Wednesday, December 31, 2025

சங்கிகள் வெறுக்கும் "ஆலம்கிர் ஔரங்கசீப்"

 

நூல் அறிமுகம்

 

நூல்                          : ஆலம்கிர் ஔரங்கசீப்

ஆசிரியர்               : புலியூர் முருகேசன்

வெளியீடு              : குறி வெளியீடு,

                                    வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்

விலை                    : ரூபாய் 300.00

 

பிப்ரவரி மாத்த்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கலவரம் வெடித்தது. “சாவா” என்றொரு திரைப்படத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியை முகலாய மன்னர் ஔரங்கசீப் மிகவும் மோசமாக சித்திரவதைப் படுத்தி கொன்றார் என்று காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து வெடித்த கலவரம். அந்த திரைப்படம் மட்டுமல்ல, நாம் பள்ளியில் படித்த பாடப்புத்தகங்கள் கூட ஔரங்கசீப் ஒரு கொடுங்கோல் மன்னர், இசை போன்ற கலைகளை வெறுத்தவர் என்றுதான் கற்றுக் கொடுத்துள்ளது.

 இந்த நூல் ஔரங்கசீப்பின் இன்னொரு பக்கத்தை காண்பிக்கும் நூலாக அமைந்துள்ளது. புனைவு நூலாக இருந்த பின்னும் ஔரங்கசீப் மீது வரலாறு வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தரப்பு விளக்கங்களை அளிப்பதாக உள்ளது. ஔரங்க்சீப் வரலாற்றோடு இந்த நூல் சுருங்கி விடவில்லை. கடந்த கால வரலாறு தொடங்கி நிகழ்கால சம்பவங்கள் வரை பலவற்றையும் விவரித்துள்ளது இந்த நாவல்.

 ஔரங்கசீப்பின் வரலாற்றை எழுத வந்த அயர்லாந்து விடுதலைப் போராளி லாவேஜ் மூலம் கதை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காலத்தை கடந்ததாக லாவேஜின் பயணம் முன்னும் பின்னுமாக அமைந்திருப்பது நூலை மிகுந்த கவனத்தோடு படிக்க வைக்கிறது.  ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த மறுநாள் அமிர்தசரஸில் தொடங்கும் நூல், கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரின் யமுனை நதிக்கரையில் நிறைவு பெறுகிறது. இதற்குள்ளாக எத்தனையெத்தனை நிகழ்வுகள்!!!

 ஔரங்கசீப் பக்கம் வருவதற்கு முன்பாக வேறு எவற்றைப் பற்றியெல்லாம் இந்த நாவல் பேசியுள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

 ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் காலித் தோட்டாக்களின் குவியல் மீது நிற்கிற லாவேஜிற்கு தன்னுடைய அயர்லாந்து நாட்டு விடுதலைப் போராட்டத்தையும் இங்கிலாந்து ஏகாதிபத்தியம் இப்படித்தானே ஒடுக்கியது என்ற துயரத்தையும் அளிக்கிறது. உத்தம்சிங் இதற்கு பதிலடி தருவான் என்று மைக்கேல் டயரிடமும் சொல்ல வைக்கிறது இந்த படுகொலைக்குக் காரணம் தேசப்பிதாதான் என்று ஒருவர் அங்கே மகாத்மா காந்தி மீது குற்றம் சுமத்துகிறார். யார் அவர் என்று பிறகு பார்ப்போம்.  .

 குஜராத்தில் மேற்கொள்ளும் ரயில் பயணத்தில் ஆச்சாரமான உணவிற்காக மண்ணெணெய் அடுப்பில் சமைப்பதையும் அதில் உள்ள அபாயங்களை விவரிக்கும் போதே கோத்ரா ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்த குஜராத் கலவரமும் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட்தும் விவரிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொலையாளிகளிடம் பறி கொடுத்து கூட்டு பாலியல் வன் கொடுமைக்கும் உள்ளாகிய பில்கிஸ் பானுவிற்கு நிகழ்ந்த அராஜகம் இந்த நாவலில் தில்ரஸ் பானுவிற்கு நிகழ்ந்ததாக சொல்லப்பட்டு கண்ணீர் வரவழைக்கிறது.

 காஷ்மீர் நாடோடி இனத்தைச் சேர்ந்த ஆசிபா எனும் சிறுமிக்கு கோயிலுக்குள் நடந்த பாலியல் கொடுமை, கொலை பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.

 வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்ட  சிவகங்கை மன்னன்  துரைசாமி பற்றியும் அவரது வீரத்தளபதி சேக் உசேன் பற்றியும் அவர்களின் துயரம் மிகுந்த இறுதி நாட்கள் பற்றியும்  இந்த நூல் விவரிக்கிறது.

 இப்போது ஔரங்கசீப் பற்றி வருவோம். மத வெறியர்களுக்கு அவர் மீது என்ன கோபம்? கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் “சதி” க்கு எதிராக உத்தரவிட்டதன் மூலம் பிரச்சினை தொடங்குகிறது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலை அவர் இடிக்க உத்தரவிட்டார் என்றொரு குற்றச்சாட்டு பேசப்படுகிறதே தவிர கோயிலுக்கு வந்த கட்ச் ராணி கோயில் புரோகிதர் ஒருவரால் கடத்தப்பட்டு கோயில் நிலவறையில் பாலியல் கொடுமைக்கு உள்ளானதன் எதிர்வினைதான் அந்த நடவடிக்கை என்பதைப் பற்றி பேசப்படுவதில்லை என்று இந்த நூல் சொல்கிறது. தன் மனைவிக்காக ருத்ர வீணை என்ற வாத்தியத்தில் ஆஹிர் பைரவ் எனும் ராகம் இசைக்கிற கலைஞராகவும் அவரை இந்த நாவல் காண்பிக்கிறது.

 தண்ணீரின் வேகத்தால் கோதுமை மாவு அறைக்கும் இயந்திரம், காப்பியின் அறிமுகம் போன்ற பகுதிகள் சுவாரஸ்யமான கற்பனைகள்.

