Sunday, May 29, 2011

பெண்களின் ராஜ்ஜியம் நடக்கிறதாம்! என்ன ஒரு அயோக்கியத்தனம்!




தமிழகத்தில்  அம்மா - ஜெயலலிதா

உத்தர பிரதேசத்தில் பெஹன்ஜி - மாயாவதி

மேற்கு வங்கத்தில் தீதி  - மம்தா

டெல்லியில்  ஆண்டி -  ஷீலா தீட்சித்

மத்தியில்  மேடம்  - சோனியா காந்தி

உச்சத்தில்  நானி - பிரதீபா படீல்

வீட்டில் மனைவி 

இனியும் நடப்பது  ஆண்களின் ராஜ்ஜியம்  என்று  சொல்லாதீர்கள்! 


இது  இப்போது பரபரப்பாக  உலாவிக் கொண்டிருக்கிற  ஒரு மின்னஞ்சல். 
உண்மையிலேயே  பெண்களின்  ஆட்சி வந்து விட்டதா? அந்த கேள்விக்கு 
சொல்வதற்கு முன்பாக  மேலே  சொல்லபபட்டவர்களைப்  பற்றி
பார்ப்போம். 

இதிலே  யாரெல்லாம்  தங்கள்  சுயத்தில்  முன்னுக்கு வந்தவர்கள்? 

பிரதீபா படீல் முதல் சுற்றிலேயே  அடிபட்டுப் போய் விடுவார். 


நேரு குடும்பம்  என்ற பிம்பத்தை பாதுகாக்க,  ராஜீவ் காந்தியின் கொடூர 
மரணம்  உருவாக்கியுள்ள  அனுதாபத்தை  தொடர்ந்து தக்க வைக்க, 
தலைமைப் பொறுப்பில் முன்னிறுத்தப்பட்டவர் சொக்கத்தங்கம் என்று 
முன்பு கலைஞரால்  வர்ணிக்கப்பட்ட சோனியா காந்தி.   


காங்கிரசின் கோஷ்டிக் கலாசாரத்தில்  வலுவான காலை வாருபவர் 
இன்னும்  வராததால் பிழைத்திருப்பவர் ஷீலா தீட்சித். 


எம்.ஜி.ஆரும்  கன்ஷி ராமும்  உருவாக்கித்தந்த  அடித்தளத்தை  இறுக்கமாக  பற்றிக் கொண்டு முன்னேறியவர்கள்  ஜெயலலிதாவும்,
மாயாவதியும்.   ஆனால்  அவர்கள்  நிலைத்து நிற்பது என்னமோ சுயமான
செல்வாக்கால்தான். 

சந்தர்ப்பவாத, வன்முறை, எதிர்மறை, பொய்ப்பிரச்சார அரசியலால் மட்டுமே  முன்னுக்கு வந்து கலவர அரசியலினை உருவாக்கி ஆட்சியை 
கைப்பற்றியவர் மம்தா. அழிவு பூர்வ அரசியல்வாதி அவர். 


நாடாளுமன்ற சபாநாயகர்  மீரா குமாரை  மின்னஞ்சல் பிரம்மாக்கள் ஏன்
மறந்து விட்டனர்  என்று தெரிவியவில்லை.   


இந்த மின்னஞ்சலுக்கு  உண்மையிலேயே  ஒரு உள்நோக்கம் உள்ளது. 
இவ்வளவு தூரம் வந்து விட்டோம்,  இனிமேல்  தனியாக  33 % இட ஒதுக்கீடு  என்று தனியாக  நமக்கு தேவையா  என்று  பெண்களையே நினைக்க வைக்கிற விஷமத்தனமான  வேலை. 


 சமீபத்திய  மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்திய மக்கட்தொகையில்  பெண்கள்   51 .54     % உள்ளனர்.  அனைத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசியல்  பதவிகளிலும்  அதே அளவு இருந்தால் கூட  பெண்கள் ராஜ்ஜியம்  என்று சொல்ல முடியாது. 


ஆண்களை விட அதிகமான பெண் பிரதிநிதிகள்  அனைத்து அரசியல் 
சாசன பதவிகள் நாடாளுமன்றம் தொடங்கி  கிராமப் பஞ்சாயத்து வரை
இருந்தால் வேண்டுமானால்  பெண்களின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது 
என்பதை  ஒப்புக் கொள்ளலாம். ஆனால்  அப்படியா உள்ளது உண்மையான  நிலை? 


