கு நாங்கள் அளித்த நிதி என்பது பெரிதே இல்லை. உங்களோடு நாங்கள் நிற்கிறோம் என்று அளித்த நம்பிக்கைதான் முக்கியம் என்று கருதுகிறேன்.

ஒரு தொழிற்சங்கத்தின் பணி அந்த நிறுவனத்தின் சுவர்களுக்குள் சுருங்கிப் போவது கிடையாதே!

Tuesday, November 18, 2025

‘ஆயிரம் வெள்ளி வாட்சப் பேய்’

 
சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள பேய்கள் இந்தியாவுக்கு வரும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா! 

அடுத்தவன் காசை அடிக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

ரஞ்சித்தின் ‘PayNow’-க்கு ஒரு 100 வெள்ளி பணம் வந்தது. Notification-ஐப் பார்த்ததும் செயலிக்குள் சென்று யார் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்க்க முயன்றார். முகம் தெரியாத ஒருவர் அனுப்பியது போல இருந்தது. தவறுதலாக வந்திருக்கலாம்; திருப்பி அனுப்ப வழி இருக்கிறதா? என்று நினைத்தபடி, அடுத்த வேலைகளில் மூழ்கினார்.

மூன்று நாட்களுக்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. “உங்களுக்கு பணம் வந்ததா?” என்று ஒருவர் கேட்டார். ரஞ்சித் “ஆமாம்” என்றதும், “உடனே அதை திருப்பி அனுப்புங்கள்; வட்டியுடன் 150 வெள்ளி அனுப்ப வேண்டும்” என்று மிரட்டல் கலந்த குரலில் கேட்டான். வம்பு எதற்கு என்று ரஞ்சித் 150 வெள்ளி அனுப்பிவிட்டார். அன்றைய அலுவலகப் பணி சுமையில் இதற்கு நேரமிருந்ததே இல்லை.

ஒரு மாதம் கழித்து, மீண்டும் இதேபோல் அவரது அலைபேசி சினுங்கியது. இந்த முறை 1000 வெள்ளி பணம் வந்திருந்தது. ரஞ்சித் வங்கி செயலியில் பார்த்துவிட்டு மீண்டும் அவரது அன்றாட, ஆபீஸ் வேலைகளில் மூழ்கிப் போனார்.

இரண்டு–மூன்று நாட்களுக்கு பிறகு அழைப்பு வந்தது. ஆனால் இந்த முறை பெரிய மீன் வந்து வலையில் அகப்பட்டது. அழைப்பு வந்ததும் ரஞ்சித் அந்த எண்ணை உடனே எல்லா வழிகளிலும் BLOCK செய்து விட்டார். பணம் அனுப்பியவன் பதறிப் போனான்; ஒரு ஆயிரம் அனுப்பிவிட்டு “1500… 2000…” என்று பெரிய திட்டம் போட்டவன், “அடேய், இது என்னடா முதலுக்கே மோசமாகிவிட்டது!” என்று திகைத்து நின்றான்.

ரஞ்சித், 100 வெள்ளி வந்த நாளிலேயே முழுக் கதையையும் எழுதி காவல்துறைக்கு புகார் செய்திருந்தார். இன்றும் அதே ஆயிரம் வந்ததும் உடனடியாக மறுபடியும் புகார் செய்து முடித்தார். “உங்கள் சேவையில் நாங்கள், இதனை முழுமையாக நாங்களே டீல் செய்கிறோம்” என்று காவல்துறை உறுதி அளித்தது.

காவல்துறைக்கு சொன்னால் போதும், இனி நிம்மதி கிடைக்கும் என்று ரஞ்சித் நினைக்கவில்லை. இந்த scammers இதைத் தாண்டியும் வருவார்கள் என்று அவர் நிச்சயமாக அறிந்திருந்தார். தான்ன் வேலை செய்யும் நிறுவனத்திலும் HR department-க்கும் முன்கூட்டியே இரு சம்பவங்களையும், காவல்துறை புகாரையும் முழுமையாக விளக்கிவிட்டார். Expect for a call என்று மனநிலையை தயார் செய்துவிட்டார்.

வேலையிடம் பாதுகாக்கப்பட்டது. ஆனாலும் “அவன் இன்னும் என்ன செய்வான்?” என்று ரஞ்சித் காத்திருந்தார். ஆனால் அந்த கும்பல் ரஞ்சித் எதிர்பார்க்காத கோணத்தில் அடித்தது.