 ஔரங்கசீப் – சிவாஜி உறவு பற்றியும் விரிவாக இந்த நூல் பேசுகிறது. சிவாஜி அரசனாக முடியேற்க முதலில் யார் ஆட்சேபித்தார்களோ, அவர்களேதான் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வளர காரணமாக இருந்தார்கள் என்பதையும் சொல்கிறது. அது மட்டுமல்ல அதை செய்வதாக ஒரு பாத்திரம் வருகிறது. அந்த பாத்திரம் விக்ரம் ஜோஷி.

 இன்று இந்தியாவில் மக்களிடையே பிரிவினையை தூண்டும் பரிவாரத்தைத்தான் ஜாலியன் வாலாபாக்கில் மகாத்மா காந்தி மீது பழி போடுவதில் தொடங்கி காலம் தோறும் வரும் விக்ரம் ஜோஷியை சித்தரித்துள்ளார். லாவேஜ் யமுனை நதிக்குள்ளாக விக்ரம் ஜோஷியை கொலை செய்து புதைத்தாலும் அவன் மீண்டும் எப்போது எந்த வடிவில் வருவானோ என்ற அச்சத்துடன் நாவலை நிறைவு செய்கிறார். மத வெறி அபாயம் இன்னும் தொடர்கிறது அல்லவா! ஔரங்கசீப்பிற்கு நற்சான்றிதழ் கொடுப்பது போல இந்த நாவல் அமைந்துள்ளதோ என்றொரு சிந்தனை எழலாம். பல நூறு ஆண்டுகளாக பல்வேறு படைப்புக்கள் மூலம் அவர் அவதூறு செய்யப்பட்டுள்ள போது, அவர் புகழ் பாடத்தான் ஒரு நூல் இருக்கட்டுமே!

 சரியான சமயத்தில் சரியான படைப்பை நல்லதொரு மொழியில் வழங்கிய தோழர் புலியூர் முருகேசனுக்கு வாழ்த்துக்கள்.

-         வேலூர் சுரா


"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது.  

-          

 


Tuesday, December 30, 2025

கான்பூர்- புதுடெல்லி - நாக்பூர்

 



2007 ல் 21 வது மாநாடு கான்பூர் நகரில் நடைபெற்றது. நாங்களும் சேலம் கோட்டத் தோழர்களும் ஆக்ரா சென்று தாஜ் மஹாலைப் பார்த்து விட்டு பின்பு இன்னொரு ரயில் மூலமாக கான்பூர் செல்வதென்று திட்டமிட்டு புறப்பட்டோம். நாங்கள் ஆக்ரா சென்ற வெள்ளிக்கிழமையன்று தாஜ்மஹால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று எங்களுக்கு தெரியாது. ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட செங்கோட்டையிலிருந்து அவரைப்போலவே தூரத்திலிருந்து தாஜ் மஹாலை பார்த்து மனதை தேற்றிக் கொண்டோம்.

பொது உடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் சுபாஷினி அலி வரவேற்புக்குழுவின் தலைவர். விடுதலைப் போராட்ட வேங்கை தோழர் கேப்டன் லட்சுலி அவர்களின் வருகையே மிகுந்த உற்சாகமளித்தது. பத்திரிக்கையாளர் திரு சாய்நாத் மாநாட்டை துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இம்மாநாட்டிற்காக தற்காலிக அரங்கம் உருவாக்கப் பட்டது. 

நேரடி ரயில் இல்லாததால் ஜான்சி வந்து வேறு ரயிலை பிடித்து திரும்பினோம். புறப்படும் போது வெள்ளை வெளேர் என்றிருந்த டாடா சுமோ ஜான்சியை வந்தடைந்த போது பழுப்பு நிறமாக மாறியிருந்தது. சாலையில் அவ்வளவு புழுதி.அதுதான் உத்திரப்பிரதேசத்தின் சிறப்பு. 




தோழர் அமானுல்லா கான் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 





22 வது பொது மாநாடு 2010 நவம்பரில் புதுடெல்லியில் நடைபெற்றது. இம்முறையும் ஆக்ரா சென்று தாஜ் மஹால் பார்க்கவும் அந்த நாள் வெள்ளிக்கிழமை இல்லாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டோம். ஒரு டிராவல் ஏஜென்சியோடு முன்பே பேசி முன்பதிவு எல்லாம் செய்திருந்தோம். ஆனாலும் எங்களை ஆக்ராவில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யாமல் அந்த ட்ராவல் ஏஜென்சி டெல்லி வரச் சொல்லி சொதப்பி  ரயிலின் கால தாமதம், போக்குவரத்து இடையூறு ஆகியவற்றால் நாங்கள் தாஜ்மஹால் சென்ற நேரத்தில் கதவுகளை அடைத்துக் கொண்டிருந்தார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்கள், டெல்லி வந்த பின்பு வெள்ளி நள்ளிரவில் தனி வேனில் ஆக்ரா புறப்பட்டு பேரணி துவங்கும் முன்பாக தாஜ் மஹால் பார்த்து விட்டு திரும்பினார்கள். அந்த பயணத்தில் எங்களுக்கு கைப்பிள்ளையாக திகழ்ந்தவர் மூத்த தோழர் வி.ஆர்.ராதாகிருஷ்ணன்.

ஒரு சிறப்பான பேரணிக்குப் பின்பு ராம்லீலா மைதானத்தில் துவக்க விழா நடைபெற்றது. திரிபுரா முதல்வர் தோழர் மாணிக் சர்க்கார் மாநாட்டை துவக்கி வைத்தார். அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட சிரிஃபோர்ட் அரங்கில்தான் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. 

பஞ்சாபின் பாங்க்ரா நடனம், கவாலி இசை என்று கலை நிகழ்ச்சிகள் அட்டகாசமாக இருந்தது. தகுதி காண் அறிக்கை தயாரிக்கும் மகுழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். எங்கள் தென் மண்டலத் தோழர்களின் படிவங்களை சேகரித்துக் கொடுத்ததைத் தவிர வேறு பணி எதுவும் நான் செய்யவில்லை. இப்போதைய தென் மத்திய மண்டலத் தலைவரும் அன்றைய ராஜமுந்திரி கோட்டச் செயலாளருமான தோழர் பி.சதீஷ்,தன் கோட்டத் தோழர்களின் உதவியோடு அறிக்கையை தயார் செய்தார். 

மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம் கௌரவிக்கப்பட்டார். உணர்ச்சி பொங்கிய, நெகிழ்வான தருணமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.