இந்தியாவில்  இது வரை தற்போதைய  பதினைந்தாவது மக்களவை வரை 
8303  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலே 
பெண்களின்  எண்ணிக்கை  என்பது  559 மட்டும்தான்.  அதாவது  வெறும் 
6 .8    %  மட்டுமே. 


33 %   இட ஒதுக்கீடு  அமுலில் இருந்தால்  தற்போதைய மக்களவையில் 178  பெண் உறுப்பினர்கள்  இருந்திருப்பார்கள்.  ஆனால்  இப்போது இருப்பது   என்னவோ  வெறும் 59  மட்டும்தான்.அதாவது 10 .8 % மட்டுமே.  15  வது மக்களவையில்தான்  அதிகபட்சமாக  59  பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய மக்களவையில் இன்னும் குறைவு. 


1977 ல் அமைக்கப்பட்ட ஆறாவது மக்களவையில்தான்  மிகக் குறைவாக
21  பெண் உறுப்பினர்கள்  இருந்திருக்கின்றனர். மேலும் ஒரு நான்கு 
மக்களவைகளில்  இருந்த பெண் உறுப்பினர்கள்  நிலை முப்பதிற்கும் 
குறைவு.  சட்ட மன்றங்களில்  நிலைமை  இன்னும் மோசம். இப்போது 
சொல்லுங்கள்!  பெண்களின் ராஜ்ஜியமா நடக்கிறது. 


உலக  அளவில்  சில நாடுகளின் நிலை பரவாயில்லை  என்று சொல்ல முடியும். ருவாண்டாவில்  மட்டும் பெண்களின் பிரதிநிதித்துவம்  ஐம்பது 
சதவிகிதத்திற்கும்  மேல்.  56 .3  %. ஸ்வீடன், கியூபா, தென் ஆப்பிரிக்கா,
ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஃ பின்லாந்து ஆகிய ஆறு நாடுகளில்  நாற்பது
சதவிகிதத்திற்கும்  மேல். பதினேழு நாடுகளில் முப்பது சதவிகிதத்திற்கு
மேலும். நாற்பத்தியேழு நாடுகளில்  இருபது சதவிகிதத்திற்கு  மேலும்
உள்ளனர். 

 
ஒரு முறை மகளிர் மசோதாவை  நிறைவேற்ற வேண்டும் என்று  வலியுறுத்துகின்ற   மனு ஒன்றை  வேலூர் மக்களவை உறுப்பினராக 
இருந்த திரு  காதர் மொய்தீன்   ( அவர் பெயரே  சட்டென்று நினைவிற்கு  வரவில்லை. தொகுதிப்பக்கம்  அவ்வப்போது வந்திருந்தால்தானே  நினைவுக்கு   வந்திருக்கும்!)    சொன்னது நினைவிற்கு  வருகின்றது.



"மகளிர் மசோதா வந்து விட்டால்  பல ஆண்களுக்கு  மீண்டும் வாய்ப்பு 
கிடையாது. லாலு ராப்ரி தேவியை  முதல்வராக்கியது  போல எல்லா 
எம்பிக்களாலும்  தங்கள் குடும்ப உறுப்பினர்களை  எம்பி யாக்க முடியாது. 
ஆகவே பழம் தின்று  கோட்டை போட்ட பெரும்பாலான ஆண் எம்பிக்கள் 
ஏதாவது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் " என்றார் 
திரு காதர் மொய்தீன்.  




உண்மைதான். அதனால்தான் 12 .09 .1996  அன்று  அறிமுகமான மகளிர் 
மசோதா ராஜ்யசபாவில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 09 . 03 . 2010  அன்று  நிறைவேறியது.  மக்களவையில் எப்போது நிறைவேறி எப்போது சட்டமாகி எப்போது அமுலாவது? 



இப்படியெல்லாம் உண்மை நிலை இருக்கையில்  பெண்கள் ராஜ்ஜியம் வந்து விட்டதாய் கூறுவது  அப்பட்டமான  ஆணாதிக்கவாதம், அயோக்கியத்தனம்.
 

No comments:

Post a Comment