ரஞ்சித் குடியிருந்த வீடு ஒரு சீனரின் வீடு. அந்த scammer நேரடியாக வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, “உன் வீட்டில் இருக்கும் ரஞ்சித் எனக்கு பணம் தர வேண்டும்; அவனிடம் இருந்து எனக்கு பணம் பெற்று கொடு. இல்லையெனில் அவனை வீட்டிலிருந்து துரத்திவிடு!” என்று கத்தியிருக்கிறான்.

ரஞ்சித் வழக்கம் போல் தனது முழுக் கதையையும், தெளிந்த தொணியில் உரிமையாளரிடம் விளக்கினார். “இது அவனுக்கும் எனக்கும் நடக்கும் விஷயம். நீ தேவையில்லாமல் இதில் தலையிட வேண்டாம். நான் மாதம் வாடகையை சரியாகத் தருகிறேனா? அதுவே நமக்குள்ள டீல்.” என்று சொன்னார்.

சில நாட்கள் அமைதி நிலவியது, ஆனால் அமைதிக்குப் பின்னர் புயல் வரும் தானே. இந்த முறை அந்த சீன வீட்டு உரிமையாளரை வேறு வழியில் மிரட்டினான். “இங்கே பாரு சொல்றதைக் கேட்கலைனா, உடனடியாக ரஞ்சித்தின் WhatsApp-க்கு பேயை அனுப்பி, அந்த வீட்டில் நிரந்தரமாக பேயை குடி வைப்பேன்!” என்று மிரட்டல் விடுத்தான்.

சீன நாட்டுப்புறக் கதைகளில் பல வகையான பேய்கள், அரக்கர்கள் இடம் பெறுகின்றனர். நாட்டுப்புறக்கதைகளில் மட்டும் அல்லாமல் நவீன இலக்கியம், திரைப்படங்கள் வரை அவற்றின் செல்வாக்கு இன்றும் உள்ளது.

பேய்கள் இறந்தவர்களின் ஆவி வடிவம். அதிகம் தீங்கு விளைவிப்பவை என்றும் தூண்டினால் உயிரோடு உள்ளவர்களுக்கு கேடு செய்யும் என்றும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை சீனத்தில் மட்டும் அல்ல; முழு கிழக்கு ஆசிய புராணங்களிலும் பாய்ந்து நிற்கிறது.

சிங்கப்பூரில் சீனர்கள் கடைப்பிடிக்கும் பேய் நம்பிக்கைகள் பெரும்பாலும் Hungry Ghost Festival-ஐ அடிப்படையாகக் கொண்டவை. ஏழாவது சந்திர மாதத்தில் ஆவிகள் பூமியில் சுற்றும் என நம்பப்படுகின்றது. அந்த மாதத்தில் இரவு வெளியே செல்வது, நீச்சல் அடிப்பது, விசில் அடிப்பது போன்றவை தவிர்க்கப்படுகின்றன. திருமணம், வீடு மாறுதல், புதிய வியாபாரம் தொடங்குதல் போன்ற முக்கிய நிகழ்வுகளும் தவிர்க்கப்படுகின்றன. கண்ணாடி முன் யாரும் உறங்குவதில்லை. துவைத்த ஆடைகளை இரவு வெளியே உலர விட்டால், மேன்மை தாங்கிய ஆவிகள் அந்த ஆடைகளை “அணிந்து கொள்வார்கள்” என்றும் நம்பப்படுகிறது.

பேய்களுக்கு தெருக்களில், பூங்காக்களில் வைக்கப்படும் படையல்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. எங்கள் கவிஞர்கள் வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தாலே கவிதை எழுத துவங்கிவிடுவார்கள்; ஆனால் இங்கே வண்ணத்துப்பூச்சிகளையும் ஆவி வடிவமாகவே நினைக்கிறார்கள். வண்ணத்துப் பூச்சிகளின் உடலை ஆவிகள் தற்காலிகமாகப் பயன்படுத்துவர் என நம்புகிறார்கள்.