மாநாடு முடிந்து பாலிகா பஜார் சென்று ஷாப்பிங் முடித்து தங்குமிடத்தில் இருந்து பெட்டிகளை எடுத்து புறப்பட்டோம். ஆட்டோவில் சென்றால் மாட்டிக் கொள்வீர்கள் என்று டெல்லி தோழர்கள் அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களோடு கொண்டு சேர்த்தார்கள். நியூ டெல்லி ரயில் நிலையத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் ஏறிய கும்பலால் நாங்கள் உள்ளே தள்ளப்பட்டோம். நியூ டெல்லி ரயில் நிலையத்தில் என்னாலும் திருப்பத்தூர் தோழர் சி.செல்வத்தாலும் இறங்க முடியவில்லை. அடுத்த நிறுத்ததில் இறங்கி எதிர் திசையில் செல்லும் ரயிலில் ஏறி வந்து சேர்ந்தோம்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் செல்லும் பிளாட்பாரத்திற்கு செல்லவே பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டது. அங்கிருந்து எங்கள் பெட்டி இருக்கும் இடம் செல்ல இன்னொரு பத்து நிமிடம். ரயிலில் ஏறி  பெட்டிகளை அடுக்கி வைக்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. 








23 வது மாநாடு ஜனவரி 2014 ல் நாக்பூரில் நடைபெற்றது. முதல் நாள் மதியமே சென்ற நாங்கள் மாலை அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீட்சா பூமிக்கு சென்று வந்தோம். 

நாக்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில்தான் எங்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியில் வேலூர் கோட்டத் தோழர்கள் வெள்ளை சட்டை, வேட்டியில் நடை போட்டோம். தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்தார். "தலைவர்கள் முக்கியமா, கொள்கைகள் முக்கியமா?" என்ற முக்கியமான கேள்வியை அவர் எழுப்பினார். இன்றளவும் இந்திய மக்கள் புரிந்து கொள்ளாத விஷயம் அது. 


அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்க இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 



தோழர் வி.ரமேஷ் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இம்மாநாடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

முதல் முறையாக ஒரு மகளிர் தோழர் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற்றார். தோழர் எம்.கிரிஜா அகில இந்திய இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இறுதி நாள் மாநாடு முடிந்து புறப்பட்ட அனைவருக்கும் நாக்பூரின் பிரசித்தி பெற்ற ஆரஞ்சு சோன்பப்டியை நாக்பூர் கோட்டச் சங்கம் கொடுத்தனுப்பியது. 

இரண்டு மாதங்கள் முன்பு முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுக்கள், கடைசி வரைக்கும் காத்திருப்போர் பட்டியலிலேயே இருந்தது. வேறு வழியின்றி தட்காலில் பதிவு செய்து வீடு திரும்பினோம். 

Monday, December 29, 2025

சென்னையிலிருந்து ராய்ப்பூர் வழியாக பெங்களூர்

 



பொன் விழா ஆண்டு மாநாடாக புத்தாயிரத்தாண்டில்  டிசம்பரில் நடைபெற்றது. இம்மாநாட்டை ஒட்டி குமரியிலிருந்தும் கூடலூரிலிருந்தும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கூடலூரிலிருந்து திருப்பூர் வரைக்கும் பின்பு திருப்பத்தூரிலிருந்து திருத்தணி வரையிலும் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டேன். தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்தார். பேரணி பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. எங்கள் கோட்டத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வேலூரிலிருந்து மட்டும் மூன்று வேன்களில் சென்றிருந்தோம். நான் முதன் முதலில் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது இம்மாநாட்டில்தான். 




அதற்கடுத்த மாநாடு சத்திஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில்.  மிக நீண்ட பயணம் மேற்கொண்டோம். மாநாடு தொடங்குவதற்கு முதல் நாளே சென்றோம். அது போல ஒரு நாளைக்குப் பிறகே புறப்பட்டோம். அன்றாட ரயில்கள் கிடையாது. வாராந்திர ரயில்கள் மட்டும்தான். முன்னாள் பிரதமர் திரு வி.பி.சிங் கலந்து கொண்ட மாநாடு இது. மறைந்த தோழர் சன்யால் அவர்களின் அஞ்சலி பதிவில் பல விபரங்களை எழுதி இருந்தேன்.  அதன் இணைப்பு கீழே. கொஞ்சம் படித்து விடுங்களேன்.


இடியாய் தாக்கிய இரட்டைத் துயரம்

இம்மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம் தலைவராகவும் தோழர் கே.வேணுகோபால் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகில இந்திய தலைமையகம் சென்னையிலிருந்து ஹைதராபாத் நகருக்கு மாற்றப்பட்டது.

அறிக்கை மீதான விவாதத்தில் நான் பேசியிருக்க வேண்டும். நேரமின்மை காரணமாக அந்த வாய்ப்பு பறிபோனது. 

அறிக்கை மீதான விவாதத்தில் ஒடிஷாவின் சம்பல்பூர் கோட்டத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த ஒரு இளம் தோழர் ஒரு கலக்கு கலக்கினார். 

அவர்தான் இன்றைய அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா.

எங்கள் கோட்டக்குழுவின் இடம் பெற்று எங்களை உற்சாகப்படுத்திய (அதாவது ஓட்டுவதற்கு கண்டெண்ட் கொடுத்து)  தோழர்கள் ஆர்.சிவகுமார், கே.ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் இப்போது இல்லாதது ஒரு துயரம். 



மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாநாடு. வரவேற்புக்குழுவின் செயலாளராக செயல்பட்டவர், இந்தியாவின் முதல் பெண் கோட்டப் பொதுச்செயலாளர், பெங்களூர் கோட்டம் 1 ன் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.கே.கீதா. 

சுனாமியில் தந்தையை இழந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் கல்விக்காக நாங்கள் தயாரித்திருந்த சுனாமி நிவாரணப் பணிகள் குறித்த காணொளியை தோழர் என்.எம்.எஸ் வெளியிட தோழர் கே.வேணுகோபால் பெற்றுக் கொண்டார். அரங்கில் அது பின்னர் ஒளிபரப்பானது. அந்த பெண்ணின் கல்விக்காக மூத்த தலைவர் தோழர் சந்திரசேகர் போஸ் எங்களை தேடி வந்து ரூபாய் 500 கொடுத்த போது மிகவும் பெருமையாக இருந்தது. 



இம்மாநாட்டின் தீர்மானக்குழுவில் நான் இடம் பெற்று சில தீர்மானங்களை முன் மொழியும் வாய்ப்பு கிடைத்தது. 

Sunday, December 28, 2025

பெருமையாக இருக்கிறது.


 முன்னாள் ராணுவ வீரர், அஞ்சல் துறை ஊழியர், தொழிற்சங்கத் தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், அறிவொளி இயக்க செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக, மதிப்புறு தலைவராக செயல்பட்டு அந்த இயக்கத்தின் ஆணிவேராக திகழ்பவர், "திருப்பி அடித்த கதை" என்ற பெயரில் தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளவர், மகளிர் உரிமைகளுக்காக போராடுபவர், சிறப்பான வகுப்பாசிரியர், இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதிற்காக ஒரிஜினலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் ச.தமிழ் செல்வன்.

அவருடைய முக நூல் பக்கத்தில் இந்த படத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

ஆம், எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தால் வெண்மணி புதிய நினைவகத்திற்கு வழங்கப்பட்ட தியாகிகள் நினைவுச் சின்னத்தின் முன்பாக எடுத்துக் கொண்ட படத்தைத்தான் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

பிகு: மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிமுகத்தை தோழர் தமிழ்ச்செல்வன் விரும்ப மாட்டார்.  அவர் விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை அள்ளித்தெளித்த சில வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்காக இப்பதிவு. 

அகமதாபத்திலிருந்து ஹைதராபாத் வரை


 



1994 ன் துவக்கத்தில் அகமதாபாத் நகரில் நகரில் நடைபெற்ற பதினைந்தாவது மாநாடு, நான் கலந்து கொண்ட இரண்டாவது அகில இந்திய மாநாடு.

மாநாட்டுக்கு புறப்படும் நாளன்று எங்கள் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களின் தாயார் காலமாகி விட அவரால் வர இயலவில்லை. தலைமையகத்திலிருந்து கலந்து கொண்ட ஒரே பொறுப்பாளர் நான் மட்டுமே. இந்த மாநாடு 1993 ஜனவரியில் நடந்திருக்க வேண்டும். 6, டிசம்பர், 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் வட இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்பே நடந்தது. 

மும்பை தாதர் வரை ஒரு ரயில், பிறகு அகமதாபாத் வரை இன்னொரு ரயில். மாநாட்டு அறிக்கைகளை தாதர் ரயில் நிலையத்தின் ஒரு ப்ளாட்பார்மிலிருந்து நீண்ட தூரத்திலிருந்த இன்னொரு பிளாட்பார்மிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பணி எங்கள் கோட்டத்திற்கு கொடுக்கப்பட்டது. ட்ராலியில் எடுத்துச் செல்ல சொத்தயையே கேட்க மறைந்த தோழர்கள் சிவகுமாரும் மனோகரும் காலியாய் இருந்த ஒரு ட்ராலியை எங்கிருந்தோ எடுத்து வர நாங்கள் தள்ளிக் கொண்டு சென்றோம். 

அந்த மாநாட்டில் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ந்தது. ஆமாம். நிகழ்ச்சி நிரலில் தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு நன்றியுரை என்று சொல்லப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று மல்கோத்ரா குழு பரிந்துரை அளித்திருக்க தோழர் என்.எம்.எஸ் ஒரு மணி நேரம் நன்றியுரை ஆற்றினார். மாநாட்டை துவக்கி வைத்தவர் (பெயர் நினைவில் இல்லை) ஒரு பொருளாதார டாக்டர். அந்த டாக்டரையும் அன்றைய நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கையும் ஒப்பிட்டு தோழர் என்.எம்.எஸ் பேசியதை கேட்டிருந்தால் மன்மோகன்சிங் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடியிருப்பார். 

 பணி ஓய்வுக்குப் பிறகும்  நீண்ட காலம் தலைவராக செயல்பட்ட , இன்றைக்கும் பிதாமகராக வழிகாட்டி வரும் தோழர் சந்திரசேகர் போஸ் அந்த  மாநாட்டில் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தோழர் சரோஜ் சவுத்ரி புதிய தலைவரானார். 

மாநாடு நிறைவுற்ற மறு நாள் நாங்கள் சபர்மதி ஆஸ்ரம் சென்றோம். காந்தியடிகள் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த உடை என்று ரத்தக்கறையுடன் ஒரு ஆடை அங்கே இருந்தது. இது போலவே மதுரை காந்தி மியூசியத்திலும் இருக்கிறதே, இது எப்படி சாத்தியம் என்று அருகில் இருந்த எங்கள் கோட்டத் துணைத்தலைவர் தோழர் புதுவை ஆர்.பி.எஸ் அவர்களிடம் கேட்க ஒரு வாலிபர் அங்கே வந்து "பாபு இங்கே இன்னமும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். தயவு செய்து சத்தம் போடாதீர்கள்" என்று மென்மையாக கடிந்து கொண்டார்.  

இப்போதைய மத்தியரசு மகாத்மாவின் பெயரை வேலை உறுதிச் சட்டத்திலிருந்து நீக்கியதை அறிந்திருந்தால் அந்த வாலிபர் என்ன செய்திருப்பாரோ!



அடுத்தது மதுரையில் பதினாறாவது மாநாடு, 1996 ன் இறுதியில்.

மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்க மதுரை, கோவை, சென்னைக் கோட்டங்கள் போட்டியிட தென் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் அதிக வ்பாக்குகளைப் பெற்று வென்றது மதுரை. அந்த  செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற கிளை 1 வளாகத்தில்தான் இப்போது தீ விபத்து ஏற்பட்டு முதுநிலை கிளை மேலாளர் திருமதி கல்யாணி நம்பி இறந்து போனார்.

இந்த மாநாட்டிற்கு முன்பாக நான்கு  முனைகளிலிருந்து வேன் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதில் இரண்டு வேன்கள் எங்கள் கோட்டம் வழியே பயணித்தது. அரக்கோண்த்திலிருந்து அரியலூர் வரையிலான பிரச்சாரத்திற்கு பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் பொறுப்பேற்க நானும் கோட்டத் துணைத்தலைவர் ஆர்.முருகேசனும் திண்டிவனத்திலிருந்து சீர்காழி வரை சென்றோம். 