சீனர்கள் இறந்தவர்களை மதித்து வழிபட்டால் குடும்பத்துக்கு பாதுகாப்பும் அதிர்ஷ்டமும் வரும் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறார்கள். அதற்கு பல ஊடகங்கள் வைத்துள்ளார்கள். சீனா, தைவான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெறும் வருடாந்திர பேய் திருவிழாவில் தூபம், காகிதப் பணம், உணவு போன்றவை அர்ப்பணிக்கப்படுகின்றன.

இந்த நாடுகள் முழுவதும் நான் பயணிக்கும் நேரம் ஒவ்வொரு வீட்டின் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் ஒரு அண்டா மாதிரியான பாத்திரத்தில் காகிதம் எரிக்கப்படுவதை பார்த்தேன். ஒரு நாள் நண்பர் சுரேஷிடம் இது என்னடா தம்பி என்று கேட்டேன், அவன் போகிற போக்கில் “அண்ணே செத்த முன்னோருக்கு செலவுக்கு துட்டு அனுப்புறாயிங்கண்ணே” என்றான். இதை இவன் ஜாலியா சொல்றானா, உண்மையத்தான் சொல்றானா என்று அன்றைக்கு குழம்பினேன், ஆனால் ரஞ்சித்தின் பேய் அதை நமக்கு உறுதிப்படுத்திக் கொடுத்தது.

இவ்வளவு பேய் விசயங்கள் இருந்தால் வீட்டு ஓனர் பயப்படாமல் என்ன செய்வார்! அவர் பேய் கதைகளின் பயத்துடனேயே ரஞ்சித்திடம் வந்தார். ரஞ்சித், “பேசி முடிச்சிட்டீங்களா, ஓகே வாட்சப்பில் பேய் வரட்டும். வந்தால் அதோடே நான் வாழ்கிறேன். நான் வீட்டை காலி செய்யும் நாளில் ஒரு பேய் ஓட்டுகிறவனை வைத்து அதை ஓட்டிவிட்டு தான் போவேன்!” என்று தன் திரைக்கதையை முடித்தார்.

ரஞ்சித்தின் WhatsApp-க்கு பேய் வந்துவிட்டதா? அல்லது இனி மேல் தான் வரப்போகிறதா? தெரியவில்லை. அவர் அடிக்கடி பயணம் செய்யும் தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ் என அந்த பேய்கள் தவறாக சிங்கப்பூரை விட்டு வேறு எங்கும் டவுன்லோடு ஆகிவிட்டதா என்றும் தெரியவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் பேய்கள் வேறு நாட்டில் சுற்றினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இன்னும் ரஞ்சித் அவரது WhatsApp-ல் அந்த ‘ஆயிரம் வெள்ளி பேயின்’ வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.

“இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல, இங்க பல கம்பெனிகளில் பேய் ஓட்டுகிற ஒருவரை நிரந்தர் ஊழியராக வைத்துள்ளார்கள்” என்றான் “அடேய் என்னடா சொல்ற” என்றேன்….

காலிஃப்ளவரும் கொலைகார சங்கிகளும்

 


"காலிஃப்ளவர் சாகுபடிக்கு பீகார் ஒப்புதல் அளித்து விட்டது" 


இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களின்  கண்டன அறிக்கைதான் அந்த காலிஃப்ளவர் சாகுபடியின் விபரீத அர்த்தத்தை உணர்த்தியது.


பீகார் மாநிலம் பகல்பூரில் 1989 ல் நடைபெற்ற கலவரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரை குடித்தது. அதில் 90 % மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். அங்கே லோகைன் என்ற கிராமத்தில் 116 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சடலங்களை புதைத்து அந்த இடத்திற்கு மேல் சங்கி வெறியர்கள் காலிஃப்ளவரையும் முட்டைக் கோஸையும் பயிரிட்டு கொலைகளுக்கான தடயத்தை மறைத்துள்ளனர். 

இஸ்லாமியர்களை கொன்றதற்கும் அவர்கள் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை காலிஃப்ளவர் பயிரிட்டு மறைத்தமைக்கும் பீகார் மக்கள் ஒப்புதல் அளித்து விட்டார்கள் என்று தேர்தல் முடிவுகளுக்கு விபரீத அர்த்தம் சொல்லும் அந்த சங்கி ஒரு சாதாரண முரட்டு, முட்டாள் சங்கி மட்டுமல்ல, அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்.