கொட்டும் மழையின் ஊடே பிரச்சாரம் நடைபெற்றது. மக்கள் மத்தியில் எப்படி பேசுவது என்ற பயிற்சிக் களமாக அந்த பிரச்சாரம் அமைந்திருந்தது.  

மேற்கு வங்க நிதியமைச்சர்  டாக்டர் அசிம்தாஸ் கப்தாவும் மக்களவை உறுப்பினர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவும் துவக்க நிகழ்வில் பேசி இருக்க வேண்டும். மழை காரணமாக விமானங்கள் ரத்தானதால் இருவராலும் வர இயலவில்லை. முதுபெரும் பொது உடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.உமாநாத் மாநாட்டை துவக்கி வைத்தார்.

இம்மாநாட்டில் தோழர் சரோஜ் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள பஞ்சாப் சிங்கம் தோழர் ஆர்.பி.மான்சந்தா புதிய தலைவரானார்.  அன்றைய தேதியில் மிகவும் இளையவரான தோழர் கே.வேணுகோபால் இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

"இந்த இளைஞன் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நான் சொன்னவுடனேயே தன் இணைச்செயலாளர் பொறுப்பை துறக்க முன்வந்த தென் மத்திய மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் சுகுனாகர் ராவ்வை நாம் பாராட்ட வேண்டும்" என்று தோழர் என்.எம்.சுந்தரம் சொல்ல, அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது. 


முதல் இரண்டு மாநாடுகளில் பார்வையாளராக கலந்து கொள்ள இம்மாநாட்டில்தான் முதல் முறையாக பிரதிநிதியாக கலந்து கொண்டேன். என் மனைவி பார்வையாளராக பங்கேற்றார். எங்கள் மகனை கும்பகோணத்திலிருந்த மாமனார் வீட்டில் விட்டு விட்டு நாங்கள் மாநாட்டில் பங்கேற்றோம். 




அடுத்த மாநாடு ஹைதராபாத் நகரில். இந்து ஆசிரியர் தோழர் என்.ராம் துவக்கி வைத்தார். ஒரு நாள் முன் கூட்டியே வந்து விட்டதால் கோல்கொண்டா கோட்டை, சாலார் ஜங் மியூசியம் எல்லாம் சென்றோம். இன்சூரன்ஸ் மசோதாவிற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று இம்மாநாட்டில்தான் முடிவெடுக்கப்பட்டது. எண்ணற்ற செயல்வீரர்களை அடையாளம் காண்பித்தது  இந்த கையெழுத்து இயக்கம்தான், 

மாநாடு முடிந்து திரும்பும் போது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஏற்பட்டது. 

வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் அந்த சம்பவத்தை எழுதியுள்ளேன்.  வழி மறித்த உளவுத்துறை  என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் படித்து விடவும். 



Saturday, December 27, 2025

வாஜ்பாய்க்கு பிறந்த நாளில் நேர்ந்த கதி

 


ஏன் என்ற கேள்விக்கு கீழேயுள்ள படம் விளக்கம் சொல்லும் . . .




கட்டாக்கில் முதல் முறையாக

 




நான் கலந்து கொண்ட முதல் அகில இந்திய மாநாடு 1990 ல் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற 14 வது மாநாடு. சொல்லப் போனால் வேலூர் கோட்டத்திற்கே அதுதான் முதல் மாநாடு. 12.06.1988 அன்றுதான் வேலூர் கோட்டம் உதயமானது.

வேலூர் கோட்டத்திலிருந்து பங்கேற்ற தோழர்களில் நெய்வேலியிலிருந்து கலந்து கொண்ட நாங்கள் எழுவர் மட்டும் சென்னையிலிருந்து சென்னை கோட்டத் தோழர்களுடன் பயணித்தோம்.  மற்ற தோழர்கள் வேலூர் காட்பாடியிலிருந்து  நேரடியாகவே கட்டாக் செல்லும் வண்டியில் சென்று விட்டனர்.  நாங்கள் அத்தனை பேரும் ஒரே பெட்டியில் பயணிக்கவில்லை. வேறு பெட்டியில் பயணித்த இரண்டு தோழர்கள் விசாகப்பட்டிணத்தில் இரண்டு தோழர்கள் பெட்டியின் கதவை தட்டி மீண்டும் இங்கே ஏறிக் கொண்டார்கள். 

ஏன்?

அவர்களை அந்த பெட்டியிலிருந்து வட மாநிலப் பெண்கள் இறக்கி விட்டு விட்டார்கள்.

ஏன்?

அதில் ஒருவர் நிறத்தில் மிகவும் கருப்பாக இருப்பார். அதனால் அவரை எல்.டி.டி.இ என்று சொல்லி இறக்கி விட்டுள்ளனர். இத்தனைக்கும் அப்போது ராஜீவ் காந்தியெல்லாம் கொல்லப்படவில்லை.

கட்டாக்கில் உள்ள  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்தான் மாநாடு நடைபெற்றது. ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்னாயக்கின் பங்களா ஒன்றில் மதுரை, தஞ்சை, வேலூர் கோட்டத் தோழர்கள் தங்க வைக்கப் பட்டிருந்தோம். காலை 5 மணிக்கெல்லாம் டீயுடன் தொண்டர்கள் எழுப்பி விடுவார்கள். எங்களை எழுப்பி விட்டவர் அருகில் உள்ள பாரதீப் துறைமுகத்தின் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்பது கடைசி நாளன்று தெரிந்தது.

ஒவ்வொரு நாளும் தோழர் ஜோசப் மதுரை, தோழர் ஜகதீசன், வேலூர், தோழர் எஸ்,ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று கோட்டப் பொதுச்செயலாளர்கள் தலைமையில் தினசரி மகாநதியில் குளிக்கச் செல்வோம். வழியெங்கும் தலைவர்கள் பேசிக் கொண்டு வருவார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டு வருவோம், அதுவே ஒரு நல்ல அனுபவம்.

மாநாட்டை மேற்கு வங்கத்தின் அன்றைய நிதியமைச்சர் தோழர் அசோக் மித்ரா துவக்கி வைத்தார். அவர் பேசியதில் பல, அன்றைக்கு புரியவில்லை என்பதை மனசாட்சியோடு சொல்ல விரும்புகிறேன்.

விவாதங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை நாடு முழுதும் வழி நடத்திச் செல்லும் தூண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. 

வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டு, பின்பு சந்திரசேகர் ஆட்சியும் கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது.  ரத யாத்திரை முடிந்திருந்தது. மண்டல் கமிஷனுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து முடிந்திருந்த காலம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மத வெறிக்கு எதிரான அமைப்பு, சமூக நீதிக்கு ஆதரவான அமைப்பு என்பதை அனைத்து தோழர்களுக்கும் உறுதி செய்தது கட்டாக் மாநாடு.

மாநாடு நடைபெற்ற உள்ளரங்கிற்கு அடுத்தாற்போல் இருந்தது பாரபதி ஸ்டேடியம். மாநாட்டின் கடைசி நாளன்று இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் நாளன்று அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்சுந்தரம் "No Comrade should be tempted to see a cricket match" என்று தெளிவாக சொன்னார். 

மாநாடு முடிந்து பேரணி நடந்து கொண்டிருந்த போது ஸ்டேடியத்தில் இருந்து  ஏழெட்டு தோழர்கள் மட்டும் ஓடி வந்து பேரணியில் இணைந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 1500 பேரில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் போட்டிக்கு போயிருந்தனர். அந்த போட்டியில் இந்தியா தோற்றுப் போனது என்பது வேறு விஷயம்.

நான் கலந்து கொண்ட முதல் மாநாடு கட்டாக் மாநாடு. அநேகமாக முழுமையாக கலந்து கொள்ளக் கூடிய இறுதி மாநாடு புவனேஸ்வர் மாநாடு. இரண்டும் ஒடிஷா மாநிலத்தில்தான்.

பிகு" மேலே உள்ள படத்தில் உள்ள வேலூர் கோட்டத் தோழர்களில் தோழர் பாலாஜி, பாலு ஆகிய இருவர் மட்டும் அதிகாரிகளாக பணியில் உள்ளனர். தோழர்கள் ஆர்.வெங்கடேசன், டி.எஸ்.முத்துசாமி, கே.ஆர்.ஸ்ரீதர், ஜி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காலமாகி விட்டனர். இரண்டு படங்களிலும் எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அருகில் நான் உள்ளேன். 




Friday, December 26, 2025

புவனேஸ்வர் புறப்படும் வேளை இது . . .

 


28 ம் தேதி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 27 வது பொது மாநாடு ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் துவங்குகிறது. இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் தோழர் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.

நாளை மாலை அகில இந்திய செயற்குழுக் கூட்டம் இருப்பதால் இதோ சென்னை நோக்கி என் பயணத்தை தொடங்குகிறேன். சங்க அலுவலகத்தில் இன்றிரவு தங்கி விட்டு நாளை அதிகாலை விமானத்தை பிடிக்க வேண்டும்.

புவனேஸ்வர் பல விதத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். 1990 ல் கட்டாக்கில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலி கிளை தோழர்களோடு புவனேஸ்வர் சென்றுள்ளேன்.

அடுத்த முறை சென்றது மயக்க இயலாத பயணம். நான், மனைவி, மகன் மூவரும் விடுமுறைப் பயண சலுகையில் புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா சென்றோம். நாங்கள் சென்ற கொரமாண்டல் எக்ஸ்பிரஸ் இரவு எட்டு மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12 மணிக்கு சென்றது. 

எல்.ஐ.சி விருந்தினர் விடுதி முன்பதிவு சென்றிருந்தேன். எல்.ஐ..சி கிளை அலுவலகம் 1 க்கு பின் பக்கம் உள்ளதாக எனக்கு வந்த கடிதம் சொன்னது. ஆனால் அந்த அலுவலகத்தின் பின்னால் எந்த ஒரு கட்டிடமும் இருப்பதாக தெரியவில்லை. கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.

இந்த பயணத்திற்காகவே புதிதாக ஒரு நோக்கியா மொபைல் வாங்கி, ஒடிஷா, கொல்கத்தாவில் செயல்படுமா என்று பல முறை கேட்டு உறுதி செய்தி கொண்டு வாங்கிய பி.பி.எல். இணைப்பு ஆந்திராவை தாண்டிய உடனேயே காணாமல் போயிருந்தது. எங்கள் டாக்ஸி டிரைவரிடம் போன் இல்லை.

ஒரு மருத்துவர்கள் மாநாடு நடந்து கொண்டிருந்ததால் எந்த விடுதியிலும் அறை கிடைக்கவில்லை. புவனேஸ்வரில் ஒரு உறவினரின் வீடு இருந்தது. அவர்கள் வீட்டிற்கு சென்று ஒரு ஹலோ சொல்லி காப்பி குடித்து விட்டு வரும் திட்டம் இருந்தது. இப்போது வேறு வழியில்லை. ஒடிஷா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விடுதியிலிருந்து அவர்களோடு பேசினேன். 

தங்கள் வீட்டிற்கு உடனே வரச்சொன்ன அவர் டாக்சி ட்ரைவருக்கும் வழியை சொன்னார். அப்போது ஒடிஷா சுற்றுலா அலுவலர் அந்த டாக்சி ட்ரைவரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக் கொண்டு எங்களிடம் ஒரு அட்டையை கொடுத்தார். வீடு போய் சேர்ந்ததும் அதில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்றும் தொலைபேசியிலும் உறுதி செய்ய வேண்டும் என்றார். 

ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் எங்கள் மாநிலத்தின் விருந்தினர்கள். நீங்கள் செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சவுக்கு தோப்பு உள்ளது. அதனால் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்றார்.

கடைசியாக சென்றது புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள. அதற்கு  முன்பாக அகில இந்திய மகளிர் மாநாடும் நடைபெற்றது. எங்கள் கோட்டத்திலிருந்து பிரதிநிதியாக பங்கேற்ற மகளிர் பொறுப்பாளர் ஒருவரும் நானும் சென்றோம்.  சிறப்பான ஏற்பாடுகளால் அந்த பயணம் இன்றும் நினைவில் உள்ளது.

பிகு" புவனேஸ்வர் செல்வதால் வலைப்பக்கத்திற்கு விடுமுறையா?