தாங்கள் செய்யும் கொலைகளுக்கு காலிஃப்ளவரை சங்கிகள் இழுப்பது இது முதல் தடவை அல்ல.

மாவோயிஸ்டு முத்திரை குத்தி போலி மோதல்கள் மூலம்  சத்திஸ்கர் மாநிலத்தில் மனித வேட்டை நடந்த போது கர்னாடக பாஜக ட்விட்டரில் ஒரு பதிவு போடுகிறது. அதிலே கொலைகார அமித்ஷா கையில் காலிஃப்ளவர். 


அராஜகக் கொலைகளை நியாயப்படுத்த காலிஃப்ளவரை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும், 

தங்களின் அரசியல் எதிரிகளை கொலை செய்து அதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் போக்கு இருக்கிறதே, அது மிகவும் மோசமானது, அபாயகரமானது, அனைவரையும் அச்சுறுத்துவது.

சங்கிகள் கொலை பாதகப்பாவிகள் என்பதற்கு அவர்களே தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களை வெறுத்து ஓதுக்கித் தள்ள வேண்டிய மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைக்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பெரும் துயரம். 

Monday, November 17, 2025

சபாஷ், சரியான தீர்ப்பு

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் தற்போதைய துணைத்தலைவருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நீதித்துறை மீது அவ்வப்போது நம்பிக்கை இது போன்ற தீர்ப்புக்கள் அளிக்கிறது. 






சாதி வெறியன் தண்டபாணிக்கு

மற்றும் 10 ஆண்டுகள் தண்டனை!
அனுசுயா என்கிற தலித் பெண்ணை
வாழ்க்கை துணையாக தெரிவு செய்து கொண்டதற்காக 14.04.2023 அன்று
தான் பெற்ற மகன் சுபாசையும்,
தன்னை பெற்ற தாய் கண்ணம்மாவையும்
படுகொலை செய்து
அனுசுயாவையும் கொடுங்காயப்படுத்திய
சாதி வெறியன் தண்டபாணிக்கு
இரட்டை ஆயுள் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

அனுசுயாவிற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டரை லட்சம் ரூயாய் வழங்கிட
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை
அமர்வு நீதிமன்றம் 10 நிமிடங்களுக்கு முன்பு உத்தரவு!

கொலை பாதகன் வெறி கொண்டு வீசிய ஒவ்வொரு அரிவாள் வீச்சையும்
தனது கைகளால் தாங்கி
விரல்கள் அனைத்தும் சேதாரமாகி
முகத்திலும் தலையிலும்
கொடுங்காயங்களைத் தாங்கி
உடலில்,மனதில் தீராத வடுக்களுடன்
மகள் அனுசுயா மன உறுதியால் நம்முன் கம்பீரமாக நிர்கிறார்.

உடலில் 10 அறுவை சிகிச்சைகள்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனுசுயாவிற்கு மருத்துவத்தோடு அன்பையும் கலந்து கொடுத்தனர்.அவர்கள்
போற்றதலுக்குறியவர்கள்.

நிறைய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தார்கள்.உளப்பூர்வமாக ஆறுதலை பகிர்ந்தார்கள்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறுதலுடன் நிதியும் அனுசுயாவிற்கு வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.

இந்த படுபாதகம் நிகழ்ந்தப்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளது.வழக்கின் ஒவ்வொரு திருப்பத்திலும் உடன் பயணம் செய்தோம்.

போராட்டங்கள்,பயணங்கள்,வழக்கறிஞர் சந்திப்புகள்,விவாதங்கள் நம் கண் முன்னால் வானமாக விரிகிறது.

மருத்துவர்கள்,மருத்துவ மனையில் உதவிய சேலம் தோழர்கள்,கல்விக்கு உதவிய இன்சூரன்ஸ் சங்கத்தின் தோழர்கள்,ஒவ்வொரு வாய்தாவிலும் அணிவகுத்து வருகை தந்து வழி செலவுகளையும்,வயிற்றுக்கு உணவும் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர்கள்,மாநில மையத் தோழர்கள் எல்லோருக்கும் இயதபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சி.பி.எம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்டு வரும் ஆற்றல் மிகுந்த எங்களது பயணம் தொடரும்...

பிகு: இந்தப் பெண்ணின் கல்விக்கு உதவ ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.