நோ, நோ, நோ

இதுவரை கலந்து கொண்ட அகில இந்திய மாநாடுகளைப் பற்றிய சிறு குறிப்புக்கள், காப்பீட்டு ஊழியர் இதழிற்காக எழுதிய நூல் அறிமுகங்கள், நீண்ட காலமாக ட்ராப்டிலேயே உள்ள பதிவுகள் என்று 03.01.2026 அன்று அதிகாலை வீடு திரும்பும் வரை பதிவுகள் தயாராகவே உள்ளது. 

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று . . .

 


ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று பென்ஷன் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டது என்று வரும் குறுஞ்செய்தியை பார்க்கையில் எங்களின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அமைப்புக்களோடு ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்கி பென்ஷன் கோரிக்கையை வென்றெடுத்தது, ஓய்வூதிய நிதியில் பற்றாக்குறை வருமானால் நிறுவனமே அதை ஈடு செய்யும் என்ற ஷரத்தை இணைத்தது, பென்ஷனில் மூன்றில் ஒரு பங்கை காசாக்கிக் கொள்ளும் வசதியான கம்யூடேஷன் பலன், ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்து போனால் அக்குடும்பம் இழந்து போகும். அப்பலனை ஈடு செய்ய ஒரு பிரத்யேக குழுக் காப்பீட்டுத் திட்டம், -இதெல்லாம் தோழர் என்.எம்.எஸ் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு அளித்த கொடை. 

உங்களை எந்நாளும் மறவோம் தோழரே . . .

தோழர் சுந்தரம் அவர்கள் மறைந்த போது எழுதிய இரண்டு பதிவுகளை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று எங்களை தாக்கிய சுனாமி



26 டிசம்பர் மீண்டும் ஒரு முறை துயரம் தோய்ந்த நாளாய் அமைந்து விட்டது. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவரும், மிகச் சிறந்த பொருளாதார அறிஞரும் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டியுமான தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி சுனாமியாய் எங்களை தாக்கியது.

ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் எப்படி சமரசம் இன்றி உறுதியாக இருப்பாரோ, அது போலவே ஊழியர்கள் அலுவலகப் பணியை செய்ய வேண்டும் என்பதிலும் சமரசம் இல்லாமல் கண்டிப்பாக இருப்பார்.

உலகமயத்தின் தீமைகளைப் பற்றியும் சர்வதேச நிதி மூலதனத்தின் லீலைகளைப் பற்றியும் மிகவும் நுணக்கமாக ஆராய்ந்து அவர் எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகள் உழைக்கும் மக்களுக்கு அவர் வழங்கிய சக்தி மிக்க ஆயுதங்கள்.

1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்தாலும் அவரைப் பார்க்கிற, அவர் உரையைக் கேட்கிற வாய்ப்பு என்பது 1988 ல் தான் கிடைத்தது. அவர் என்னை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது 1989 ல் நான் அடியாட்களால் தாக்கப்பட்ட பிறகே கிடைத்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு முறை சென்னை சென்ற போது அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் கே.நடராஜன் அறிமுகப் படுத்தி வைத்தார். கைகளைப் பற்றிக் கொண்டு "Be Brave and Bold. You can face any challenge" என்று சொன்னதை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இன்றளவும் அந்த வார்த்தைகள்தான் எதையும் சந்திக்கும் தைரியத்தை அளித்து வருகிறது. சோர்வுற்ற வேறொரு நாளில் அவரோடு தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலும் உற்சாகம் அளிக்கும் டானிக் 

எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க நிகழ்வில் அவர் பங்கேற்று உரையாற்றிய புகைப்படத்தைத்தான் அந்த நாள் முதல் முக நூலில் Cover Photo வாக பெருமிதத்துடன் வைத்துள்ளேன்.  அந்த புகைப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தன் வாழ்நாள் முழுதையும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்திற்கும் அர்ப்பணித்த தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்ட சுற்றறிக்கையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 


இன்சூரன்ஸ் ஊழியர்களின்  இமயம் சரிந்தது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார் என்பதை பெருந்துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அறுபதுகளின் துவக்கத்தில் எல்.ஐ,சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளராக ஒரு மிகப் பெரிய பொறுப்பை தன் இளந்தோள்களில் ஏற்றவர் தோழர் என்.எம்.எஸ்.  இரண்டாண்டுகளிலேயே இருபத்தி ஐந்து வயதில் தென் மண்டலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் உழைப்பாளி மக்களின் மீதான நேசத்தாலும் நாடறிந்த தலைவராக மாறினார்.

1988 ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதிமூன்றாவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தோழர் என்.எம்.எஸ் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் தலைமையக்கம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியது. மிகுந்த சவால்கள் நிரம்பிய காலகட்டத்தில் அவர் அகில இந்தியப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

உலகமயமாக்கலின் கோர விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு அதற்கெதிரான போராட்டங்களுக்கு ஊழியர்களை தத்துவார்த்த அடிப்படையில் தயார்படுத்திய பெருமை அவருக்குண்டு. 1990 களின் அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வை  உருவாக்க புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் மூலம் ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்தது தோழர் என்.எம்.சுந்தரம் திகழ்ந்தார்.

இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும், எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ விற்க வேண்டும் என்ற மல்ஹோத்ரா குழு அறிக்கை அளித்த போது அவை எப்படி தேசத்திற்கும் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள், நம்முடைய போராட்டங்களின் சக்தி மிக்க ஆயுதங்கள்.

“எல்.ஐ.சி யை  பாதுகாப்பதற்கான நம் போராட்டம், பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை செய்வதன் மூலமாக நம்முடைய மேஜையிலிருந்துதான் துவங்குகிறது” என்று நம்மை தொடர்ந்து வலியுறுத்துபவர். அதனை கடைபிடிப்பதால்தான் நம்மால் இந்நாள் வரை மக்களிடம் தைரியமாக செல்ல முடிகிறது. எல்.ஐ.சி நிறுவனமும் இன்று வரை முழுமையான பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது.  வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களை இணைத்து கூட்டு போராட்டக்குழு அமைத்து பென்ஷனை வென்றெடுத்ததில் தோழர் என்.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் எதிர்காலத்தில் நேரக்கூடாது என்று அவர் காண்பித்த உறுதியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

“இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் ஆசிரியராக பல்லாண்டு காலம் செயல்பட்ட தோழர் என்.எம்.எஸ் எழுதிய “Let us play Politics” கட்டுரைத் தொடர், நமக்கெல்லாம் அவர் எடுத்த பாடங்கள். தொழிற்சங்கத் தலைவர் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தார். சுரண்டலற்ற சோஷலிச சமுதாயமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதையும் அதற்கான பயணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர்.

2002 ம் ஆண்டு ராய்ப்பூரில் நடைபெற்ற பத்தொன்பதவாது மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் 2007ல் நாக்பூரில் நடைபெற்ற இருபத்தி ஒன்றாவது மாநாடு வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.  இந்த ஆண்டு துவக்கத்தில் எர்ணாகுளத்தில் நடைபெற்ற இருபத்தி நான்காவது மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டு வழி காட்டினார்.

1988 ல் வேலூர் கோட்டத்தை அவர் துவக்கி வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டங்களை அவர்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று நாம் அழைத்த போது தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். 1994ல் மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் மூன்று மணி நேரம் அவர் உரையாற்றியதை யாரால் மறக்க இயலும்!

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தத்துவார்த்தப்பாதையில் அழைத்துச் சென்ற மகத்தான தலைவர் மறைந்துள்ளார். அவரது லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்

கண்களால் அவர் வாழ்வார்



மறைந்த எங்கள் தலைவர் தோழர் என்.எம்.எஸ் பற்றிய நேற்றைய பதிவில் விடுபட்டுப் போன இரண்டு விஷயங்களை இணைக்கவே இப்பதிவு.

World Federation of Trade Unions அமைப்பின் மாநாடு 1988 ல் பல்கேரியா நாட்டின் தலைநகர் ஸோபியா வில் நடைபெற்ற போது அவர் ஆற்றிய உரை என்பது மிகவும் முக்கியமானது.  அந்த உரை இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழில் வெளியானது. விரைவில் அதை பகிர்ந்து கொள்கிறேன்.

WFTU அமைப்பின் ஒரு அங்கம் Trade Union International of Public and Allied Sectors என்பது. அதன் நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் என்.எம்.எஸ்.

World Social Forum நிகழ்வுகளிலும் அவரது பங்கேற்பு, வழிகாட்டுதல் இருந்துள்ளது.

இந்தியாவைக் கடந்தும் அவரது பணி விரிவடைந்துள்ளது. 

இரண்டாவது முக்கியமான செய்தி.

அவரது விருப்பத்தின்படி அவருடைய கண்கள் கொடையாக அளிக்கப்பட்டது.

மரணத்திற்குப் பின்னும் தன் கண்களால் வாழ்கிற மாமனிதர். 

Thursday, December 25, 2025

மோடிக்கும் வெட்கமில்லை, சங்கிகளுக்கும் . . .

 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கிகள் பல இடங்களில் தங்கள் புத்தியை காண்பித்துள்ளார்கள். 

கேரளா போன்ற மாநிலங்களில் கூட அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழக்கமாக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாக்களை ரத்து செய்து விட்டன. இத்தனைக்கும் கேரளாவில் சில கிறிஸ்துவ அமைப்புக்கள் பாஜகவைத்தான் ஆதரிக்கின்றன. அதை சங்கிகள் பெருமையாகவும் பீற்றிக் கொண்டிருக்கின்றனர். 

பாஜக ஆளும் பல மாநிலங்களில் இன்று கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிஷா, உத்தர்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி, உ.பி என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்து விட்டார் மொட்டைச் சாமியார். 

இவ்வளவு அக்கிரமங்களை சங்கிகள் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டோ ஷூட்டுக்காக ஒரு சர்ச்சிற்கு சென்று அவர் பதிவு போட, மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அதை பாராட்டி பதிவு போடுகிறார்.




தன் ஆட்கள்  அயோக்கியத்தனம் செய்யும் வேளையில் அமைதி, நல்லெண்ணம் என்று கதை விட மோடிக்கும் வெட்கமில்லை.

மோடியின் பொய்யான பதிவை பாராட்ட சங்கிகளுக்கும் வெட்கமில்லை.

பிகு : எதிரொலி திரைப்படத்தில் சிவாஜி சாட்சியை முறைத்துக் கொண்டே நிற்க, அந்த பார்வையை தாங்க முடியாமல் சாட்சி உண்மையை சொல்லி விடுவார். 



மனமெல்லாம் அங்கேதான் . . .

 


நிலப்பிரப்புத்துவ கொடுமைகளுக்கு எதிராக செங்கொடியின் கீழ் அணிவகுத்து தீரத்துடன் போராடிய தோழர்களை பழி வாங்க, முக்கியமான ஆண் தோழர்கள் ஊரில் இல்லாத சூழலில் கோபால கிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் வெறியன் தலைமையில் அடியாட்கள் குடும்பம் நடத்திய தாக்குதலில் 44 மனித உயிர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட நாள் இன்று. 

செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வருடம் தோறும் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த கூடுவார்கள்.

2004 ம் வருடம் தொடங்கி ஒவ்வொரு வருடமும் வெண்மணி சென்றுள்ளேன். சர்க்கரை அப்போதுதான் எட்டிப்பார்த்த 2019 மற்றும் கொரோனா காரணமாக 2020 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டும் செல்ல இயலவில்லை.

கெடுவாய்ப்பாக இந்த வருடம் செல்ல இயலவில்லை. மே மாதம் நடந்த விபத்தின் காரணமாக வெண்மணி ஆர்ச்சிலிருந்து நினைவாலயம் வரை நடந்து செல்ல முடியாது. மேலும் புவனேன்ஸ்வரில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டிற்காக நாளை புறப்பட வேண்டும். உடல் நிலை பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால் இரண்டாவது காரணம் கூட பெரிதல்ல.  வெண்மணி யின் கண்மணிகள் செய்த தியாகத்தை ஒப்பிடுகையில் பயணத்தால் உருவாகும் களைப்பெல்லாம் பெரிதே கிடையாது.

வெண்மணிக்கு செல்ல முடியாவிட்டாலும் மனம் என்னமோ அங்கேயேதான் இருக்கிறது.